Showing posts with label அரசியல்.. Show all posts
Showing posts with label அரசியல்.. Show all posts

Wednesday, March 18, 2009

துபாய் அழிவை நோக்கியா செல்கின்றது..??

பள்ளி காலங்களில் சிறுவர்மலர் புத்தகம் விரும்பி படிப்பேன். நூலகத்தில் சிறுவர்களிடையே அதற்கு ஒரு போட்டியே இருக்கும். இரண்டு, மூன்று பேர் இணைந்து படித்த காலம் உண்டு. அப்போது ஒரு படக்கதை வந்தது. அதன் பெயரை மறந்து விட்டேன். அதில் ஜானி என்று ஒரு சிறுவன் இருப்பான். அவன் இருந்த நகரமே ப்ளேக் நோயால் அழிந்து போய் இருக்கும். எங்கு பார்த்தாலும் எலிகள் துரத்தும். பல கெட்ட மிருங்கள் சுற்றி வரும். நகரில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் பாழடைந்து மனிதர்களே இல்லாமல் போய் கிடைக்கும். இந்த சூழலில் அவன் எத்ரிகொள்ளும் பல சோதனைகளை அதில் படக்கதையாக காட்டி இருப்பார்கள். அழிவு என்றால் இப்படித் தானோ என்று எண்ணிக் கொள்வேன்.

**********************************************************************

ஹிந்தி சில வித்தியாசமான படங்கள் வரும். டர்னா மனா ஹை (डरना मना है)... அதாவது பயப்படுவதற்கு தடை என்று வைத்துக் கொள்ளலாம். சுற்றுலா வரும் ஒரு நண்பர்கள் குழுவினரின் வாகனம் பழுதாக காட்டில் ஒரு இடத்தில் இரவு தங்குகின்றனர். அதில் நம் வாள மீன் மாளவிகா கூட இருப்பார். கதை நமக்கு தேவை இல்லை. அதில் அனைவரும் ஆளுக்கு ஒரு பேய்க் கதை சொல்வார்கள். ஒரு கதையில் ஷில்பா ஷெட்டி கடையில் ஆப்பிள் வாங்குவார். அன்று அதை உண்ணும் அவளது கணவன் மறுநாள் காலையில் படுக்கையில் ஆப்பிளாக மாறி இருப்பார். அவள் அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்தால் ஊரே வெறிச்சோடி கிடக்கும். ஆப்பிள் உண்ட அனைவரும் ஆப்பிளாக மாறி தெருவில் ஆங்காங்கே இருப்பார்கள். ஆப்பிள் வியாபாரி கடைசி ஆப்பிளை அவளுக்கு ஓசியாகத் தருவதாகக் கூறுவான். கூடவே ஒரு பேய் இருக்கும்.

******************************************************************

நான் முதன் முதலில் துபாய் சென்ற போது அங்கு இவ்வளவு டிராபிக் இல்லை. மக்கள் தொகையும் குறைவாக இருந்தது. அரை மணி நேரத்தில் சார்ஜா வந்து விடலாம். அப்போது தான் துபாயின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டம்.

அடுத்தடுத்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி ஆரம்பமானது. எங்கு பார்த்தாலும் உயரமான கட்டிடங்கள். மக்கள் திரள். வீதிகளில் விலக இடமில்லாமல் மக்கள் திரள். உட்சபட்மாக டிராபிக் ஜாம். இது ஒரு புறமிருக்க அடிப்படைத் தேவையான இருக்கும் இடத்தின் வாடகை அமோகமான வருடா வருடம் ஏறிக் கொண்டே இருந்தது. கட்டிடங்களை 99 வருடத்திற்கு விலைக்கு விற்கும் புதிய முறை ஆரம்பமானது.

பல பிரபலங்களும், கறுப்பப்பணக்காரர்களும் துபாயில் வந்து பணத்தைக் கொட்ட ஆரம்பித்தனர். கொஞ்சம் அப்பர் மிடிஸ் கிளாஸ் கூட பணத்தைச் சேர்ந்து ப்ளாட் வாங்கி வாடகை வாங்க ஆரம்பித்து இருந்ததனர். (இதில் நிறைய பேர் பாகிஸ்தான், இந்தியர்கள்)

ப்ளாட்களில் தேவை அதிகமாக, அதிகமாக கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகமானது. கட்டிடங்களுக்கு பெயர் வைப்பதே பெரிய கடினமான வேலையாக மாறிவிட்டிருந்தது. தமிழ் சினிமா போல் எல்லா பெயர்களையும் அனைவரும் வைத்திருந்தனர்.

கடலுக்குள் வில்லாக்களையும், உயரமான கட்டிடங்களையும் கட்டிக் கொண்டு இருந்தனர். அதன் உச்சகட்டம் தான் பேரீச்சம் மரம் போன்ற அமைப்பில் வீடுகள், உலக மேப் அமைப்பில் வீடுகள், உலகின் உயரமான கட்டிடம் என்று.. தேரா பகுதியில் கடலில் கப்பல் மூலம் மண்ணைக் கொட்டிக் கொண்டு இருக்கும் போது பேசிக் கொள்வோம்.. கடலில் பணத்தை வாரி இறைக்கிறார்களே.. என்று.

அந்த நேரங்களில் அபுதாபி ரோட்டில் செல்லும் போதெல்லாம் எனக்கு மேலே நான் சொன்ன இரண்டு கதைகள் தான் நினைவுக்கு வரும். துபாய் இருக்கும் மக்கள் தொகைக்கும் இங்கு கட்டப்பட்டுக் கொண்டு வரும் கட்டிடங்களுக்கும் விகிதாச்சாரம் அதிக வித்தியாசமாக இருக்கின்றதே..இதையெல்லாம் யார் வந்து நிரப்பப் போகின்றனர் என்று... எல்லாம் சரியாக நடக்க வேண்டும் இல்லையென்றால்.... கட்டிடங்கள் பாழடைந்து , தெருக்கள் வெறிச்சோடி மயான அமைதியாகி விடும் என்று நினைத்துக் கொள்வேன்.

ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைக்க வில்லை. முதலில் அமெரிக்காவுக்கு விழுந்த அடி.. துபாய் வரைத் திரும்பி விட்டது. ரியல் எஸ்டேட் சரிவு என்ற உடன் மக்கள் துபாயில் முதலீடு செய்யத் தயங்க, வங்கிகள் அடுத்த கட்ட லோனை நிறுத்த ஆரம்பித்தன. கட்டிய கட்டிடங்கள் விற்கப்படாமல் தேங்க வங்கிகள் பண முடைக்கு ஆளாகின. வாங்கியவர்கள் விற்க எத்தனிக்கின்றனர். வங்கிக்கு பணம் கட்ட முடியாமலும், கட்டியதை விற்க முடியாமலும் நிறுவனங்கள் தவிக்க கூடவே இருக்கும் பணியாளர்களுக்கு சம்பளப் பிரச்சினை.








வேலை இல்லாததால் பெரும்பாலானோரை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். அவர்கள் காலியானதால் அவர்கள் இருந்த கட்டிடங்களும் காலியாகின்றன. அவர்களை டார்கெட்டாக வைத்து வியாபாரம் செய்து வந்தவர்களும் வியாபாரமின்றி தவிக்கின்றனர். எப்போதும் அமர்க்களமாக இருக்கும் துபாய் ஷாப்பிங் திருவிழா இந்த ஆண்டு சத்தமே இல்லாமல் நிறைவடைந்துள்ளது.

நிறுவனங்கள் ஆட்களை வேலை விட்டு தூக்குகின்றனர். இல்லையேல் நீண்ட விடுமுறை கொடுத்து தற்காலிகமான தங்களை சிக்கலில் இருந்து விடுவித்துக் கொள்கின்றனர்... அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது போல் துபாய் தனது உச்சத்தை எட்டி விட்டது... துபாயுடன் சேர்ந்து சார்ஜா, அஜ்மான் போன்றவையும் பாதிக்கப்படுகின்றன. அபுதாபியின் எண்ணைய் வளம் அதைக் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

மீண்டும் உலக மக்கள் நம்பிக்கை கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் முன்னேறி, மக்கள் நம்பிக்கையுடன் மீண்டும் துபாயில் மண்ணில் முதலீடு செய்தால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும். இல்லையேல் கல்லும். மண்ணும், கான்க்ரீட்டும், தான் அதன் மிச்சமாகக் கிடைக்கும்.

“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்” (அல்குர்ஆன் 2:276)

Friday, September 19, 2008

அமெரிக்க அதிபர் தேர்தலும், கலவையான சிந்தனைகளும்... 19-09-2008

. .
கலவை 1

அமெரிக்க அதிபர் தேர்தல் கடைசி கட்டத்தில் இருக்கின்றது. ஜனநாயக கட்சியின் சார்பில் ஒபாமாவும், குடியரசு கட்சியின் சார்பில் மெக்கெய்னும் களத்தில் உள்ளனர். உலகில் அடுத்து நான்கு ஆண்டுகள் நிகழப் போவதை நிர்ணயிக்கும் தேர்தலாகவே இதைக் கருதுகிறேன். பொருளாதார சிக்கலில் இருக்கும் அமெரிக்காவை அவ்வளவு சுலபமாக மீட்க முடியுமா எனத் தெரியவில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் வரிகளைக் கூட்டியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்திய பொது புத்திகள் ஒபாமாவையே ஆதரிக்கின்றன. ஆனால் எனக்கு மெக்கெய்ன் தான் (புஷ் கட்சி என்றால் புரியும்) ஆட்சிக்கு வர வேண்டும்.. ஏன்?.. பதிவை எழுதி டிராப்ட்டில் போட்டு வச்சாச்சு.. தேர்தலுக்கு முன் அதை வெளியிடுவோம்ல.. ;)

ஆனால் நான் மிகவும் பயத்துடன் எதிர்நோக்கி இருக்கும் விடயம்... இத் தேர்தலில் உச்ச கட்டமாக நிகழ விருக்கும் ஏதோ ஒரு சம்பவம்... சாராப் பெலினின் திடீர் பிரமோசன், மனச்சிதைவுள்ள குழந்தை, 17 வயது கர்ப்பிணிப் பெண், அவளது வருங்கால கணவன்(?) போன்றவை எல்லாம் பரபரப்பை ஏற்படுத்தாது என்பது என் கருத்து.

ஒபாமாவை அனைவரும் ஆதரித்தாலும். இஸ்ரேல் போன்ற அடிமட்ட வேலைகளில் உலகில் முண்ணனியில் இருக்கும் நாட்டின் அமைப்புகள் மெக்கெய்னையே விரும்பும். ஏனெனில் ஒபாமா அடுத்த இரண்டு மூன்று வருடங்களில் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகளை வெளியேற்றுவதாக வாக்களித்துள்ளார்.... அதை இஸ்ரேல் விரும்பாது

எனவே தேர்தலில் கடைசி கட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்த, மக்களின் கவனத்தை திசை திருப்ப, எவ்வளவு மக்கள் பாதிக்கப்பட்டாலும் கவலைப்படாமல், ஏதாவது அதிக பட்சமான உள்ளடி வேலையில் ஈடுபடும்... பின்லேடனின் விடியோவாக மட்டும் இந்த தடவை இருக்காது.. அதற்கும் மேல் ஏதோ.. பயப்படுகிறேன்..அதற்கு அமெரிக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்.... கவனச்சிதைவு இல்லாமல் இருந்தால் அமெரிக்கா தப்பி விடும்.

இங்குள்ள அரப் நியூஸில் வந்த கார்ட்டூன் உங்கள் பார்வைக்கு... கிளிக்கி பெரிதாகப் பார்க்கவும்



கலவை 2
எங்களது நிறுவனத்தில் ஐடி பிரிவின் சார்பில் புதிதாக கணக்கீடுகள் செய்யப்படும் படிவங்கள் (Log Sheets) தரப்பட்டுள்ளன. சில வருடங்களுக்குப் பின் அவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. எங்களது பணி சம்பந்தமான தினசரி, வாராந்திர, மாதமிருமுறை, மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு, ஆண்டுக்கு என தனித்தாயாக பராமரிப்பு பணிகள் உள்ளன.

அவைகளை உள்ளீடு செய்வதற்கு இவைகளைப் பயன்படுத்த வேண்டும்.. பெரிய நெட்வொர்க்கில் இயங்கும் எங்களது நிறுவனத்தின் கணிணி பிரிவில் இருந்து வந்திருக்கும் அந்த படிவங்களைப் பார்க்கும் போது அழாத குறை தான். எக்ஸலில் தயாரிக்கப்பட்ட அந்த படிவங்களின் கட்டங்களில் Alignment மிகவும் மோசமாக இருக்கிறது. மூன்று எழுத்துக்கள் எழுத வேண்டிய இடங்களுக்கு ஒரு எழுத்துக்கான இடம் மட்டுமே விடப்பட்டுள்ளது. ஆறு எழுத்துக்களுக்கு மூன்று எழுத்துக்களுக்கான கட்டம் விடப்பட்டுள்ளது. இன்னொரு இடத்தில் நான்கு எழுத்துக்கான இடத்திற்கு 14 எழுத்துக்கான இடம் உள்ளது.

மேலே உள்ள கட்டத்திற்கான வார்த்தை மடங்கி கீழே உள்ள கட்டத்திற்குள் பாதி சென்று விட்டது. மொத்தத்தில் கடித்து குதறி வைத்துள்ளார்கள். இதை எங்கள் ஐடி டேமேஜர் வேறு அப்ரூவ் செய்துள்ளார். என்னாலேயே இதை அழகாக உருவாக்கி இருக்க முடியும். எங்கள் பகுதி மேனேஜரிடம் இது பற்றி புகார் செய்த போது “உனக்கு ஏன் இந்த வேண்டாத வேலை? அவர்கள் எப்படி அனுப்புகின்றார்களோ அப்படியே அதில் எழுது” என்று சொல்லி விட்டார்... என்ன கொடும இது

கலவை 3
எனது சகோதரி மகன் அருகில் உள்ள பட்டிவீரன்பட்டி என்ற ஊரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கின்றான். அவனுக்கு புதிதாக லிப்கோ ஆங்கிலம்- தமிழ் அகராதி வாங்கிக் கொடுத்தேன். அவனால் அதில் வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிரமமாக இருக்கின்றது. எனவே வாரம் இங்கிருந்து அவனுக்கு அவனது பாடத்தில் இருந்து 10 வார்த்தைகளை தேந்தெடுத்து அனுப்பி விடுவேன். (பாடப்புத்தகங்கள் இணையத்தில் கிடைக்கின்றன)

ஞாயிற்றுக் கிழமை மாலையில் அதற்கான தமிழ் மொழி பெயர்ப்பை போன் செய்து கேட்டுக் கொள்வேன்.. இப்போது மிக விரைவாக அகராதி பார்க்க கற்றுக் கொண்டு விட்டான். ஆனால் அவனது பாடத்தில் இருந்து, தரும் வார்த்தைகளையே அவனால் உச்சரிக்கை இயல்வதில்லை. (தமிழ் மீடியம்)... ஒன்பதாவது படிக்கும் ஒரு சிறுவனால் ஆங்கிலத்தை வாசிக்க இயலவில்லை எனும் போது வருத்தமாக இருக்கிறது நமது கல்வி முறையை நினைக்கையில்... இதே நிலையில் தான் நானும் இருந்திருப்பேன் என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது... ;)

கலவை 4
எனது பெயரில் எங்களது ஊரில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கி சேவை உள்ளது. (NRE Account - Canara Bank) கடந்த பத்து ஆண்டுகளாக இந்த சேவையை பயன்படுத்தி வருகிறேன். ஆனால் இதுவரை எனது வங்கிக்கணக்கு பற்றிய எந்த விவரங்களையும் எனக்கு அவர்கள் அனுப்பியது இல்லை.

எனது முகவரி மாற்றம் மற்றும் மின்னஞ்சல் முகவரியையும் அவர்களின் கோப்பில் ஏற்றவில்லை. இது சம்பந்தமாக அந்த வங்கியின் முகவரிக்கு எழுதிய கடிதங்கள், மின்னஞ்சல்கள் விழலுக்கு இறைத்த நீராகவே போய் விட்டன. ஊருக்கு செல்லும் போது பாஸ்புக்கைக் கொடுத்து மட்டுமே எனது கணக்கில் உள்ள பணத்தை தெரிந்து கொள்ள முடிகின்றது. அந்த கிளையில் இன்டர்நெட் பேங்கிங் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனது கேள்வி... NRE வங்கிக் கணக்குக்கு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ரிப்போர்ட் அனுப்ப வேண்டும் என்ற முறை உள்ளதா? எனது மின்னஞ்சலைக் கொடுத்தும் அதற்கு அனுப்பவும் மறுக்கின்றனர்.. இதற்கு என்ன செய்யலாம்? யாராவது ஐடியானந்தாக்கள் உதவுங்கள்... :)

கலவை 5
சமீபத்தில் பதிவர் அதிஷாவின் சகோதரி மகள்களுக்கு கோவை மருதமலையில் மொட்டை அடித்து, காது குத்தப்பட்டது. தாய் மாமா மடியில் அமர வைத்து காது குத்துவது மரபு... அதே போல் தாய் மாமாவுக்கு துணை மொட்டை அடிப்பதும் வழக்கம்... ஆனால் அதிஷா மொட்டைக்கு டிமிக்கு கொடுத்து விட்டு, மொக்கைப் போட்டுக் கொண்டு இருக்கிறான்.

எனவே அதிஷாவிற்கு பதிலாக இன்னொரு தாய்மாமா தமிழ் பிரியன் நேற்றுமெக்காவில் போட்ட மொட்டை... நல்லா இருக்கா பாருங்க... சந்தனம் தான் கிடைக்கலை... டிசம்பரில் ஊருக்கு வருவதற்குள் முடி வளர்ந்து விடும் தானே?.... ;)))

Sunday, September 14, 2008

அலசல் : மின் வெட்டு, ஆற்காடு,கூடங்குளம்... இன்ன பிற



“மின் வெட்டுப் பற்றி ஆற்காட்டாரிடம் மட்டும் கேட்காதீர்கள். ஏனெனில் அவருக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது” “தி.மு.க. அடுத்து ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் போனால் அதற்கு முக்கியமான காரணம் ஆற்காட்டார் தான்”.......

இவை இரண்டும் தமிழக அரசியலில் கேலியாக பேசப்பட்ட விடயங்கள் என்றாலும், இதில் நிறைய உண்மைகள் இருப்பதாகவே படுகின்றது... அரசியலை விட்டுவிட்டு இந்த பிரச்சினையின் ஆழத்தை ஆராயலாம்.

தமிழகம் முழுவதும் மின் பற்றாக்குறை தலைவிரித்தாடுகின்றது. தினசரி அறிவிக்கப்பட்ட மின் வெட்டு, அறிவிக்கப்படாத மின் வெட்டு என ஏதேதோ காரணங்களைச் சொல்லி தினசரி பல மணி நேரம் மின்சாரம் நிறுத்தப்படுகின்றது. இதை ஒரு வித்தியாசமான பார்வையில் பார்க்கலாம்.... :)

தமிழகம் முழுவதும் உள்ள மின் தேவை சுமார் 10,000 மெகாவாட்டாக உள்ளது. இது வருடம் தோறும் 400 முதல் 600 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது அடுத்தடுத்த வரக் கூடிய ஆண்டுகளில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரம் படிப்படியாக உயர்ந்து வருகின்றது. முன்பெல்லாம் மின்சாரம் இருக்கும் வீடுகள் அபூர்வமாக இருந்தது. பின்னர் டீவி, பிரிட்ஜ், வாசிங் மெசின் என்று தேவைகள் அதிகமாகி விட்டன.

இரண்டு குண்டு பல்புகளும், ஒரு பேனும் இருந்த வீடுகளில் இப்போது நான்கு டியூப் லைட், இரண்டு பேன், ஒரு பிரிட்ஜ், ஒரு வாசிங் மெசின் உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் அனைத்து வீடுகளும் இது போன்ற பொருட்கள் கட்டாயமாகி விடும். அதே போல் குளிர்சாதன பெட்டிகளும் இப்போது சகஜமாகி வருகின்றன.

இவ்வாறு மின் தேவை மிகவும் அதிகமாகி வரும் வேளையில், மின் உற்பத்தியின் அளவும் அதிகரிக்க வேண்டும்.அதிகபட்ச மின் உற்பத்தியின் போது மின் வாரிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 5,500 மெகாவாட் மின்சாரமும், தனியார் மின் உற்பத்தி மூலம் 1,200 மெகாவாட்டும், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 2,800 மெகாவாட்டும், இதர உற்பத்தி மூலம் 500 மெகாவாட்டும் கிடைக்கும். இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள தனியார் காற்றாலைகள் மூலம் 3,600 மெகாவாட் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இது இந்த ஆண்டின் தமிழகத்தின் முழு தேவையையும் பூர்த்தி செய்ய போதுமானது.

ஆனால் இதில் குறைவு ஏற்படும் போது தான் பிரச்சினைகள் உருவாகின்றன. நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் உருவாக்கப்படும் மின்சாரத்திற்கு அதிகமான நீர் அணைகளில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும். பருவ மழைகள் பொய்த்துப் போவதால் குறைவு ஏற்படும். அதே போல் மத்திய தொகுப்பில் இருந்து கிடைக்கும் மின்சாரமும் உற்பத்தியைப் பொறுத்து மாறுபடும். நெய்வேலி அனல் மின் நிலையத்திற்கு நிலக்கரி கிடைக்கவில்லையெனில் மத்திய தொகுப்பில் இருந்து நமக்கு மின்சாரம் கிடைக்காது. அதே போல் காற்று வீசுவதும் குறைந்து விட்டாலும் மின்சாரம் கிடைக்காது. இதனால் தமிழகத்திற்கு 20 முதல் 40 சதம் வரை மின்தட்டுப்பாடு ஏற்படும்.

சரி இந்த ஆண்டு வெயில் காலம் முடிந்து விட்டது. அணைகளும் நிரம்புகின்றன. காற்றும் வீசுவதால் காற்றாலைகள் மூலம் மின்சாரம் கிடைக்கின்றது. இனி அனைவரும் மின் பற்றாக்குறையை மறந்து விடப் போகின்றோம்.... மீண்டும் அடுத்த முறை மின் வெட்டு வரும் போது ‘குய்யோ! ‘முறையோ’ என கத்துவோம்.
அடுத்த ஆண்டு இந்த பிரச்சினையில் தீவிரம் அதிகமாகும்... 2 கோடி மின் நுகர்வோர் உள்ளனர். தொழிற்சாலைகள் பெருகி விட்டன. மின்சாரம் இல்லையென்றால் எந்த தொழிலும் நடக்காது என்ற நிலை வந்து விட்டது. முக்கியமாக சின்னத்திரை சீரியல்கள் பார்த்து குடும்பப் பெண்கள் கண்ணீர் வடிக்கும் அளவில் குறைவு ஏற்ப்பட்டு விடும்.

அரசு வைக்கும் தீர்வுகளும், குறைபாடுகளும்

மின் பற்றாக்குறை ஏற்படும் போது மின் வாரிய அமைச்சரும், மற்ற அரசு அதிகாரிகளும் சொன்ன சால்ஜாப்பு அணைகளில் நீர் இல்லை, காற்று இல்லை, நிலக்கரி இல்லை என்பதாகும். அடுத்த ஆண்டும் இதே நிலை ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? (அப்படி ஏற்படாமல் இருக்க பிரார்த்திப்போம்) அப்போது என்ன செய்வது?

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமைச் செயலர் திரிபாதி 2009 ஆரம்பத்தில் கூடங்குளம் அணு உலை தனது முதல் மின் உற்பத்தியை ஆரம்பிக்கும் என்றும் இரண்டாம் உற்பத்தி டிசம்பரில் தொடங்கும் என்றும்,அதன் மூலம் சுமார் 900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். ஏதோ கொல்லன் பட்டறையில் அடுப்பு ரெடியாகி விடும் என்பது போல் கூறி விட்டு சென்று விட்டார். 2011 ல் கூட கூடங்குளம் அணு உலை மின் உற்பத்தியை ஆரம்பிக்க இயலாது என்பது அங்கிருந்து நண்பர்கள் வாயிலாக வரும் தகவல்.

தமிழக அரசும் தனியாக ஒரு அமைச்சர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்கள் கொண்ட ஒரு குழுவை அமைத்து அவர்களிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளது. அதிகாரிகள் சொத்தை ரிப்போர்ட்களை தாக்கல் செய்து விட்டு குழு அக்வாபீனா குடித்து விட்டு கலைந்து போகப் போகின்றது.

நாம் கொடுக்கும் தீர்வுகள்:

தீர்வு 1 :
நீர் மின்சார உற்பத்தியில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு முழு வீச்சில் அதை சரி செய்ய வேண்டும். அதிக நீர் வெளியேற்றம் உள்ள இடங்களில் மேலும் நீர் மின் உற்பத்தி நிலையங்களை ஏற்படுத்தி நீர் மின்சார உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதை ஒரு குழு எப்போதும் கண்காணிக்க வேண்டும்.

தீர்வு 2:


நெய்வேலி அனல் மின் நிலையத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் அதிக தேவையுடைய மாநிலமான தமிழகத்திற்குள்ளேயே பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். அல்லது NLC யை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்.

தீர்வு 3:
காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை, ஊக்குவிக்க வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த தொழில் முனைவோரிடம் அதற்கு ஆர்வமூட்ட வேண்டும். காற்றாலைகள் மூலம் அதிகபட்சமாக ஒரு காற்றாடி மூலம் 1.5 மெகாவாட் மின்சாரம் எடுக்கப்படுகின்றது. (2 மெகாவாட் எடுக்க அமைக்கப்பட்ட அம்மாவின் காற்றாடி இறக்கை உடைந்து வெடித்து சிதறியது தனிக்கதை)அதற்கு குறைந்தது 3 ஏக்கர் நிலமும், (லஞ்சமெல்லாம் சேர்த்து) சுமார் 1 கோடி பணமும் தேவைப்படலாம். பராமரிப்பு பணி வரும் போதும் அதை தாங்கும் ஆற்றல் வேண்டும். அவ்வாறு இதில் இறங்க ஆர்வமுள்ளவர்களுக்கு அரசு சகல உதவிகளும் செய்ய வேண்டும். இப்போது இருக்கும் 3500 மெகாவாட் காற்றாலை மின்சாரத்திற்கு சுமார் 10,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டிருக்கும். இதே போல் சுமார் 4000 கோடி முதலீட்டில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை நிறுவலாம். இதன் மூலம் சுமார் 3000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடியும். (லஞ்ச ஊழல் சேர்க்காமல்)



தீர்வு 4
மேலே உள்ளவை அனைத்தும் காரண காரியங்களைக் கொண்டு மாறக் கூடியவை. அணையில் நீர் இல்லையெனில், நிலக்கரி இல்லையெனில், காற்று இல்லையெனில் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும். ஆனால் தொடந்து மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவல்ல விடயம் தான் அணு மின்சாரம். கூடங்குளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பல கோடி ரூபாய்களை முழுங்கி விட்டுஅணு மின்சாரம் தயாரிப்பதற்கான அணு உலை கட்டுமானப் பணி நடைபெற்று வருகின்றது.

சம்சாரம் அது மின்சாரத்தில் விசு சொல்வார்... படித்தான்... படிக்கிறான்... படித்துக் கொண்டே இருப்பான் என்று. அதே போல் தான்... எப்போது மின் உற்பத்தி ஆரம்பமாகும் என்று தெரியாது. ஆனால் விரைவில் நடக்கும் என சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்பார்கள்... :( இந்த லட்சணத்தில் மேற்கொண்டு நான்கு அணு உலைகள் அமைக்க ஏற்பாடு நடக்கின்றதாம்... கமிஷன் அதிகமா கிடைக்கும் போல இருக்கு... என்ன கொடும இது..

2011 ல் அணு உலை தயாராகும் போது, ‘அணு உலை கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகி விட்டன. இது ISO (உலக தரக் கட்டுப்பாடு) தரத்தில் இல்லை. எனவே இங்கு அணு மின்சாரம் தயாரிக்க இயலாது’ என்று சொன்னாலும் சொல்ல வாய்ப்பு உள்ளது. எனவே தமிழகத்தின் அவசர தேவையைக் கருத்தில் கொண்டு அங்கு உடனடியாக மின்சாரம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை செய்ய வேண்டும். தூங்கிக் கொண்டு இருக்கும் வேலைகளை தட்டி எழுப்ப வேண்டிய நேரமிது.

கூடங்குளம் அணு மின் நிலையமும் கடலுக்கு மிக அருகில் இருப்பதால் சுனாமி, அல்லது புயல் ஏற்படும் நேரங்களில் உற்பத்தியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும்.


இன்னும் 10 ஆண்டுகளில் தமிழகத்தின் மின் தேவை இரண்டு மடங்காக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் இன்னும் அதிகப்படியான மின் உற்பத்திக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்...

இல்லையேல் ஆற்காடு வந்தாலும், அம்மா வந்தாலும், ஆட்டுக்குட்டி வந்தாலும் பனை ஓலை விசிறியோடு திண்ணையில் உட்கார வேண்டியது தான்


மேலதிக தகவல்கள்....
1. 2007 ல் ஸ்பெயின் 3520 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை நிறுவியுள்ளது.
2. ஐரோப்பாவில் 90 மில்லியன் மக்களின் மின் தேவையை காற்றாலைகள் பூர்த்தி செய்கின்றன.
3. 2007 ல் அமெரிக்கா 5240 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை நிறுவியுள்ளது.
4. இந்தியா முழுவதும் 2007 ல்1,730 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை நிறுவப்பட்டுள்ளன.
5. 2007 ல் சீனா3450 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலைகளை நிறுவியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 150 சதவீதம் அதிகம்