Wednesday, March 31, 2010

தோஹா சங்கம் : என் சங்கத்து ஆளை அடிச்சவன் எவண்டா பதிவு

முன் டிஸ்கி : அவ்வப்போதைய டிரண்ட்படி பதிவு போடுவது தமிழ் பதிவர்களின் ‘தலை’யாயக் கடமைகளில் ஒன்றாகி விட்டது.. சமீபத்திய நித்தியரஞ்சி விஷயத்தில் எந்த பதிவும் எழுதவில்லை.. இப்போதும் சங்கத்து விஷயத்தில் நம் ‘கருத்தை’ச் சொல்லவில்லையென்றால் தமிழ் கூறும் இணைய உலகம் நம்மை மன்னிக்காது என்பதால் இந்த பதிவை வெளியிடுவது கட்டாயமாகின்றது.




எங்களைப் பற்றி ஒரு அவதூறு தமிழ் இணையத்தில் பரப்பப்பட்டு உள்ளது.. அது குறித்தே இப்பதிவு.. தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமம்(தோ.த.இ.ப.எ.வ.ச.கு) இப்பதிவு பல ஆண்டுகளாக தோஹாவில் இயங்கி வருவது உலகம் பூராவும் இருக்கும் ப்ளாக்கர்களுக்கு எல்லாம் தெரியும்.. ஆனா சமீபத்திய குளறுபடிகளில் நமது சங்கத்தின் பெயரும் அடிபடுவது வருத்தத்தை அளித்துள்ளது.

தோ.த.இ.ப.எ.வ.ச.கு. பல அற்புதமான வேலைகளை தோஹாவில் செய்து வருகின்றது.. அரேபியத் தீபகற்பத்தில் தோஹா இருப்பதால் வெயிலின் கொடுமைக்கு ஆளாக நேர்கின்றதை என்பதைக் கருத்தில் கொண்டு கத்தார் நாட்டை அண்டார்ட்டிக்காவிற்கு அருகில் பெயர்த்து வைக்க உலக அளவில் விடப்பட்ட டெண்டர்களை பரிசீலிக்கும் வேலையை
தோ.த.இ.ப.எ.வ.ச.கு. ஏற்றுள்ளது எங்களது சேவைகளின் மைல் கல்களில் ஒன்று.

தோஹாவில் இருக்கும் கத்தாரிகளைக் கூட தமிழில் ப்ளாக் எழுதச் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகளையும் விரைவாக செய்து வருகின்றோம்.

தோஹாவில் இருக்கும் தமிழர்களை எல்லாம் இணைத்து தோஹாவிற்குள் தனி நாடு கோரிக்கையையும் கேட்க முடிவு செய்துள்ளோம்.

பதிவர் சந்திப்புகளில் கலந்து கொள்பவர்களுக்கு போண்டாவும், டீயும் வாங்கித் தரும் வழக்கத்தை மாற்றி மினி இட்லியும், பொடி தோசையும், கெட்டிச் சட்னியும் வாங்கித் தரும் ஒரே சங்கக் குழுமம் உலக அளவில் தோ.த.இ.ப.எ.வ.ச.கு. மட்டுமே.

எங்கள் சங்கத்தின் முக்கிய அங்கத்தினர்களான மேதகு திரு மதிப்புமிக்க ஆயில்யன், மற்றும் ஹிஸ் ஹைனஸ் தமிழ் பிரியன் இடையே பகைத் தீயை எரிய வைக்கும் முயற்சியில் துபாயில் இருந்து இயங்கும் சில தீவிரவாதக் குழுக்கள் இறங்கி உள்ளன... தலைவர் பதவிக்கு ஏதோ சண்டை நடப்பது போன்ற மாயத் தோற்றத்தை அவை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாதவைகள் இந்தப் பனங்காட்டு நரிகள்... தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தின் நேற்றைய, இன்றைய, நாளையத் தலைவர் ஆயில்யன் தான் என்பதை இங்கு அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

தோஹாவில் இருந்து ஆயில்யன் சென்று விட்டால் அவர் இருந்த அந்த சீட்டை துடைத்து வைத்து, அதில் அவர் பெயரை எழுதி தலைவர் என்று எழுதி வைப்போம்... எங்கள் தலைவரைத் தவிர புதிதாக எவரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மறுக்கும் அஞ்சா நெஞ்சன் இருக்கும் ஊர்க்காரர்கள் நாங்கள்...

குறிப்பாக பதிவுலகிற்கான வளைகுடா அத்தாரிட்டியாக நாங்கள் நினைக்கும் துபாயில் இருந்து இந்த வதந்தி கிளம்பி இருப்பது மிகுந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல கிளைகளாக ஒற்றுமையின்றி பிரிந்து கிடத்தும் துபாய் சங்கத்தவர்கள், ஒற்றுமையுடன் செயல்படும் தோ.த.இ.ப.எ.வ.ச.கு. த்தின் வளர்ச்சியின் மீது ஏற்பட்ட பொறைமையின் விளைவே இந்த வதந்தி என்பதைச் சிந்தனையாளவர்கள் அறிவர்..

ஆகவே மக்களே தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தின் மீது பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தோஹா தமிழ் இணைய பதிவுலக எழுத்தாள வலைப்பதிவர் சங்கக் குழுமத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதையும் உங்கள் அனைவருக்கும் அன்போடு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

Thursday, March 25, 2010

நைஜீரியாவில் இருந்து ஜெமோவும்., ஸீமமெண்டா என்கோசீயும்

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ ஆயிரத்தின் ஒருவன் ஆண்டிரியா போல் ஒரு பிகருடன் ஜெமோவும் நைஜீரியாவிற்கு புதைப் பொருள் ஆராய்ச்சிக்கு கிளம்பிவிட்டதாக எண்ணி விட வேண்டாம்... இதுவும் அதுபோல் தான்.. ஆனால் ஒரு வித்தியாசமான புதிர்... புதிருக்குப் போகலாமா?

புதிர் : 1
கீழ்க்கண்ட பாராவில் இருக்கும் பின்நவீனத்துவ கூறுகளையும், ஞானமரபின் விளைவுகளையும் இரண்டு பின்னூட்டங்களுக்கு மிகாமல் விளக்கவும்..

ஞாயிற்றுக்கிழமை நகையைக் காணோம்
திங்கட்க்கிழமை திருடன் வந்தான்
செவ்வாய்க்கிழமை ஜெயிலுக்கு போனான்
புதன்கிழமை புத்தி வந்தது
வியாழக்கிழமை விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை வீட்டுக்குப் போனான்
சனிக்கிழமை சாப்பிட்டுப் படுத்தான்

பரிசு: முந்தாநாள் சுட்ட புளித்த இட்லியும், கெட்டி சட்னியும் ஒரு பார்சல்

புதிர் : 2

முதலில் கீழே உள்ள பாராவைக் கவனமாகப் படிக்கவும்.




ஸீமமெண்டா அடிச்சி என்பவர் எழுதிய நைஜீரியா பற்றிக் கட்டுரை உண்மையின் உரைகல் என அனைவரும் போற்றிப் புகழ்ந்தனர். மேலைநாடுகளுக்குரிய தொழில்நுட்பத்தேர்ச்சியுடன் மொழி செம்மைசெய்யப்பட்ட நன்கு தொகுக்கப்பட்டது அது. ஆனால் மிகமிக மேலோட்டமானது. அந்த விவரிப்பு என்பது இம்மாதிரி விடயங்களை வாசிப்பவர்களுக்கு எவ்வகையிலும் புதிதல்ல. அதில் மானுட எழுச்சியோ, உணர்வின் நுண் கணங்களோ இல்லை. போலியான உணர்வெழுச்சிகள் மட்டுமே இருந்தன. ..................
மேலைநாடுகளைப் பொறுத்தவரை எப்போதுமே இதற்கு ஒரு பழகிய வழிமுறை உண்டு. முதலில் பல்கலைக்கழகங்கள் வழியாக ஆய்வேடுகள் உருவாக்கப்படும். அவை தேவையான கருத்தியலை போலி ஆதாரங்கள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் சமைக்கும். பின்பு இலக்கியவாதிகள் உருவாக்கப்படுவார்கள். அவர்கள் உணர்ச்சிகளை தூண்டிவிடுவார்கள். ஸீமமெண்டா அடிச்சி மேல் நாட்டு ஊடகங்களின் தயாரிப்பு. மேற்கத்திய நாடுகளின் ஏடுகளில் சொல்லப்பட்ட, அவர்களுக்கு உகந்த கட்டுக்கதைகளை மட்டுமே வைத்து ஸீமமெண்டா அடிச்சி இதை எழுதியுள்ளார்.. நைஜீரியாவில் உள்ளவர்களே இக்கதைகளைக் கேட்டு நொந்து சிரிக்கும் நிலை தான் இருக்கின்றது.


மேலே உள்ள பாராவில் இருப்பவற்றில் ஸீமமெண்டா அடிச்சி என்ற பெயரை நீக்கி விட்டு அந்த இடங்களில் ஜெமோ என்பதை உள்ளீடு செய்து பின்னூட்டமாக இட வேண்டும். ctrl+f போட்டு கண்டுபிடிக்கக் கூடாது..

பரிசு : ஞானச்சுவடு இதழ் அடுத்த ஒரு வருடத்திற்கு இலவசமாக சந்தா இன்றி அனுப்பப்படும்.

Tuesday, March 2, 2010

Professional Killers - இஸ்ரேலில் இருந்து துபாய்க்கு

சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஹிந்தி படம் வாய்ப்பு கிடைத்தது. படத்தின் பெயர் த கில்லர் (The Killer). துபாயில் எடுக்கப்பட்டப் படம். கதை ரொம்ப சிம்பிள்.. மாலையில் துபாய் வரும் ஒருவர் மறுநாள் காலையில் இந்தியா திரும்பி விடுவார். அந்த இரவு மட்டும் அவருக்கு வாகனம் ஓட்ட ஒரு டாக்ஸி டிரைவர் தேவை. டிரைவரை தேர்ந்தெடுத்து பேரம் பேசி கிளம்புகின்றார். அந்த நபர் வந்தது, அந்த இரவில் துபாயில் இருக்கும் 4 பேரை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக.. கிட்டத்தட்ட ஒரு மிஷன் போல... தனியாளாக தொழில் முறை கொலையாளி. படம் எடுக்கப்பட்ட விதம் அழகாக இருக்கும்.. பரபரப்பைக் கூட்டிக் கொண்டே செல்வார்கள். ஒரே இரவில் படம் முடியும்.

கதாநாயகனாக இம்ரான் ஹாஸிமியும், கொலையாளியாக இர்ஃபான் கான்... மூவரைக் கொன்ற நிலையில் நான்காவதாக கொல்ல இருப்பது டிரைவரின் காதலியை... காதலி? ஜேஜே படத்தில் வரும் அமோகா தான்... இறுதியாக காதலியைக் காப்பாற்ற கதாநாயகனின் போராட்டம் வென்றதா? கொலை செய்து தனது கடமை(?)யைச் செய்ய கண்ணும் கருத்துமாக இருக்கும் கொலையாளி வென்றானா? என்பது தான் கதை.

இப்போது நாம் இந்த படத்தைப் பற்றி பேச வரவில்லை... இப்படத்தில் நடந்தது போன்ற இன்றைய கிரைம் உலகில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். மத்தியகிழக்கு நாடுகளில் பாலஸ்தீன - இஸ்ரேல் பிரச்சினை ஓயாதது. இஸ்ரேலின் ஆயுத பலத்தின் முன்னாலும், அமெரிக்கா செல்லப்பிள்ளை என்ற குசும்பாலும் இது நீண்டு கொண்டே தான் செல்லும். ஆயுதங்களின் முன்னிலையிலேயே வாழும் பாலஸ்தீனர்களும் ஆயுதங்களை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அப்படியான ஒரு சூழலில் உருவாகி வளர்ந்தது தான் ஹமாஸ் அமைப்பு.

பாலஸ்தீனில் ஹமாஸ் மற்றும் பத்தாஹ் அமைப்புகள் பெரியவை. இதில் ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களுடன் இருக்கும் தனி படையணியை உருவாக்கி வைத்துள்ளது. இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தான் மஹமூத் அல் மாபூஹ். பல ஆண்டுகள் சிரியாவில் இருந்த இவர் ஹமாஸ் அமைப்புக்காக ஆயுதங்களை சேகரிப்பதில் முக்கியமான நபர். சமீபத்தில் துபாய் வந்த போது அவர் இருந்த அறையில் வைத்து கொலை செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்த விசாரணைத் தகவல்கள் தான் அதிர்ச்சி அளிப்பதாக இருப்பவை. இவரைக் கொலை செய்ய சுமார் 20 க்கும் மேற்ப்பட்ட நபர்கள் துபாய் வந்து இருக்கின்றனர். அனைவரும் போலியான ஐரோப்பிய நாடுகள் , ஆஸ்திரேலியாவின் பாஸ்போர்ட்களை பயன்படுத்தி உள்ளனர். மிகவும் நுணுக்கமாக திட்டமிடப்பட்ட ஹாலிவுட் படங்களை ஒத்த இந்த கொலையில் ஈடுபட்டதில் 6 பெண்களும் அடக்கம்.

ஜனவரி 18 ந்தேதி ஐரோப்பாவின் பல பாகங்களிலும் இருந்து துபாய் வந்து இருக்கின்றனர். மாபூஹின் நடவடிக்கைகள் அனைத்தும் நோட்டம் விடப்பட்டு இருக்கின்றது. ஜனவரி 19 ந்தேதி மாபூஹ் இருந்த ஹோட்டல் அறையில் வைத்து அவரை கொலை செய்துள்ளனர். பின்னர் அன்றும், மறுநாளும் இவர்கள் அனைவரும் விமானங்கள் மூலம் பல நாடுகளுக்கும் பிரிந்து சென்றுள்ளனர். இவர்கள் அனைவரின் போலி பாஸ்போர்ட் காப்பிகளையும் துபாய் போலிஸ் வெளியிட்டுள்ளது. மேலும் இவர்கள் எங்கிருந்து வந்தனர்? எங்கே திரும்பிச் சென்றனர்? அவர்கள் ஹோட்டலில் நடமாடிய CCTV மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்கள் அனைத்தையும் துபாய் போலிஸ் வெளியிட்டுள்ளது.

நல்ல பலசாலியான மாபூஹ் முதலில் ஒரு மயக்கத்துக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருக்கின்றார். இரவு 8:24 க்கு மாபூஸ் தனது அறைக்கு திரும்பும் வீடியோவும், 8:46 க்கு கொலையாளிகள் லிப்ட் மூலம் சாதாரணமாக பேசிக் கொண்டே இறங்கிச் செல்லும் வீடியோவும், கொலை நடக்கும் நேரத்தில் ஹோட்டல் வளாகத்தைக் கண்காணிக்கும் கொலைக் கூட்டாளி(ஒரு பெண் உள்பட)களின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.



துபாய் போலீஸ் இது நிச்சயமாக இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாத்தின் வேலை தான் என்று கூறியுள்ளது. வந்தவர்கள் அனைவரும் மிகவும் திறமையாக உருவாக்கப்பட்ட போலி பாஸ்போர்ட்களை பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்காவில் இருக்கும் ஒரு சிறிய வங்கியின் கடனட்டைகளைப் பயன்படுத்தி அறை எடுத்து இருக்கின்றனர். துபாயை விட்டு வெளியேறிய அவர்கள் அமெரிக்கா, மற்றும் இஸ்ரேலை சென்றடைந்து இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இங்கிலாந்து,அயர்லாந்து , ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பாஸ்போர்ட்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த நாடுகள் உறைந்து போய் உள்ளன. குற்றவாளிகள் அனைவரும் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று விட்டதால் யார் எங்குள்ளனர் என்றும் புரியாமல் திணறி வருகின்றன. இண்டர்போல் அதிகாரிகள் இது குறித்த விசாரணையில் இறங்கியுள்ளனர்.

வழக்கம் போல் இஸ்ரேல் திருட்டு முழி முழிக்க, அமெரிக்காவோ கள்ள முழி முழிக்கின்றது... இந்த களேபரத்தில் அதிகம் பாதிக்கப்பட்டு இருப்பது துபாய் தான்... துபாய் சர்வதேச குற்றவாளிகளுக்கான உறைவிடம் என்று சொல்லப்பட்டாலும், அந்த மண்ணில் எந்த குற்றமும் நிகழா வண்ணம் பார்த்துக் கொள்வது அந்த குற்றவாளிகளின் வழக்கம்... இதையே தான் துபாயும் விரும்புகின்றது. எனவே தாம் மாபூஹ் போன்ற அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிழல் உலக நபர் கூட சாதாரணமாக உலாவ முடிந்தது.

இதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மொசாத் துபாய்க்குள் நுழைந்து தனது காரியத்தை சாதித்துள்ளது. துபாய்க்கு மாபூஹ் வருவதையும் இங்குள்ளவர்கள் தகவல் தெரிவித்ததாகவும் சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது.. எது எப்படியோ கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் துபாய்க்கு இது ஒரு மறைமுகமான சவாலாகவும், துபாயில் இயங்கும் சர்வதேச அமைப்புகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு நன்றி : www.gulfnews.com

Monday, March 1, 2010

சுஜாதாவுடன் புதைந்த மர்மம்

சமீபத்தில் சென்னையில் ட்விட்டர்களும், ப்ளாக்கர்களும் இணைந்து சுஜாதாவின் நினைவலைகளில் மூழ்கியதைப் படித்த போது கொஞ்சம் பொறாமையாக இருந்தது. நமக்கு மிகவும் பிடித்தவர்களைப் பற்றி பேசி சிலாகிப்பதைக் கேட்பதில் இருக்கும் சுகமே அலாதி தான்...

90 களில் நாங்கள் முதன் முதலாக புத்தகங்களை வாசிக்கத் துவங்கியது சிறுவர் மலர், அம்புலிமாமாவில் இருந்து தான்... அதனைஅடுத்து எங்கள் வீடுகளில் வாங்கப்படும் ராணி வாராந்திரியையும் புரட்டும் வாய்ப்பு கிடைக்கும். அதில் வரும் தொடர்கதைகளை எனது அம்மா வாசிக்க அக்கம் பக்கம் இருப்பவர்கள் கேட்டுக் கொள்வார்கள்... டிவி பொட்டியின் அடிமைத் தனத்திற்குள் நுழைய அன்றைய எங்கள் தெருவின் சீரியல் அவ்வகை தொடர்கள் தான்.

இதற்கு அடுத்து கொஞ்சம் பெரிதாகியதும், ராஜேஸ்குமாரின் பாக்கெட் நாவல்கள் அந்த இடத்தைப் பிடிக்க ஆரம்பித்தன. பரபரப்பான துப்பறியும் நாவல்களின் மீதும், குற்றம் செய்யும் முறைகளின் மீதும், அதைக் கண்டுபிடிக்கும் முறையின் மீது ஏனோ ஒருவித உந்துதலை ஏற்ப்படுத்துவதாய் அமைந்தது அம்மாதிரியான நாவல்கள்... இந்த வரிசையில் பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றவர்களும் அடங்குவர். இந்த தொடரில் சில நேரங்களில் மாலைமதி, ராணிமுத்து போன்றவையும் கிடைக்கும்.. இதில் குடும்பநாவல்கள் படிக்கக் கிடைத்தது.

இந்தவரிசையில் மேலும் செல்லும் போது தான் சுஜாதா என்ற கம்பீரமான விருட்சம் தென்பட்டது. ஆனந்த விகடனில் அவர் எழுதிய தொடர்கள் வாயிலாகவே எனக்கு அவர் அறிமுகமானார். பின்னர் நூலகங்களில் இருந்தா அவரது புத்தகங்களை படிக்கக் கிடைத்தது. பொதுவாக ஆலமரம் என்று சிறந்த ஆளுமைகளைச் சொல்வார்கள். ஆனால் சுஜாதாவை ஆலமரம் என்று சொல்ல இயலாது. ஏனெனில் ஆலமரத்தின் கீழ் எதும் வளராது. ஆனால் சுஜாதா என்ற விருட்சத்தின் கீழ் இன்று எழுதக் கூடியவர்களில் 95 சதவீதம் பேர் அடங்குவர் என்பது எனது கருத்து.



சுஜாதா தொடாத துறை இல்லை எனலாம். இலக்கியம் தொட்டு, விண்வெளி ஆராய்ச்சி வரை.... எனக்கு தமிழகத்தில் இருக்கும் குறிப்பாக இந்து மதம் பற்றிய விளக்கங்களை தெளிவாக தெரிந்து கொள்ள உதவியவர். சுஜாதா அறிபுனைக் கதைக்களை மக்களிடையே பிரபலப்படுத்தியவர் சுஜாதா. பத்தி எழுத்துக்கள் நிறைய எழுதியவர். ஹைக்கூக்கள் அறிமுகபடுத்தினார், பாராக்களில், வார்த்தைகளில் கதைஎழுதச் சொல்லிக் கொடுத்தார்.

உண்மை அறிவியலை சுலபமாக சொல்லிக் கொடுத்தார். நாம் சாதாரணமாக எழுதும் ஒரு பாராவை ஒரு வரியில் எல்லாவற்றையும் அடக்கத் தெரிந்தவர். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக படிக்க வைக்கும் ஆற்றல் பெற்றவர். சில கதைகளைப் படிக்கும் போது வர்ணனைகளை ஸ்கிப் செய்து விடுவேன்.. ஆனால் சுஜாதாவின் கதைகளில் இது முடியவே முடியாத விஷயம்.

பெரிய கதைகளை படிக்கும் போது கிட்டத்தட்ட கதைக்குள் நாமே நுழைந்து விடுவோம். அடுத்த வீட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பது போல.. அல்லது அந்த கதாநாயகனாக, வில்லனாக, நாமையே உருவகப்படுத்திக் கொள்வோம். இதன் தாக்கம் பல நாட்களுக்கு இருக்கும். ஆ நாவல் சிறந்த உதாரணம். படித்த பல நாட்களுக்கு காதுகளில் குரல் ஒலித்துக் கொண்டு இருந்தது. என் இனிய இயந்திரா படித்த போது தெருக்களில் எல்லாம் கேமரா வைத்து இருந்தது போல் ஒரு பிரமையை உணர முடிந்தது.

ஸ்ரீரங்கம் என்ற ஊரை எனக்கு அறிமுகப்படுத்தியவர். திருச்சி செல்லும் போதெல்லாம் ஸ்ரீரங்கத்து வீதிகளில் சென்று உலாவ வேண்டும் என்று வேட்கையை ஏற்படுத்தியவர்..ஆனால் சுஜாதா என் மனதில் கட்டியமைத்து இருக்கும் ஸ்ரீரங்கத்திற்கு மாற்றான ஒன்றைக் கண்டால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று தெரியாததால்.. அதைச் செய்யவில்லை... (இதே நிலை தான் தஞ்சைக்கும், தாராசுரத்திற்கும், கங்கை கொண்ட சோழபுரத்திற்கும்.)

சுஜாதா விட்டு விட்டுப் போன ஒரு மர்மம்.. மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்... கணேஷ், வசந்த் நாம் அனைவருக்கும் தெரியும்.. சுஜாதாவின் துப்பறியும் நாவல்களின் கதை மாந்தர்கள். அவர்கள் வாயிலாக அவர் சொல்ல வந்தது அல்லது இல்லாத ஒன்று... அவர் இறக்கும் வரை அது தெரியாமலேயே போய் விட்டது.. இனி மேலும் தெரியாமலேயே தான் இருக்கும்..

சில இடங்களில் அது குறித்து இருக்கும் ஒரு ‘பலான’ ஜோக்.. அது சுஜாதா அவர்களின் எழுதியதில்லை.. யாரோ அடித்த விட்ட புருடா... அது மர்மமாகவே இருப்பது தான் அந்த ஜோக்கின் தனித்தன்மை.. இன்னும் அது குறித்து பல ஜோக்குகள் வரலாம்.. எது வந்தாலும் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் என்ற ஒன்று சஸ்பென்ஸூடன் குறுகுறுப்பாக நினைவில் இருக்கும்.

சுஜாதா என்னுடைய ஆதர்ச எழுத்தாளன் என்று சொல்ல மனது வரவில்லை.. எழுத்து,படிப்பு,இலக்கியம்,அறிவியல் எல்லாவற்றையும் எனக்கு சொல்லிக் கொடுத்த எனது மதிப்பிற்குரிய ஆசான் என்றால் மிகையில்லை.

தமிழ் இருக்கும் வரை சுஜாதா என்ற முழுமையடைந்த ஆளுமை உயிரோடு இருக்கும்.
.
.