Tuesday, December 23, 2008

கெளம்புறேங்க......

மக்களே! இரண்டு மகிழ்ச்சியான செய்தி சொல்லப்போகிறேன்.. முதலாவது இன்னும் ஓரிரு நாளில் விடுமுறையில் இந்தியா செல்லவுள்ளேன். இரண்டாவது எனது இரண்டாவது சகோதரனின் குடும்பத்தில் சில நாட்களில் புதிய உறுப்பினர் வருகை இருக்கலாம். சகோதரனின் மனைவி பிரசவத்திற்காக நெல்லையில் தனது தாய் வீட்டில் இருக்கின்றார்கள்.

இனி உங்களுக்கு எனது மொக்கையில் இருந்து விடுதலை தரலாம் என்று நினைக்கிறேன்.... ஒன்லி இடைக்கால விடுதலை தான். இரண்டு மாதத்தில் இந்தியாவில் இருந்து திரும்பியதும் மீண்டும் மொக்கைகளைத் தொடரலாம்..... இறைவன் நாடினால்...:)



ஸ்டாப்! ஸ்டாப்! அதுக்குள்ளே மகிழ்ச்சியில் குதிக்காதீங்க... பதிவுக்கு தான் விடுமுறை என்று சொன்னேன்.. அதுக்காக மொக்கையை விட முடியுமா? அது நம் உடன் பிறந்ததாச்சே.. மொக்கையை நேரடியாகவே போடலாம் என்று தீர்மானித்து விட்டேன்.

சென்னை(விமானப் பயண வழி), மதுரை(சொந்தங்கள்), கோவை(சகோதரன்1), நெல்லை(சகோதரனின்(2) வீட்டுப் புதிய உறுப்பினரைப் பார்க்க), நாகர்கோவில் (மாமியார் ஊடு) ஆகிய இடங்களுக்கு தனிப்பட்ட காரணங்களுக்காக போக வேண்டி உள்ளது. (சிவராஜ் சித்த வைத்தியசாலை எபெக்ட் வருதோ?.... ;) ).

அங்கு உள்ள பதிவர்கள் என்னை சந்திக்க விரும்பினால் எனது மின்னஞ்சலுக்கு தங்களுடைய தொலைபேசி எண்ணை அனுப்பி வையுங்கள். நான் தொ(ல்)லை பேசுகின்றேன். வரும் நேரங்களில் மொக்கை போடலாம். dginnah@gmail.com



இது தவிர வத்தலகுண்டை சுற்றிய ஊரில் உள்ளவர்களுக்கு சிறப்பு தரிசனமும் உண்டு. இவைகளைத் தவிர்த்து வேறு ஊர்களுக்கு தமிழ் பிரியனந்தாவின் காலடி பட்டு சுபிட்சம் ஏற்பட வேண்டுமெனில் வண்டி சத்தமும், நல்ல சாப்பாடும் கிடைக்கும்பட்சத்தில் பரிசீலிக்கப்படும்.... ;)

Thursday, December 18, 2008

மீள் பதிவு : போங்கடா நீங்களும்.... உங்க IE 8 ம்.....

நம்ம பிரண்ட் ஒருத்தன் சும்மா இருக்க மாட்டாம இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8 பீட்டா வெர்ஷன் வந்திருக்கு. பதிவிறக்கி பயன்படுத்து, எழுத்துரு எல்லாம் ஆபிஸ் 2007 ல் வர்ர மாதிரி அழகா இருக்குனு சொன்னான். சரி எப்படி இருக்கும்னு பார்க்கலாமேனு சிங்கத்தோட குகைக்குள்ள நுழைஞ்சேன். பதிவிறக்கி இன்ஸ்டால் செய்யப் போனா வழக்கம் போல நம்மோட XP டுபாக்கூருனு சொன்னாரு நம்ம பில்கேட்ஸ். அவர் கிடக்காருனு டகால்டி வேலை காட்டி உங்களோட XP பத்தரை மாற்று தங்கம்னு சொல்ல வச்சி இன்ஸ்டால் பண்ணியாச்சு.

அப்புறம் ஆரம்பிச்சதப்பு சனியன்..... :( ஏதாவது பதிவை திறக்கப் போய் முழுவதும் திறப்பதற்குள் எலிக்குட்டியை ஸ்க்ரால் செய்தால் IE 8 படுத்து தூங்கிடுறாரு.... எங்க போய் சொல்ல... எல்லாம் நம்ம நேரம்... நமக்கு இந்த ஆசை எல்லாம் இல்லை தான்... நாம எப்பவுமே நெருப்பு நரி ஆட்கள் தான்... ஆனால் சிலரோட பதிவுல எழுதுவதை Justify பண்ணிடுறாங்க... அந்த பதிவுகளை பார்க்க மட்டும் போவது... இப்ப உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணா என்று ஆகி விட்டது.... :(


சரி அதெல்லாம் இருக்கட்டு இந்த கதையைப் படிச்சிட்டு அப்பீட்டாயிடுங்க... சரியா...

நம்மாளு பில்கேட்ஸ் செத்து போயி.. கடவுள் கிட்டே போய் நின்னாரு.

நம்ம கடவுளுக்கே கன்ஃபூஷன். இன்னாடா இவன் நல்லது பன்னிகிறானா இல்ல கஸ்மாலம் கெட்டது பண்ணிகிறனா ?. இவன எங்கே உடறது ? சொர்க்கமா நரகமா ந்னு பயங்கர கன்ஃபூஷன். நம்மாளுகிட்டயே கேட்டாரு கடவுளு.

‘ஏம்பா பில்லு.. எல்லா வூட்லயும் கம்பூட்டர் இருக்குன்னா நீ ஒரு ரீசனு. அதுக்காக உனுக்கு சொர்க்கத்துல இடம் தர்லாம்ன்னு பார்த்தா.. நீ தான் விண்டோ ஸ் கம்னாட்டியையும் கண்டு பிடிச்சிருக்க்கே.. நம்மளாண்ட உன் மேலுகா வந்த சாபம் கன்னா பின்னானு கீது. அதனால உன்னை நரகத்துக்கு தான் அனுப்பணும். எனுக்கு சர்யா தெர்ல.. அதனாலே நீயே டிசைட் பண்ணு உன்கு என்னா வேணும்னு.. ‘ கடவுள் சொன்னார்.

பில்கேட்ஸ் குஷியாய்டாரு. ஆனா அவருக்கு தான் சொர்க்கம் நரகம் எப்படி இருக்கும்ன்னு தெரியாதே. ( விண்டோ ஸ் ஒரு நரகங்கிறதை தவிர ). அதனால கடவுள் கூட்டிட்டு போனாரு.

முதல்ல நரகம்.

ஆஹா.. அழகான கடற்கரை. அழகா இருக்கே… பில்கேட்ஸ்க்கு குஷி. அந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பீச் சைட்ல துணியை ஈரமாக்கி உடம்ப காயவெச்சிட்டிருக்காங்க. இந்த பக்கம் பார்த்தா பொண்ணுங்க பசங்களும் பொண்ணுங்களும் சேர்ந்து குஜால்ஸ் பண்ணிட்டு இருக்காங்க. உட்டாலக்கடி செவத்த தோலு தான்.. கொஞ்சம் உத்து பார்த்தா… ந்னு வாலி பாட்ட பாடிட்டே பில்லு செம குஷியாய்ட்டாரு.

ஐயாவுக்கு ரொம்ப திருப்தி. ஆனாலும் நரகமே இப்படி இருக்குன்னா சொர்க்கம் ?

கடவுள் அவனை சொர்க்கத்துக்கு கூட்டிட்டு போனாரு.

அங்கே மேகமும், தேவதைகளும், பாட்டும்.. ம்ம்ம்ம் பில் கேட்ஸ் பாத்தாரு.
ம்ம்… நல்லாதேன் இருக்கு ஆனாலும்…நரகம் தான் கும்முன்னு இருக்கு..

சரி.. கடவுளே.. நான் நரகத்துக்கே போறேன். பில்கேட்ஸ் வழிஞ்சாரு. கடவுள் அவரை நரகத்துக்கு அனுப்பிட்டாரு,

கொஞ்ச நாள் கழிச்சு கடவுள் நம்ம பில்லு ஐயா எப்படி இருக்காருன்னு பாக்க நரகத்துக்கு போனாரு.

அங்கே ஒரு குகையில தீய்க்கு நடுவுல நம்ம பில்லு ! ஹீட்டுக்கு நடுவுல கேட்ஸ்னு கடவுள் பாடிட்டே போனா.. கேட்ஸ்க்கு கடுப்பு.

யோவ் கடவுளே.. என்னவோ காட்டிட்டு இப்படி என்னவோ பண்ணிட்டியேனு கத்துனாரு. கடவுளுக்கு புரியல..

இன்னாபா.. இன்னா மேட்டரு.. கடவுள் கேட்டாரு.

அன்னிக்கு பாத்தப்போ.. பீச் இருந்துச்சி, பீச் ல வாச் பண்ற மாதிரி பிகருங்க இருந்திச்சி, இங்கே வந்து பாத்தா தீ மட்டும் தான் இருக்கு.. நான் ஏமாத்தலாம். கடவுளே ஏமாத்தலாமா.. கேட்ஸ் கத்துனாரு.

கடவுள் சிரிச்சாரு.. ஓ.. அதைச் சொல்றியா.. அடப்பாவி.. அதைப் பார்த்து தான் இங்கே வரணும்ன்னியா… அது நரகத்தோட ஸ்கிரீன் சேவர் டா !!!

நன்றி: http://www.muthamilmantram.com/viewtopic.php?t=20504

முக்கிய டிஸ்கி : ஒரு வாரமா கொஞ்சம் எழுதும் மனநிலையில் இல்லை. ஊருக்கு போக டிக்கெட் கிடைக்காத டென்சனில் இருக்கேன். அதனால் இந்த மீள் பதிவு... இதெப்படி இருக்கு

Friday, December 12, 2008

குதிரைன்னா ஓடனும்.. கழுதைன்னா சுமக்கனும் ©

அப்ப துபாயில் வேலை செய்து கொண்டிருந்த நேரம். ஹெல்பரா போய் கொஞ்சம் முன்னேறி டெக்னீசியனா வேலை செய்து கொண்டு இருந்தேன். கையில் டூல்ஸ் பெட்டியுடன் வாழ்க்கையின் ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க இயலாமல், வேலையைக் கண்டு மலைத்து நானும் ஓடிக் கொண்டு இருந்தேன்.

ஏதோ ஆசையில் கணிணி வாங்கி அறையில் வைத்து ஏதையாவது நோண்டிக் கொண்டு இருப்பேன். முறையாக கணிணி படிக்கவில்லையாதலால் அதிகபட்சமா வேலை ஆபிஸ் தொகுப்பில் எதாவது இருக்கும். மற்றபடி காஸ்ட்லியான பாட்டு கேட்கும் பொட்டி தான் அது. அவ்வப்போது வாங்கும் சம்பளம், ஊருக்கு அனுப்பியது இதை எல்லாம் Excel ல் போட்டு வைப்பேன்.

அப்ப நான் வேலை செய்த நிறுவனம் கணிணி மயமாக்கப்பட்டுக் கொண்டு இருந்தது. அலுவலகப் பணிகள், மற்றும் வேலை நிலவரங்கள் அனைத்தும் Data Base ல் (oracle) கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அக்கவுண்ட்ஸ், பெர்சனல் துறை அலுவலகத்திலேயே இருப்பதால் அதில் சிரமம் ஏதும் அவர்களுக்கு இருக்கவிலை. ஆனால் நிறுவனத்தில் பராமரிப்பு ஒப்பந்ததில் (Maintenance Contract) ல் உள்ள Equipment( இயந்திரங்கள் என்று சொல்லவா? ) பற்றிய தகவல்கள் முழுதாக இருக்கவில்லை.

எங்கள் ஒப்பந்ததில் இருந்தவை அனைத்தும் பல அடுக்கு மாடி கட்டிடங்கள், குடியிருப்புகள், மாளிகைகள் (Residential, Commercial High rise buildings,Villas, Palaces) . இவைகளில் உள்ள அமைப்புக்கு தகுந்தாற் போல் பிரித்து, அவைகளில் உள்ள இயந்திரங்களின் பட்டியல் எடுக்க வேண்டும்.

அவைகளைப் பட்டியல் இட்டு, அதை டேட்டா பேஸிற்குத் தகுந்தாற் போல் மாற்ற வேண்டும். உதாரணத்திற்கு சொன்னால் கட்டிடத்தின் பெயர் (Building Name), மாடி எண்(Floor No), வீட்டு எண்(Flat No), அறை எண்(Room No) இவைகளை Location பட்டியலில் சேர்க்க வேண்டும். அடுத்து அந்த அறை எண்ணில் இருக்கும் இயந்திரங்களை (Like A/C , Exhaust System, Plumbing Equipment, Lighting) பட்டியலிட்டு இவைகளையும் டேட்டா பேஸிற்குள் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு இயந்திரத்திற்கும் ஒரு Tag தர வேண்டும். அதில் மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் இருக்க வேண்டும். (பின்னூட்டத்தில் அதை விளக்குகின்றேன்.)

மேற்கூறிய தகவல்கள் அனைத்தும் டேட்டா பேஸில் ஏற்றப்பட வேண்டும். பின்னர் ஒப்பந்த கட்டிடங்களின் பிரதிநிதிகளிடம் இருந்து வரும் சேவைத் தேவை, குறைகளை(Service Request, complaints) இவைகளை குறித்துக் கொண்டு கணிணியில் ஏற்றி ஒரு சர்வீஸ் நம்பரை சம்பந்தப்பட்ட துறைக்கு தர வேண்டும். அவர்கள் அந்த குறைபாட்டை சரி செய்து விட்டு, அந்த எண்ணைக் குறிப்பிட்டு Work Order ஐ அனுப்புவார்கள். அந்த ஒர்க் ஆர்டரை கணிணியில் ஏற்ற வேண்டும். இத்துடன் அந்த சர்வீஸ் எண்ணின் வேலை முடிந்து விடும்.

மாதக் கடைசியில் கட்டிடம் வாரியாக ரிப்போர்ட் தயாரிக்க வேண்டும். அதில் முடிந்த வேலைகள், முடியாமல் உள்ளவை என தனித்தனியாக வர வேண்டும். இது சம்பந்தப்பட்ட கட்டிட உரிமையாளருக்கு அனுப்பப்படும்.

எனது பொறியாளரின் வற்புறுத்தலால் என்னை அங்கே தள்ளி விட்டார்கள். வந்தவர் இந்தியாவைச் சேர்ந்தவர் தான். இந்தி பேசக் கூடியவர் என்பதால் நமக்கு மொழிப் பிரச்சினையுமில்லை. ஆரக்கிளில் நல்ல திறமையானவர். ஆனால் எங்களது தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களில் அனுபவமில்லை. நிறுவனத்தின் AGM + மேலாளார் குறிப்பு மட்டும் சொல்லிவிட்டு சென்று விடுவார்கள்.

அனைத்து கட்டிடங்களுக்கும் சென்று தகவல்களை சேகரித்து, அதை Excel (Comma delimited CSV)சீட்டில் பொதிந்து டெவலப்பரிடம் தர வேண்டும். அவர் அதை மொத்தமாக SQL மூலம் டேட்டா பேஸில் ஏற்றி விடுவார். கடுமையான உழைப்புக்குப் பின் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஓரிடத்தில் தவறு செய்திருந்தாலும் Compile செய்யும் போது வரிசையாக எரர் அடிக்கும்..;) பாவம் அந்த System Administrator....

இதைத் தொடர்ந்து Complaints வந்தால் அதை டேட்டா எண்ட்ரியில் ஏற்றுவதற்கு தோதுவாக Operator interface உருவாக்கம் நடந்தது. இதிலும் என்னவென்ன தகவல்கள் ஏற்றப்பட வேண்டும். ஒவ்வொன்றுக்கும் உள்ள தொடர்பு (Condition), டேட்டா பேஸில் இருந்து எடுக்கும் தகவலின் தொடர் எல்லாம் சரி செய்யப்பட்டது.

அதே போல் Maintenance Work Order ஐ டேட்டா பேஸில் ஏற்றவும் தனியாக பகுதி ஏற்ப்படுத்தப்பட்டது. கடைசியில் ரிப்போர்ட் தயாரிக்கும் முறையும் ரிப்போர்ட்டின் வடிவமைப்பும் செய்யப்பட்டது.

இவைகளை எல்லாம் செய்து முடிக்க சுமார் மூன்று மாதங்களுக்கும் மேல் ஆகி விட்டிருந்தது. ஒவ்வொரு முறையும் ஏதாவது சிக்கல் இருக்கும். எனக்கு தேவையான கண்டிஷனல் தொடர்பு வரவைக்க வேண்டும். இணையத்தில் தேடி தேடி அதற்கான code களை சேர்ப்பார். எனக்கும் அந்த சிஸ்டத்தின் முழு அமைப்பும் நன்றாக விளங்கி இருந்தது.

வேலைகள் அனைத்தும் சிறப்பாக முடிந்த சூழ்நிலையில், புதிதாக இந்தியாவில் இருந்து ஒரு Date Entry operator வந்தார். அவருக்கு எப்படி தகவல்களை உள்ளீடு செய்வது என்பதையும் சொல்லிக் கொடுத்தேன். அடுத்த சில தினங்களில் மீண்டும் பழையபடி பழைய வேலையைத் தொடரச் சொல்லி விட்டார்கள். மீண்டும் அதே பழைய டூல்ஸ்... அதே வாழ்க்கை ஓட்டம்...:)

இதே போல் இன்னொரு கட்டிடத்தில் (துபாய் - Bur Dubai - Near Mövenpick Hotel) உள்ள இயந்திரங்கள் அனைத்தும் கணிணியில் இணைக்கப்பட்டிருந்தது. இதை BMS (Building Management System ) என்று சொல்வோம். (இதைப் பற்றியும் ஒரு தொழில் நுட்பப்பதிவு போட நினைத்துள்ளேn). அங்கு இருந்த ஒரு BMS Operator கோணக்கால்(?) சாத்திவிட்டு ஊருக்கு கிளம்பி விட்டான். அவசரத் தேவையாக இருந்த சூழலில் நம்மை பரிந்துரை செய்தனர். அவசரமாக ஊருக்கு செல்வதால் எதுவும் சொல்லித் தரும் நிலையில் பழைய ஆள் இல்லை.

வேறு வழி இல்லாததால் முன் அனுபவமோ, பழக்கமோ இல்லாமல் அங்குள்ள இயந்திரங்களைக் கணிணியைக் கொண்டு இயக்க வேண்டிய சூழல். போனவன் அனைத்து manual களையும் சுட்டுட்டு போய் விட்டான். வேறு என்ன செய்வது? இணையத்தில் அந்த Manual ஐ(Honeywell XL 5000) பதிவிறக்கி படித்து இயக்கத்தை புரிந்து கொள்ள வேண்டிய சூழல்.


அதற்கடுத்த சில மாதங்களில் ஊருக்கு திரும்ப வேண்டிய சூழல் வந்த போது (5 1/2 வருடங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஊருக்கு விடுப்பில்) புதிதாக ஒருவருக்கு கற்றுக் கொடுத்தால் தான் நான் ஊருக்கு செல்ல முடியும் என்று கட்டாயப் படுத்தப்பட்டேன். அதையும் சமாளித்து புதிதாக ஒருவனுக்கு(அவன் செய்த லொள்ளு இருக்கே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்) கற்றுக் கொடுத்து ஊருக்கு சென்று திரும்பினேன்.

ஊருக்கு சென்று திரும்பியதும் வழக்கம் போல் பழைய குருடி கதவைத் திருடி கதையாக மீண்டும் பழைய வேலை. அதே டூல்ஸ்... அதே ஓட்டம்..... கணிணி சம்பந்தமான வேலை எல்லாம் எனக்கு கிடையாது என்று மறுப்புடன்....... இப்போது வேலையைக் கண்டு நான் பயந்தது போய் வேலை என்னைக் கண்டு பயந்து ஓடத் துவங்கி இருந்தது.

குதிரைன்னா வேகமாக ஓடனும்.. கழுதைன்னா பொதி சுமக்கனும். .

Thursday, December 11, 2008

என்ன செய்ய? நானும் புலம்பி விட்டு செல்கிறேன்.

மும்பையில் நடந்த பயங்கரவாதச் செயல அனைவரின் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை தாக்குதல் நடந்து கொண்டிருந்த போது மீடியாக்களும், அரசியல் வியாதிகளும் அடித்த கூத்துக்கள் மக்களிடையே ஒரு அதிருப்தியையே ஏற்படுத்தின. இதனைக் குறித்து அவந்திகா பதிவிட்டு இருந்தார். அதன் தொடர்பதிவாக முத்துலக்ஷ்மி அக்கா தொடர் பதிவுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.

வன்முறைகளும், பயங்கரவாதச் செயல்களும் இந்த உலகிற்கு புதிதல்ல. கொஞ்சம் உற்றுக் கவனித்தோமேயானால் இது விளங்கும். கற்காலம் தொட்டு இது இருந்து வருகின்றது. முன்பு தனி மனிதன் தனது தேவைக்காக வன்முறையில் இறங்கினான். உணவு, பெண், இடத்திற்காகவே சக மனிதனுடன் தனது சண்டையைத் துவக்கினான்.

அதை அடுத்து மனிதன் கூட்டாக சமுதாயமாக வாழத் தொடங்கியதும், சமூகங்களுக்கு இடையேயும் சண்டை சச்ச்ரவுகள் ஆரம்பித்தன. இவைகள் இன்று வரைத் தொடர்கின்றன. கடந்த பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனால் ஒரு தனி மனிதனை அழிக்கவே கஷ்டப்பட வேண்டி இருந்தது. துப்பாக்கி உள்ளிட்ட அழிவு ஆயுதங்கள் மனிதனிடம் வந்ததுமே இந்த அழிவு வேலை அதிகமானது.

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பல லட்சம் மக்கள் போர்க்களங்களில் மண் என்ற ஒரு ஆசைக்காக கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து மனிதனுக்கு மதம் என்ற மதம் பிடிக்க ஆரம்பித்ததும் இந்த படுகொலைகள் தொடர்கின்றன. அமைதியையும், சகிப்புத் தன்மையையும் போதிக்கும் மதங்களில் இருந்தும் கொலைகாரர்கள் உருவாக ஆரம்பித்தனர். இக்காலகட்டத்தில் மனிதன் தனது உணவுக்காக போராடுவது குறைந்து நம்பிக்கையின் அடிப்படையில் போராட ஆரம்பித்து விட்டான்.

இந்த போராட்டங்களில் நீட்சியை உற்றுக் கவனித்தால் எந்த சமூகம் அதிக அதிகாரமோ அல்லது அதிக நிராசையோ அடைகின்றதோ அது அடுத்தவர்களை துன்புறுத்தியதைப் பார்க்கலாம். கோவில் இடிக்கப்பட்டதும், சர்ச்கள் தகர்க்கப்பட்டதும், மசூதிகள் தரை மட்டமானதும் இதற்கு உதாரணங்கள். இந்தியாவில் சமணர்கள் அழிக்கப்பட்டதும், ஹிட்லரால் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டதும் இதற்கு மற்றொரு வடிவம்.

இப்போதைய சூழலில் நம் முன் இருக்கும் பயங்கரவாதம் மதத்தின் பெயரால் இருப்பவையே. தனி மனிதனுக்குள் இருக்கும் குரோதங்கள், சில வினாடி உந்துதலால் ஏற்படும் வன்முறைகளை தடுத்து நிறுத்த இயலாது. ஆனால் திட்டமிட்ட படுகொலைகள் வன்செயல்கள் நிறுத்தப்பட வேண்டியவை.



எடுத்துக்காட்டுக்காக மும்பை கொடூரத்தையே எடுத்துக் கொண்டால் அதில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இளைஞர்கள். அவர்களின் நோக்கம் தெளிவாக இருந்தது. இயன்ற அளவு மக்களை அழிக்க வேண்டும். தாம் அழிவதைப் பற்றி அவர்கள் கவலைப்பட வில்லை. ஒரு மனிதனுக்கு உயிரை விட பெரிய விடயம் எதுவுமில்லை. அதை துச்சமாக நினைக்கும் நிலையிலேயே இந்த மிருகங்கள் இருந்திருக்கின்றன.

அதே போல் சமீபகால தீவிரவாத செயல்களுக்கு அச்சாணியாக கருதப்படும் 9/11 இரட்டைக் கோபுர தகர்ப்பையும் உற்று நோக்கினால் அதன் பிண்ணனியில் இருந்தவர்களும் இதே போன்ற மனநிலையில் இருந்தது விளங்கும். ஏன் இவர்கள் மாறினார்கள்? அல்லது மாற்றப்பட்டார்கள்.

நம் மக்கள் பொதுவாக எந்த விஷயத்தையும் மேலோட்டமாகவே பார்க்கின்றோம். அதன் அடித்தளங்களை ஆராய்வதில்லை. ஏதாவது நடந்ததும் காச் மூச் என்று கத்தி விட்டு அதை மறந்து விடுகின்றேன். விஷச் செடிகள் ஒன்று முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். வளர்ந்து விட்டது என்றால் அதை வேருடம் பிய்த்து எறியப்பட வேண்டும்.

இப்போதைய உலக மீடியாக்களில் டிரெண்டான So called தீவிரவாதத்தையே எடுத்துக் கொண்டாலும், பயங்கரவாதிகளின் செயல்கள் மட்டுமே கணக்கில் இருக்கின்றன. அவர்களின் உருவாக்கத்தை விட்டு விடப்படுகின்றன. மேலே கூறியது போல் மனிதன் இரண்டு நிலைகளில் தான் பயங்கரங்களில் இறங்குகின்றான்.

முதலாவது தன்னிடம் அதிகாரம் இருக்கும் போது.. எடுத்துக்காட்டுக்கு ஹிட்லர் முதல் சிங்கள பேரினவாதம் வரை தொடரலாம். இவர்கள் தங்களுக்கும், தங்களது தலைமைக்கும் அதிகாரம் இருப்பதால் இது போன்று தாண்டவமாடுகின்றனர். இரண்டாவது வகை இந்த அதிகார வர்க்கத்தால் பாதிப்புக்குள்ளானவர்களின் பயங்கரவாதம். இவ்வகையினருக்கு எதிராளியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற வெறி மட்டுமே இருக்கும். தங்களது பாதிப்புகள் மட்டுமே இவர்களின் உள்ளங்களில் இருக்கும்.

முதல் வகையினர் தங்களது பயங்கரவாத செயல்களுக்கு பலப்பல நியாயங்களைக் கற்பிப்பார்கள். அவர்களுக்கு புதிய தலைமுறை நாடுகள் பூம்பூம் மாடு போல ஆமா சாமி போடும். அவர்களது செயல்கள் அனைத்திற்கும், அப்போதைக்கு அங்கீகாரம் பெரிதாகத் தரப்படும். கால ஓட்டத்திலேயே அதைப் பற்றிய கொடூரங்கள் வெளியே வரும். இதற்கு அமெரிக்கா நடத்தும் பயங்கரவாதங்களைக் கூறலாம்.

சரி.. .சரி.. புலம்பல் எங்கங்கோ உலக ரீதியில் போய்கிட்டே இருக்கு..இனி இந்தியாவுக்கு வரலாம். இந்தியாவுக்கு பயங்கரவாத செயல்கள் ஒன்றும் புதிதல்ல..... இந்த மண்ணுக்காக வரிசையாக நிற்க வைத்து இந்தியர்கள் கொல்லப்பட்ட காலமும் உண்டு. என்ன அப்போது ஒரு வாளால் ஒரு மனிதனைக் கொல்ல முடிந்தது. இன்று துப்பாக்கிகளும், Cyclotrimethylenetrinitramine, டெட்டர்னேட்டர்களும் வந்த பிறகு ஒரே தாக்குதலில் பலரைக் கொல்ல முடிகின்றது. தற்கொலைப்படை தாக்குதல்களும் அதிகமாக நடத்தப்படுகின்றது.

ஏன் இவைகள் என்று யோசித்தால் வரும் விடை தெளிவாக இருக்கின்றது... அது மக்களிடையே அரசியல் வியாதிகள் ஏற்படுத்தும் சில காரியங்களின் விடயம் தான். நாட்டுக்காக உயிரையும் கொடுக்க துணிவாக இருக்க வேண்டும் என்பது நம் இரத்ததில் ஏற்றப்பட்டுள்ளது. இதையே அரசியல்வாதிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றனர்.

தங்களது சமூகத்திற்கு செய்யப்பட்ட அநீதிகளைக் கூறி வெறி ஏற்றி மூளைச் சலவை செய்யப்பட்டு தான் இது போன்ற தீவிரவாதிகள் உருவாகின்றனர். இதன் மூலம் இரண்டு புறமும் பலன் அடைபவர்கள் அரசியல்வாதிகளே..... தீவிரவாதிகளின் தாக்குதல்களை தங்களது மதத்துக்கு எதிரானதாக மாற்றி அதை ஓட்டு பொறுக்கும் வேலையைத் தான் இவர்கள் செய்கின்றனர். அதே போல் தான் அங்கும். மூளைச் சலவை செய்வதற்கான மூலக் கூறுகளை அறுத்து எரிய வேண்டியது தான் இன்றைய தேவை.

அடுத்தவர்களின் இரத்தத்தில் ஓட்டுப் பொறுக்கும் அரசியல்வாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போது தான் பாதிக்கப்பட்டவன் அமைதியடைவான். அனைவருக்கும் தெரிந்தே தவறு செயதவன் சுதந்திரமாக திரியும் போது பாதிக்கப்பட்டவனும் ஆயுதம் ஏந்துகின்றான்.
இதில் மதம் தான் குற்றவாளி? என்றால் இல்லை.. மதத்தின் பெயரால் வயிற்றையும், புகழையும் வளர்க்க நினைக்கும் கேடு கெட்ட மத வாதிகள் தான் குற்றவாளிகள்.

ஆயுதம் ஏந்துவபவனும் குற்றவாளி, ஆயுதம் ஏந்த வைத்தவனும் குற்றவாளி. இருவரும் தண்டிக்கப்பட்டால் தாம் தவறு செய்வதற்கு முன் எந்த மனிதனும் யோசிப்பான். இரண்டு எம்பி சீட்களுடன் உருவான ஒரு கட்சி மனிதப் பிணங்களின் மீது நடந்தும், இரத்த ஆறில் நீந்தியும் நாட்டையே ஆளும் அளவுக்கு வந்ததற்கு காரணமும் நாம் தான். நமது ஓட்டு என்னும் ஆயுதத்தை சரியாக பயன்படுத்தாதால் தான் இது போன்ற மதத்தாலும், ஜாதியாலும் மக்களிடையே இரத்தத்தை ஓட்டக் கூடியவர்கள் வெற்றி அடைகின்றனர்.

நமது ஓட்டை கட்சி , தலைவர் என்று பார்க்காமல் நல்லவர்களுக்கு போடவும், அப்படி வந்தவர்கள் தவறு செய்யும் போது அனைவரும் இணைந்து கண்டிக்கும் போதும் தான் இது போன்றவைகள் ஒழியும்.

Cyclotrimethylenetrinitramine = RDX
படம் நன்றி : sitnews

Wednesday, December 10, 2008

அச்சச்சோ! தமிழ் பிரியனை குரங்காட்டி ஆளுங்க கட்டி வச்சுட்டாங்களாமே?

வாங்க மக்கா! உங்களை கொஞ்சம் 16,17 வருஷம் பின்னோக்கி கொண்டு போறேன். இதுவும் ஒரு சைக்கிள் காலம் தான். ஆனா கொஞ்சம் சுவாரஸ்யமானது. ஏற்கனவே ஒரு சைக்கிள் கதை சொல்லி இருக்கேன். குட்டி சைக்கிளில் ஏறி ஊரை வலம் வந்து கொண்டு இருந்த காலம். அப்பத்தான் பெரிய சைக்கிளில் குரங்கு பெடல் போட்டு பழகிட்டு சீட்டில் உட்கார ஆரம்பிச்சு இருந்தேன்.



பெடலுக்கு கால் முழுவதுமாக எட்டாததால் ஏதாவது வீட்டு திண்ணை, அல்லது கல் மீது கால் வைத்து ஏறிக் கொள்வேன். ஏதோ வேலையாய் நான் சைக்கிளில் ஒரு இடத்திற்கு போனோம். வரும் வழியில் என் பெரியப்பா மகன் தம்பி வந்து கொண்டு இருந்தான். வாடா சைக்கிளில் போகலாம் என்று ஒரு கெத்தாக சொல்ல அவனும் வந்து விட்டான். சைக்கிளில் பின்னால் கேரியர் இல்லாததால் அவனை முன்னால் உட்கார வைத்து திண்ணை துணையுடன் ஓட்ட ஆரம்பித்தேன்.

பிரச்சினை இல்லாமல் ஓடிக் கொண்டு இருந்தது. சரியில்லாத ரோடு என்பதால் குண்டும் குழியுமாக இருந்தது. நானும், தம்பியும் பேசிக் கொண்டே வந்து கொண்டு இருந்தோம். ரோட்டில் ஒரு சிறு குழந்தை விளையாடிக் கொண்டு இருந்தது. பேச்சு சுவாரஸ்யத்தில் அதைக் கவனிக்க வில்லை. கடைசியில் தம்பி பார்த்து குழந்தை விளையாடுது சைக்கிளை திருப்பு என்று அவனே திருப்பியும் விட, அவன் திருப்பிய திசைக்கு மறுபுறம் நான் திருப்ப நேராக குழந்தையின் மீதே மோதி விட்டோம்.

குழந்தையை தள்ளிய சைக்கிள் அதன் மீதே ஏறி, பின்னர் கீழே விழுந்தும் விட்டது. வழக்கம் போல் சைக்கிளின் மீது நானும், தம்பியும் கிடக்க குழந்தை எல்லாத்துக்கும் அடியில் கிடந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எங்களை தூக்கி விட்டனர். ஆங்காங்கே இரத்த காயம்.

ஆங்... முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். அந்த ஏரியா தான் எங்க ஊருக்கே கள்ளச்சாராயம், கஞ்சா போன்ற லாகிரி வஸ்துகளை மொத்த வியாபாரம் செய்யுமிடம். எங்களை காப்பாற்றி தூக்கியவர்கள் அனைவரும் பெரிய ரவுடிகள்.

கொஞ்ச நேரத்தில் குரங்காட்டி வந்தார். அவர் தான் அந்த ஏரியா கேங் லீடர். (வயதில் பெரிய மனிதன் என்பதால் மரியாதையாக சொல்வோம்.) குரங்காட்டி என்றால் குரங்கை காட்டி வித்தை காட்டுபவர் அல்ல... எப்போதும் தன்னுடனொரு குரங்கை வைத்துக் கொண்டிருப்பார். அது அவர் மீது எப்போதும் ஏறி விளையாடிக் கொண்டு இருக்கும். பெரிய சாராய வியாபாரி. பன்றி வளர்ப்பவர். கொஞ்சம் ரவுடித்தனமும் உண்டு(அப்பத்தைய நிலவரம்.. :) )

எங்களை தூக்கியவர்கள் சைக்கிளை ஓரமாக வைத்து விட்டு, எங்கள் இருவரையும் அங்கிருந்த வீட்டின் முன் கூரைக்காக நட்டப்பட்டு இருந்த அகத்தி மரத்தில் கட்டி வைத்து விட்டனர். குரங்காட்டி கட்டி வைத்ததால் நம்மை குரங்கு என்று சொல்லப்படாது.. ;)

விவரம் கேட்டதும் கோபத்தில் கத்த ஆரம்பித்து விட்டார். எங்கள் அப்பாவின் பெயரைச் சொன்னாலும் தெரியவில்லை. வீட்டு அட்ரஸை எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டார். நானும் தம்பியும் ஒரே அழுகை வேறு. அழுக வில்லையென்றால் அடிப்பார்களோ என்று கிரிமினல் ஐடியா வேறு.

இதற்குள் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு சிறுவன் அந்த வழியாக சென்றவன் எங்களைப் பார்த்து விட்டான். அவன் ஓடோடிப் போய் எங்கள் வீட்டில் சொல்ல, எங்கள் தாத்தா வேகமாக கிளம்பி வந்து விட்டார். தாத்தாவைப் பார்ததும் தான் போன உயிர் திரும்பியது.

தாத்தா வந்ததும், குரங்காட்டியிடம் என்னப்பா நம்ம வீட்டுப் புள்ளைகளை கட்டி வச்சு இருக்க என்றதும் அவர் ‘நம்ம வீட்டு புள்ளைகளா? பயபுள்ளைக சொல்லவே இல்லியா’ என்று கட்டுகளை அவிழ்த்து விட்டு விட்டார். ‘இனி கவனமா சைக்கிள் ஓட்டனும்’ என்று அறிவுரை வேறு... :) எங்கள் அப்பா அப்போது பிரபல்யம் அடையவில்லை என்று நினைக்கிறேன். அப்ப தாத்தாவோட இராஜ்ஜியம். இருவரும் நொண்டிக் கொண்டே சைக்கிளை உருட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

வழியில் என் தம்பியிடம் ‘வாடா, இனி சைக்கிளை ஓட்டிக் கொண்டு போகலாம்’ என்றதும் நக்கீரரைப் பார்த்த சிவாஜி மாதிரி ஒரு பார்வை பார்த்தானே பார்க்கனும். ஆங் சொல்ல மறந்துட்டேனே.. அந்த சைக்கிளில் மாட்டிய குழந்தை... அது எங்களை கட்டி வைத்தும் கை கொட்டி கெக்கே பிக்கேன்னு சிரித்துக் கொண்டு எங்கள் அருகிலேயே விளையாட்டைத் தொடர்ந்தது. அதற்கு அடி ஏதும் படவில்லை.

Tuesday, December 9, 2008

தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே! By பாட்டி

இன்று இந்தியாவில் தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. அனைவருக்கும் இனிய தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

நேற்றே இங்கு (வளைகுடா) பக்ரீத் கொண்டாடப்பட்டு விட்டது. ஊரில் இருந்தால் பிரியாணி இருக்கும். இங்கு கேண்டினில் கிடைத்த சாப்பாடு தான். படம் போட்டுள்ளேன் பார்த்துக்கலாம். நிறைய ஐட்டங்களை சாப்பிட இயலாது என்பதால் எடுக்கவில்லை.



எங்கள் ஊரில் முன்பெல்லாம் சமையல் செய்ய விறகு அடுப்பு தான் உபயோகத்தில் இருந்தது. சமையல் எரிவாயு இருந்தால் அது வசதியானவர்கள் வீடு. அவர்களும் சமையலுக்கு மட்டும் தான் அதைப் பயன்படுத்துவார்கள். வெந்நீர் போடுவது போன்ற பிற உபயோகங்களுக்கு விறகு தான். எங்கள் வீட்டில் விறகு அடுப்பு மற்றும் மரத்தூள் அடுப்பு இரண்டும் இருக்கும்.

மரத்தூள் அடுப்பு வித்தியாசமானது. மர அறுவை மில்களில் மரங்களை அறுக்கும் போது தூள் கொட்டும். அதை மூட்டைகளில் வாங்கி வருவோம். மரத்தூள் அடுப்பு தனியாக இருக்கும்.உருளையாக மேலே மட்டும் திறந்து இருக்கும். வட்டத்தின் ஒரு பக்கத்தில் சுமார் 4 இஞ்ச் அளாவில் ஒரு ஓட்டையும் இருக்கும்.

இந்த ஓட்டையை துணியால் சிறிது தூரம் அடைத்து, உருளைக்குள் ஒரு குச்சியை வைத்து அதை சுற்றி மரத்தூளை இறுக்கமாக அடைப்பார்கள். இப்போது துணி, மற்றும் குச்சியை எடுத்து விட்டால் மரத்தூள் அடுப்பு தயார்.

மேலே பாத்திரத்தை வைத்து விட்டு கீழே உள்ள ஓட்டை வழியாக தீ எரிப்பார்கள். எரிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். கொஞ்சம் வேகமாக தள்ளினால் மரத்தூள் அமைப்பு கீழே விழுந்து விடும். இதில் சோறு பொங்க மட்டும் செய்வோம்.

சரி இதை விடுவோம். இது தவிர விறகு அடுப்பும் இருக்கும். விறகு விலைக்கு வாங்கி கட்டுபடியாகாது என்பதால் இன்னும் சில எரி பொருட்களும் பயன்படுத்தப்படும். குறிப்பாக தேங்காய் மட்டை, கரும்பு அடித்தட்டை போன்றவை. தேங்காய் மட்டை தெரியும். அதென்ன கரும்புத்தட்டை? இன்னைக்கு பதிவே அதுதான்.

எங்கள் பகுதியில் கரும்பு நிறைய விளைவிக்கப்படும். வெல்லத்திற்கு நல்ல மார்க்கெட்டிங் இருந்ததால் கரும்புத் தோட்டத்திலேயே வெல்லம் காய்ச்சும் வசதியும் செய்து இருப்பார்கள். இதுதவிர வைகைஅணைக்கு அருகில் ஒரு சர்க்கரை ஆலையும் இருக்கிறது.

கரும்பை வெட்டும் போது அடியில் மண்ணுக்குள் இருக்கும் பகுதியை விட்டுவிட்டு மண்ணில் இருந்து சில இஞ்ச் விட்டுவிடுவார்கள். இந்த மண்ணில் இருக்கும் மீதம் இன்னொரு தடவை கரும்பாக வளரும். இரண்டாம் முறையும் அதே போல் வெட்டி விட்டு, நிலத்தை நன்றாக உழுது போட்டு விடுவார்கள். டிராக்டர் கொண்டு உழும் போது அடியில் இருக்கும் கரும்பின் வேர்ப்பகுதி வெளியே வந்து விடும்.

இந்த நிலத்தை சில நாட்கள் அப்படியே காயப்போட்டு விடுவார்கள். இந்த காலத்தில் மண்ணில் இருந்து வெளியே கிடக்கும் வேர்ப்பகுதி காயத் துவங்கி விடும். இந்த வேர்ப்பகுதி சுமார் அரை அடியில் இருந்து ஒரு அடி வரை இருக்கும். இதைத் தான் நாங்கள் கரும்புத் தட்டை என்று சொல்வோம். இதை எடுத்துக் கொண்டு வந்து விறகு போல் பயன்படுத்தலாம். நன்றாக நின்று எரியும்.

விறகு விலை கட்டுபடி ஆகலைன்னு தான் கரும்புதட்டை. அதையும் விலைக்கு வாங்க முடியுமா? அதைக் கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பு நம்மோடது. எங்க தாத்தா, பாட்டி விறகுக்கு போவாங்க..... இந்த கரும்புதட்டையும் பொறுக்கி கொண்டு வந்து விப்பாங்க. அப்ப நானு, எங்க பெரியப்பா மகன்கள், அத்தை மகன் எல்லாம் போவோம்.

விடிகாலைல கிளம்புவோம். ஒரு அரிவாள்,ஒரு யூரியா சாக்கு, ஒரு பழைய துணி, கொஞ்சம் சரடு, ஒரு தூக்கு வாளி அதில் நேற்று மிச்சமான பழைய சோறு. இது தான் நம்ம தொழில் கருவிகள். அதோட ஒவ்வொரு டிரிப்புக்கும் நமக்கு கமிஷன் 50 பைசா கிடைக்கும்.

போகும் வழியில் ஒரு பெட்டிக் கடையில் 10 பைசாவுக்கு கண் மார்க் பட்டை ஊறுகாய் வாங்கிக்குவோம். ஒரு காய்ந்த இலையில் ஊறுகாயை மடித்து வைத்திருப்பார்கள். உசிலம்பட்டியில் இருந்து வருவது கண் மார்க் ஊறுகாய். உசிலம்பட்டி சிசுப் படுகொலை, வெட்டு,குத்துக்கு அப்புறம் இந்த ஊறுகாயால் பெயர் பெற்றது. (தமிழ் பிரியனின் அம்மாவோட ஊரு வேற..)

சுமார் 3 முதல் 5 கி.மீ தூரம் நடக்கனும். வெயில் வருவதற்கு முன்னாடி கரும்புத் தோட்டத்துக்கு போய்டுவோம். அப்புறம் சோத்து வாளியை எங்காவது வச்சுட்டு கரும்புத் தட்டைப் பொறுக்கனும். அதில் நிறைய டெக்னிக் இருக்கு. நல்லா காய்ஞ்சதா எடுக்கனும். அதே நேரம் இத்துப் போயும் இருக்கக் கூடாது. கரும்புத் தட்டையில் இருந்து மண்ணை நல்லா தட்டனும். அதுக்கு அங்கவே ஏதாவது ஒரு கல்லைப் பொறுக்கிக்குவோம். அரிவாளை வச்சும் தட்டிக்குவோம். Safety முக்கியம். மண்ணைக் கிளரும் போது எப்ப வாணாலும் பாம்பு வரலாம். நிறைய பாம்பு அடிச்சு (வெட்டி)இருக்கேன்.

ஒவ்வொருவரும் ஒரு பகுதியைப் பிரிச்சிக்குவோம். கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து எல்லாத்தையும் ஒரு இடத்தில் ஒண்ணா சேர்க்கனும். கடைசியில் நீளமான ஏதாவது குச்சி வைச்சு சேர்த்ததை அடிக்கனும். மிச்ச மீதி இருக்கும் மண்ணும் உதிர்ந்து விடும். இனி இதை எல்லாம் மொத்தமாக சாக்கில் இறுக்கமாக திணிக்க வேண்டும்.

எல்லாரும் சாக்கு கட்டி முடிந்ததும் அருகில் இருக்கும் கிணற்றடிக்கு போவோம். கிணறுகளில் பம்ப் செட் மூலமே தண்ணீர் இறைப்பார்கள். அந்த தண்ணீர் விழ ஒரு தொட்டியும் கட்டி வைத்திருப்பார்கள். அதற்கருகில் சென்று எல்லாரும் கூட்டாக உட்கார்ந்து சாப்பிடுவோம்.

பழைய சோறு..+ ஊறுகாய் தொட்டுக்க.. சில நேரங்களில் புளியம்பழம் பிடுங்கி வச்சுக்குவோம். செம காம்பினேசன்... அந்த சுவை உலகில் வேற எல்லா டிஷ்ஷிலும் வரவில்லை...:( பழைய சோற்றில் தண்ணீரை ஊற்றி சாப்பிடும் போது அந்த ஈரக் கையால் ஊறுகாயைத் தொட்டு சாப்பிடும் போது... இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே. இன்பத்தில் ஆடுது என் மனமே என்று பாட்டு கிளம்பும்.

காலை வேலை என்பதால் பெரும்பாலும் பம்ப் செட் ஓடும். அதில் இருந்து தண்ணீர் மொண்டு குடித்துக் கொள்வோம். பம்ப் செட் ஓடவில்லையெனில் தொட்டியில் இருக்கும் தண்ணீரை எடுத்துக் குடிப்போம். தொட்டி பாசியாலும், செத்தை, சருகுகளாலும் கிடக்கும். அவைகளை விலக்கிவிட்டு தண்ணீர் மொண்டுகுடிக்க வேண்டும். அப்போது தண்ணீரைப் பற்றி ஏதும் குறைவாக சொன்னால் பாட்டி திட்டும். தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே! என்று

பம்ப் செட் ஓடினால் ஒரு குளியலும் உண்டு.. அதுவும் செம ஜாலியா இருக்கும். இதெல்லாம் முடிந்தததும் சாக்கு மூட்டையை தலைக்கு ஏற்றி விடும் வைபவம். எங்க தாத்தா தான் எல்லாருக்கும் ஏற்றி வைப்பார்கள். பழைய துணியை வாகாக சுற்றி தலையில் வைக்க வேண்டும். கரும்புத் தட்டை இடக்கு முடக்காக இருக்கும் என்பதால் தலையில் நல்லாவே குத்தும். கடைசியில் தாத்தா தனது சுமையை தானே எடுத்துத் தனது தலையில் வைத்துக் கொள்வார்கள். (Greatest Man)

பாதை எல்லாருக்கும் தெரியும் என்பதால் ஒவ்வொருவராக கிளம்பி விடுவோம். தாத்தா பாட்டி கடைசியில் வருவார்கள். பொறுக்கிய கரும்புத் தட்டை ஈரமாகவோ, மண்ணுடனோ இருந்தால் அதோ கதி தான். வெயிட் அதிகமாகி கழுத்து அமுங்கி விடும். அதே போல் சாக்கு இறுக்கமாக திணிக்கப்படவில்லை என்றால் நடுவில் பள்ளம் விழுந்து முன்னும் பின்னும் மூட்டை இரண்டு பகுதியாகி விடும். சில நேரம் வெயிட் தாங்க முடியாம இடையில் மூட்டையை போட்டுடுவேன். அழுகை அழுகையா வரும்.

வரும் போது இடையில் எந்த ஸ்டாப்பும் கிடையாது. போகும் போது பாரம் இருக்கும் என்பதால் இரண்டு மூன்று ஸ்டாப்பிங் இருக்கும். முன்னால் போகின்றவர்கள் அந்தந்த ஸ்டாப்பிங்கில் சுமையை கீழே வைத்து விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுப்பார்கள். அனைவரும் வந்து சேர்ந்ததும் சிறிது நேரம் அரட்டை. புளியம்பழம் பறிப்பு நடக்கும். அது முடிந்ததும் மீண்டும் பயணம்.

ஸ்டப்பிங்களில் ஒன்று சுக்குமல்லி காப்பிக் கடை. காட்டுக்கு போய் வருபவர்களுக்காக அந்த கடை. சுக்கு மல்லி காப்பி செம டேஸ்ட்டாக இருக்கும். உடம்புக்கும் நல்லது. ஒரு காப்பி 25 பைசா. அதோடு பத்து பைசாவுக்கு ஒரு வருக்கி. (சென்னை மொழியில் பொறை). காப்பியை வாங்கி வருக்கியை முக்கி சாப்பிடும் போது அட அட அடடா என்னமா இருக்கும் தெரியுமா? சூப்பரோ சூப்பர்.

சமீபத்தில் சுக்கு மல்லி காப்பி ஆசையில் காட்டுப் பக்கம் போனேன். வடை, போண்டா தான் இருக்கிறது. வருக்கி இல்லை. பாலில் டீ டிகாசன் கலந்து போடுகிறார்கள். சுக்கு மல்லி காப்பி கேட்டால் அதெல்லாம் அந்த காலம் என்கிறார்கள்... எவ்வளவு மாற்றங்கள்.

சுமையை வீட்டுக்குள் கொண்டு வர மாட்டோம். அப்படியே வெளியே வீட்டுக்கு முன் கொட்டி விடுவோம். ஈரமாக இருப்பது எல்லாம் காயும். மண்ணும் உதிரும். இப்ப எல்லாம் தெருவில் இதெல்லாம் காண முடிவதில்லை. எங்கள் வீடுகளில் விறகு அடுப்பே இல்லை. ஒன்லி கேஸ் பயன்பாடு தான்.

என்ன கதை நல்லா கேட்டீங்களா? கதை முடிஞ்சு போச்சு. இனி வேகமா கிளம்பி ஸ்கூலுக்கு போகனும். ஏற்கனவே ஒம்போது மணி ஆகிப் போச்சு. லேட்டா போன டீச்சர் திட்டுவாங்கல்ல... இல்லைன்னா எங்க தாத்தாவை துணைக்கு கூப்பிட்டுக் கொண்டு போய் சமாளிக்கனும்.... சரி சரி நீங்க போறதுக்கு முன்னாடி கமெண்டும், தமிழ் மணத்தில் ஓட்டும் போட்டுட்டு போங்க...:)))


கேண்டீனில் இருந்து சில படங்கள்!




Sunday, December 7, 2008

கயல்விழி முத்துலட்சுமி - அக்காவுக்காக

சிறுமுய்ற்சியில் புதிய பதிவு
நீ வளர்ந்ததும் பெரிய மந்திரியா வரணும்!!
http://sirumuyarchi.blogspot.com/2008/12/blog-post_07.html

ஹிஹிஹிஹி பதிவின் டெம்ப்ளேட்டை புதுசா மாற்றி இருக்கேன். கருவிப்பட்டையெல்லாம் சரியா இருக்கான்னு செக்கிங் பண்ணதான் இந்த போஸ்ட்.

அக்காவின் பதிவில் இருந்து....
நமக்குத்தேவை நல்ல தலைவர்கள் என்று அவந்தி பதிவு போட்டிருக்கிறாள். ( தொடர்பதிவுக்கும் அழைத்திருக்கிறாள் ) உண்மை தான் ஆனால் எந்த வீட்டிலும் தலைவர்களை வளர்ப்பதில்லை. யாராவது என் குழந்தை அரசியலில் பெரிய மந்திரியா வரணும் என்று ஆசைப்படுகிறோமா என்ன? அரசியல் பாரம்பரியம் ஒரு ராஜ பாரம்பரியமாக குடும்பம் குடும்பமாக மட்டுமே வளர்கிறது. படிக்கின்ற வயசில் அரசியல் தேவையில்லை என்பதால் அரசியலா அதில் எல்லாம் ஒன்னும் கவனம் வைக்காதே என்று சொல்லி முடிப்பதற்குள் அவர்களுக்கு ஓட்டு போடும் வயசும் வந்துவிடுகிறது. நம்ம தமிழ்நாட்டிலிருந்து நடிகைகள் வருவதில்லை என்பது போல படித்தவர்கள் அரசியலுக்கு வருவது (அரசியல்குடும்பத்தினைத்தவிர) குறைவு.

மகளின் பள்ளியின் சேர்மென் (வய்து 87 ) இந்த காலத்தில் கல்வியும் அறிவும் மட்டும் முக்கியம்ன்னு நினைச்சு பெரியாளான பல அறிவாளிகளால் தான் பணவீக்கம் ,பொருளாதார பின்னடைவு எல்லாம் வருகின்றது. எதிலும் எதிக்ஸ் முக்கியமில்லை என்ற எண்ணம் . ... மேலும் வாசிக்க..

Friday, December 5, 2008

"பூ ”வும் வாரணம் ஆயிரமும், மறுவீட்டுக்கு போன கதையும்

சுப்ரமணியபுரத்திற்குப் பிறகு முழு தமிழ் படமாக போன வாரம் வாரணம் ஆயிரம் படம் பார்த்தேன். படம் பார்த்தால் விமர்சனம் எழுதனும் என்று நினைப்பதில்லை. ஆனால் சமீரா அழகாக இருந்தார். ஏதோ அடுத்த வீட்டுப் பெண் போல ஒரு ஈர்ப்பு இருந்தது..... ;) . சூர்யா தனது காதலிக்காக கடுமையாக உழைத்து இரண்டே ஆண்டுகளில், வீட்டுக் கடன் எல்லாவற்றையும் அடைக்கின்றார். அதை அடுத்து தனது காதலியைத் தேடி அமெரிக்காவிற்கும் செல்கின்றார். கொஞ்சம் லூசுத்தனமா இருக்கோ? எனக்கு இதெல்லாம் லூசுத்தனமா இல்ல.... அதே மாதிரி நமக்குள்ளயும் ஒரு காலத்தில் நெருப்பு இருந்துச்சு..

கடல் கடந்து காதலியை தேடிப் போகனும்னு... ஆனால் கடல் கடந்து கூலி வேலைக்கு தான் போக முடிஞ்சது... ஆனா 10 வருசமா இருந்தும் எனக்குன்னு சொந்தமா ஒரு வீடு கூட கட்ட முடியல... சினிமாவுக்கு தான் ஒரு பாடலில் எல்லாம் இம்புட்டு பணம் சம்பாதிக்க முடியும் போலன்னு நினைச்சுக்கிட்டேன். இதுக்கு தான் டீசண்டாவே இருக்கக் கூடாதோ?..;))))



படம் நன்றி : http://www.sameerareddy.info/
*****************************************************************************

வரும் 7 ந்தேதி முதல் 12 ந்தேதி வரை ஹஜ் பெருநாளுக்கான விடுமுறை உள்ளது. விடுமுறைக்கு எங்கும் வெளியே செல்ல முடியாத நிலை இருப்பதால் எதாவது படம் பார்க்கலாம் என நினைத்து ’பூ’ பதிவிறக்கினேன். (இந்த நாட்டில் திரையரங்கம் இல்லாததால் வேறு வழி இல்லை. மன்னிக்கனும்). ஏனோ நேற்று வார இறுதி என்பதால் இந்த படத்தை நேற்று இரவே பார்த்து விட்டேன்.

நம் சமூகத்தில் எப்பவுமே ஆண்களின் பழைய காதல்கள் ஒரு அழகான நினைவுகளாகவும், பெண்களின் பழைய காதல்களை ஒரு அசிங்கமாகவும் நினைக்கின்றோம். ஒரு திருமணமான பெண்ணின் பழைய காதலை சொல்லும் முயற்சி இது. நல்லா இருக்கு...:)

***********************************************************

மகனுக்கு இரண்டு வயது, இரண்டு மாதம் முடிந்துள்ளது. வீட்டுக்கு தொலை பேசும் போது அவ்வப்போது பேசுவான். தங்கமணி சொல்லிக் கொடுப்பதை அப்படியே சொல்வான். அவனுக்கு கற்றுத் தரும் 1,2,3 .. ABCD சொல்கின்றான்.

அழகாக அஸ்ஸலாமு அலைக்கும் சொல்வான். அத்தா நல்லா இருக்கீங்களா என்று கேட்பான். நல்ல மூடில் இருந்தால் குல்குவல்லாகு அஹது (திருக்குர்ஆனின் ஒரு பகுதி) சொல்வான். சில நேரங்களில் அல்லாஹூம்ம ரப்பனா ஆத்தினா (பிரார்த்தனை) சொல்வான். தூங்குவதற்கு பெட் சென்றதும், அவனாகவே ”அல்லாஹூம்ம பிஸ்மிக்க அமூத்து வஅஹ்யா” என்று சொல்லி விடுவானாம். (தூங்குவதற்கு முன் சொல்வது)

நேற்று போனை அவனிடம் கொடுத்ததும் அவனாகவே “அத்தா, உடம்பை பார்த்துக்கங்க. அஸ்ஸலாமு அலைக்கும்” என்று சொல்லிட்டு தங்கமணியிடம் போனைக் கொடுத்து விட்டு போய் விட்டான். போன் பேசி முடிக்கும் போது இதே வார்த்தைகளைக் கூறுவது தங்கமணியின் வழக்கம். அதை அப்படியே கவனித்து சொல்லி விட்டான். ஏன் என்றால் தலைவர் விளையாட்டில் பிஸியாக இருந்தாராம். அதனால் பேச்சை விரைவாக முடித்து ஓடுகின்றாராம்....:))

*****************************************************************************

கல்யாணம் ஆன சில தினங்களில் மறுவீடு செல்வது எங்கள் பகுதி வழக்கம். திருமணம் முடிந்தது முதல் முறையாக தம்பதியர் இருவரும் பெண்ணின் வீட்டுக்கு செல்வது மறுவீடு. திருமணமான மூன்றாம் நாள் நானும் மறுவீடுக்கு சென்றேன். ஏற்கனவே பெண் பார்ப்பதற்காக சென்று இருந்ததால் எனக்கு ஊர் புதிதாக இல்லை. (நெல்லை மாவட்டத்தின் ஒரு கடைக் கோடியில் ஊர். காலை 2 , மதியம் 1, மாலை 2 என ஊருக்குள் பஸ் வரும். இல்லையெனில் மெயின் ரோட்டில் இறங்கி 3 கி.மீ தூரம் போகனும்...;)))) என்ன செய்ய )

முஸ்லிம்களின் வழக்கத்தில் திருமணத்துக்கு முன் பெண்ணைப் பார்க்க இயலாது. ஆனால் நாங்கள் உண்மையான இஸ்லாமிய முறையைப் பேண வேண்டும் என்று ஆர்வமுள்ளவர்கள் என்பதால் பெண் பார்க்க சென்றோம். ... சரி அந்த கதையெல்லாம் வேறு ஒரு நாள் சொல்லலாம். இப்ப வேற ஒன்னு சொல்கிறேன்.

மறுவீடு சென்றதும் வீட்டில் கோழிக் கறி எடுத்து பிரியாணி. 11 மணிக்கே வாசனை மூக்கைத் துளைத்தது. கிச்சனை நோட்டம் விட்ட போது கோழிக் கால் கூட பொரிப்பது தெரிந்தது. மதியம் தொழுகைக்குப் பின் சாப்பிட அமர்ந்தோம். சுடச்சுட பிரியாணி தட்டில் வந்தது. அதோடு பொரித்த கோழிகாலும்... இன்னைக்கு ஒரு வெட்டு வெட்டனுடானுட்டு உட்கார்ந்து இருக்கேன். அருகில் இருந்த மச்சானும்(தங்கமணியின் சகோதரர்), தங்கமணியும் சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்.

நான் டிவியைப் பார்த்துக் கொண்டே அடுக்களையையும் நோட்டம் விட்டுக் கொண்டு இருந்தேன். தங்கமணியும் ’சாப்பிடுங்க’ என்று வழியுறுத்த ’சூடா இருக்கு’ என்று சொல்லி வைத்தேன். நேரமாகிக் கொண்டே இருந்தது. பிரியாணியும் ஆறத் துவங்கி இருந்தது. நானும் எம்புட்டு நேரம் தான் பசிக்காத மாதிரி நடிக்கிறது?.... நைஸா தங்கமணியிடம் கேட்டேன்.

“ பிரியாணி இருக்கு... ஆனா ஊத்தி தின்ன தால்ச்சா, பருப்புக் கறி(தால்) எதுவும் இல்லியே?” அதுக்கு தங்கமணி “ எங்க ஊர்ல எல்லாம் பிரியாணி செஞ்சா வேற ஊத்திக்க எல்லாம் எதுவும் செய்ய மாட்டோம்” என்று சொல்லி விட்டாள். ஒரு வெங்காய சட்னி கூட இல்ல...:( என்னயா இது நமக்கு வந்த சோதனைன்னு நினைச்சுக்கிட்டேன். அப்புறம் என்ன சுவையான பிரியாணியை கஷ்டப்பட்டு சாப்பிட வேண்டியதாப் போச்சுது.. இப்பவரை தங்கமணி இதைச் சொல்லி கலாய்ப்பது உண்டு...:)))

அதற்குப் பிறகு நான் சென்றால் நாங்கள் சாப்பிடும் ஸ்டைலிலேயே சமையல் செய்கின்றார்கள்.
( நானானிம்மா, ராமலக்ஷ்மி அக்கா கவனிக்க : சொதி, அடை எல்லாம் இதுவரை அங்க செஞ்சு தந்ததே இல்லீங்க...:( ;))) )

Tuesday, December 2, 2008

Blogger Tips - கலர்புல் கமெண்ட், மின்னும் வரிகள், ஒளிரும் வாக்கியங்கள்

உண்மைத் தமிழன், சின்னப்ப்பையன், சுரேகா இவங்களோட பதிவுகளுக்குள் நுழையும் போது ஏதோ தாஜ் ஹோட்டலுக்குள் நுழைந்த கமாண்டோ மாதிரி ஒரு பயத்தோட தான் நுழைய வேண்டி இருக்கும்... ஏனா? அதை கடைசியில் சொல்றேன்.

முதலில் சில உதவிக் குறிப்புகள் பார்க்கலாம். ப்ளாக்காரில் Bold, Italic, நிறம் மாற்றும் முறை, தொடுப்பு (Link) தரும் முறை போன்றவை முன்பே தரப்பட்டுள்ளன. இவை தவிர்த்து சில முறைகளை அறிமுகப்படுத்தவே இந்த இடுகை.

(இதில் உள்ளவை சாதாரண HTML Code கள் என்பதால் உங்கள் பதிவு திறக்க அதிகப்படியான நேரம் எடுக்காது என்பதால் தாராளமாக பயன்படுத்தலாம்.)

1. How to add scrolling Text in your blogger template?
2. How to add Flashing Text in your blog post?
3. How to show blog owner's comment in a different color?

1. முதலில் உங்கள் பதிவில் உருளும் வரிகளை பதிக்கும் முறை.



எவனுடைய அண்டை வீட்டார் அவனது துன்பங்களை விட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன் இறைநம்பிக்கை இல்லாதவனாகின்றான் - நபிகள் நாயகம்


இதே போன்ற அமைப்பை எனது பதிவின் முகப்பிலும் வைத்து இருக்கின்றேன். கடைசியாக எழுதிய மூன்று பதிவுகள் அதில் ஓடிக் கொண்டு இருக்கும். மூன்றும் தனித்தனியாக அதற்குரிய தொடுப்புக்கு(Link) செல்வது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று உங்களது தளத்திலும் அமைக்கலாம். இடுகையில் சேர்க்க கீழே உள்ளது போல் எழுதலாம்.

<marquee behavior="scroll" direction="left" onmouseover="this.stop()" scrollamount="4" onmouseout="this.start()" bgcolor="##fdefd0" align="middle"><br/><br/> <a href="http://majinnah.blogspot.com/2008/11/blog-post_28.html "> Blogger Tips - கலர்புல் கமெண்ட், மின்னும் வரிகள், ஒளிரும் வாக்கியங்கள், </a> <br/><br/> </marquee>





அதில் தொடுப்புக்கான இடத்தில் உங்களுக்கு தேவையான தொடுப்பையும், விளக்கத்தில் உங்களுக்கான விளக்கத்தையும் மாற்றிக் கொள்ளலாம். இதை Dash Board, Layout,Add a Gadget, HTML/JavaScript சென்று அங்கு உங்களுக்கு தேவையான கோடை அதில் உள்ளீடு செய்ய இனி உங்கள் பதிவிலும் இது ஓடத் தொடங்கி விடும். இது கீழ்கண்டவாறு உங்கள் பதிவில் வரும். இந்த முறையில் சிறு துணுக்குகள், முக்கிய செய்திகள், பொன் மொழிகள், அறிவுரைகளைத் தரலாம்.


Blogger Tips - கலர்புல் கமெண்ட், மின்னும் வரிகள், ஒளிரும் வாக்கியங்கள்


2. உங்கள் பதிவில் மின்னும் வார்த்தைகளைப் (Flashing Text) பதிப்பது எப்படி?

இதுவும் மிக சுலபம் தான். கீழே எடுத்துக்காட்டுக்காக இரு வரிகளைத் தந்துள்ளேன்.

ஒரு மனிதனை அநியாயமாகக் கொன்றவன் ஒரு சமுதாயத்தையே கொன்றவனாவான் - திருக்குர்ஆன்

இதற்கு பயன்படுத்தப்பட்ட HTML Code கீழே தந்துள்ளேன்.

<span style="text-decoration: blink; color: rgb(51, 0, 153);
font-weight: bold;">ஒரு மனிதனை அநியாயமாகக் கொன்றவன் ஒரு சமுதாயத்தையே கொன்றவனாவான் - திருக்குர்ஆன்</span>

இதில் அந்த வார்த்தைகள் இருக்கும் இடத்தில் உங்களுக்குத் தேவையான வரிகளை சேர்த்துக் கொள்ளலாம்.

3. பதிவர்கள் தங்கள் சொந்த பின்னூட்டங்களை மட்டும் வேறு கலரில் தருவது எப்படி?

சிலருடைய பதிவில் (முத்துலக்ஷ்மி அக்கா, எனது...) பதிவின் உரிமையாளருடைய பின்னூட்டங்கள் மட்டும் வேறு கலரில் இருக்கும். பின்னூட்டங்களுக்கு பதில் பார்க்கும் போது தெளிவாக, சுலபமாக இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். இதையும் உங்கள் பதிவில் சுலபமாக மாற்றலாம்.

முதலில் வழக்கம் போல் Dash Board, Layout, Edit HTML, சென்று Expand Widget Templates என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.

முக்கியம் :இதில் இருப்பதை ஒரு வேர்ட் பைலில் சேவ் செய்து வைத்துக் கொள்ளுங்கள்

இனி உங்கள் HTML ல்

Step : 1

.comment-body
{
margin:0;
padding:0 0 0 20px;
}
.comment-body p
{
font-size:100%;
margin:0 0 .2em 0;
}

இந்த இடத்தை தேடிக் கண்டுபிடியுங்கள். (ப்ளாக்கர் டெம்ப்ளேட் வைத்து இருப்பவர்களுக்கு அப்படியே கிடைக்கும். மற்ற இடங்களில் இருந்து என்றால்

கொஞ்சம் விளக்கமாக சொல்ல வேண்டும்..... தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ளலாம்)


இதற்குக் கீழே, அடியில் உள்ளதை பேஸ்ட் செய்யுங்கள்.

.comment-body-author {

margin:0;

padding:0 0 0 20px;

}


.comment-body-author p {

font-size:100%;

margin:0 0 .2em 0;

color:#CC3300;

text-decoration:bold;

}


Step : 2

HTML ல்
<dl id='comments-block'> <b:loop values='data என்பதைத் தேடிக் கண்டுபிடியுங்கள். இந்த வரிக்கு கீழே சில வரிகளுக்குப் பின் <data:comment.author/> </b:if> said... </dt> இப்படி இருக்கும். இந்த dt> க்குக் கீழே , அடியில் உள்ளதை பேஸ்ட் செய்யுங்கள்.

<b:if
cond='data:comment.author == data:post.author'>

<dd class='comment-body-author'> <p><data:comment.body/></p> </dd> <b:else/>


பேஸ்ட் செய்த பிறகு அதற்கு இன்னும் சில வரிகள் கழித்து ஒரு இடத்தில் <dd
class='comment-body-author'> <p><data:comment.body/></p> </dd> என்று முடியும். அதற்குக் கீழே </b:if> என்பதை மட்டும் பேஸ்ட் செய்து விடுங்கள். இனி Save Template கொடுங்கள். அம்புட்டுத்தேன்..இனி உங்கள் பதிவில் நீங்கள் கமெண்ட் போட்டால் சிவப்பு கலரில் தெரியும்.

Save ஆகும் போது எரர் வருதா? அமைதியா ஏற்கனவே வேர்ட் பைலில் சேவ் செய்து வைத்திருப்பதை திரும்பி பேஸ்ட் செய்து விட்டு அமைதியா இருந்து கொள்ளுங்கள்... ;)))


எனக்கு சிவப்பு கலர் பிடிக்காது. வேற கலர் தான் வேண்டும் என்று சொல்பவர்கள் இங்கு சென்று புதிய கலருக்கான Code ஐ (#3B9C9C இப்படி இருக்கும்) எடுத்து வந்து மாற்றி போட்டுக் கொள்ளுங்கள். நிறத்திற்கான குறிப்புகள்


மாற்றம் செய்யுமிடம்


.comment-body-author p {

font-size:100%;

margin:0 0 .2em 0;

color:#CC3300;

text-decoration:bold;

}


இதில் சிகப்பு நிறத்தில் இருக்கும் எழுத்துக்களுக்குப் பதில் உங்கள் நிறத்திறகான Code ஐ மாற்றிக் கொள்ளுங்கள்.


நன்றிகள் : தீபா அக்கா மற்றும் முத்துலக்ஷ்மி அக்கா!


****************************************************************


முதலில் சொன்னதுக்கு பதில். இவர்களுடைய பதிவுகளில் யாஹூ சிரிப்பான் வருவதற்கான நிரலி சேர்க்கப்பட்டுள்ளது. இவர்களுடைய இடுகைகள் திறக்கும் போது கடைசியில் பல வினாடிகள் (சில நேரங்களில் ஒரு நிமிடங்கள் வரை) கணிணி ஸ்தம்பித்து விடுகின்றது. பிராஸஸரின் வேலைப்பளு சுமார் 70, 80 சதவீதம் வரை செல்கின்றது. சிரிப்பான் சிரிக்காமல் இருந்தால் பரவாயில்லை என எண்ணினால் இது போன்று பிரச்சினையுள்ளவர்கள் கீழே உள்ள வரிகளை நீக்கினால் சரியாகி விடும்.

<script type='text/javascript' src='http://deepa7476.googlepages.com/DeepaSmiley.js'></script>

சிரிப்பான் கண்டிப்பாக சிரிக்க வேண்டுமெனில் அப்படியே விட்டு விட்டு எங்கள் கணிணியை சூடேற்றலாம்... :)))

டிஸ்கி : படித்தவர்கள் அனைவரும் தமிழ் மண கருவிப்பட்டையில் ஓட்டுப் போட்ட்டுட்டு போகனும்... யார் வந்துட்டு ஓட்டு போடாம போனாலும் கண்டுபிடிச்சிடுவேன்.. ... :)))