Thursday, November 29, 2012

சுழல் மோகினி

கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் என் நெஞ்சை நோக்கி இறங்கிக் கொண்டு இருந்த அந்த பளபளப்பான கத்தியைத் தடுக்க இயலாமல் கத்த மட்டுமே எனக்கு முடிந்தது. அவள் கோரமான சிரிப்போடு எனது இடது பக்கத்து நெஞ்சில் கத்தியை இறக்கினாள்..
ஏதோ தொண்டையில் அடைப்பது போல் இருந்தது. நெஞ்சில் இரத்தம் தனது பீரிடும் அளவைக் காட்டிக் கொண்டு இருந்தது.
 “டேய் எவ்ளோ நேரம்டா.. தூங்குவா எந்திரிடா..”
அவள் தனது கர்ண கொடூரமான குரலில் கத்திக் கொண்டு இருப்பது காதில் கேட்டது. சட்டென்று முழிப்பு வந்தது..
 “சே.. கனவு”
இளம் குளிரான நவம்பர் மாதத்து குளிரிலும் உடல் வேர்த்து இருப்பதை உணர முடிந்தது. கண்களில் எரிச்சலும், தொண்டையில் ஒரு கரகரப்பும் சேர்ந்து இருந்தது. இடது பக்க நெஞ்சில் ஏதோ கூர்மையானதை வைத்து அழுத்திய தடம் இருந்தது.. ஆனால் இரத்தக் கறை ஏதும் இல்லை..

காலையிலேயே கொடூரமான கனவு என்னை உலுக்கி இருந்தது
“டேய்.. உன் பிரண்ட்ஸ் எல்லாம் வெளியே வெயிட் பண்றானுகடா.. எங்கேயோ அருவிக்கு போகனும்னு சொன்னீயே.. ஞாயிற்றுக் கிழமை சீக்கிரம் போய் குளிச்சிட்டு வாங்க.. மதியம் சோறாக்கி வைக்கிறேன்.. இங்க சாப்பிட வந்துடுங்க” அம்மா மீண்டும்
அம்மாவுக்குத் தெரியும்.. கூட வந்து இருப்பவர்கள் இந்த ஞாயிற்றுக் கிழமையை கொண்டாடுவார்கள் என்று.. வேகமாக கிளம்பி கொண்டு வெளியே வந்தேன். நண்பர்கள் மூவரும் காரில் தயாராக இருந்தனர்.
“ஏண்டா தூங்குமூஞ்சி நாங்க தான் நேத்தே சொன்னம்ல.. இங்க வந்து உன்னை எழுப்ப வேண்டியதாப் போச்சு”
 “சாரிடா.. நைட் தூங்க லேட்டாகிடுச்சு.. காலையில் ரொம்ப டயர்டு வேற.. கெட்ட கனவு வந்து தூக்கத்தை கொடுத்துடுச்சு.”
கண் எரிச்சலுடன், கத்தி இறங்கிய இடத்தைத் தொட்டுப் பார்த்தேன்.. லேசாக வலிப்பது போல் இருந்தது. வண்டி வேகமாக சென்று கொண்டு இருந்தது.. அப்போது தான் திறந்து இருந்த டாஸ்மாக்கில் மது வகைகளை வாங்கிக் கொண்டார்கள் கூடவே தீவனங்களும்...
எங்கள் ஊரில் இருந்து 20 கி.மீ தூரத்தில் மலையடிவாரத்தில் அந்த அருவி இருக்கின்றது. அவ்வளவாக ஆட்கள் வர மாட்டார்கள். அடுத்த அரை மணி நேரத்தில் அருவியிலும், அதை ஒட்டி இருந்த தண்ணீர் கிடங்குகளிலும் குளியல் ஆரம்பமாகி இருந்தது. அதைத் தொடர்ந்து அனைவரும் மது அருந்த ஆரம்பித்து இருந்தனர்.. எனக்கு மது பழக்கம் இல்லாததால் தீவனங்களை தின்று கொண்டு இருந்தேன். கூத்தும் கும்மாளமுமாக இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை.. விரைவில் கொஞ்சம் கொஞ்சமாக இருட்டிக் கொண்டு வந்தது. நல்ல மழை பெய்வதற்கான அறிகுறி இருந்தது.
நல்ல போதையில்  இருந்த நண்பர்கள் மூவரையும் தள்ளிக் கொண்டு வந்து வண்டியில் ஏற்றுவதற்குள் போதும் போதுமென்றாகி இருந்தது. வண்டியில் ஏறியதும் மூவரில் சரிந்து விட்டிருந்தனர். ப்ளாட்.. வழக்கமாக நடப்பது தான் என்பதால் காரை ஓட்டிக் கொண்டு வந்தேன்.
வண்டி கிளம்பியதும் மழை சடசடவென அடிக்க ஆரம்பித்து இருந்தது. மலையை விட்டு சிறிது தூரம் இறங்கி சமதளத்திற்கு வந்ததும் மழை இன்னும் வெளுக்க ஆரம்பித்து இருந்தது. திடீரென்று படார் என்ற சத்தத்துடன் பின்பக்க டயர் வெடித்திருந்தது. மழையில் நனைந்து கொண்டே இறங்கிப் பார்த்தேன். டயர் பணாலாகி இருந்தது.
சட்டையை தலைவழியே கழட்டிவாறே வைத்துக் கொண்டு டிக்கியைத் திறந்தால் ஸ்டெப்னி மட்டுமே இருந்தது. ஜாக்கி உள்ளிட்டவைகளைக் காணவில்லை. கடன்கார நண்பன்.. எவனுக்காவது அவசரத்துக்கு கொடுத்து இருப்பான்.
மழை இன்னும் வலுத்து இருந்தது. போன் சிக்னல் அனைத்தும் கட்டாகி இருந்தது. நவம்பர் மாதக் குளிரில் அருவிக்கு ஆட்கள் வருவது அபூர்வம்.. அதுவும் இப்போது திடீரென்று மழை வேறு கொட்டுகின்றது. கவ்விய இருட்டில் மின்னல் வெட்டிச் சென்றது. எங்கோ தென்னை மரத்தில் விழுந்து இருக்க வேண்டும் அருகிலேயே.. அந்த வெளிச்சத்தில் அங்கிருந்த தோட்டத்திற்குள் வீடும், வீட்டின் முன் காரும் தெரிந்தது.

நேரத்தை வீணாக்கக் கூடாது என்று எண்ணிக் கொண்டே தட்டுத் தடுமாறி அந்த வீட்டை நோக்கிச் சென்றேன். மழையினால் பாதை முழுவதும் சகதிக்காடாகி இருந்தது. வீட்டில் இருந்த காலிங்பெல்லை அழுத்தினாலும் உள்ளே பெல் அடிக்கும் ஓசை ஏதும் கேட்கவில்லை. கரெண்ட் கட்டாகி இருக்கலாம் என்ற எண்ணியவாறே கதவைத் தட்டினேன்.

உடனே திறந்த கதவின் வழியே அந்த அபூர்வ தேவதையைக் கண்டேன். மன்மதனின் காதலியாக இருக்கும் சகல லட்சனங்களையும் பொருந்திய காந்தர்வி பார்த்த பார்த்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.. “ஹலோ.. என்னங்க.. யார் நீங்க. என்ன வேணும்?..இவ்ளோ மழையில் இங்க வந்து இருக்கீங்க”
அந்த பைங்கிளி தனது இதழ் திறந்து பேசியது.. இல்லை இல்லை நாதம் இசைத்தது..
 “டயரோட கார் வெடிச்சிருச்சு.. இல்லையில்லை.. ஸ்டெப்னியோட டயர் வெடிச்சிடுச்சி”
உளறிக் கொட்டிக் கொண்டு இருந்தேன். ஒரு பெண்ணின் அழகு இப்படி மயக்கும் என்று இன்று தான் கண்டுகொண்டேன்..
“என்னதாங்க வேணும்.. சொல்லுங்க” அந்த குயில் கிணிகிணியென ஓசை எழுப்பியது... இப்போது நிதானத்திற்கு வந்து இருந்தேன்
 “அருவிக்கு வந்தோம்ங்க.. வழியில் கார் டயர் வெடிச்சிடுச்சு.. ஸ்டெப்னி மாத்த ஜாக்கி இல்லை வண்டில.. இங்க உங்க வீட்டைப் பார்த்தேன். முன்னாடி காரும்.. அதான் உங்ககிட்ட உதவி கேட்கலாம்ன்னு”
”ஓ அப்படியா.. சரி சரி உள்ளே வாங்க.. நல்லா நனைஞ்சு போய் இருக்கீங்க” அவள் வழி விட நான் உள்ளே சென்றேன். நல்ல விசாலமான ஹாலாக இருந்தது. அவள் மாம்பழ நிறத்தில் சிவப்பு பார்டர் வைத்த சேலை அணிந்து இருந்தாள்.. வயது 25 க்குள் இருக்கும் போல் தோணியது..
அழகாக வாறிய தலை முடி. திருத்தமாக இருந்த புருவம். அழகான சிறிய பொட்டு. சோபாவில் இருந்த துண்டை எடுத்து நீட்டினாள். அதை வாங்கும் போது அவளது விரலில் என் விரல் உரச ஒரு மின்னல் அடித்தது போல் இருந்தது.
 “முதல்ல தலையை துவட்டுங்க.. ஒரு டீ போட்டுத் தர்ரேன்.. குடிங்க.. அதுக்குள் ஜாக்கி எடுத்து தர்ரேன்” என்று சொல்லி விட்டு உள்ளே சென்று விட்டாள். தலையை துவட்டிக் கொண்டே சோபாவில் அமர்ந்தேன்..
நல்ல பெரிய வீடு தான்.. வெளியே இருந்து பார்க்கும் போது பழையதாக இருந்தாலும் உள்ளே மார்டனாக இருந்தது. சிறிது நேரத்தில் அவள் டீ கோப்பையுடன் வந்தாள். டீயை வாங்கும் போது தான் கவனித்தேன். அவளது முந்தானையின் அகலம் குறைந்து போய் இருந்தது. அதோடு இடுப்புப் பகுதி இப்போது நன்றாக தெரிவது போல் மாற்றிக் கட்டியும் இருந்தாள். உள் மனதில் ஒரு சலனம் ஓடியது.
“இங்க வேறு யாரும் இல்லீங்களா?”
“என்னோட கணவர் வேலை விஷயமா மதுரை வரை போய் இருக்காங்க.. ஒரு 5 வயது மகன் இருக்கான்.. இன்னைக்கு லீவுங்கறதால அவங்க பாட்டி வீட்டுக்கு போய் இருக்கான்.. நைட் அவர் வரும் போது கூட கூட்டிட்டு வந்துடுவார்” ஒரு மோகனப் புன்னகையுடன் என்னை உற்றுப் பார்த்துக் கொண்டு இருந்தாள். நானும் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தேன்.
“டீயை முதல்ல சாப்பிடுங்க. அப்புறமா... ” என்று இழுத்தாள்..
 “கண்ணா லட்டு திங்க ஆசையா” என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டே டீயை உறிஞ்சினேன். சட்டென்று கண்களைக் கொண்டு செருகியது.. கொஞ்ச நேரத்திற்கு நினைவே இல்லை. கண் எரிச்சலுடன் கண்ணைத் திறந்த போது தலை விரிகோலமாக அவள் என் மீது அமர்ந்து இருந்தாள்.

  இக்கதையில் தொடர்ச்சியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

 

3 comments:

ஹுஸைனம்மா said...

//இக்கதையில் தொடர்ச்சியைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும் //

அவ்வ்வ்வ்....

ஆனாலும், கதை குழப்புதே!! ரெண்டாவது தூங்குறது அந்த ‘பங்களா’வில், அப்புறம் கண்ணு முழிக்கிறது எப்படி அம்மா வீட்ல?

(இதிலுள்ள நுணுக்கமான பின்/முன் நவீனத்துவ வெளிப்பாடு, சராசரி வாசகரான எனக்குத்தான் புரீலையோ?)

Thamiz Priyan said...

@Hussainamma
Dream in a dream in a dream in a dream in a dream... Infinity..

This is called LIMBO. ;-)

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_26.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்...