Tuesday, April 28, 2009

விடுபட்ட இரு மூத்த பதிவர்களின் சிறப்பு பேட்டி

.

சமீபத்தில் வலைச்சரம் எழுதிய போது பல மூத்த பதிவர்களின் பதிவுகளுக்கு அறிமுகம் செய்ய இயலாமல் போனது வருத்தம் அளித்தது. அதை ஈடுகட்டும் விதத்தில் இன்று இரு மூத்த பதிவர்களின் சிறப்பு பேட்டி இங்கு வெளியிடப்படுகின்றன. இனி ஓவர் டூ பேட்டி வித் ஆதாம், ஏவாள்...

நாம் : முதலில் இந்த சிறப்பு பேட்டிக்கு ஒத்துக் கொண்டதற்கு மிக்க நன்றி. முதலில் நீங்கள் இருவரும் உங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.

ஆதாம் : என் பெயர் ஆதாம். இவள்....

ஏவாள் : இருங்க.. உங்களுக்கு சொல்லத் தெரியாது. இவர் பெயர் ஆதாம். என் பெயர் ஏவாள். நாங்க கடந்த 47000 ஆண்டுகளுக்கு முன்னாடியே பதிவு எழுதத் தொடங்கி விட்டோம். உலகிலேயே நான் முதல் முதல் பதிவர் என்பதில் எங்களுக்கு மிக்க பெருமை.... (ஆதாமைப் பார்த்து) அப்படித்தானேங்க...

ஆதாம் : ஆமா! ஆமா!

நாம் : முதலில் நீங்க இரண்டு பேர் தான இருந்திருப்பீர்கள்! உங்க பதிவை யார் வந்து படிப்பாங்க? யார் பின்னூட்டம் போடுவாங்க?

ஆதாம் : அதாவது..

ஏவாள் : இருங்க! நானே சொல்கிறேன். அவருக்கு பதிவும் எழுதத் தெரியாது. ஒரு மண்ணும் தெரியாது. ஒரு விட்ஜெட் போடக் கூடத் தெரியாதுன்னா பாத்துக்கங்க... நான் தான் எல்லாம் சொல்லித் தந்தேன். ஆனாலும் அவர் பதிவை நானும், என் பதிவை அவரும் படித்து பின்னூட்டம் போட்டுக் கொள்வேம். அப்புறம் எனக்கு குழந்தைகளும், பேரக் குழந்தைகளும் ஆனதும் எல்லாரும் மாத்தி மாத்தி பின்னூட்டம் போட்டுக்குவோம். அப்படித்தானே?

ஆதாம் : No Mam.. Yes Mam... Sorry Mam

நாம் : உங்க குடும்பத்துக்குள்ளேயே பின்னூட்டம் போடுவதால் அப்ப மட்டுறுத்தலெல்லாம் தேவைப்பட்டிருக்காதே?

ஆதாம் : என் பதிவுக்கு முதலில் மட்டுறுத்தல் செய்யவில்லை? ஆனால்.....

ஏவாள் : கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? நான் சொல்லிக்கிறேன். இவருக்கு ஒரு மொக்கை பதிவோ, இல்லை கும்மி பதிவோ கூடப் போடத் தெரியாது. அதனால் மட்டுறுத்தல் தேவைப்படலை. எனது பதிவுக்கும் முதலில் மட்டுறுத்தல் தேவைப்படவில்லை. ஆனால் ஒருநாள் எனது பதிவுக்கு மொத்தமாக ஒரே நேரத்தில் 100 அசிங்கமா கமெண்ட் இவர் பெயரில் போட்டுட்டாங்க. நானும் இவர் தான் நம்ம மேல உள்ள கோபத்தில் பின்னூட்டம் போட்டு விட்டாரோ என்று கோபத்தில் அடித்து கூட விட்டேன். மண்டையில் தழும்பு கூட இருக்கு... (ஆதாமைப் பார்த்து) காட்டுங்கங்க...

(ஆதாம் பலி ஆடு போல் குனிந்து தலையில் இருக்கும் இரண்டு அங்குல தழும்பைக் காட்டுகிறார்)

ஏவாள் : அப்புறம் எலி குட்டி சோத்னை செய்ததில் அது போலியின் வேலை என்று தெரிந்தது?

நாம் : (அதிர்ச்சியுடன்) என்னது போலியா?

ஆதாம் : ஆமாங்க! அது ஒரு பெரிய கதை..

ஏவாள் : உங்களால வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்க முடியாதா? . (ஆதாம் துண்டை எடுத்து வாய்க்கு முன் வைத்து மூடிக் கொள்கிறார்) அப்புறம் பார்த்தால் அது சாத்தானோட வேலை. இவரோட பேரோடு ஒரு a அதிகமா சேர்த்து பதிவைத் தொடங்கி இருந்திருக்கிறான். அப்புறம் தான் மட்டுறுத்தல் செய்தோம்.

நாம் : சரி! உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. வருகிறோம்.

(நாம் தெருமுனையை அடைவதற்கு முன் ஆதாம் ஓடோடி நம்மிடம் வந்தார்.

நாம்: ஏன் என்ன ஆச்சு? ஏன் இப்படி மூச்சு இறைக்க ஓடி வருகிறார்.

ஆதாம் : எங்களை இறைவன் படைத்த நாள் முதலே இவள் தான் பேசிக்கிட்டே இருக்கிறாள். நான் கேட்டுக் கிட்டே இருக்கிறேன். சொர்க்கத்தில் இருக்கும் போது கூட அதே கதை தான். சொர்க்கத்துக் கனியை சாப்பிடாதே என்று சொல்லக் கூட என்னை விடலை. இவளால் தான் நாங்க பூமிக்கே வர வேண்டி வந்தது

நாம் : உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. சொர்க்கத்தில் என்ன கனியைச் சாப்பிட்டீர்கள்? ஆப்பிள் என்று எல்லாரும் சொல்கிறார்களே? (அதற்குள் தெருவில் ஏவாள் வருவதைப் பார்த்ததும் ஆதாம் தலை தெறிக்க ஓடுகிறார்)

நாமும் வீட்டில் துவைக்க ஊற வைத்த மனைவியின் ஆடைகளும், துவைக்காவிட்டால் கிடைக்கப் போகும் தண்டனையையும் நினைத்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தோம்.

டிஸ்கி : இந்த பேட்டிக்கு ஏற்பாடு செய்த ஆப்ரகாம், நோவா, மோசே ஆக்யோருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

புது டிஸ்கி : ஒன்லி மீள் பதிவு

Wednesday, April 15, 2009

உணர்வைக் காட்டனுமாமே? PIT போட்டிக்காக

இந்த மாத PIT புகைப்படப் போட்டிக்கான படங்கள்... வழக்கம் போல் வரலாறு முக்கியம் அமைச்சரே என்பதற்காக

PIT போட்டி



சொல்லுங்க.. முதல் படத்தை அனுப்பலாம் என்று உள்ளேன்.. அதில் தான் பல்லைக் காட்டிக் கொண்டு சிரித்து, ஆனந்தமாய் உணர்வைக் காட்டுகின்றார் போல உள்ளது. இரண்டாவது படத்தில் முன்னால் நின்று எடுத்து இருந்தால் நன்றாக வந்து இருக்கும் போல் உள்ளது.

Monday, April 13, 2009

உணர்வுகளின் ஊற்றுக்கண்ணில் இருந்து - The memory will never die

மனிதனுக்கு துன்பங்களின் நேரத்தில் பழைய நினைவுகளே ஆறுதலாக இருக்கும் என்றால் அது மிகையில்லை. நேற்று வேலை முடித்து விட்டு, வேலை இல்லாமல் மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டிருந்த போது சிலபல நினைவுகள் வந்து சென்றன... மழை விட்டும் தூவானம் விடாத க(வி)தையாய் சில நினைவுகள் வந்து நெறித்தன.

அதே நினைவில் கூகுளில் தேடிய போது வந்து விழுந்த ஒரு கவிதைக் கொத்து. மிகவும் பிடித்து இருந்தது.





இதில் நான் ரசித்த வரிகள்.


You feel the wind and it reminds you,
It happens every time,
You stop and close your eyes,
You can't deny what lives inside you,
Well I know it's hard to see,
What is meant to be,
When yesterday is so far behind you,
The memory will never die,
The love that you gave,
I'll never throw it away,
The memory will never die,
Deep inside your soul knows I'm always there....



நான் முன்பு எழுதிய ஒரு கவிதையைப் (?) படித்து விட்டு, ஒரு பிரபல பதிவர் எழுதித் தந்த ஒரு அழகிய நினைவுக் கவிதையும் இங்கே.. அதற்குப் பிறகு கவிதை எழுதவே இல்லை.. எனது கவிதை தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.. ;-)))

மழை விட்டும் விடாத தூவானமாய்
இன்னும் உன் நினைவுகள்.

தனித்திருக்கும் பொழுதுகளில்
விழி வழியும் துளி நீரில்
பதிந்திருக்கும் உன் பிம்பம்.

நினைவை விட்டு அகல மறுக்கும்
பூங்காவும், ஆற்றங்கரையும், ஒற்றைக்குடையும்...

அருகருகே அமர்ந்திருந்தும்
பேசாமலேயே கழிந்த மணித்துளிகளும்,

கால் நனைத்து கரையேறியதும்,
கண்களாலே பேசிக் கொண்டதும்,

எதிர்பார்த்த மழையும் நான்
எதிர்பாராத உன் நெருக்கமும்.

பன்னிரண்டு ஆண்டுகள்
பார்க்காமலே ஓடிவிட்டாலும்

என்றேனும் ஒருநாள்
எங்கேனும் உனை சந்திப்பின்
ஒன்று மட்டும்
உறுதியாச் சொல்வேன்
என்னை நீ காதலித்தது போல்
உன்னை நானும் காதலித்தேனென்று.



Friday, April 10, 2009

என் காதல் தோத்துப் போச்சுங்க

நான் ரொம்ப கவலையில் இருக்கேங்க... என்னோட காதல் தோற்றுப் போய் விட்டதுங்க. என்னைத் தெரியும் தானே உங்களுக்கு.. இப்ப Mcfame Robotics Company யில் அக்கவுண்ட்ஸில் வேலை செய்றேங்க... நேத்து தாங்க என்னோட தெய்வீகக் காதல் தோல்வியில் முடிஞ்சு போச்சு. அதுவும் அந்த சுந்தர் பய என் முன்னாடியே என் காதலியை..வேணாங்க..என்னால ... முடியல.... ... யோசிச்சுப் பாருங்க. அந்த நிமிஷம் எனக்கு எப்படி இருந்து இருக்கும்ன்னு.. இப்பக் கூட என் சிஸ்டத்துல என் காதலே என் காதலே என்னை செய்யப் போகிறாய்? பாடல் தான் ஒலித்துக் கொண்டு இருக்கு.

நான் முழுக்கதையையும் முதலில் இருந்து சொல்கிறென்.. கேளுங்க.. நான் இங்க வந்து முழுசா 3 வருடமாகப் போகுதுங்க.. ஆபிஸில் சுமார் 50 பேர் வேலை செய்கின்றோம். பேக்டரில் 600 பேருக்கு மேல் இருக்காங்க. எனக்கு அக்கவுண்ட் என்பதால் ஆபிஸில் தான் முழு நேரமும் செலவாகும். இங்க 12 லேடீஸ் வேலை செய்றாங்க.. ஆனாலும் யாரையும் ஏறெடுத்துக் கூட பார்த்ததில்லை. ஏன்னா நான் என்னோட கனவு தேவதைக்காக காத்துக் கொண்டு இருந்தேன்.

மூணு மாசத்துக்கு முன்னாடி தான் அந்த கனவு தேவதையை பார்த்தேன். அதுவும் எங்க ஆபிஸிலேயே புதுசா வேலைக்கு வந்து இருக்கா.. பேரு ரேவதி. நான் அழகா ரேச்சின்னு செல்லமா பேர் வச்சு இருக்கேன்.. ரேச்சி எனக்கு நீ மச்சி! நல்லா இருக்குல்ல....நல்லா அழகா இருப்பா.. (சென்சார் செய்யப்பட்ட பகுதியை இங்க நிரப்ப முடியாது... ஆர்) மொத்தத்துல நம்ம அசின், நயன் தாரா, பழைய ஐஸ்வர்யா ராய் எல்லோரையும் சேர்த்து செஞ்ச செப்புச் சிலைன்னு வச்சுக்கங்க

எங்க நிறுவனத்தின் டிசைனிங் செக்சனில் வேலைக்கு சேர்ந்தா.. எங்களுக்கும் டிசைனிங்குக்கும் எந்த டச்சும் இல்லைன்னாலும் இரண்டும் அடுத்ததடுத்த பகுதி என்பதால் அவளை அடிக்கடி பார்க்க முடியும். அவள் வந்த முதல் நாளிலேயே எனக்கு காதல் ஜூரம் ஆரம்பமாகி விட்டது.



ஆனா அவள் என்னை ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. எப்போதாவது வழியில் சந்தித்தால் ஒரு ஸ்மைல் மட்டும் கிடைக்கும். நானும் பல தில்லாலங்கடி வேலை பார்த்தும் திரும்பிக் கூட பார்க்கலை. இதுல என்ன கொடுமைன்னா என்னோட அழகுக்கு முன்னாடி நிக்க கூட முடியாத இன்னும் சிலர் ஜொள்ளு வடித்தது தான்.. சேல்ஸ் செக்சனில் இருக்கும் அந்த பேக்கு இருக்கானே.. கேசவன்.. அவன் எப்ப பார்த்தாலும் என் ஆளிடம் போய் இளிக்கிறதே வேலையே இருக்கான்.

அவனாவது பரவாயில்லை... அக்கவுண்ட் செக்சன் ஹெட் இருக்காரே அந்த பாலா.. காலேஜ் படிக்கிற பசங்க இருக்காங்க அவருக்கு..அந்த ஆளும் என் ரேச்சிகிட்ட எப்பப் பார்த்தாலும் ஏதாவது டவுட்டுன்னு போய் நிக்கிறார். இது அவருக்கே ஓவரா இல்லியா? வயசானாலும் இங்கிதம் தெரியலையே?

இது எல்லாத்தையும் விடக் கொடுமை... அட்மின் செக்சனில் இருக்கும் லாரன்ஸ் பண்ணுவது தான்.. பேசுவது மாதிரி பக்கத்தில் போய் உரசுவது, நடந்து வரும் போது இடிச்சிட்டு சாரி சொல்வது..இப்படி டெய்லி தொடருது. அவள் இதை எல்லாம் சாதாரணமா எடுத்துட்டு போய்டுறாரா..ஆனா என்னால் இங்க சும்மா உட்கார முடியல...மூலம் வந்தவன் மாதிரி கேபினில் இருந்து எட்டி எட்டிப் பார்த்துக்கிட்டு இருக்க வேண்டி இருக்கு.

எப்படியாவது என் காதலை அவள்கிட்ட சொல்லனும்னு வெயிலில் போட்ட புழு மாதிரி துடிச்சேன். வேலையில் கவனம் செலுத்த முடியல..சாப்பாடு சரியா இறங்கல.. சரி.. நல்லபிள்ளையா அவளோட வீட்ல போய் பொண்ணு கேக்கலாம்ன்னு வேவு வேலையில் இறங்கினேன். அப்ப ஒரு முதல் அதிர்ச்சி காத்து இருந்தது. அவள் எங்க கம்பெனி MD யின் ஸ்பெஷல் காரில் தான் சென்று வருகிறாளாம். டிரைவரை பிடித்து விசாரித்த போது அதைவிட அதிர்ச்சியைக் கொடுத்தான். தினமும் காலையில் பிக்அப் செய்வது மற்றும் டிராப் செய்வது எல்லாம் பேக்டரியை ஒட்டி இருக்கும் கம்பெனி MD யின் கெஸ்ட் அவுஸில் தானாம்.

அவள் முகத்தில் தெரியும் ஒரு வித இறுக்கம் அவளுக்கு இந்த வாழ்க்கை பிடிக்கவில்லை என்பதை எனக்கு ஒவ்வொரு கணமும் உணர்த்திக் கொண்டு இருந்தது. அப்பதான் அந்த இறுதி முடிவை எடுத்தேன். என் ரேச்சிக்கு இந்த நரக வாழ்வில் இருந்து அவளுக்கு விடுதலை தருவது தான் அந்த முடிவு.

கம்பெனியின் இண்டர்னல் மெயில் சிஸ்டம் மூலம் அவளுக்கு என் காதலை முழுமையாகச் சொல்லி, விருப்பப்பட்டால் இந்த இயந்திர வாழ்க்கையை விட்டு எங்கள் கிராமத்திற்கு சென்று விடலாம் என்பதை சொல்லி இருந்தேன். மறக்காமல் எங்களது பூர்வீக சொத்தான 50 ஏக்கரில் விவசாயம் செய்து சந்தோசமாக வாழலாம் என்பதையும் சேர்த்து இருந்தேன்.

அன்று ஏனோ அவள் என்னைத் திரும்பிக் கூட பார்க்க வில்லை. ஆனால் மறுநாள் கம்பெனி MD என்னைத் தனது தனியறைக்கு அழைத்தார். சதிகாரி.. வசந்த சேனை..வத்தி வைத்து விட்டாள் என்பது மட்டும் புரிந்தது. MD யின் அறைக்கு சென்றால் அங்கே டிசைனிங் செக்சனின் சுந்தரும், மேலும் என் ரேச்சியும் இருந்தனர். இப்பவும் அவளது பார்வையில் எந்த கலங்கமும் இல்லை.

MD தான் விசாரணையைத் துவக்கினார். தயக்கமில்லாமல் எனது காதலை என் ரேச்சியிடம் சொன்னதை ஒத்துக் கொண்டேன். இது பார்வையில் ஆரம்பித்து இதயத்தில் முடியும் காதல் என்பதை விளக்கினேன். சிறிது நேரம் யோசித்து விட்டு அவர் சுந்தரைப் பார்க்க சுந்தர் எழுந்து வந்து என் ரேச்சியிடம் “கொஞ்சம் உன் சுடிதார் டாப்பை உயர்த்து” என்றான். டக்கென்று என் ரேச்சி டாப்பைத் தூக்க என் காதலியின் வயிற்றுப் பகுதியில் கையை செலுத்திய சுந்தர் அங்கிருந்த சிறு பின்னைப் பிடித்து இழுக்க டக்கென்று வயிற்றுப் பகுதி திறந்து கொண்டது.

நான் எட்டிப் பார்க்க உள்ளே அனைத்தும் எலெக்ட்ரானிக் போர்டுகளும் ஒயர்களுமாக இருந்தது. உள்ளே இருந்த சிறு ஸ்விட்சை அழுத்த கையைத் தூக்கியது போலவே ரேவதி நின்று கொண்டு இருந்தாள். சுத்தமான சிலிகான் மற்றும் பல வேதிப் பொருட்களின் கலவை தான் உங்கள் ரேச்சி...இவள் ஒரு ரோபாட் என்று சொன்ன சுந்தர் மீண்டும் ஸ்விட்சை அழுத்த ரேவதி கண் சிமிட்ட ஆரம்பித்து இருந்தாள். MD பெருந்தன்மையுடன் எனது தவறை மன்னிப்பதாகவும், இனி ஒழுங்காக இருக்கும் படி வார்ன் பண்னியும் அனுப்பினார். அந்த புதிய வகை ரோபாட் பெண்ணை எங்கள் கம்பெனியிலேயே டெஸ்டிங்குக்காக வைத்திருப்பதாகவும் கூறி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

தளர்ந்து போய் இருக்கையில் அமரப் போனேன். ஏதோ உந்துதலில் எட்டிப் பார்க்க அங்கே அட்மின் லாரன்ஸ் வேண்டுமென்றே உரசிக் கொண்டு செல்வது தெரிந்தது. எப்போதுமே வயிறு எரிபவன் இன்று வாய்விட்டு சிரித்தேன்.

Sunday, April 5, 2009

சங்கீதா என்ற ஆயிஷா

1998 ல் கோவை குண்டு வெடிப்புக்குப் பிறகு மிகவும் பரபரப்பாக பேசப் பட்ட பெயர் சங்கீதா என்ற ஆயிஷா! கோவை குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற குற்றஞ்சாட்டப்பட்டு தமிழகம் முழுவதும் தேடப்பட்டவர். உடம்பு முழுவதும் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு சுற்றி வருகின்றார் என்று புலனாய்வு பத்திரிக்கைகள் சுடச்சுட செய்தி பரப்பின.

சமீபத்தில் இவரது பேட்டி ஒரு தொலைக்காட்சியில் காண நேர்ந்தது.

சொல்லொனாத் துயரத்திற்கு ஆளாக்கப்பட்ட அப்பெண் தனக்கு ஏற்ப்பட்ட துன்பங்களைக் கூறிக் கேட்ட போது கண்களின் நீர் கோர்த்து விட்டது. எந்த தவறும் செய்யாமல் பிறந்த குழந்தையை விட்டு விட்டு சிறையில் தவித்த நாட்களை விவரித்து இருந்தார். தனது கணவர் எழுதும் சாதாரணக் கடிதததைக் கூட காட்டாமல் அலைக்கழித்ததையும், நீதி மன்ற வாசலில் கணவருடன் பேச அனுமதி கிடைத்தும், போலிசார் சுற்றி நின்று கொண்டு பேச விடாமல் செய்த கொடுமைகளையும் விவரித்தார். ஆனந்த விகடனில் வந்த அவரது பேட்டி .


''ஓட்டம்... ஓட்டம்... ஓட்டம்னு 10 வருஷமா ஓடிக்கிட்டேதான் இருந்தேன்!'' - அத்தனை அலுப்புடன் ஆரம்பிக்கிறார் ஆயிஷா. கோவை குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து 'பர்தா பயங்கரவாதப் பெண்' என்று வர்ணிக்கப்பட்ட அதே பிரபல ஆயிஷா என்கிற சங்கீதா! 4 வருட சிறைத் தண்டனையின் இடையே பெயிலில் வெளிவந்திருக்கும் ஆயிஷாவை சென்னை பிராட்வேயின் நெருக்கடியான குடியிருப்பு ஒன்றில் சந்தித்தேன். சில மாதங்களுக்கு முன்பு வரை ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்தவர், சமீபத்தில்தான் இரண்டாவது ஆண் குழந்தையைப் பிரசவித்திருக்கிறார்.

''பேட்டி எடுத்துக்கலாம். ஆனா, முகம் தெரியுற மாதிரி போட்டோ மட்டும் வேண்டாம் சார். பக்கத்து வீட்டுக்காரவுகளுக்குக்கூட நான்தான் 'அந்த பர்தா பொண்ணு!'ன்னு தெரியாது. ஒண்ணுக்குள்ள ஒண்ணாப் பழகிட்டு இருக்குறவங்க, அப்புறம் மெரண்டுருவாங்க!'' - வார்த்தைகளைக் காட்டிலும் ஆயிஷாவின் கண்கள் உணர்த்தும் வேதனை இன்னும் கூர்மையானது.

''ராஜபாளையம் பக்கத்து மம்சாபுரம்தான் என் சொந்த ஊரு. டிப்ளமோ படிக்கும்போது இஸ்லாம் மதம் மீது திடீர்னு ஈர்ப்பு. இஸ்லாம் பற்றின விஷயங்களை ஆர்வமா தேடித் தேடிப் படிச்சேன். 'சங்கீதா'வா இருந்த நான் 'ஆயிஷா' ஆனேன். வீட்ல பயங்கர வசவுகள், சண்டை. அந்தச் சமயம் த.மு.மு.க. விருதுநகர் மாவட்டச் செயலாளரா அறிமுகமான இப்ராஹிம் எனக்கான ஆறுதலை தன்னிடம் வெச்சிருந்தார். காதல், திருமணம்னு அடுத்தடுத்து யோசிக்க ஆரம்பிச்சோம். ரெண்டு பேர் வீட்லயும் எதிர்பார்த்த எதிர்ப்பு. விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்துட்டு அவரோட சென்னைக்கு வந்துட்டேன். 'எப்படியும் பொழச்சுக்கலாம்'னு நம்பிக்கை. அவரோட உறவினர் ரஃபீக் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தார். அவர் 'அல்உம்மா' அமைப்பில் இருக்கார்னு அப்ப எங்களுக்குத் தெரியாது. ரஃபீக்கால் எங்களுக்கு வேலை எதுவும் ஏற்பாடு செய்ய முடியலை. அவரோட நண்பர் உசேன் மூலமா முயற்சி செய்தோம். கோடம்பாக்கத்துல ஒரு வீடு பார்த்துத் தங்கவைக்க முடிஞ்சதே தவிர, அவராலும் எங்களுக்கு வேலை வாங்கித் தர முடியலை. இதுக்கிடையில் குண்டு தயாரிக்கும்போது விபத்து ஏற்பட்டு ரஃபீக் இறந்த விஷயமே எங்களுக்குத் தெரியாது. அப்பதான் 1998-ல் கோவை குண்டுவெடிப்பு.

கோவை உக்கடம் தொடங்கி டெல்லி வரைக்கும் பரபரப்பாகிருச்சு. திடீர்னு குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஆட்கள் நாங்க தங்கியிருந்த வீட்டுக்கு வந்து போக ஆரம்பிச்சாங்க. எங்களுக்கு எதுவும் புரியலை. ரஃபீக்கையும் காணோம், வேலையும் கிடைக்கலைங்கிற ஒருவித நிர்க்கதியான சூழல். திரும்பத் திரும்ப உசேனை நச்சரிக்கவும், அரும்பாக்கத்தில் வேற வீட்டில் தங்கவெச்சார். அதுவரை கோவை குண்டுவெடிப்பு தொடர்பான செய்திகளைப் பத்திரிகைகளில் படிச்சுத் தெரிஞ்சுக்கிற பார்வையாளராத்தான் இருந்தோம். ஆனா, அந்தச் சம்பவத்தில் நாங்களும் பங்கேற்பாளர் ஆகிற மாதிரி சூழல் கூடிய சீக்கிரமே உருவாச்சு. நாங்க செஞ்ச ஒரே தப்பு, அரும்பாக்கத்துக்கு வீடு மாறும்போது கோடம்பாக்கத்து வீட்டிலேயே என் டைரியை விட்டுட்டு வந்ததுதான். அந்த டைரியில் நாங்க காதலிச்சது, கல்யாணம் செய்துக்கிட்டது, ரஃபீக் அடைக்கலம் கொடுத்ததுன்னு எல்லா விவரங்களும் இருந்தது. என் போட்டோவும் அதில் இருந்தது. போலீஸ் கைக்கு அந்த டைரி கிடைக்கவும் வாழ்க்கையே போச்சு.

'ஆயிஷா என்கிற சங்கீதா - முஸ்லிம் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய பர்தா பெண்', '100 கிலோ வெடிகுண்டுகளோடு தமிழகத்தில் தலைமறைவாக நடமாடுகிறார்'னு அன்னிக்கு ஆரம்பிச்சது பரபரப்புச் செய்திகள்! சின்னக் கோடு போட்டாங்க போலீஸ். அதுல ரோடே போட்டு புல்டோசர் ஓட்டிட்டுச்சு பிரஸ். அவங்களைப் பொறுத்தவரை அது அன்றைக்கான நியூஸ். ஆனா, எங்களுக்கோ அது உயிர்ப் போராட்டம்!'' - மௌனங்கள் படர்ந்த சில விநாடிகளுக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறார் ஆயிஷா.

'' 'இப்ப சூழ்நிலை சரி இல்லாததால், உடனே போலீஸ்ல சரண்டராக வேண்டாம். கொஞ்சம் பரபரப்பு அடங்கட்டும்'னு சொன்னார் உசேன். ஆனா, நிலைமை இன்னும் தீவிரமடையவும் ஆந்திரா கூட்டிட்டுப் போனார். டி.வி, பத்திரிகைகள் எல்லாத்திலும் பரபரப்பு அடங்கவே இல்லை.

ஆந்திராவில் இருக்கப் பிடிக்காம இந்திய எல்லை ஓரம் இருக்கிற நேபாள குக்கிராமத்துக்குப் போனோம். அங்கே ஒரு நர்சரி ஸ்கூலில் டீச்சர் வேலை பார்த்தேன். அவருக்கு பலசரக்குக் கடையில் வேலை. கொஞ்சம் நிம்மதியா மூச்சுவிட்ட சமயம், தமிழகத்தில் உசேன் கைதானாரு. தகவல் நேபாளம் வரை எட்டி என் ஸ்கூல் வேலை போயிருச்சு. இன்னொரு ஸ்கூல்ல சேர்ந்து வேலை பார்த்தேன். தமிழகப் பரபரப்புகள் அடங்கி அவருக்கும் ஓரளவு வருமானம் வர ஆரம்பிச்ச நேரம் எங்களுக்கு முதல் மகன் பிறந்தான். 3 வருஷம் ஓடிருச்சு. 'இவ்வளவு நாளுக்குப் பிறகு பிரச்னை இருக்காதே'ன்னு இவர் அவங்க வீட்டுக்குப் போன் பண்ணிப் பேசியிருக்காரு. மோப்பம் பிடிச்சுட்டாங்க போலீஸ்காரங்க.

பீகார் போலீஸ் மூலமா எங்களை ட்ரேஸ் செஞ்சு கைது செய்து தமிழ்நாட்டுக்கு அழைச்சுட்டு வந்தாங்க. அவங்களே தயாரிச்ச ஒரு வாக்குமூலத்தில் எங்ககிட்ட கையெழுத்து வாங்கிட்டாங்க. அதில் 'நாங்கதான் ரஃபீக்குக்கும் அவரோட நண்பர்களுக்கும் அடைக்கலம் கொடுத்து, பயங்கரவாதச் செயல்களுக்குத் துணை போனதா'ப் பதிவாகியிருந்தது வேதனையான வேடிக்கை.

முழுசா 3 வருடங்கள். நானும் அவரும் தனித்தனி செல்லில் இருந்தோம். மகன் சிவகாசியில் வளர்ந்தான். எங்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் போலீஸிடம் இல்லைங்கவும் பெயில் கிடைச்சது.

இப்போ எனக்கு டீச்சர் வேலை. அவருக்குச் சின்னச் சின்னதாப் பல வேலைகள். ஆகஸ்ட் 15, டிசம்பர் 6, ஜனவரி 26 தேதிகளை நாங்க மறந்தாலும், வீட்டுக்கதவைத் தட்டும் போலீஸ் அதை ஞாபகப்படுத்திருவாங்க. தங்கி இருக்கிற இடத்துல நான்தான் ஆயிஷான்னு தெரிஞ்சதும் ரெண்டு பேருக்கும் வேலை போயிடும். வீட்டைக் காலி பண்ணச் சொல்லிருவாங்க. இதுவரை 4 வீடு காலி பண்ணிட்டோம். இப்ப குடியிருக்கிற வீட்டோட ஓனர், வேலை பார்க்கிற கடை முதலாளி யாருக்கும் நான்தான் ஆயிஷான்னு தெரியாது. இந்த 10 வருஷங்களைத் திரும்பிப் பார்த்தா, கண்ணீரும் ஓட்டமும்தான் மிஞ்சியிருக்கு. இனிமேதான் வாழ்க்கையை ஆரம்பிக்கணும். இன்னும் ஒரு வருஷத் தண்டனை பாக்கி இருக்கு. அப்பீல் பண்ணியிருக்கோம். விடுதலை கிடைக்கும்னு நம்புறோம். நீதியையும் இறைவனையும் நம்புறோம்!'' - கைகோத்திருக்கும் 5 மாத மகனின் விரல்களைப் பிரித்து நீவும் ஆயிஷாவிடம் அந்தக் கேள்வியைக் கேட்க எனக்கும் தயக்கமாகத்தான் இருந்தது.

''இன்றைய சூழ்நிலையில் நீங்க இஸ்லாம் மதத்துக்கு மாறியதால்தான் இத்தனை பிரச்னைகளும் என்ற நினைப்பு ஏற்பட்டது உண்டா?''

ஆயிஷாவின் கண்கள் அவசரமாக மறுத்தன. ''எப்பவுமே இல்லை. நானாகத்தான் இஸ்லாத்தை விரும்பித் தேர்ந்தெடுத்தேன். 'போர்க்காலங்களில்கூட குழந்தைகள், வயதானவர்கள், பெண்கள் பாதிக்கப்படக் கூடாது'ங்கிறதுதான் குர்-ஆன் வாசகம். குண்டுவெடிப்புகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக் கொல்லப்படுவதை மட்டும் குர்-ஆன் அனுமதிக்குமா என்ன? 'வாழ்க்கையைத் திட்டமிடாமலே கல்யாணம் பண்ணிக்கிட்டது சரியா?'ங்கிற கேள்வி மட்டும்தான் என்னை உறுத்திக்கிட்டே இருக்கு, அதுதான் எங்க எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். எந்த மதத்தவரா இருந்தாலும் தீவிரவாதி என்பவன் தீவிரவாதிதான். அவனுக்கும் மதக் கோட்பாடுகளுக்கும் சம்பந்தமே இல்லை!''

விடைபெறும் சமயம், மெல்லிய குரலில் கூறுகிறார் ஆயிஷா, ''என் பசங்களை ஐ.ஏ.எஸ்., படிக்கவைக்கணும்னு ஆசை. அம்மாதான் 'டெரரிஸ்ட்'னு பேர் எடுத்தாச்சு. பிள்ளைகளாவது 'அதிகாரிகள்'னு பேர் எடுக்கட்டுமே... இன்ஷா அல்லாஹ்!''

நன்றி: ஆனந்த விகடன் தேதி: 07-01-2009