Monday, March 30, 2009

ஏது இந்த மனித நேய மக்கள் கட்சி - வரலாற்று அலசல்

மனித நேய மக்கள் கட்சி! இன்று செய்திகளில் அடிபட்டுக் கொண்டு இருக்கும் ஒரு கட்சி. திமுக கூட்டணியில் ஒரு மக்களைவை தொகுதி கொடுக்கப்பட்டும் கண்டிப்பாக 2 மக்களவை, ஒரு மாநிலங்களவை வேண்டும் என்று பேச்சு வார்த்தையில் இருக்கின்றது என்ற செய்திகளைப் பார்க்க முடிகின்றது. இந்த பெயரையே பலரும் கேள்விப்படாத நிலையில் இவர்களுக்கு எப்படி 2 சீட் ஒதுக்கித் தர முடியும்..அதுவும் திமுக கூட்ட்ணியில் என்ற கேள்விகள் பரவலாக எழுகின்றன. மனித நேய மக்கள் கட்சி பற்றிய ஒரு அறிமுகமே இப்பதிவு.

இதற்கு முதலில் கொஞ்சமா ப்ளாஸ்பேக்களைப் பார்த்தால் புரியும். சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லிம் லீக் தான் முஸ்லிம்களின் ஏகபோக பிரதிநிதிகளாக இருந்தனர். காயிதே மில்லத் மறைவுக்குப் பிறகு நாற்காலிக்காக அடித்துக் கொண்ட சண்டையில் முஸ்லிம் லீக் சிதறுண்டு போனது. அப்துல் சமது, அப்துல் லத்தீப் என பிற கழகங்களில் மறைவில் பதவி சுகம் அனுபவித்தனர். அவர்களுக்குப் பிறகு இன்னும் பல பிரிவுகளாக பிரிந்து சென்று விட்டனர். இது முஸ்லிம் லீக்கின் கதை.

1990 வரை முஸ்லிம்களிடன் அரசியல் விழிப்புணர்வு என்பதே சுத்தமாக இல்லை எனலாம். 1992 பாபரி மஸ்ஜித் இடிப்புக்குப் பிறகு இந்தியா முழுவதும் முஸ்லிம்களின் மீது வன்முறைகள் கட்டவிழ்ந்து கிடந்தது. தமிழகத்திலும் இதன் தாக்கம் இருந்தது. முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் என்னும் அளவுக்கு நிலைமை முற்றியது. நிறைய பேர் தீவிரவாத குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டனர். இச்சூழலில் முஸ்லிம் லீக் சமுதாய மக்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தங்கள் நாற்காலிகளைக் காப்பாற்றிக் கொள்ள மட்டும் விழிப்புடன் இருந்தன. இதனால் மக்கள் முழுமையாக முஸ்லிம் லீக்கள் மீது விரக்தி அடைந்தனர்.

இந்த நேரத்தில் தான் சில இஸ்லாமிய தலைவர்கள் முஸ்லிம் அமைப்பு ஒன்றை ஏற்ப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி முஸ்லிம் (இந்து முண்ணனி போல) என்ற அமைப்பை நிறுவ முயற்சித்தனர். அதில் இன்றைய PJ வும் இருந்தார். முஸ்லிம்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்ப்படுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டும், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவ்வமைப்பு அதற்கு சிதம்பரத்தைச் சேர்ந்த ஒருவரையும் தலைவராக தேர்தெடுத்தனர். அப்போதைய போலிஸ் கெடுபிடியில் பயந்து போய் அத்தலைவர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடி ஒளிந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து PJ உள்ளிட்டோர் தொடர்ந்து இந்த அமைப்பை நடத்தி வந்தனர்.

அதன் பின்னர் மீண்டும் 1995 ல் புதிய அணி ஒன்று உருவானது. குணங்குடி ஹனிபா, பி.ஜெயினுலாபுதீன்,அலாவுதீன்,உள்ளிட்ட தலைவர்கள் கூடி புதிய அமைப்பு நிறுவ வேண்டும் என்று தீர்மானித்தனர். ஹைதர் அலி, ஜவாஹிருல்லாஹ் போண்றோரும் இதில் அப்போது இணைந்தனர். குணங்குடி ஹனிபாவை நிறைய பேருக்கு தெரியாது. தமிழ்க்குடி தாங்கி அய்யா டாக்டர் ராமதாஸ் அரசியல் கத்துக்குட்டியாக இருந்த போது உடன் இருந்தவர். பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக இருந்தவர் என்றால் பார்த்துக் கொள்ளவும். ( மருத்துவர் அய்யா குணங்குடி ஹனிபா, பழனி பாபா எல்லாரையும் மறந்து ஏப்பம் விட்டது கிளைக் கதை). ஜவாஹிருல்லாஹ் சிமி அமைப்பில் மும்முரமாக இருந்தவர். அந்நேரத்தில் பாக்கர் சிறையில் இருந்தார்.

அவ்வமைப்பிற்கு என்ன பெயர் சூட்டுவது என்று ஆலோசித்த போது குணங்குடி ஹனிபா தாம் பதிவு செய்து வீணாக இருந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரைக் கொடுத்து உதவினார். 1995 ஆகஸ்ட்டில் த.மு.மு.க உருவானது. அதை அடுத்து மக்களிடையே தமுமுகவை எடுத்துச் செல்லும் முயற்சி தீவிரமாக அரங்கேறியது. ஏற்கனவே தவ்ஹீத் இஸ்லாமிய பிரச்சாரத்தின் மூலம் மக்களிடம் பிரபலமாக இருந்த PJ தமுமுகவின் அமைப்பாளராகவும் இருந்தார். அவர் தமுமுக பிரச்சாரப் பணிக்கு முழுவதுமாக பயன்படுத்தப்பட்டார். தமிழகம் முழுவதும் ஏற்கனவே இருந்த தவ்ஹீத் அமைப்பினர் தமுமுகவில் முழு மூச்சாக இறங்கினர்.

1997 ல்கோவையில் கலவரம் ஏற்ப்பட்டது. அதில் 18 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் அவர்களின் சொத்துக்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

தமிழகம் முழுவதும் முஸ்லிம்களிடம் அரசியல் விழிப்புணர்வு பரவ ஆரம்பித்தது. 1999 ல் சென்னை மெரினா கடற்கரையில் வாழ்வுரிமை மாநாடு என்ற ஒரு மாநாடு தமுமுக வால் நடத்தப்பட்டது. இதில் செல்வி.ஜெயலலிதா அவர்களும் கலந்து கொண்டது மக்களை தமுமுகவினை திரும்பிப் பார்க்க வைத்தது.

2003 ல் தஞ்சையில் முஸ்லிம்களில் பெரும் பேரணி தமுமுகவால் நடத்தப்பட்டது. பெருந்திரளான முஸ்லிம்கள் இதில் பங்கெடுத்தனர். இந்நிலையில் PJ தனது தவ்ஹீத் பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண்டு வந்ததால் புரோகித அடிப்படையிலான முஸ்லிம்கள் தமுமுகவை ஒரு சார்பான அமைப்பாக பார்க்கும் நிலை இருந்தது. இது தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாஹ் மற்றும் பொதுச் செயலாளர் ஹைதர் அலி ஆகியோருக்கு உறுத்தலாக இருந்தது.

இதனை அடுத்து சிலபல டிராமாக்களுக்கு (பெருங்கதை அது..) PJ விலகிச் செல்ல தமுமுகவில் சில சுணக்கம் நிலவியது. 2006 தேர்தலில் ஒரு புதிய சூழல் நிலவியது. அதாவது முஸ்லிம்களிடம் தனி இட ஒதுக்கீடு என்ற கோஷம் வலுவாக இருந்தது. இது குறித்து தமுமுக, TNTJ உள்ளிட்டவை மக்களை பிரச்சாரங்கள் மூலம் தெளிவாக்கி வைத்து இருந்தனர். TNTJ அம்மா ஏற்படுத்திய இட ஒதுக்கீடு ஆராயும் ஆணையத்திற்காக அம்மாவிடம் தஞ்சம் புகுந்தது.

தமுமுகவிற்கு ஜெயலலிதா மீது நம்பிக்கை இல்லை. ஏனெனில் 1999 வாழ்வுரிமை மாநாட்டில் அவர் “இனி BJP உடன் எப்போதும் கூட்டு வைக்க மாட்டேன்” என்று மெரினாவில் வைத்து கூறி இருந்தார். ஆனால் மீண்டும் BJP யுடன் கூட்டு சேர்ந்து விட்டிருந்தார். எனவே தமுமுக திமுக அணியுடன் சேர்ந்தது. அதன் தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவிற்கு கிடைக்க பாடுபட்டனர்.

இத் தேர்தலிலேயே தமுமுக போட்டியிட முயற்சி செய்தது. வாணியம்பாடி, மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளில் போட்டியிட எத்தனித்தது. ஆனால் கடைசி நேரக் குளறுபடியில் வாணியம்பாடி கைவிட்டுப் போனது. பாளையங்கோட்டையில் தமுமுக சார்பில் துபாயைச் சேர்ந்த பல ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட (உண்மை இறைவனுக்குத் தெரியும்) ஒருவரை நிறுத்த முயற்சி செய்தனர். இதனால் ஏற்ப்பட்ட குழப்பத்தில் கோபமடைந்த கலைஞர் திமுகவைச் சேர்ந்த மைதீன்கானை வேட்பாளராக அறிவித்தார். அவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

MLA ஐப் பறித்துக் கொண்டாலும் தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தை தமுமுகவிற்கு கலைஞர் வழங்கினார். தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அப்பதவிக்கு வந்தார். இந்து அறநிலையைத் துறையைப் போல் வக்ஃப் வாரியமும் பல கோடி சொத்துக்களை பராமரிக்கக் கூடியது என்பதால் தமுமுகவின் வளர்ச்சிக்கு தடை ஏதுமில்லாமல் போனது. மசூதிகளின் நிர்வாகிகளையே கண்காணிக்கும் அதிகாரம் உள்ள அமைப்பு என்பதால் சுலபமாக முஸ்லிம்களின் பள்ளிவாசல்களுக்கு உள்ளும் தமுமுக நுழைந்தது.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்ததும் தமுமுகவின் இடைவிடாத முயற்சிகளுக்கு கிடைத்த பலன் என்று சொல்லலாம்.

சமீபத்தில் பிப்ரவரி 2009 ல் அரசியலில் முழு மூச்சாக ஈடுபடும் வகையில் மனித நேய மக்கள் கட்சி என்ற புதிய அமைப்பை தமுமுக நிறுவியது. தாம்பரத்தில் திமுகவின் ஆசியுடன் நடந்த பொதுக் கூட்டத்தில் இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கபட்ட வேகத்திலேயே குறைந்தது இரண்டு தொகுதிகள் வேண்டும் என திமுகவிடம் பேச்சு வார்த்தை உள்ளது.

கொசுறு செய்தி : ஏன் மனித நேய மக்கள் கட்சி??? தமுமுக என்ற பெயரே பரவலாக மக்களிடம் அறிமுகமானது தானே என்ற கேள்வி உள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை பதிந்து வைத்திருந்த குணங்குடி ஹனிபா கடந்த 12 ஆண்டுகளாக தீவிரவாத வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். என்றாக இருந்தாலும் தமுமுக என்ற பெயருக்கு ஆபத்து உள்ளது. எனவே இச்சிக்கலைப் போக்க மனித நேய மக்கள் கட்சி என்ற பெயரைப் பதிவு செய்துள்ளனர்.



கடைசிச் செய்தி : திமுக ஒன்றுக்கு மேல் எல்லாம் தர முடியாது என்று திட்டவட்டமாக இருப்பதாகவும், மனித நேய மக்கள் கட்சி இரண்டு கண்டிப்பாக வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியாக ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களை என்று டீல் முடிய வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. அம்மாவிடம் சரணடையுமா என தீர்மானமாகத் தெரியவில்லை.

டிஸ்கி : மனித நேய மக்கள் கட்சிக்கு சீட் கிடைக்கும் பட்சத்தில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டால் அதன் வெற்றி வாய்ப்புகள் குறித்தும் செய்ய வேண்டியவை, வேண்டாதவை குறித்தும் விளக்கமாக பதிவு எழுதலாம்..

அப்படியே &&&&&&&&&&&&&& கிளிக் பண்ணிப் பாருங்க.

Friday, March 27, 2009

விழித்துக் கொண்ட கலைஞரும், அழியும் மாவட்ட தி.மு.க வும்

அரசியல் விமர்சனக் கட்டுரை

அரசியல்வாதிகள் என்றாலே ஒரு கிரேஸ் இருக்கும் ஒரு வட்டமாகவோ, ஒன்றியமாகவோ, கிளைச் செயலாளராகவோ இருந்தால் கூட தமது கெத்தைக் காட்ட முற்படுவார்கள். கட்சிக்காரர்களும், மக்களும் அவர்கள் பின்னால் கூட்டம் கூட்டமாகச் செல்வதைக் காணலாம். ஆனால் ஒரு மாவட்டத்தின் திமுக செயலாளரைப் பார்த்தாலே மக்கள் பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடுவதும் நிகழ்கின்றது... அழிந்து கொண்டு இருக்கும் தேனி மாவட்ட திமுகவைப் பற்றிய ஒரு கட்டுரை...

தமிழக அரசியலில் அடுக்கடுக்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன. எதிர்பார்த்தது போலவே ஐயா அம்மாவிடம் சென்று விட, விஜயகாந்த் தனித்து (வேறு வழி இல்லாததால்) போட்டியிடுகின்றார். இனி தொகுதி பங்கீடுகள் ஆரம்பமாகும். தேசிய அளவில் காங்கிரஸை மாநிலக் கட்சிகள் அலைக்கழிக்க வைப்பதாக தோன்றினாலும் அதுவும் ஒருவகையில் நன்மையில் முடியவே வாய்ப்புள்ளது. இவையெல்லாம் ஒரு புறம் இருக்க தேனி மாவட்டத்தைப் பற்றிய ஒரு சிறு அலசலே இந்த பதிவு.

தேனி மாவட்டம்...அமைதியான மேற்கு தொடர்ச்சி மலையில் அரவணைப்பில் இருக்கும் டெடரான மாவட்டம். எப்போதும் எங்கும் எதுவும் நடக்கலாம் என்பது தான் அதன் ஸ்பெஷாலிட்டி. அனைத்து சமூகமும் இணைந்து வாழும் ஒரு சிறப்புமிக்க மாவட்டம். எம் ஜி ஆர் 1984 ல் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் தனது மேலும் கவனிப்புக்கு உள்ளானது. அப்போது அவர் சுமார் 32 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

ஜெயலலிதா எம் ஜி ஆர் மறைவுக்குப் பிறகு 1989 ல் போடி தொகுதியைத் தேர்தெடுத்தார். வெற்றியும் பெற்றார். 2006 ல் ஆண்டிபட்டியில் நின்று வெற்றி பெற்றார். பெரியகுளம் தொகுதியில் நின்று வெற்றி பெற்ற ஓ.பன்னீர் செல்வத்தை ஜெ. முதலமைச்சர் ஆக்கி அழகு பார்த்தது மற்றோரு சிறப்பு. தினகரன் தனது சொந்த தொகுதியாக நினைத்து இங்கேயே இருந்தது வரலாறு.

வெளியே பார்ப்பதற்கு அதிமுக கோட்டையாக காட்சியளித்தாலும் தேனி மாவட்டத்தை உன்னிப்பாகப் பார்த்தால் திமுகவின் ஓட்டு வங்கி சிறப்பானதாகவே இருக்கக் கூடியது. அதிமுகவின் அசுர பலம் எப்போதுமே தேனி மாவட்டத்தில் காட்டப்படும். எம் ஜி ஆருக்குப் பிறகு, ஜெயலலிதா, ஓ.பன்னீர் செல்வம், தினகரன் என்று என்றுமே முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பதால் பணம் கொழிக்கும் என்பதை சொல்ல வேண்டிய அவசியமில்லை.

இவ்வளவு போட்டி நிறைந்த தேனி தொகுதியில் அவ்வப்போது அதிமுகவும். திமுகவும் அதிர்ச்சி வைத்தியமளிக்கும். 1984 ல் எம் ஜி ஆர் வென்ற ஆண்டிபட்டியில் ஜெ அல்லது ஜானகியால் அடுத்த 1989 ல் வெற்றி பெற முடியவில்லை.

2006 ல் நட்ந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வென்று ஆட்சி அமைத்தாலும் தேனி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 5 தொகுதிகளை அதிமுக வென்றது. போடி தொகுதியில் மட்டும் வேட்பாளர் தேர்வின் குறை காரணமாக வெறும் 800+ஓட்டுகளில் தோல்வியைத் தழுவியது. அதே நேரம் 2004 தேர்தலில் அதிமுகவின் பண முதலை தினகரனை காங்கிரஸின் லாட்டரி புகழ் ஹாரூன் தோற்கடித்து இருந்தார். (அப்போது ஜெ. அழிவுக் கூட்டணியான பாஜகவுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது)



சரி இனி பதிவின் மேட்டருக்கு வரலாம். இவ்வளவு தூரம் அதிமுக கோட்டையாக கருதிக் கொண்டு இருக்கும் தேனி மாவட்டத்தை காக்க திமுக தவறியே வந்து இருக்கின்றது. ஒவ்வொரு முறையும் வாய்ப்பு கிடைக்கும் போது தனது உட்கட்சி தவறுகளால் இம்மாவட்டத்தை கை விட்டிருக்கின்றது. 2004 நாடாளுமன்ற தேர்தலில் கூட கட்டாயம் அதிமுக தான் வெற்றி பெற்று விடும் என்று பெரியகுளம் பாராளுமன்றத் தொகுதியை காங்கிரஸிற்கு விட்டுக் கொடுத்தது. ஆனால் பெரியகுளம்,கம்பம்,சின்னமனூர், பாளையம்,போடி பகுதி முஸ்லிம்களின் ஓட்டு பாஜவுக்கு எதிராக திரும்ப ஹாரூன் அதிர்ஷ்டவசமாக வெற்றி பெற்று விட்டார். தின்கரனிடன் தோற்று விடுவோம் என்று ஹாரூனே தனது பணப்பையை சுருக்கிக் கொண்டு நடையைக் கட்டி இருந்தார். இப்போதும் காங்கிரஸிற்கே விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாகவே தெரிகின்றது.

மாவட்ட அரசியலில் முக்கிய இடம் மாவட்ட செயலாளருக்கானது. தேனி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக மாவட்ட செயலாளராக இருப்பவர் எல்.மூக்கையா. இரண்டு முறை பெரியகுளம் தொகுதியில் எம் எல் ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அதே போல் கம்பம் பகுதியில் செல்வாக்கு மிக்கவர் கம்பம் செல்வேந்திரன். பொதுவாக தேனி மாவட்டத்தில் ஜாதி அரசியல் என்றுமே முக்கியத்துவம் வகிக்கும். அந்த அடிப்படையிலேயே பொறுப்புகளிலும் நியமிக்கப்படுகின்றனர்.

1989 ல் அதிமுக உடைந்து இருந்த நேரத்தில் திமுகவுக்கு ஆதரவான சூழலில் பெரியகுளம் தொகுதியில் மூக்கையா வெற்றி பெற்றார். அப்போது பெரியகுளத்தில் காங்கிரஸ் போட்டியிட்டது. 6 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதை அடுத்து 1991 ல் ராஜீவ் அலையில் 43 ஆயிரம் ஓட்டுகளில் தோல்வியைத் தழுவினார். மீண்டும் 1996 ல் 32 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் பெரியகுளத்தை அதிமுக, ஊர் பேர் தெரியாத சென்னை வாசிக்கு (முஸ்லிம் லீக் சார்பாக இரட்டை இலையில்) கொடுத்தது இவரை ஜெயிக்க வைத்தது.

இரண்டு ஆண்டுகளே 1991 ல் முதல் முறை எம் எல் ஏ வாக இருந்ததால் மக்களால் இவரைக் கணிக்க இயலவில்லை. 1996 ல் இருந்து 2001 வரை 5 ஆண்டுகள் எம் எல் ஏ வாக இருந்த போது தான் கட்சியில் அவரது வளர்ச்சியும், தொகுதி மக்களிடம் படுதோல்வியும் ஆரம்பமானது.

மீண்டும் 2001 ல் தேர்தல் வர தனது சொந்த ஊர் உள்ள பெரியகுளம் தொகுதியை விட்டுவிட்டு தேனிக்கு தாவினார். ஏனெனில் அப்போது பெரியகுளம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் அதிமுக சார்பாக போட்டியிட்டார். ஏற்கனவே பெரியகுளம் நகரசபை தலைவராக அமோக வெற்றி பெற்று மக்களிடம் நல்ல பெயர் வாங்கி இருந்த அவரை எதிர்ப்பது கடினமான காரியமாக இருந்தது. ஆனால் தேனியிலும் படுதோல்வி. 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

இதில் இன்னொரு ருசிகரமான நிகழ்ச்சியையும் குறிப்பிடலாம். ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சராக இருந்த நேரம். அவர் அதற்கு முன் சேர்மனாக இருந்த பெரியகுளம் நகரசபை சேர்மன் பதவிக்கு தேர்தல் (உள்ளாட்சி) வந்தது. முதலமைச்சர் அமர்ந்த இருந்த இருக்கை என்பதால் அதை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என அதிமுக முயற்சி செய்தது. திமுக சார்பில் முகமது இலியாஸ் என்பவர் போட்டியிட்டார். ருசிகரமாக திமுகவே ஜெயித்து அதிமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது. கலைஞர் கூட இதைப் பற்றி சிலாகித்து பேட்டி கொடுத்து இருந்தார்.

பெரியகுளம் தொகுதியிலேயே தனது சொந்த ஊர் இருந்தாலும் இந்த மாவட்ட செயலாளரால் தொகுதி மக்களிடம் நல்ல பெயர் வாங்க இயலவில்லை. 2006 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் பெரியகுளத்தில் போட்டியிட்டு 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். மோசமான ஏற்பாடுகளால் இந்த தேர்தலில் கலைஞர் மேடை வரை வந்து மேடை ஏறிப் பேச இயலாமல் போனதும் நிகழ்ந்தது. சக திமுக நிர்வாகிகளுடன் ஒற்றுமை இல்லாததை இந்நிகழ்ச்சி வெளிச்சம் போட்டுக் காட்டியது.

எம் எல் ஏ வாக இரு முறையும் மாவட்ட செயலாளராக பல ஆண்டுகளும் இருந்தாலும் மக்களிடம் கருமி என்று பெயர் வாங்கி மக்களை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார். டீக்கடையில் டீ குடித்தால் கூட நம்மை காசு கொடுக்க சொல்லி விடுவார் என்பது திமுக காரர்களே அடிக்கும் சோக கமெண்ட். பெரியகுளம் தொகுதியிலேயே செல்வாக்கை இழந்த நிலையில், கம்பம் செல்வேந்திரனிடமும் வீம்புக்கென்றே மோதல் போக்கைக் கடைபிடித்து வருவதும் தேனி மாவட்ட மக்களிடமும், திமுக அபிமானிகளிடமும் ஒரு எரிச்சலையே ஏற்ப்படுத்தியுள்ளது.

ஜாதி அரசியல் முக்கியம் என்றாலும் இன்றைய சூழலில் நிலைமை வேறு விதமாக இருக்கின்றது. குறிப்பாக பெரியகுளம் தொகுதி மாற்றப்பட்டு தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டு விட்டது. இனி அங்கு தாழ்த்தப்பட்டவர்களைத் தவிர யாரும் நிற்க இயலாது. செல்வேந்திரன் Vs மூக்கையா முற்றி விட்டது. இதனால் கடந்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் கூட திமுகவினரின் பணியில் தொய்வே இருந்தது.

இந்நிலையில் கம்பம் தொகுதியில் வெற்றி பெற்று எம் எல் ஏவாக இருக்கும் கம்பம் ராமகிருஷ்ணனை திமுகவுக்கு இழுப்பதில் அழகிரி வெற்றி பெற்று விட்டார். கலைஞரின் மதிமுக உடைப்பில் ஒரு முக்கிய கட்டமாக இதைக் கருதலாம். ஏற்கனவே மதிமுகவின் எல்.கணேசன், செஞ்சியார், மோகன் சபாபதி போன்ற மூத்த தலைவர்களை திமுக இழுத்தது குறிப்பிடத்தக்கது. வைகோ வழக்கம் போல் காட்டுக்கத்து கத்துவது போல் இப்போதும் கத்திக் கொண்டிருக்கின்றார். பாவம்..கேட்கத் தான் யாருமில்லை. அழகிரி மூக்கையா நல்லுறவு காரணமாக இன்னும் பதவியில் ஒட்டிக் கொண்டு இருக்கின்றார். மாவட்ட மக்களின் அதிருப்தி அழகிரியை சென்றடைய வாய்ப்பு இல்லை. அழகிரி தாமே கம்பம் வந்து ராமகிருஷ்ணனை சந்தித்த போது கட்சிக்காரர்கள் அனைவரும் இருக்க, கம்பம் செல்வேந்திரன் மட்டும் மிஸ்ஸிங் ஆனது அங்குள்ள உட்கட்சிப் பூசலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

தொடர்ச்சியான நடவடிக்கைகள் மூலம் தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களை தன் கையில் வைத்து இருக்கும் அழகிரி இன்னும் மக்களின் உணர்வுகளை அறிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். திமுகவின் கோட்டையான தேனி மாவட்டம் சிறிது சிறிதாக அதிமுகவின் கைகளில் கொண்டு சென்று அழுத்தப்பட்டுக் கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்து நிர்வாக சீர்திருத்தங்கள் செய்தால் மட்டுமே, பொறுப்புகளில் மக்கள் ஆதரவு பெற்றவர்களை நியமித்தால் மட்டுமே காக்க இயலும்.

தமிழகம் முழுவதும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நேரம் தேனி மாவட்டத்தில் 5 தொகுதிகளைப் பறி கொடுத்துருந்தோம். போடியில் இழுத்துக்கே பறிச்சிக்கோ வென்று லட்சுமணன் 800+ ஓட்டுகளில் வெற்றி பெற்றார். இனி காலம் நமக்கு சாதகமாக அமைந்து வருகின்றது. ஓ.பன்னீர் செல்வத்தால் தனித் தொகுதியான பெரியகுளத்தில் போட்டியிட இயலாது. வேறு தொகுதிக்கு மாறினாலும் அதை வளப்படுத்த நாளாகும். காலத்தால் கணீந்து இருக்கும் இந்த சாதகத்தைப் பயன்படுத்திக் கொண்டு தேனி மாவட்டத்தைக் கைப்பற்றி மீண்டும் திமுகவிடமே தாருங்கள் என்று அஞ்சா நெஞ்சன் அழகிரி அவர்களிடமும், தமிழினத் த்லைவர் டாக்டர் கலைஞர் அவர்களிடமும் கெஞ்சிக் கேட்டுக் கொள்கின்றோம்.

இவண்
சம்பாதிக்க தெரியாமல் கட்சிக்காகவே உழைக்கும் திமுக வெறியன்
தேனி மாவட்டம்.

கலவையான சிந்தனைகள் - 27-03-2009

பதிவுகளில் கதையாகவோ, கட்டுரையாகவோ எழுதுவதைக் காட்டிலும் கலந்து கட்டி அடிப்பதில் தான் ஒரு மகிழ்ச்சி இருக்கின்றது. நண்பர்களுடன் பகிந்து கொள்வதைப் போன்ற உணர்வைப் பெற முடிகின்றது... ரொம்ப நாளாய் விட்டுப் போன கலவையான சிந்தனைகள் மீண்டும்...

************************************************************

ஊரில் இருந்து வந்ததில் இருந்து இப்ப தான் பதிவுகளை எழுதும் மனநிலைக்கு வந்து இருக்கேன். அதே சூட்டோடு ஒரு பதிவு எழுதினேன். சுவாரஸ்யமான பதிவுகளை எழுதுவது எப்படி? இதுதான் தலைப்பு. ஆனா அதைப் படித்த நம்ம பதிவுலக அண்ணன் ஒருத்தர் இந்த மாதிரி பதிவைப் போட்ட உன் பக்கமே வர மாட்டேன்னு சொல்லிட்டார். ஒரு பேரிளங் காதலர் கூட தல... ஏனிந்த கொல வெறி பதிவை எடிட் பண்ணுங்க என்று சொல்லி விட்டார். எனவே டிராப்ட்டில் போட்டாச்சு... கொஞ்ச நாள் கழிச்சு அது சாதாரணப் பதிவா தெரியும் போது வெளியிடலாம்.

**************************************************************

இரண்டு சிறுகதைகள் யூத் விகடனில் வந்தது மகிழ்ச்சியளிக்கின்றது. விகடன் தனது முகப்பில் அதற்கான சிறு இடத்தையும் கொடுத்து வைத்திருந்தது ஒரு உற்சாகத்தை அளித்தது. நல்லா இருக்கோ இல்லியோ நமக்கே ஒரு அங்கீகாரம் கிடைக்கின்றது எனும் போது மகிழ்ச்சி தானே.எனவே தொடர்ந்து எழுதி இம்சிப்போம்.

**************************************************************

நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக IPL போட்டிக்கு பாதுகாப்பு தர இயலாத காரணத்தால் போட்டிகள் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு பத்திரிக்கையில் வந்த கார்ட்டூன் துணுக்கை சக பதிவர் ஸ்டேடஸில் போட்டு இருந்தார்..
பொது ஜனம் 1 : IPL போட்டிகளை தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றி விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்டதில் இருந்து இரண்டு நாளார் சரியான தூக்கம், சாப்பாடு கூட இல்ல

பொது ஜனம் 2: நாடாளுமன்ற தேர்தல் வருவதால் சரியா பாதுகாப்பு கொடுக்க முடியாது என்பதால் தான் மாத்தி இருக்காங்க

பொது ஜனம் 3 : தேர்தல்ன்னா அரசுக்கு செலவு. IPLன்னா வருமானம் தானே.பேசாம தேர்தலை தென் ஆப்பிரிக்காவுக்கு மாத்திட்டு IPL கிரிக்கெட்டை இந்தியாவில் நடத்தி இருக்கலாம்.

மூலம் : தினமணி

**************************************************************
சமீபத்தில் இங்கு தாயிஃப் இஸ்லாமிய கலாச்சார மையம் சார்பில் தமிழ்,சிங்கள மக்களின் கலாச்சார ஒன்று கூடல் நிகழ்வு நடைபெற்றது. இந்து, புத்த, கிறித்தவ, முஸ்லிம் தமிழ் மற்றும் சிங்களம் பேசக் கூடியவர்கள் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். இஸ்லாம் குறித்த ஒரு அறிமுக உரைக்குப் பின் பலவிதமான போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசளிப்பும் நடைபெற்றது. முகமது லாபிர் உள்ளிட்ட இலங்கையின் தூதரக உயரதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கல்ந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

கயிறு இழுக்கும் போட்டி, உறி அடித்தல், வாலி பால், சாக்கு ஓட்டம், இப்படி பல போட்டிகள் நடந்தன.... திருமணமானவர்கள் Vs திருமணமாகதவர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் திருமணமானவர்களே வெற்றி பெற்றோம். வீடியோ இணைத்துள்ளேன். நான் எங்க இருக்கோம்ன்னு கண்டுபிடிங்க..



http://www.youtube.com/watch?v=4z5oj5B8aFk



**************************************************************
வீட்டில் சினிமா, பாடல்கள், சீரியல் இவைகளுக்கு அனுமதி இல்லை. பாடலைக் கேட்டு டான்ஸ் ஆடினால் மகனுக்கு அடி தான் விழும். அருகில் இருக்கும் அக்கா மகள்கள், எதிர், பக்கத்து வீட்டு சிறுவர்களுடன் விளையாடுவான். மண்ணிலும் தண்ணீரிலும் விளையாடுவது பிடித்தமானது... சில நேரங்களில் ஒரு பாடலை முணுமுணுப்பான்..ரொம்ப நாளாய் புரியவில்லை.. அப்புறம் தான் விளங்கியது.

தாத்தா தாத்தா தண்ணிக்குள்ளே
தவளை ரெண்டும் பொந்துக்குள்ளே
ச்சூச்சூ மாரி ச்சூச்சூ மாரி
கொட்டிக் கிடக்குது ஜாங்கிரி
கொல்லைப் பக்கம் போகாதே
ச்சூச்சூ மாரி ச்சூச்சூ மாரி

மகன் பிற குழந்தைகளுடன் விளையாடும் ring a ring a roses.. வீடியோ
http://ibnujinnah.blogspot.com/2009/03/ring-ring-roses.html

Wednesday, March 25, 2009

யூத் விக்டனின் வந்த சிறுகதை - அப்பாவின் கடன்


காலை வெயில் மெலிதான உஷ்ணத்தை முகத்தின் மீது அடித்துக் கொண்டிருந்தது. சென்னையில் இருந்து இரவு முழுவதும் பிரயாணித்து இருந்தாலும் ஊர் நெருங்க நெருங்க ஏனோ மனம் நிலை இல்லாமல் அலை பாய்ந்து கொண்டு இருந்ததால் தூக்கம் காணாமல் போய் இருந்தது. கைகளும், கால்களும் இயந்திர கதியில் இயங்கி காரை செலுத்திக் கொண்டு இருந்தன.
பெரியகுளத்தைக் கார் கடந்து இருந்தது. இன்னும் அரை மணி நேரத்தில் ஊரை அடைந்து விடலாம். கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. அப்பாவை சென்னைக்கு அழைத்துச் செல்வதற்காக ஊருக்கு வந்தது. இடையில் அப்பா மட்டுமே விசேஷங்களுக்கு சென்று வந்து கொண்டு இருந்தார்... இப்போது மீண்டும்.. அப்பா என்றதுமே கண்கள் பனிக்கின்றன. எப்படிப்பட்ட மனிதன்...!!!

அதோ அந்த மலையின் மீது தானே அந்த பெண்கள் கல்லூரி இருந்தது. மனம் சோகமாக இருந்தாலும் இனம் புரியாத குறுகுறுப்பு எட்டிப் பார்ததது. காரை கல்லூரி பஸ் ஸ்டாப் முன் இருந்த டீக்கடை முன் நிறுத்தினேன். பல தடவைகள் நின்றும், அமர்ந்தும் வெட்டியாய் பொழுதைக் கழித்த டீக்கடை. கடையில் ஏதும் தெரிந்த முகம் இல்லை. காலை வேலையாதலால் சில பெருசுகள் மட்டும் பேசிக் கொண்டு இருந்தன.

எனக்குப் பிடித்த டீயும், வடையும் சொல்லி விட்டு எட்டி நடந்தேன். நண்பர்களுடன் அமர்ந்து கொட்டமடித்த அந்த பேன்ஸி ஸ்டோர் தென்பட்டது.. பெயர் மாறி இருந்தது. வாழ்க்கையின் ஓட்டத்தில் என்னன்னவோ மாறி இருக்கின்றன.

டீ, வடையை முடித்து விட்டு மீண்டும் காரை செலுத்த, SDA பள்ளி அருகில் ஒருவர் தனது மகனை வைத்துக் கொண்டு சைக்கிளில் ஓரமாக வந்து கொண்டு இருந்தார். மீண்டும் அப்பாவின் நினைவு ஆக்கிரமித்தது. ஊரில் இருந்து பெரியகுளத்திற்கும், தேனிக்கும் அப்பாவுடன் பலமுறை இது போல் சைக்கிளிலேயே சென்று இருக்கிறேன்.

அப்பாவுக்கு என் மீது கொள்ளைப் பிரியம். மூத்த மகன்கள் மூவரும், இரண்டு மகள்களும் இருந்தாலும் என் மீதே அவருக்கு விருப்பம் அதிகம். ஏனென்று மட்டும் தெரியவில்லை. கடைசி காலத்தில் கடைக் குட்டியாய் பிறந்ததால் இருக்கலாம்.. சில மாதங்களுக்கு முன் பேசிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.

“என்னால உனக்கு ஒன்னுமே பிரயோசனமில்லைடா”

”என்னப்பா இதெல்லாம்... நீங்க ரொம்ப நல்லவரா வாழ்ந்து இருக்கீங்க... யாரையும் ஏமாத்தலை... துரோகம் பண்ணலை. எங்களை எல்லாம் நல்லவர்களா வளர்த்து இருக்கீங்க..இப்பவும் நிம்மதியா எங்க கூடவே இருக்கீங்க..வேற என்னப்பா வேணும்?”

“இல்லைடா..என்னால் உன்னை நல்லா படிக்க வைக்க முடியலையே... மத்தவனெல்லாம் சரியா படிக்காத போது நீ மட்டும் தான் நல்லா படிச்ச.. உன் ஒருத்தனை மட்டும் கூட என்னால நல்லா படிக்க வைக்க முடியலடா... எனக்கு இதை எப்ப நினைச்சாலும் தாங்க முடியாத மன அழுத்தமா இருக்குடா”

“அப்பா... அதையெல்லாம் நினைக்காதீங்க.. இப்ப நாம எல்லாம் நல்லாதானே இருக்கோம். நல்ல வசதி இருக்கு.. கார்,வீடுன்னு நல்லா இருக்கோம். கவலைப்படாதீங்கப்பா”

ஆனாலும் அப்பாவின் முகத்தில் ஒரு திருப்தியின்மையின் ரேகைகளே தெரிந்தன.

சில நாட்களுக்கு முன் அப்பாவுக்கு உடல் நலமில்லை என்றாகியதும் தனக்குத் தானே புலம்ப ஆரம்பித்து இருந்தார். சுய பச்சாதாபமும், என் மீதான பாசமும் அவரை ஏனோ உருக்கிக் கொண்டு இருந்தது. தனது உயிர் தமது கிராமத்தில் தான் பிரிய வேண்டும் என்று சதா சொல்லிக் கொண்டே இருந்ததால் சொந்த வீட்டுக்கு அனுப்பி இருந்தேன்.

அப்பாவை விட்டு பிரியாமலேயே இருந்து விட்டு, திடீரென பிரிந்த என் நிலையும் நிலை கொள்ளாமலேயே தவித்தது. அப்பாவின் உடல் நிலை மோசம் என்றதும் உடனே கிளம்பிவிட்டேன். பள்ளி இறுதித் தேர்வுகள் நடக்கின்றன என்பதால் மனைவியும், மகளும் சென்னையில்

கார் லெட்சுமிபுரம் தாண்டி கிராமத்துக்கான ஒற்றையடிச் சாலையில் பிரயாணித்துக் கொண்டிருந்தது. நல்ல நீர் வளத்துடன் இருந்த நிலங்கள் காய்ந்து போய் இருந்தது மனதை பிசைந்தது. கார் ஊருக்குள் நுழையும் போது ஊரில் செழிப்பு தெரிந்தது. நிறைய வீடுகள். அவசரமாக பள்ளிக்கு கிளம்பிக் கொண்டு இருக்கும் மாணவ, மாணவிகள்.ஊருக்குள் கார் வந்தாலே காரின் பின்னால் ஓடும் நாட்கள் நினைவுக்கு வந்தது. இன்று பல வீடுகளின் முன்னும் மாருதிகளும், டாட்டா வகைக் கார்களும் அமைதியாக நின்று கொண்டு இருந்தன.

வீட்டின் நுழைவாயிலேயே அத்தை தெரிந்தார். கண்டதும் கண்ணில் டக்கென்று கண்ணீர் கட்டுவது தெரிந்தது. வரவேற்று விட்டு

“அப்பாவின் நிலை மோசமா இருக்கு.. மூணு நாளா ஒன்னும் சரியா சாப்பிடலை. அப்பப்ப பால் மட்டும் தான்..டாக்டரும் வயசாயிடுச்சு..ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லிட்டார்” என்று தனது கவலையை வெளிப்படுத்தினாள்.

அப்பாவை கட்டிலில் பார்க்கும் போதே நெஞ்சை பிசைந்து கொண்டு வந்தது. கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து நலம் விசாரித்தேன். மருமகள், பேத்தியை தேடும் ஏக்கம் தெரிந்தது.

மாலையில் கொஞ்சம் நன்றாக இருந்தார். என் கையாலேயே பால் அருந்தினார். இருவரும் பழைய கதைகளை பேசினோம். நடுங்கும் குரலில் மெதுவாகப் பேசிக் கொண்டு இருந்தார். பேச்சினூடே எனது புதிய திட்டத்தை தெரிவித்தேன். நமது கிராமத்தில் இருக்கும் மேற்கொண்டு படிக்க இயலாத ஏழை மாணாக்கர்களுக்கு அவர்களது மேற்படிப்பை ஊர்ஜிதம் செய்யும் வண்ணம் அமையப் போகும் டிரஸ்ட் குறித்தும், அதன் வருவாய் ஆதாரங்கள் குறித்தும் விளக்கினேன். இனி நம் கிராமத்தில் யாரும் வசதி குறைவால் மேற்கொண்டு படிக்க இயலாமல் போக விட மாட்டேன் என்ற போது அவரது கண்களில் புதிய ஒளி தெரிந்தது. பேச்சில் தெம்பும், முகத்தில் ஒரு புது வித பெருமிதமும் பார்க்க முடிந்தது. அதே மகிழ்ச்சியில் உறங்கச் சென்றோம்.

காலையில் அத்தையின் அழுகுரலே எழுப்பியது... அப்பா நம்மை விட்டு சென்று விட்டார் என்று சொன்னதும் திடுக்கிட்டு சில வினாடிகளில் சகஜ நிலைக்கு வந்தேன். எழுந்து வேகமாக அப்பாவின் படுக்கைக்கு சென்று பார்த்த போது முகத்தில் இரவு கண்ட அதே பூரிப்புடன் இறந்து இருப்பதைக் கண்டதும் ஏனோ அழுகை மட்டும் வரவில்லை.

பின் குறிப்பு : யூத் விகடனில் வெளியிட்டு, விகடன் இணைய தளத்தின் முகப்பிலும் சில தினங்கள் வெளியிட்ட விகடன் குழுமத்திற்கு நன்றி!

Monday, March 23, 2009

தாமிரபரணி, நீச்சல், அருவிகள்....இன்னும் சில

எங்க ஊருக்கு நடுவில் ஒரு ஆறு ஓடும்... நல்ல அகலமான ஆறு... ஆற்றங்கரை முழுவதும் தென்னந்தோப்புகளாக இருக்கும். பள்ளி விடுமுறை நாட்களில் அங்கே போய் ஆற்றில் குளிப்போம்.. வீட்டுக்குப் போகும் போது என்ன டிரிக்ஸ் செஞ்சாலும் பல மணி நேரம் குளிப்பதால் காலெல்லாம் கொரக்கலிச்சு(?)ப் போய் விடும்.. வீட்டுக்கு போகும் போது அதை வைத்து கண்டுபிடிச்சிடுவாங்க... அப்புறமென்னா அடி விழும்..

நமக்கு அடி எல்லாம் பாராட்டு மாதிரி அப்படியே உதிர்த்து விட்டு போய்டுவோம். அப்படி விழுந்த அடியில் மண்டை எல்லாம் உடைந்த கதை எல்லாம் கூட இருக்கு. அந்த அடியால் உண்டான தழும்பை மறைக்க வலது பக்கமாக வகிடு எடுக்கும் பழக்கம் கூட உண்டாச்சுன்னா பார்த்துக்கங்க... சரி மேட்டருக்கு வருகிறேன்.

என்னதான் ஆத்துல குளிச்சுப் பழகி இருந்தாலும் நீச்சல் அடிக்க மட்டும் கத்துக்கவே இல்லை. என்னவோ அது மட்டும் தோணவே இல்லை. கொஞ்சம் பெரிதானதும் கும்பக்கரை அருவிக்கு சைக்கிளிலேயே நண்பர்களுடன் போவோம். அழகான அருவி..கூட்டமும் இருக்காது. ஜாலியாக குளிப்போம். நீச்சல் தெரிந்தவர்கள் எல்லாம் யானை கெஜம், குதிரை கெஜம் எல்லாவற்றிலும் டைவ் அடித்துக் குளிப்பார்கள். நான் அருவிலும், வலுக்குப் பாறைகளில் சறுக்கியும் குளிப்பேன். என் நண்பர்கள் கமலக்கண்ணன், அப்பாஸ் எல்லாரும் நீச்சல் கத்துக் கொடுக்க முயற்சித்து கடைசியில் தோல்வியைத் தழுவினர். என்னை கூட்டிக் கொண்டு சென்றதற்கே எங்க அம்மாவிடம் திட்டு வாங்குவானுக... ;)))

திருமணம் முடிந்து சில நாட்களில் குடும்பத்தினர் அனைவரும் ஒரு முறை கும்பக்கரை அருவிக்குச் சென்றோம். அதற்குப் பிறகு ஒரு முறை மச்சினன் மற்றும் அவரது நண்பர்களுடன் நெல்லை மாவட்டத்தில் உள்ள 6 அருவிகளுக்கு ஒரே நாளில் சென்றோம். காலையில் கிளம்பி ஒரு அருவில் ஒரு மணி நேரக் குளியல், சாப்பாடு, மீண்டும் பயணம், அடுத்த அருவி, மீண்டும் குளியல் மீண்டும் சாப்பாடு... இப்படியே கடைசியில் குற்றாலத்தில் முடிந்தது.

குற்றாலம் எப்பவுமே எனக்கு மகிழ்ச்சியாக இருந்ததில்லை. கூட்டமான கூட்டம் இருக்கும். அருகிலேயே சோப்பு, சீயக்காய் நுரையுடன் ஆட்கள் என்று வெறுப்பாக இருக்கும். லைனில் சென்று உடனே திரும்ப வேண்டும். பெண்களுக்கு குளிக்க
சரியான வசதி இருக்காது.

கும்பக்கரைக்கு சென்றால் தனியாக ஒரு மணி நேரம் அருவியில் நிற்பேன். அது தான் உண்மையான இன்பம்... இதற்காகவே விடுமுறை இல்லாத நாட்களில் செல்வோம்.




தனியாக ஆனந்தக் குளியல்









*********************************************************************
தாமிரபரணிக்கும் நம்ம ஊருக்கும் சம்பந்தமே இல்லை... 10 வருடத்துக்கு முன்னாடி ஒரு தடவை டூர் போய் இருக்கும் போது நெல்லைக்கு அருகில் உள்ள வல்லநாடு அக்ரி காலேஜ் பக்கம் இருக்கும் ஆற்றில் குளித்தது தான் அதற்கிடையேயான தொடர்பு.

அந்த தொடர்பை மீண்டும் புதுப்பிக்கும் பாக்கியம் மீண்டும் சமீபத்தில் கிடைத்தது. சகோதரனுக்கு பிறந்துள்ள மகனைப் பார்க்க நெல்லைக்கு அருகில் உள்ள செய்துங்கநல்லூருக்கு சென்றோம். அந்த ஊரில் தாமிரபரணி ஓடாததால் அங்கிருந்து சாத்தான் குளம், ஸ்ரீவைகுண்டம் செல்லும் வழியில் உள்ள கருங்குளம் சென்றோம். நாங்கள் சென்ற நேரம் நல்ல தண்ணீர் ஓடியது.

நல்லா ஜாலியான குளியல். அப்பாவுடன், சகோதரர்கள், மச்சான் எல்லாம் சென்றோம். நீச்சல் மட்டும் அடிக்க முடியல.. மகனையும், தம்பி மகனையும் ஆற்றில் இறக்கி குளிக்க வைக்கலாம் என்றால் இருவரும் கோரஸாக “அத்தா, இது பச்சத் தண்ணி.. குளிரா இருக்கும். அம்மா வைவாங்க.நாங்க வீட்ல போய் குளிச்சுக்கிறோம்” பயலுக காலைக் கூட ஆற்றில் வைக்க விடவில்லை.



அன்று மாலையே மீண்டும் அதே தாமிரபரணி தரிசனம். இப்ப குளிக்க அல்ல. அந்த ஆற்றைக் கடந்து தான் ஒரு ஊருக்கு செல்ல வேண்டுமாம். உறவினர் வீட்டுக்கு. காலையில் குளிக்கும் போதே கவனித்தோம். நிறைய பேர் மறுகரையில் இருந்து இக்கரைக்கு ஆற்றைக் கடந்து சென்று கொண்டு இருந்தனர். பொதுவாக முஸ்லிம்கள். பெண்களும் இதில் அடங்குவர்.

அந்த ஊரின் பெயர் கொங்காராயகுறிச்சி(சரியா??). அதற்கு செல்ல பாலம் ஏதுமில்லை. செய்துங்கநாலூரில் இருந்து நெல்லை சென்று அங்கிருந்து வேறு வழியாக தான் பஸ் உள்ளது. நாங்கள் சென்ற ஊரில் இருந்து பஸ்ஸில் செல்ல வேண்டுமானால் பல கி.மீ சுற்ற வேண்டும். 10 நிமிடம் பிரயாணித்து ஆற்றில் இறங்கி நடந்தால் சிறிது நேரம் தான்... என்ன கொடுமய்யா...

அந்த பகுதி மக்கள் அங்கு பாலம் கட்டச் சொல்லி பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஆனால் அரசு இயந்திரங்கள் செவி சாய்க்க வில்லையாம்.

அந்த கிராமத்தில் நிறைய வீடுகள் . பெரிது பெரிதாக உள்ளன. பழமையும் புதுமையும் கலந்த மக்கள். நாங்கள் சென்ற வீடு சினிமாவில் வரும் வீடு போல் பெரி...தாக இருந்தது. ஆனால் இரண்டு பேர் தான் இருக்கின்றனர். நல்ல அனுபவங்கள்.
டிஸ்கி 1 : அருவியில் நிற்கும் போட்டோ சமீபத்தில் தான் எடுத்தது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன். யாரும் போட்டோவை காப்பி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டாம். தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் அதை விட அழகான போட்டோ அனுப்பி வைக்கப்படும்.
டிஸ்கி 2 : பிரபலமான ஒரு சக பதிவருக்கு அந்த கொங்கராயக்குறிச்சி தான் சொந்த ஊர்.. யார் என்று ஊகியுங்கள் பார்க்கலாம்.
டிஸ்கி3: ஊரில் இருந்து வந்ததும் எழுதி டிராப்டில் போட்டது.. அனுஜன்யாவின் சமீபத்திய பதிவைப் பார்த்ததும் வெளியிட்டு விட்டேன்.

Friday, March 20, 2009

1001 ஹிட்ஸ், தமிழ் மணமா? தமிழிஷா? ஹிட்ஸ் ஒப்பீடு

நேற்று ஒரு பிரபல பதிவரின் பதிவு ஹேக் செய்யப்பட்டதாக நம் நண்பரின் பதிவு ஒன்று வந்தது. யாரோ ஒருவன் ஒரு சக பதிவரின் பதிவில் அதர் ஆப்ஷனில் சென்று பிரபல பதிவரின் பெயரில் கமெண்ட் போட்டுள்ளான். இதன் தொடர்ச்சியாகவே அந்த பதிவு. அதர் ஆப்ஷனின் யார் வேண்டுமானாலும் கமெண்ட் போடலாம்.. அதே போல் பதிவரின் பெயரிலேயே அதே புரோபைல் படத்துடன் கமெண்ட் போடலாம். (எனக்கு வரும் குழலோவியம் கமெண்ட் ஒரு உதாரணம்.. எல்லாம் நம்ம நல்லவர் வேலையா இருக்கும்).

அக்கவுண்ட் நம்பரை வாலாக சேர்ப்பது, எலிக் குட்டி, பூனைக்குட்டி, மொசக் குட்டி சோதனைகள் எல்லாம் காணாமல் போய் விட்ட காலம் மகிழ்ச்சி அளிக்கின்றது.. ஆனாலும் யாரோ ஒருவர் செய்யும் தவறு மற்றவர்களை பதற்றமுறச் செய்து விடுகின்றது.

இது போன்ற நடவடிக்கைகளைக் கண்டால் அமைதியாக சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கி விடுங்கள். அல்லது கண்டும் காணாமல் போய் விடுங்கள்.
*********************************************************
நேற்று நண்பர் ஆதிமூலகிருஷ்ணனின் (தாமிரா) ஒரு பதிவைப் படித்தேன். மிக நல்ல சப்ஜெக்ட். ஆனால் நட்சத்திரம் பதட்டத்தில் எழுதி இருக்கின்றது. இன்னும் ஆழமாக எழுதி இருக்கலாம். ஆனாலும் அழகாகவே இருந்தது. கமெண்ட் போடப் போனால் கும்மி, குமுறி வைத்திருக்கின்றார்கள். ஏனோ மனம் வலித்தது. இருந்தாலும் கமெண்ட் போட்டு விட்டு திரும்பினேன்.

கும்மியடிப்பதற்கென்றெ பதிவுகள் வருகின்றன. அங்கே கும்மலாம். சில சிறந்த படைப்புகளில் கும்மியடிப்பதை தவிர்த்து விடுங்கள் நண்பர்களே... ப்ளீஸ்.. சில புதியவர்கள் படித்து இம்ப்ரஸ் ஆகிக் கமெண்ட் போடுவது நம்மால் தவிர்ந்து போகக் கூடாது.


*********************************************************

என்னோட பதிவுக்கு வரும் ஹிட்ஸ்களை எப்பவுமே கண்காணிப்பேன். அதில் நிறைவேறாத ஒரு தேடல் இருப்பதாகக் கூட நினைத்துக் கொள்ளுங்கள். பதிவு போட்ட நாட்களில் 400 முதல் 600 வரை ஹிட்ஸ் வரும். மற்ற நாட்களில் 100 முதல் 200 வரை எதிர்பார்க்கலாம். ஊரில் இருந்து வந்ததில் இருந்து சொல்லிக் கொள்ளும்படியாக பதிவு எதுவும் எழுத இயலவில்லை... இனி எழுதலாம்..எச்சரிக்கையாக இருங்கள்... ;-)

நேற்று முன் தினம் திடீரென்று ஹிட்ஸ் அதிகமாக வந்தது. 24 மணி நேரத்தில் சுமார் 1001 ஹிட்ஸ். இதில் தனி நபர்கள் மட்டும் 797 பேர். எப்படி இத்தனை சாத்தியமானது என்று புரியவில்லை... (நம்ம லிமிட்டுக்கு இதெல்லாம் ஓவர்ங்ண்ணா.. ;-) ) அன்று இட்ட இடுகை சாதாரணமானது தான்.. துபாய் அழிவை நோக்கியா செல்கின்றது?




ஹிட்ஸ் கவுண்டரைப் பார்த்த போது அதிகப்பட்டியான வருகை தமிழிஷின் வழியேவே இருந்தது. தமிழ் மணத்தில் இருந்து மிகக் குறைவான ஹிட்ஸ்களே இருந்தன. 1000 ஹிட்ஸில் 150 ஹிட்ஸ் கூட தமிழ் மணத்தின் வழியே இல்லை.. :( 150 ல் இருந்து 200 வரை ஹிட்ஸ் இருந்தாலே தமிழ் மணத்தில் இடுகை சூடாகி விடும். ஆனால் பதிவு சூடாகவில்லை.

நேற்று பதிவு ஏதும் இடவில்லை. ஆனாலும் ஹிட்ஸ் 500 க்கும் மேல் வந்தது. அதை கொஞ்சம் குடைந்த போது பெரும்பாலனவை தமிழிஷின் வழியே இருந்தது. தமிழ் மணத்தின் முகப்பில் இருந்து மட்டுமே அனைத்து ஹிட்ஸூம் இருந்தது. அதே வேலையில் தமிழிஷின் பல பக்கங்களில் இருந்தும் ஹிட்ஸ் வந்துள்ளது.



தமிழ் மணத்தின் வலைத் தளம் திறக்கும் நேரமும், பயனாளர்களுக்கு இலகுவாகவும் இல்லாமல் இருக்கின்றதோ என்ற ஐயம் தோன்றுகின்றது. பதிவர்களுக்கு மட்டுமேயான ஒரு தளமாக தமிழ் மணம் மாறி விடக்கூடாது என்பதே நம் நோக்கம். என்னதான் இருந்தாலும் இன்னும் தமிழ் மணம் வழியே தான் பதிவுகளைப் படிக்கின்றேன். தமிழிஷில் பதிவைக் கொடுக்கப் போகும் போது மட்டும் ஒரு பார்வை பார்ப்பது தான்.

*******************************************************************



கயல்விழி முத்துலக்ஷ்மி அக்கா அல்மோரா மலைப் பகுதியில் உள்ள கோவில்களுக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார். வழக்கம் போல் அழகான படங்களுடன் பதிவு இட்டு வருகின்றார்.. பாருங்கள்.http://sirumuyarchi.blogspot.com/search/label/அல்மோரா

அவரது பதிவுகளைப் பார்த்த போது நான் வேலை செய்யும் இடம் தான் நினைவுக்கு வந்தது. கீழே உள்ள படம் சென்ற புதன்கிழமை எடுத்தது.வளைகுடாவில் வெயில் அடிக்க ஆரம்பித்தும் இங்கு இன்னும் வெயில் உறைக்க வில்லை. தினமும் மாலையில் மலை ஓரத்தில் உள்ள பாறையின் மீது அமர்ந்து மிதந்து செல்லும் மேகங்களைப் பார்ப்பது நல்லா ஜாலியா இருக்கும்.. ;-)) அனுபவிச்சா தான் தெரியும்..


*********************************************************************

எங்க துளசி டீச்சர் நிறைய ஊர்களை சுற்றிப் பார்த்து விட்டு நியூஸிலாந்துக்கு திரும்பி விட்டார்கள்.. இனி கிளாஸுக்கு மட்டம் போடாமல் போகனுமாம்.. ஊருக்கு போய் இருந்த போது டீச்சர் நின்று போட்டோ எடுத்துக் கொண்ட இடத்திற்கு அருகில் மகனை நிற்க வைத்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம்.. ;-)



*********************************************************

தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் ஓட்டுப் போட்டு விட்டு செல்லலாமே


படங்களைக் கிளிக் செய்து பெரிதாகப் பார்க்கலாம்.

Wednesday, March 18, 2009

துபாய் அழிவை நோக்கியா செல்கின்றது..??

பள்ளி காலங்களில் சிறுவர்மலர் புத்தகம் விரும்பி படிப்பேன். நூலகத்தில் சிறுவர்களிடையே அதற்கு ஒரு போட்டியே இருக்கும். இரண்டு, மூன்று பேர் இணைந்து படித்த காலம் உண்டு. அப்போது ஒரு படக்கதை வந்தது. அதன் பெயரை மறந்து விட்டேன். அதில் ஜானி என்று ஒரு சிறுவன் இருப்பான். அவன் இருந்த நகரமே ப்ளேக் நோயால் அழிந்து போய் இருக்கும். எங்கு பார்த்தாலும் எலிகள் துரத்தும். பல கெட்ட மிருங்கள் சுற்றி வரும். நகரில் உள்ள கட்டிடங்கள் எல்லாம் பாழடைந்து மனிதர்களே இல்லாமல் போய் கிடைக்கும். இந்த சூழலில் அவன் எத்ரிகொள்ளும் பல சோதனைகளை அதில் படக்கதையாக காட்டி இருப்பார்கள். அழிவு என்றால் இப்படித் தானோ என்று எண்ணிக் கொள்வேன்.

**********************************************************************

ஹிந்தி சில வித்தியாசமான படங்கள் வரும். டர்னா மனா ஹை (डरना मना है)... அதாவது பயப்படுவதற்கு தடை என்று வைத்துக் கொள்ளலாம். சுற்றுலா வரும் ஒரு நண்பர்கள் குழுவினரின் வாகனம் பழுதாக காட்டில் ஒரு இடத்தில் இரவு தங்குகின்றனர். அதில் நம் வாள மீன் மாளவிகா கூட இருப்பார். கதை நமக்கு தேவை இல்லை. அதில் அனைவரும் ஆளுக்கு ஒரு பேய்க் கதை சொல்வார்கள். ஒரு கதையில் ஷில்பா ஷெட்டி கடையில் ஆப்பிள் வாங்குவார். அன்று அதை உண்ணும் அவளது கணவன் மறுநாள் காலையில் படுக்கையில் ஆப்பிளாக மாறி இருப்பார். அவள் அதிர்ச்சியடைந்து வெளியே வந்து பார்த்தால் ஊரே வெறிச்சோடி கிடக்கும். ஆப்பிள் உண்ட அனைவரும் ஆப்பிளாக மாறி தெருவில் ஆங்காங்கே இருப்பார்கள். ஆப்பிள் வியாபாரி கடைசி ஆப்பிளை அவளுக்கு ஓசியாகத் தருவதாகக் கூறுவான். கூடவே ஒரு பேய் இருக்கும்.

******************************************************************

நான் முதன் முதலில் துபாய் சென்ற போது அங்கு இவ்வளவு டிராபிக் இல்லை. மக்கள் தொகையும் குறைவாக இருந்தது. அரை மணி நேரத்தில் சார்ஜா வந்து விடலாம். அப்போது தான் துபாயின் வளர்ச்சியின் ஆரம்ப கட்டம்.

அடுத்தடுத்த சில ஆண்டுகளில் அபரிமிதமான வளர்ச்சி ஆரம்பமானது. எங்கு பார்த்தாலும் உயரமான கட்டிடங்கள். மக்கள் திரள். வீதிகளில் விலக இடமில்லாமல் மக்கள் திரள். உட்சபட்மாக டிராபிக் ஜாம். இது ஒரு புறமிருக்க அடிப்படைத் தேவையான இருக்கும் இடத்தின் வாடகை அமோகமான வருடா வருடம் ஏறிக் கொண்டே இருந்தது. கட்டிடங்களை 99 வருடத்திற்கு விலைக்கு விற்கும் புதிய முறை ஆரம்பமானது.

பல பிரபலங்களும், கறுப்பப்பணக்காரர்களும் துபாயில் வந்து பணத்தைக் கொட்ட ஆரம்பித்தனர். கொஞ்சம் அப்பர் மிடிஸ் கிளாஸ் கூட பணத்தைச் சேர்ந்து ப்ளாட் வாங்கி வாடகை வாங்க ஆரம்பித்து இருந்ததனர். (இதில் நிறைய பேர் பாகிஸ்தான், இந்தியர்கள்)

ப்ளாட்களில் தேவை அதிகமாக, அதிகமாக கட்டிடங்களின் எண்ணிக்கை அதிகமானது. கட்டிடங்களுக்கு பெயர் வைப்பதே பெரிய கடினமான வேலையாக மாறிவிட்டிருந்தது. தமிழ் சினிமா போல் எல்லா பெயர்களையும் அனைவரும் வைத்திருந்தனர்.

கடலுக்குள் வில்லாக்களையும், உயரமான கட்டிடங்களையும் கட்டிக் கொண்டு இருந்தனர். அதன் உச்சகட்டம் தான் பேரீச்சம் மரம் போன்ற அமைப்பில் வீடுகள், உலக மேப் அமைப்பில் வீடுகள், உலகின் உயரமான கட்டிடம் என்று.. தேரா பகுதியில் கடலில் கப்பல் மூலம் மண்ணைக் கொட்டிக் கொண்டு இருக்கும் போது பேசிக் கொள்வோம்.. கடலில் பணத்தை வாரி இறைக்கிறார்களே.. என்று.

அந்த நேரங்களில் அபுதாபி ரோட்டில் செல்லும் போதெல்லாம் எனக்கு மேலே நான் சொன்ன இரண்டு கதைகள் தான் நினைவுக்கு வரும். துபாய் இருக்கும் மக்கள் தொகைக்கும் இங்கு கட்டப்பட்டுக் கொண்டு வரும் கட்டிடங்களுக்கும் விகிதாச்சாரம் அதிக வித்தியாசமாக இருக்கின்றதே..இதையெல்லாம் யார் வந்து நிரப்பப் போகின்றனர் என்று... எல்லாம் சரியாக நடக்க வேண்டும் இல்லையென்றால்.... கட்டிடங்கள் பாழடைந்து , தெருக்கள் வெறிச்சோடி மயான அமைதியாகி விடும் என்று நினைத்துக் கொள்வேன்.

ஆனால் அது இவ்வளவு சீக்கிரம் வரும் என்று நினைக்க வில்லை. முதலில் அமெரிக்காவுக்கு விழுந்த அடி.. துபாய் வரைத் திரும்பி விட்டது. ரியல் எஸ்டேட் சரிவு என்ற உடன் மக்கள் துபாயில் முதலீடு செய்யத் தயங்க, வங்கிகள் அடுத்த கட்ட லோனை நிறுத்த ஆரம்பித்தன. கட்டிய கட்டிடங்கள் விற்கப்படாமல் தேங்க வங்கிகள் பண முடைக்கு ஆளாகின. வாங்கியவர்கள் விற்க எத்தனிக்கின்றனர். வங்கிக்கு பணம் கட்ட முடியாமலும், கட்டியதை விற்க முடியாமலும் நிறுவனங்கள் தவிக்க கூடவே இருக்கும் பணியாளர்களுக்கு சம்பளப் பிரச்சினை.








வேலை இல்லாததால் பெரும்பாலானோரை அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். அவர்கள் காலியானதால் அவர்கள் இருந்த கட்டிடங்களும் காலியாகின்றன. அவர்களை டார்கெட்டாக வைத்து வியாபாரம் செய்து வந்தவர்களும் வியாபாரமின்றி தவிக்கின்றனர். எப்போதும் அமர்க்களமாக இருக்கும் துபாய் ஷாப்பிங் திருவிழா இந்த ஆண்டு சத்தமே இல்லாமல் நிறைவடைந்துள்ளது.

நிறுவனங்கள் ஆட்களை வேலை விட்டு தூக்குகின்றனர். இல்லையேல் நீண்ட விடுமுறை கொடுத்து தற்காலிகமான தங்களை சிக்கலில் இருந்து விடுவித்துக் கொள்கின்றனர்... அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அது போல் துபாய் தனது உச்சத்தை எட்டி விட்டது... துபாயுடன் சேர்ந்து சார்ஜா, அஜ்மான் போன்றவையும் பாதிக்கப்படுகின்றன. அபுதாபியின் எண்ணைய் வளம் அதைக் காப்பாற்றி விடும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

மீண்டும் உலக மக்கள் நம்பிக்கை கொண்டு ரியல் எஸ்டேட் தொழில் முன்னேறி, மக்கள் நம்பிக்கையுடன் மீண்டும் துபாயில் மண்ணில் முதலீடு செய்தால் மட்டுமே முன்னேற்றம் கிடைக்கும். இல்லையேல் கல்லும். மண்ணும், கான்க்ரீட்டும், தான் அதன் மிச்சமாகக் கிடைக்கும்.

“அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்” (அல்குர்ஆன் 2:276)

Monday, March 16, 2009

யாவரும் நலம் - ரூம் போட்டு லாஜிக் பார்க்கும் பதிவர்கள்

சமீபத்தில் வெளிவந்த யாவரும் நலம் திரைப்படம் ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. ஒரு திகில் படம் அல்லது பேய்ப்படம் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ஆனால் பேயோ, ஆவியோ படத்தில் ஒரு அரூபமாக காட்டப்படாதது என்பது சிறப்பு. இப்படத்தின் கதையைப் பற்றி நிறையப் பேர் விளக்கமாக பேசி விட்டார்கள். ஆனால் பெரும்பாலானோர் லாஜிக் உதைப்பதாகக் கூறுகின்றனர்.



கதையைச் சுருக்கமாக பார்த்தால் மாதவன் மற்றும் குடும்பத்தினர் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பில் ப்ளாட்டை வாங்கி குடி வருகின்றனர். அந்த வீட்டில் வரும் கேபிள் கனெக்‌ஷனில் மதியம் 1 மணிக்கு மட்டும் ஒரு வித்தியாசமான சீரியல் வருகின்றது. அது மாதவனின் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளை முன்னதாகவே காட்டுகின்றது. அண்ணனுக்கு ப்ரமோசன், தங்கை 12 அரியர்யஸை ஒரே நேரத்தில் பாஸாகுதல், மனைவி கர்ப்பம், கர்ப்பச் சிதைவு... இப்படி இன்னும் பல

ஒரு கட்டத்தில் வீட்டில் உள்ளவர் கொலை செய்யப்படுவதைப் போல காட்சி வருகின்றது. வழக்கமாக நடப்பது போல் சீரியலில் வருவது போல் கொலை செய்யப்பட்டார்களா? கொலையாளி யார்? என்பதை திகிலுடன் சஸ்பென்ஸாக சொல்லும் கதை தான் யாவரும் நலம்.

சரி இதில் லாஜிக் ஓட்டைகளைப் பார்த்தால் டிவி சீரியல் இவர்கள் வீட்டில் மட்டுமே வருகின்றது. அதில் நடப்பது அனைத்தும் உண்மையில் நடக்கின்றது. இறுதியில் இறந்த பெண்ணே கரண்ட் இல்லாத வீட்டின் டிவியில் வந்து கொலையாளியுடன் உரையாடுகின்றாள்.

நமது மக்களில் இது போன்ற திகில், பேய், மர்மப் படங்கள் பற்றிய பொது புத்தியை இரண்டு விடயங்களில் அடக்கி விடலாம். முதலாவது உண்மையில் பேய்ப் படம். பேய் இருப்பதாக நம்ப வைத்து படக்கதையை எடுத்துச் செல்வது... இரண்டாவது பேய், ஆவி இருப்பது போன்று காட்சியமைப்புகளைக் கொண்டு சென்று இறுதியில் அது உண்மையில் இல்லை... மனிதர்களின் செயல்கள் தான் அவை என முடிப்பது.

முதலாவது வகையில் படம் ஆரம்பத்தில் இருந்தே பேயையும், அதை அழிக்கப் போகும் so and so கடவுள் அல்லது ஆசி பெற்றவர்களையும் காட்டி விடுவார்கள். அதற்குத் தகுந்தாற் போல் உடைகள், ஆட்டங்கள், கிராபிக்ஸ்கள் எல்லாம் களை கட்டி விடும். இரண்டாவது வகையில் நாம் எதிர்பார்க்க மாதிரி எல்லாவற்றையும் சஸ்பென்ஸாக காட்டி விட்டு இறுதியில் உண்மையை உடைப்பார்கள்.

யாவரும் நலம் இந்த இரண்டிலும் இல்லை. இரண்டாம் வகைப் படம் போல் காட்டப்பட்டாலும் இறுதியில் முடிவு வித்தியாசமாக இருக்கின்றது. விஜய், அஜித் போன்ற புனித பிம்பங்களின் நம்ப முடிய இயலாத சாகசங்களை கண்டு களிக்கும் நம்மால் இந்த புதிய முறையை ஜீரணிக்க இயலவில்லை. உண்மையில் நன்றாகக் கவனித்தால் அந்த வீட்டின் முன்னாள் உரிமையாளர்களின் ஆவிகள் இருக்கின்றன. அவைகள் பழிக்குப் பழி வாங்க மாதவனைத் தேர்ந்தெடுக்கின்றன. இறுதியில் அதில் வெற்றியும் பெறுகின்றன.

இக்கதையைப் புதிய கோணத்தில் காட்டியுள்ளதில் தான் இயக்குநர் வெற்றி அடைகின்றார். அதே போல் பிசி ஸ்ரீராமின் கேமராவும், பின்னணி இசையும் அடவு கட்டி அடிக்கின்றது. படத்தை ரசிக்க வைத்ததில் இருவருக்கும் நல்ல பங்கு உள்ளது.

இன்னொரு விடயம்.. அந்த சீரியலில் நடந்தது முன்னால் நடந்தவைகளாக இல்லாமலும் இருக்கலாம். இனி நடக்கப் போகின்றவைகளை தெரிந்து கொள்ளும் ஆவிகள் அதை சீரியல் போல் டிவி மூலம் காட்டுகின்றன. மாதவனால் மட்டும் இதை சுலபமாக புரிந்து கொள்ள இயல்கின்றது. ஏனெனில் அவன் தான் ஆவிகள் சார்பில் பலி வாங்க வேண்டியவன். மற்றவர்கள் அதை சாதாரண சீரியலாகவே எடுத்துக் கொள்கின்றனர்.

மேலும் உண்மையான நிகழ்வு 1977 ல் நடப்பதாக உள்ளது. அதில் அண்ணன் தனக்கு ப்ரமோசன் கிடைத்துள்ளதாகவும், 10000 ரூபாய்கள் இன்கிரிமெண்ட் கிடைத்துள்ளதாகவும் கூறுகின்றார். 1977 ல் 10000 ரூபாய்கள் இன்கிரிமெண்ட் என்பதெல்லாம் நடந்திருக்கக் கூடியதே இல்லை.. அதே போல் 12 பாடங்களில் அரியர்ஸ் வைத்து இருக்கும் தங்கை ஒரே தடவையில் அனைத்துப் பாடங்களையும் பாஸ் செய்வது நடக்கக் கூடியதாக இல்லை.. அதுவும் 69.73 சதவீத மதிப்பெண்கள் பெற்று... மாதவன் நடப்பதை நம்ப வேண்டு மென்பதற்காக இதையெல்லாம் ஆவிகளின் வேலையாக உள்ளதாக வைத்துக் கொள்ள வேண்டும்.

டிஸ்கி 1 : எனக்கு இறந்தவர்கள் மீண்டும் ஆவியாக வருவார்கள் என்பதில் நம்பிக்கை சுத்தமாக இல்லை. மனிதன் தான் சாத்தானின் குணங்களுடன் நம்முடன் இருக்கிறான் என்று நம்புகின்றேன்.

டிஸ்கி 2 : படத்தில் சண்டைக் காட்சி இல்லை.. இரண்டு பாட்டு மட்டும் இருந்தது. வழக்கம் போல் பாடல்களை Skip செய்து விட்டேன். அப்புறம் அந்த சில்லி சிக்கன், சிக்கன் 65, சிக்கன் தந்தூரி சூப்பர் மேட்டருங்கோ... விவ(கா)ரமான டைரக்டருங்கோ

Friday, March 13, 2009

PIT மார்ச் மாத போட்டி - கருப்பு வெள்ளைப் படம்





இதில் எந்த படத்தைக் கொடுக்கலாம்ன்னு சொல்லுங்க.. போட்டியில் வெல்ல தேவையில்லையெனினும் ஒரு பங்களிப்புக்காக கடைசியில் தரலாம்ன்னு காத்திருந்தேன்.

படத்தின் மீது கிளிக்கி பெரிதாகப் பார்க்கவும்.

http://photography-in-tamil.blogspot.com/2009/02/pit-2009.html

Thursday, March 12, 2009

மீள்பதிவு - முறிந்த சிறகுகளில் உயிர்த்த உறவு - சிறுகதை




.
வாசி இரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்த போது மணி மாலை 5.30 ஐ நெருங்கி இருந்தது. வானம் சிலுசிலுப்பான காற்றுடன் மழை தூறிக் கொண்டு இருந்தது. தூறல் விழுந்து கொண்டிருந்தாலும் புழுக்கம் குறையாமலேயே இருந்தது. ஞாயிற்றுக் கிழமை மாலைக்கு உரிய சோம்பல் இல்லாமல் ரெயில் நிலையம் இருப்பதை காண முடிந்தது. நவி மும்பை, மும்பை கலாச்சாரத்தை விட்டு விலகி இருப்பதாகவே பட்டது.

ஜோடியாக மகிழ்ச்சி குதுகலிப்புடன் செல்லும் காதலர்களை பார்க்கும் போது ஏனோ பவித்ராவின் ஞாபகம் வருவதைத் தவிர்க்க இயலவில்லை. நேற்றிரவு முடிக்காமல் வைத்த முறிந்த சிறகுகளும் நினைவுக்கு வந்தது. எத்தனை முறைப் படித்திருந்தாலும் ஏனோ நிறைவு பெறாததாகவே தெரிகின்றது.

இரயில் நிலையத்துக்கு வெளியே இருந்த மூன்று மாடி ஷாப்பிங் மாலுக்குள் நுழையும் போது உள்ளே இருந்து வரும் குளிர்சாதன வசதி முகத்தில் அறைந்தது இதமாகவே இருந்தது. உள்ளிலும் இளசுகள் நிறைந்து காண முடிந்தது... ஓ..மனம் இளசு என்று மற்றவர்களை சுட்டும் போது, நமக்கு வயதாகி விட்டது போன்ற உணர்வு வருவதாகவே படுகின்றது.... அம்மா வேறு ‘ஏழு கழுதை வயசாகி விட்டது. சீக்கிரக் திருமணம் முடிக்க வேண்டும்’ என்று மூன்று பெண்களின் போட்டோக்களையும் அனுப்பி வைத்து விட்டிருக்கிறார்.... சிரித்துக் கொண்டேன்.

ஐஸ்கிரீம் பார்லரில் கூட்டம் அலை மோதியது. ஐஸ்கிரீம் சாப்பிடும் வழக்கம் விடுபட்டு விட்டது. அதை புன்னகையுடன் கடந்து பார்கார்ன் கடைக்கு வந்தேன். பதின்ம வயதில் சினிமா தியேட்டர் ஐஸ்கிரீமுக்காக பாக்கெட் மணி சேர்த்து வைத்த காலம் நினைவுக்கு வந்தது. இன்று பர்ஸ் நிறைய பணம் இருந்தும் ஏனோ மனம் ஐஸ்கிரீமை விரும்புவதில்லை. பவித்ராவுக்கு ஐஸ்கிரீம் பிடிக்காது என்பதாலோ?

வழக்கமாக பாப்கார்ன்வாங்கும் கடையிலும் கூட்டம் அலைமோதியது. கடைக்காரன் அங்கிருந்தே புன்னகை செய்தான்... “பாய் சாப்! தோ மினட் மே ஆப்கா பார்கார்ன் மிலேகா! சபர் கீஜியே”... கூட்டத்தில் நிற்காமலேயே பாப்கார்ன் கைக்கு வரும் என்பதால் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன்.... கூட்டம் ஆவலுடன் பாப்கார்ன் வாங்க நின்றிருந்தது. அந்த கூட்டத்தில்..... ஓ.... அது கல்பனா தானே... ஆமாம் அவள் கல்பனா தான்.. இப்போது கொஞ்சம் பூசினாற் போல் இருக்கிறாள்... திருமணம் ஆகி இருக்கலாம். திருமணம் ஆனாலே இந்த பெண்கள் ஏன் குண்டாகி விடுகின்றனர்... பவித்ராவுக்கு திருமணம் ஆகி இருக்குமோ? ஏன் எதற்கெடுத்தாலும் பவித்ராவையே நினைக்கிறேன்...

கல்பனா பார்கார்ன் வாங்கி விட்டு வருவது தெரிந்தது. என்னைக் கடக்கும் போது கூப்பிட்டேன் “ எக்ஸ்கியூஸ்மீ! நீங்க கல்பனா தானே?” என்னை வேகமாக கடந்தவள் சட்டென்று நின்று திரும்பி கொஞ்சம் உற்று நோக்கினாள்.

“ஹேய்! தமிழ் தானே நீ! வாட் எ சர்பிரைஸ்! பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு! இங்க என்ன செய்ற”

“இங்க தான் 5 வருசமா இருக்கேன். ஒரு மேன் பவர் கன்சல்டண்டில் அஸிஸ்டெண்ட் மேனேஜர் வேலை! அது இருக்கட்டும்! நீ எப்படி இருக்க?”

“ரொம்ப நல்லா இருக்கேன்! நீ எப்படி இருக்க! கல்யாணம் ஆச்சா”

“இன்னும் இல்லை கல்பனா! உன்னைப் பார்த்ததும் அடையாளமே தெரியலை.... முன்னெல்லாம் கட்டுப் பெட்டியா சேலையில் தான் காலேஜ் வருவ! இப்ப ஆம்பிளை மாதிரி டீ சர்ட், ஜீன்ஸோடு பார்க்கிறேன். எனக்கே சந்தேகமாயிடுச்சு”

“அதெல்லாம் இருக்கட்டும் தமிழ்! உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்.. நம்ம தேவகி தெரியும் தானே?”

“அந்த தேவகி மாமி தானே? நல்லாவே தெரியுமே”

“ அவள் ஒரு வருஷமா உன்னைத் தேடிக்கிட்டு இருக்கா”

“என்னையா? அவளுக்கு தான் கல்யாணம் ஆயிடுச்சே”

“தமிழ் கிண்டல் வேண்டாம்... பவித்ரா விஷயமா ஏதோ முக்கியமா பேசனுமாம்... உன் போன் நம்பர் கொடு. அவளிடம் கொடுத்து பேசச் சொல்றேன்”

பவித்ராவின் பெயரை நான் மட்டும் சொல்லி நெடுங்காலமாக கேட்டு வந்த என் காதுகள் வேறோருவர் சொன்னதும் ஏனோ காது மடல்கள் சிலிர்த்தன. என் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்டாள். ஐஸ்கிரீம் பார்லரில் இருந்து சுமாரான தொப்பையுடன், கையில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு அவர் அருகில் வந்தார். கையில் இருந்த குழந்தை கொஞ்சும் குரலில் “ மம்மி! உனக்கு ஐஸ்கிரீம் கிடையாது” சிரிப்புடன் கல்பனாவைப் பார்த்து கூறியது.

“தமிழ்! இவர் தான் என்னுடைய கணவர் ஆனந்த குமார்! இவள் என் மகள் ஹரிணி.. என்னங்க இவர் என்னோட காலேஜ் மேட் தமிழ் பிரியன்.. இங்க தான் இருக்காராம்”

பரஸ்பரம் இருவரும் கை குலுக்கி நலம் விசாரித்துக் கொண்டோம். ஹரிணி அதே சிரிப்புடன் “ஹாய்! அங்கிள்” சொன்னாள். மீண்டும் கல்பனாவைப் பார்த்த போது அவளது பார்வையில் இனம்பிரியாத கோபம்,பயம், மிரட்சி, சந்தேகம், சோகம் ஏதோ ஒன்றை உணர முடிந்தது.

“சரி தமிழ்! நாங்க கிளம்பறோம்... தேவகியிடம் உன் போன்நம்பரையும், இ மெயிலையும் தர்ரேன்... அடுத்த வாரம் ஹரிணிக்கு பிறந்தநாள் வருது... உன்னை போனில் அழைக்கிறேன் அப்ப மீதியைப் பேசிக் கொள்ளலாம்”.

***************************************************************

அன்றிரவு ஏனோ பவித்ராவின் நினைவு அதிகமாகவே இருந்தது. மின் விளக்குகளை அணைத்து விட்டு, ஜன்னல்களைத் திறந்து வைத்தபடி படுத்து இருந்தேன். முழு நிலவு எனக்காகவே ஆசையுடன் வானில் இருந்து இறங்கி வருவது போல் இருந்தது. நெஞ்சில் மீது பாதி படித்த நிலையில் முறிந்த சிறகுகள் கிடந்தது.இப்படியும் கவிதை எழுத முடியுமா? வர்ணனைகளைத் தொடுக்க இயலுமா? என்ற யோசனை வந்த போது, பவித்ராவால் முடியும் என்று தோன்றியது. பவித்ரா நன்றாக கவிதை எழுதுவாள்.... அவளே ஒரு கவிதை என்பது என் கருத்து. அவள் அன்புடன் பவித்ரா என்று எழுதிக் கொடுத்த முறிந்த சிறகுகளை இது வரை எத்தனை முறை படித்துள்ளேன் என்று கணக்கு பார்த்து தோல்வியே அடைந்துள்ளேன்... அவள் நினைவாக புகைப்படத்திற்கு அப்புறம் இருப்பது இது ஒன்று தான்

ஜன்னல் வழியே தெரிந்து கொண்டிருந்த நிலா மெல்ல நகர்ந்தது. இப்போது வானம் வெறுமையாக தெரிந்ததது. மணி பதினொன்றைக் கடந்து இருந்தது. கண்களை மூடி, நேற்று விட்டுப் போன பவித்ராவுடன் வாழும் கனவைத் தொடர ஆரம்பித்திருந்தேன்... செல் போன் மெலிதாக சிணுங்கியது..

அழகு நிலவே கதவு திறந்து அருகில் வந்தாயே ....
எனது கனவை உனது விழியில் எடுத்து வந்தாயே...

புதிய எண்ணாக இருந்தது...
“ஹலோ! தமிழ் பிரியனா?” பெண் குரல்

“ஆமாம்! நீங்க யார் பேசிறீங்க”

“நான் தேவகி பேசறேன்... நல்லா இருக்கியா தமிழ்?”

“நான் நன்னா இருக்கேன்! நீங்கோ நல்லா இருக்கேளா மாமி”

சில வினாடிகள் தேவகியிடம் இருந்து எந்த பதிலுல் இல்லை

“ஹலோ தேவகி என்னாச்சு? சும்மா கிண்டல் பண்ணினேன்... சாரிப்பா”

“அதெல்லாம் ஒன்னும் இல்லை... உன்னிடம் பவித்ரா சம்பந்தமாக முக்கியமான விஷயம் பேசனும்.. ரூமில் இன்டர்நெட் இருக்கா? ”

எடுத்தவுடன் நேரடியாக பவித்ரா விஷயத்திற்கு வந்தது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. மனம் மகிழ்வும், பயமும் கலந்த ஒருவித சிந்தனையில் ஆழ்ந்தது.

”இருக்கு! முக்கியமான விஷயம்ன்னா போனிலேயே சொல்லு தேவகி!”
“இல்லை தமிழ். உன்னோட ஜி மெயில் ஐடிக்கு என்னிடம் இருந்து இன்வைட் அனுப்பி உள்ளேன். அதை அக்சப்ட் பண்ணு.. நான் ஆன் லைனில் தான் இருக்கேன். அங்கே வா!”

போனை துண்டித்து விட்டாள்.. ஏனோ மனம் கலவரமாக இருந்தது. தேவகியை பல வருடங்களாக பார்க்கா விட்டாலும் அவளது ஜாலியான குணம் மாறி இருக்காது என்றே நினைத்து இருந்தேன்... அவளது குரலில் இருந்த ஒரு சோகம் என்னை வியர்வையில் நனைய வைத்தது.... என்னவோ கெட்ட செய்தி இருப்பதாகத் தோன்றியது

கணிணியை உயிரூட்டினேன்... காலேஜில் எடுத்த பவித்ரா இருக்கும் படத்துடன் கணிணி திறந்தது. ஜி டாக்கில் நுழைந்து தேவகியின் மின்னஞ்சலை அக்சர்ட் செய்ய சிவப்பு விளக்குடன் தேவகி இருந்தாள்..தட்டச்சினேன்

“ஹாய்! தேவகி எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன் தமிழ்! நீ எப்படி இருக்க”

”நல்லாவே இருக்கேன்.. எங்க வீட்லயா இருக்க”

“ஆமா தமிழ்! கணவரும், பையனும் தூங்கி விட்டார்கள்... நான் இப்பதான் வேலை எல்லாம் முடித்து நெட்டில் அமர்ந்தேன்.. உடனே உனக்கு போன் செய்தேன்”

“என்ன ஏதோ முக்கியமான விஷயம் சொல்லனும்ன்னு சொன்னியே?

தேவகி அடுத்து சொன்ன அந்த விஷயத்தைக் கேட்டதும் திடுக்கிட்டுப் போனேன்.
சட்டென்று பூமி தரைக்கு கீழே நழுவது போல் இருந்தது. வெளியே இடி இடித்து, மின்னல் கீற்று ஒன்று அறைக்குள் எட்டிப் பார்த்து சென்றது...

“பவித்ரா இறந்த விஷயம் உனக்கு தெரியும் தானே?”

தேவகி தட்டச்சு செய்ததும் சுக்கு நூறாக உடைந்த கண்ணாடி போல் என்னை உணர்ந்தேன்... என்னால் கணிணியின் மானிட்டரை பார்க்கவே இயலாத அளவு கண்களில் நீர் சேர்ந்திருந்தது. மீண்டும் கண்களை கசக்கிக் கொண்டு பார்த்த போது தேவகி தட்டச்சு செய்து கொண்டிருந்தாள்..

“சாரி தமிழ்! உன்னிடம் எப்படி சொல்வது என்றே தெரியலை.ஆனா சொல்ல வேண்டிய முக்கியமான விஷயம் ஆனதால் தான் நம் காலேஜ் மேட் நிறைய பேரிடம் சொல்லி வைத்திருந்தேன்”

“இன்று தான் கல்பனா உன்னைக் கண்டுபிடித்து இருக்கிறாள்”

“பவித்ரா இறந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகி விட்டது! ஸ்டவ் வெடித்து உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மூன்று மாதம் ஹாஸ்பிட்டலில் வைத்து இருந்தார்கள். பின்னர் கொஞ்சம் குணமானதும் வீட்டுக்கு கொண்டு வந்திருந்தார்கள்.. அடுத்த இரண்டு மாதத்தில் திடீரென்று ஒருநாள் இறந்து விட்டாள்.”

“தமிழ் ஆர் யூ தேர்?”

“ம் சொல்லு தேவகி”

“அவள் இறப்பதற்கு ஒரு வாரம் முன்னால் அவள் வீட்டுக்கு அவளைப் பார்க்க போய் இருந்தேன். எப்போதுமே அழாமல் இருப்பவள் அன்று என்னிடம் கதறிக் கதறி அழுதாள். ஏன் என்று கேட்டதற்கு ஏதும் சொல்ல மறுத்து விட்டாள்.”

“பின்னர் அவள் இறப்பதற்கு முதல் நாள் இரவு எனக்கு ஒரு மெயில் அனுப்பி இருந்தாள். அதனுடன் ஒரு வேர்ட் அட்டாச்மெண்டும் இருந்தது. மெயிலில் இந்த அட்டாச்மெண்டை, உன்னைக் கண்டுபிடித்து சேர்க்கும்படிக் கூறி இருந்தாள். அதற்கு ஒரு பாஸ்வேர்டும் போட்டு இருக்கின்றாள். ஆனால் அதை கண்டுபிடித்து நீதான் திறந்து பார்க்க வேண்டுமாம்”

”நம் நண்பர்கள் அனைவரும் உன்னைத் தேடி களைத்துப் போய் விட்டோம்... பல நாட்களுக்குப் பின் நான் கூட அந்த அட்டாச்மெண்டில் உன்னைப் பற்றி ஏதாவது தகவல் இருக்கும் என்று திறக்க முயற்சி செய்தேன்... ஆனால் முடியவில்லை”

“தமிழ்! எதற்கும் கவலைப்படாதே... அந்த மெயிலை உனக்கு பார்வேர்ட் செய்கின்றேன்.... என்ன எழுதி இருக்கிறது என்று பார். அவள் கடைசி நேரத்தில் உன்னைத் தான் சந்திக்க ஆசைப்பட்டிருக்கின்றாள் போல் இருக்கு”

“தமிழ்! நேரமாச்சு... எதையும் மனசில் வைக்காம திடமா அதில் என்ன இருக்குன்னு பாரு... நாளைக்கு காலையில் உனக்கு போன் செய்கின்றேன்”

தேவகிக்கு பதில் சொல்ல கூட முடியாமல் விக்கித்துப் போய் இருந்தேன்.

“ஓகே தேவகி.. பை” என்று மட்டுமே தட்டச்ச முடிந்தது,

கண்களில் வெளியில் பெய்யத் தொடங்கி இருந்த மழை போல் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. மெயில் இன்பாக்ஸில் தேவகி அனுப்பிய அட்டாச்மெண்ட் இருந்தது. இன்பாக்ஸை திறந்து பதிவிறக்க சொடுக்கினேன்... டெஸ்க்டாப்பில் பைல் வந்து விழுந்திருந்தது. அது உருவாக்கப்பட்ட தேதியைப் பார்த்த போது, ஒரு வருடமும், இரண்டு மாதங்களும் கடந்து போய் இருந்தன.

ஒரு நிமிடம் ஆயாசமாக இருந்தது... ஏனிந்த மறைமுக வாழ்க்கை வாழ வேண்டி வந்தது என எனக்கே புரியவில்லை. வேர்ட் பைலைத் திறக்க முயற்சி செய்தேன்...

முகப்பிலேயே அதற்கான பாஸ்வேர்ட் கேட்டு விண்டோ திறந்து இடைமறித்தது. சில வினாடிகள் யோசனைக்குப் பின் கை விரல்கள் தானாகவே தட்டச்ச துவங்கின.. murindhasiragukal.... எண்டரை தட்ட பைல் திறந்து கொள்ள சட்டென்று உடம்பு சிலிர்த்தது. கடிதத்தின் முகப்பில் அதே தேதி தட்டச்சியிருந்தாள்.

நானும் இப்படித்தான் கடிதம் எழுதினால் தேதி கண்டிப்பாக இடுவேன்.. பவித்ராவும் இடுவதால் தானோ?

அன்புள்ள தமிழ் பிரியனுக்கு,

நீ மிக்க நலத்துடன் இருப்பாய் என்று நம்புகிறேன்.. இந்த கடிதத்தை நீ வாசிக்கும் போது நான் உயிரோடு இருப்பேனா என தெரியவில்லை.

கல்லூரி நாட்களில் நீ என்னிடம் என்ன சொல்ல வேண்டுமென்று நினைத்தாயோ, அதையே நானும் உன்னிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்திருந்தேன். காலம் கடந்து விட்டது.

எனக்கு திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகி விட்டன. ஒரு மிருகத்துடன் மூன்று ஆண்டுகள் நரக வாழ்க்கை வாழ்ந்தேன். ஸ்டவ் வெடித்ததாக வெளியில் நான் கூறினாலும், உண்மையில் தீக்குளிக்க வைக்கப்பட்டேன். ஆனாலும் விதி ஏனோ ஐந்து மாதமாக என்னை விடவில்லை. யாருக்கும் தொந்தரவாக இருக்க விரும்பவில்லை. உடல் முழுவதும் தீக்காயங்களுடன் கடினம் தெரியுமா? எனவே விதியை வெல்லப் போகின்றேன்.

இந்த கடிதத்தை கடவுச் சொல் இட்டு மூடி வைத்திருந்தேன். நீ இன்றும் என் நினைவில் இருந்தால் மட்டுமே இதை திறந்து பார்த்திருக்க முடியும். எனது நம்பிக்கை வென்று விட்டது. நீ இதை படித்துக் கொண்டு இருக்கின்றாய்.

நான் உன்னிடம் சொல்ல முடியாமல் போனவைகளை என் நினைவிலேயே புதைத்துச் செல்கின்றேன். நீ இன்னும் திருமணம் முடிக்கவில்லையென்றால் விரைவில் திருமணம் முடித்துக் கொள்.

உன்னிடம் ஒரு கோரிக்கை மட்டும் வைக்க ஆசைப்படுகின்றேன்.

எனது ஒரு வயது மகள் தமிழ்ச்செல்வி எனது பெற்றோருடன் எங்கள் ஊரில் இருக்கிறாள். அவளை உன்னுடன் அழைத்துச் சென்று விடு. அவளை உன்னால் மட்டுமே சிறப்பாக வளர்க்க இயலும் என நம்புகிறேன்.

மரணத்திற்குப் பின் இரண்டு தமிழையும் ஒரே இடத்தில் பார்த்துக் கொண்டு இருக்க ஆசைப்படுகிறேன்.

எனது இந்த ஆசையையாவது நிறைவேற்றி வைப்பாயா?

அன்புடன் பவித்ரா

கடிதத்தை படித்து முடித்த போது கை,கால் எல்லாம் நடுங்கிக் கொண்டு இருந்தது. வெளியே பார்த்த போது , மழை விட்டு வானம் நிறம் மாறி இருந்தது. ஜன்னல் வழியே கீழ் வானத்தில் ஒரு நட்சத்திரம் மட்டும் என்னைப் பார்த்து பிரகாசமாக கண்சிமிட்டிக் கொண்டு இருந்தது. அறையின் விளக்கை உயிர்ப்பித்து லெட்டர் பேடை எடுத்து எழுதத் துவங்கினேன்.

அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு,

மகன் தமிழ் பிரியன் எழுதிக் கொள்வது,

நான் நலமாக இருக்கிறேன். அதுபோல் அங்கு அனைவரின் நலமறிய ஆவல். உங்களது கடிதம், பார்த்து வைத்துள்ள பெண்களின் புகைப்படங்கள் கிடைத்தன.

உங்களிடம் வெகுநாட்களாக ஒரு உண்மையை மறைத்து விட்டேன். எனக்கு மும்பையிலேயே திருமணமாகி விட்டது. இரண்டு வயதில் ஒரு மகளும் இருக்கிறாள். என் மனைவி சில மாதங்களுக்கு முன் ஒரு விபத்தில் இறந்து விட்டாள். என் மகளுக்காக வேறு திருமணம் செய்ய எண்ணியுள்ளேன்.

நீங்கள் பார்த்த பெண்களின் வீட்டில் இதைக் கூறுங்கள். இதற்கு சம்மதம் தெரிவிக்கும் பட்சத்திலேயே திருமணம் முடிக்க எண்ணியுள்ளேன். விரைவில் உங்களது பேத்தி தமிழ்ச் செல்வியுடன் ஊருக்கு வருவேன்.

அப்பா, அம்மா உடல்நலத்தைப் பார்த்துக் கொள்ளவும்.

அன்புடன் மகன்

தமிழ் பிரியன்


யூத் ஃபுல் விகடனில் வந்த பதிவு - மீள் பதிவாக இடப்படுகின்றது. பதிவு எழுத மேட்டர் கிடைக்கலைங்க மக்களே.. அதான் இந்த கொடுமை

Tuesday, March 10, 2009

ஆ.வி.. நாங்களும் ரவுடிக தான்.. ஜீப்பில் ஏறிட்டோம்ல

அச்சு ஊடகங்களில் நமது எழுத்துக்கள் வருவது என்பதே கிட்டத்தட்ட ஒரு கனவாகவே நிறைய பேருக்கு இருக்கும். அது முடியாத போது தான் ப்ளாக்குகளில் எழுதி ஒரு வடிகாலை ஏற்படுத்திக் கொண்டுள்ளோம். அச்சில் ஏற்ற முடியா விட்டாலும் இணையத்தில் எழுதுபவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது போல் விகடன் குழுமத்தின் யூத்ஃபுல் விகடன் செயல்பட்டு வருகின்றது.

நமது சக பதிவர்கள் பலரும் அதில் தங்களது படைப்புகளை அளித்து வருகின்றனர். அந்த வரிசையில் நமது கதை ஒன்றும் யூத் ஃபுல் விகடனில் வந்துள்ளது. என்னை வற்புறுத்தி எனது கதையை வாங்கி யூத்ஃபுல் விகடனுக்கு அனுப்பி வர வைத்த பெங்களூர் அக்காவுக்கு நன்றிகள்!

எனது படைப்பையும் ஏற்றுக் கொண்டு வெளியிட்ட யூத் ஃபுல் விகடனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!

http://youthful.vikatan.com/youth/tamizhpriyanstory100309.asp

விகடன் தனது இணைய தளத்தின் முகப்பில் அக்கதைக்கான தொடுப்பை அளித்துள்ளது.


http://www.vikatan.com/vc/2009/jan/vc.asp

Friday, March 6, 2009

போங்கடா..... ஆன்ட்டிப் பண்டாரங்களா - செத்துப் போனவனின் கதை.

கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகு, சோழப் பேரரசு முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டு பாண்டிய மன்னர்களின் கை ஓங்கி இருந்த காலத்திற்கு சுமார் 700 வருடங்களுக்குப் பிறகு இக்கதை தொடங்குகின்றது. அப்போது நாங்கள் சென்னையில் புறநகரில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தோம். அந்த கல்லூரியில் சிறப்பாக சொல்ல நிறைய விடயங்கள் இருந்தாலும் மிக முக்கியமான விஷயமாக எங்களுக்குப் பட்டது அது ஒரு கோ-எட் காலேஜ். கல்லூரியைச் சுற்றி பரபரப்பான ஏரியா.

கல்லூரிக்கு எதிரே விடுதி. விடுதியைச் சுற்றி வதவதவென வீடுகள். எங்கள் விடுதி இரண்டு மாடி. விடுதியை ஒட்டியே வரிசையாக ஒரே மாதிரியான வீடுகள் இருக்கும். அவற்றிற்கு ஒரே மாடி. நீளமாக இருக்கும். பலவற்றின் வீடுகளின் படிகள் வெளியே இருக்கும் என்பதால் அதன் வழியாக வந்து, விடுதியின் மேலே வந்து விடலாம். இரவு பத்து மணிக்கு மேல் விடுதி மூடப்படுமாதலால் அது தான் வழி. இரண்டாம் ஆட்டம் சினிமா போகிறவர்களுக்கு அதுதான் தினசரி வழி. அந்த லைன் வீட்டின் ஓனர் ஒரு பிரபல வக்கீல். கீழ்த் தளங்களை வாடகைக்கு விட்டுவிட்டு மேலே பாதி மாடியில் விடு கட்டி குடி இருக்கிறார். சில நேரங்களில் அவர் மாடியில் அமர்ந்து கட்சிக்காரர்களுடன் இரவு பேசிக் கொண்டு இருப்பார். அப்ப மட்டும் நம்ம பசங்க அந்த பக்கம் இறங்க மாட்டானுக., நாம அந்த வழியை எல்லாம் சோதித்து பார்த்ததில்லை... ஏன்னா நாங்க ரொம்ப நல்லவங்க

சரி நேரடியா மேட்டருக்குப் போகலாம். விடுதிக்கு அடுத்த தெருவில் ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது. அந்த ஆண்டு அங்கு சிறப்பான திருவிழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். லக்ஷ்மன்-ஸ்ருதியின் மெல்லிசைக் கச்சேரி, பட்டிமன்றம் என்று இரவு களை கட்டி இருந்தது. நம்ம மூன்றாவது வீட்டு வக்கீல் தான் திருவிழாவிற்குத் தலைமை. கல்லூரியில் அன்று மட்டும் விடுதியில் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு இருந்தது.

பசங்க எல்லாம் இரவு உணவுக்குப் பின் ரெடியாகிக்கிட்டு இருந்தோம். ஏன்னா அந்த ஏரியா பிகர்களெல்லாம் அப்ப தானே மொத்தமா ஒரே இடத்தில் பார்க்கலாம். .. ;) எல்லாரும் கிளம்பின நேரம் பரணி மட்டும் படுத்துக் கிடந்தான். என்னடான்னா அவனுக்கு தலைவலியாம்... ஊருல இருக்குற எல்லா ஸ்கூல் பொண்ணுகளையும் காலையில் வீடு to ஸ்கூல், வீடு To பஸ் ஸ்டாப் வழி அனுப்புவது தான் அவன் முதல் வேலை. அதே போல் மாலையில் vice versa. அவன் வரலைன்னா நிறைய பொண்ணுங்க வருத்தப்படுமே என்று நாங்கள் வருத்தப்பட்டுக் கொண்டே சென்று விட்டோம்.

இரவுப் பொழுது இனிமையாகக் கழிந்தது. சுமார் ஒரு மணிப் போல் சில பசங்க தூக்கம் வந்து விடுதிக்கு திரும்ப வந்துக்கிட்டு இருக்கும் போது வழியில் வக்கீல் வீட்டில் இருந்து ‘திருடன்’ ‘திருடன்’ என்று சத்தம். நம்ம பசங்க வேகமா வக்கீல் வீட்டு மாடிக்கு ஏறிப் போய் இருக்காங்க... கச்சேரியில் இருந்து ஏனோ இடையில் வக்கீல், வீட்டுக்கு வரும் போது ஹால் ஜன்னல் வழியே வெளியே மாடியில் யாரோ ஓடியது போல் இருந்திருக்கின்றது. நம்ம பசங்க மாடி பூராவும் தேடிப் பார்த்துட்டு யாரையும் காணலைன்னு சொல்லிட்டு வந்துட்டாங்க... இதில் என்ன மேட்டர் இருக்குன்னா... இதில ஒரு ஆன்ட்டி சென்டிமெண்ட் இருக்கு.. அதைக் கடைசியில் சொல்றேன். அதுக்கு முன்னாடி நம்ம பரணியைப் பற்றி தெரிஞ்சுக்குங்க...

நானும் பரணியும் ஊரிலேயே ஒண்ணா படிச்சவர்கள். தமிழ் மீடியம். ஊரிலேயே அவனுக்கு பொண்ணுக பின்னாடி சுற்றுவது தான் முழு நேர வேலையே.. ஆனால் படிப்பில் கெட்டி. +1 படிக்கும் போது எனக்கு காதல் மலர்ந்து இருந்தது. அது என்னோடு இந்தி படிக்கும் பொண்ணு. அந்த பொண்ணு பேரு.. வேண்டாமே... அதே இந்தி கிளாஸில் எனக்கு ஜூனியர் பெண்ணை பரணி லவ்ஸ் விட ஆரம்பிச்சு இருந்தான். அந்த பெண் பெயர் சுதா. இந்த இரண்டு பெண்களும் ஒரே மெட்ரிக்குலேசன் ஸ்கூலில் படிப்பதால் பிரண்ட்ஸ். வசதியான வீட்டுப் பெண்கள்.

பரணி தைரியமா சுதாகிட்ட போய் லவ்ஸை சொல்லிட்டான். அவன் துபாய் போய் வேலை செய்யப் போவதாகவும், அவனை கல்யாணம் முடித்தால் அவளுக்கும் துபாய் போகும் வாய்ப்பு கிடைக்கும் என்று சாமர்த்தியமாக பேசி இருக்கிறார். ஆனா சுதா விவரமான ஆளு... ‘எங்களுக்கு வெளிநாட்டுக்கு போற எல்லாம் வேணாம். உள்ளூர் ஆள் போதும்.. வேலையைப் பார்த்துட்டு போ’ன்னு சொல்லிடுச்சு.. பரணி வெக்ஸ் ஆகிப் போகிட்டான். ஆனா என்கிட்ட சொல்லை.

சுதா என் ஆள்கிட்ட சொல்ல அவள் வந்து என்னிடம் உளறிட்டாள்.. கொஞ்சம் லொட லொட கேஸ்.. ;))) .. அதுக்கு அப்புறம் சுதாவை நீங்க எல்லாம் பெரிய இடம்.. துபாய் போய் செட்டில் ஆகப் போறீங்க என்று கலாய்த்த கதை எல்லாம் இங்கே வாணாம்.. இதில் பாதிக்கப்பட்டது நான் தான்.. இந்த ஐடியாவை வச்சு இருந்தது நான் தான்... என் ஆள்கிட்ட இப்படிச் சொல்லி புரோபஸ் பண்ணலாம்ன்னு நினைத்து இருந்தேன். பரணி முந்திக்கிட்டு சொதப்பிட்டான்... அப்புறம் கடைசி வரை எப்படி சொல்றதுன்னு நினைச்சிக்கிட்டே கடைசி வரை சொல்லாம விட்டுட்டேன்னு வச்சுக்கங்க.. அந்த பொண்ணு இப்ப 11000 கி.மீ தள்ளி காணாமப் போய்டுச்சு..

சரி பழையக் கதைக்கு வரலாம். நம்ம பசங்க திருடனைத் தேடி மாடி பூரா சுத்தி இருக்காங்க.. ஒரு தண்ணீர் தொட்டிக்கு பின்னாடி யாரோ பதுங்கி இருப்பதைப் பார்த்ததும் எல்லாம் உசாரா அங்க போனா.. அந்த ஆள் டக்கென்று இவர்கள் காலில் விழுந்து விட்டான். பார்த்தால் நம்ம பரணி. வக்கீல் வீட்டில் இல்லாததால் வக்கீல் வீட்டுக்கு வந்தேன். திடீரென்று வக்கீல் வந்துட்டார். எஸ்கேப்பாகும் போது ஜன்னல் வழியா பார்த்துட்டார். காட்டிக் கொடுக்காதீங்கடான்னு ஒரே அழுகை. பசங்க நல்லா ஒளிஞ்சுங்க அப்புறம் தப்பி ஓடிப் போன்னு மன்னிச்சு யாரும் இல்லாத மாதிரி காட்டிக்கிட்டு வந்துட்டாங்க... மறுநாள் முதல் அவன் இறந்த 2003 மார்ச் வரை இதை வைத்து அவனைக் கலாய்த்த லூட்டி எல்லாம் காலத்தால் அழியாதது.

டிஸ்கி : கதையில் வரும் பெயர்கள் மட்டும் கற்பனையானவை.

Tuesday, March 3, 2009

சுஜாதாவின் சுவாரஸ்யமான பதில்கள் - ஏன்? எதற்கு? எப்படி?

தமிழின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான சுஜாதா இறந்து ஒரு வருடம் ஓடிப் போய் விட்டது. சமீபத்தில் அவர் வாரந்தரி ஒன்றுக்கு அளித்து வந்த கேள்வி - பதில் தொடரின் பகுதியைப் படிக்க நேரிட்டது. அதிலிருந்து சில சுவாரஸ்யமானவற்றை இங்கு தருகின்றேன். முதல் கேள்வி - பதில் பரிசல்காரருக்கு சமர்ப்பணமாகுக,... ;-)

இரா. கல்யாணசுந்தரம், மதுரை-9.

மதுரையில் ஒரு கருத்தரங்கில் மெர்வின் (தன்னம்பிக்கை நூல் வெளியிடுபவர்) பேசுகையில் 'மதுரைக்காரரா கொக்கான்னேன்' என்று பல தடவை கூறினார். 'கொக்குக்கு என்ன சிறப்பு?'

கொக்கு உறுமீன் வரும் வரையில் வாடியிருப்பது போல், மதுரைக்காரர்கள் தகுந்த சந்தர்ப்பம் வரும் வரை காத்திருப்பார்கள் என்று சொல்லியிருப்பார். எனக்குத் தெரிந்து நிஜமாகவே மதுரைக்காரர்கள் பொறுமையாகக் காத்திருந்து, வேளை வந்ததும் 'லபக்' என்று கொத்திக் கொண்டு பறந்திருக்கிறார்கள். 'கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா' என்று தனிப்பாடல் ஒன்று உண்டு. ஆகாத கொக்கை சித்தர் ஒருத்தர் வெறும் கண்ணாலேயே பார்த்து எரித்தாராம். அது போல் பத்தினி ஒருத்தியைக் கோபம்கொண்டு அவர் பார்த்தபோது, 'அப்படியெல்லாம் என்னை பஸ்மம் பண்ணிவிட முடியாது. நானா கொக்கான்னேன்‘ என்று அந்த சித்தரைப் பார்த்து பத்தினி டபாய்த்ததாகக் கேள்வி.

அ. சுஹைல் ரஹ்மான், திருச்சிராப்பள்ளி-21.

இதுவரை ஏற்பட்ட 'கடல் சூறாவளி'களிலேயே மிகப் பெரியது எது? அதன் விளைவுகள் என்ன? 'ட்ஸூனமி' என்று டி.வி-யில் சொன்னார்களே...?

'ட்ஸூனமி' என்பது ஜப்பானியச் சொல். மிகப்பெரிய அலை என்று அர்த்தம். ஒரு ஏரியில் கல் போட்டால் அலை எழுகிற தல்லவா.. அதே போல கடலில் ஏற்படும் அலைத்தொடர். கல் வெளியிலிருந்து வருவதல்ல.. கடலுக்கடியில் ஏற்படும் பூகம்பத்தின் விளைவு. இதனால் எழும் அலையின் வேகம் 200 மைலுக்கு மேல். ஜூலை 1958-ல் அலாஸ்காவில் எழுந்த (ட்)ஸூனமி அலை உயரம் 1720 அடி. இதுதான் ரிக்கார்டாம். இந்த ராட்சத குலுக்கல் அலையிலிருந்து தப்பிக்க ஊரை
ஒட்டி பிரமாண்ட அளவில் சுவர் எழுப்பி வைத்து... தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கிற ஜனங்களும் உண்டு. பூகோள ரீதியாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும்தான் இது திரும்பத் திரும்ப வருகிறது.

ஜெ. ரஜினி ராம்கி, மயிலாடுதுறை.
பெரும்பாலான தமிழ் இணைய பக்கங்களை யுனிகோடுக்கு மாற்றுவதாகச்
சொல்கிறீர்களே.. கொஞ்சம் விளக்குங்களேன்.. ப்ளீஸ்..!

யுனிகோடு என்பது உலகின் அத்தனை மொழிகளையும் கணிப்பொறியில் டிஜிட்டலாக சேர்த்து வைக்க ஏற்பட்ட குறியீடு. ஒவ்வொரு மொழிக்கும் 16 பிட் நீளமுள்ள தகவல் புலத்தை ஒதுக்கிச் சீரமைத்துள்ளது யுனிகோடு கன்ஸார்ட்டியம் என்னும் சர்வதேச அமைப்பு. இதில் இந்திய மொழிகளுக்கான ஒதுக்கீட்டை கேட்கும்போது தமிழுக்கு தரப்பட்ட இடங்களில் சில விரயமாகத் தரப்பட்டிருக்கின்றன. உதாரணமாக நாலு 'க' நமக்குத் தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்கு நாலு வகை இருக்கும். வேறு இந்திய மொழிகளை மனதில்கொண்டு இப்படிப் பண்ணியிருக்கிறார்கள் போல. ஆனால், தமிழுக்கு இது தேவையில்லை. மிச்ச மூன்று இடத்தை வேறு எழுத்துகளுக்குப் பயன்படுத்தலாம் என்பதுதான் நம் வாதம். இதில் கருத்து வேறுபாடுகளும் உண்டு.


எம். சம்பத், வேலாயுதம்பாளையம்.
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் போன்றவை நிகழும்போது, 'புண்ணிய நதிகளில் நீராடி, கடவுளை வணங்க வேண்டும்' - போன்றவை விஞ்ஞான ரீதியில் அவசியமா..?

அவசியமில்லை. கிரகணங்கள் கிரகங்களின் நிழல்கள் என்றுதான் அறிவியல் சொல்கிறது. புண்ணிய நதிகளில் நீராடல் கடவுளை வணங்குதல் என்பதெல்லாம் (மற்றோரு கேள்விக்கு பதில் சொன்னபடி) மதநம்பிக்கையைக் காரணம் காட்டி
பணம் பகிர்ந்துகொள்ளும் உத்தியே! கோயிலுக்கு வருமானம்... நதிக்கரை புரோகிதர்களுக்கு சில்லரை புரளும்!

சு. இளையவன், பிரமநாயகபுரம்.
திருக்குறளில் காமத்துப்பால் பகுதியைப் பத்தாம் வகுப்புக்கு மேலாவது பாடத் திட்டத்தில் சேர்க்கலாமே... புறக்கணிப்பது ஏன்?

சேர்க்கலாம்தான்.

'விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல், கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு'

போன்ற குறள்களைச் சொல்லிக் கொடுக்க டீச்சர் என்ன செய்வார்? 'விளக்கை அணைத்து இருளுக்கு காத்திருப்பதுபோல், கணவனின் அணைப்புக்கு காத்திருக்கிறது பசலை' என்றால் வகுப்பு சற்று டென்ஷனாகிவிடாதா?


இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட மேலைநாடுகளில் சிறுவர்-சிறுமியர் களுக்கான தந்திரக் கதைகளுக்கும் காமிக்ஸ் கதைகளுக்கும் உள்ள வரவேற்பு இந்தியாவில் இல்லாததற்குக் காரணம் என்ன?

இவ்வாறான தந்திரக் கதைகளுக்கு மேல்நாடுகளில் உள்ள வரவேற்பு இந்தியாவிலும் உள்ளது. ஆனால் இந்த வரவேற்பு ஆங்கிலத்தில் படிக்கும் மேல்தட்டுக் குழந்தைகளுக்கு மத்தியில்தான்! அண்மையில் வெளியான 'ஹாரி பாட்டர்' கதை இந்தியாவிலேயே ஒரு லட்சம் பிரதி விற்பனை ஆயிற்றாம். தமிழ் போன்ற மற்ற மொழிகளிலும் அவ்வாறான கதைகளும் படக் கதைகளும் கிடைத்தால் நிச்சயம் ஆர்வத்துடன் படிப்பார்கள். எழுதத்தான் ஆளில்லை.


கி. முருகன், மாப்பிள்ளைக்குப்பம்.

இமயமலையின் உச்சி பகுதியில் 'கடல் வாழ் தாவரங்கள்' - உள்ளதாகப் படித்தேன் - இது பற்றி...

இருபத்திரண்டரைக் கோடி வருஷங்களுக்கு முன் ஆஸ்திரேலியா பக்கத்தில் ஒரு பெரிய தீவாக இந்தியா இருந்தது. மெல்ல அது வடமேற்காக நகர்ந்தது. ஒவ்வொரு நூற்றாண்டும் ஒன்பது மீட்டர். ஒரு காலகட்டத்தில், தற்போதைய ஆசியாவிலிருந்து 6400 கிலோமீட்டர் தெற்கில் இருந்தோம். ஆசிய ஐரோப்பிய கண்டத்துடன் நாளடைவில் முட்டி மோதி ஒட்டிக்கொண்டபோது, அந்த மோதலில் எழுந்ததுதான் இமயமலை. அதனால்தான் இமயத்தின் உச்சியில் கடல் வாழ் தாவரங்களின் ஃபாசில்கள் கிடைத்தன. இன்றைய கணக்கின்படி எவரெஸ்ட் சிகரம் வருஷத்துக்கு 3 மில்லி மீட்டர் உயர்ந்து வருகிறது. 27 மில்லி மீட்டர் வடகிழக்காக நகர்கிறது. கொஞ்சம் காத்திருந்து பாருங்கள் தெரியும்.




கே. அபிஷேக், மேலகபிஸ்தலம்.
ஒரு உயிர்கூட சேதமில்லாமல் நடந்த உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி எது சார்?

உலகின் மிகப்பெரிய மீட்புப்பணி... இரண்டாம் உலகப் போரில் டன்கர்க்
சம்பவம்தான். ஜூன் 1940-ல் பிரெஞ்சு தேசத்து கடற்கரையில்
மாட்டிக்கொண்டு பின்வாங்கிய மூன்று லட்சம் பிரிட்டிஷ், அமெரிக்க, பெல்ஜிய
துருப்புக்களைப் பத்திரமாக கொண்டு சேர்த்தது இங்கிலாந்து டீம். உயிர்ச்சேதம்
இல்லை என்று உத்தரவாதமாகச் சொல்ல முடியாது. அத்தனை பிரமாண்டமான
மீட்புக்கு மிகக் குறைவான உயிர்ச்சேதம்தான்.



நீடூர் நவாஸ், பாங்காக்.

பாங்காக்கிலிருந்து 550 கிலோ மீட்டர் தூரத்தில் பர்மா எல்லையில் 'மேஸோட்' என்ற மலைப்பகுதி உள்ளது. இங்கு குறிப்பிட்ட ஓர் இடத்தில் Magic Hill என்ற போர்டு வைத்து ரோட்டில் மார்க் செய்திருக்கிறார்கள். அந்த இடத்தில் காரை
நிறுத்திவிட்டு, நியூட்ரலில் போட்டு இன்ஜினை ஆஃப் செய்துவிட்டாலும் ஐந்து கிலோ மீட்டர் வேகத்தில் சுமார் 150 அடி தூரத்துக்குச் செல்கிறது. இத்தனைக்கும் மேடான பாதை அது. அதேபோல் திரும்பி வரும்போது அந்த கோட்டுக்கு
அருகில் காரை நிறுத்தினால், கார் அப்படியே பின்னோக்கி மேட்டில் தானாகவே ஏறுகிறது. அந்த 150 அடி தூரத்தில் அப்படி என்ன புவிஈர்ப்பு மாற்றம் நிகழ்கிறது? புரியலையே சார்!

இதே போல் கலிஃபோர்னியாவில் ஒரு சுற்றுலா இடம் இருக்கிறது. சரிவோ, ஏறுமுகமோ பக்கத்தில் இருக்கும் கட்டடம் அல்லது மலை அதை ஒப்பிடும்போது, சரிவு மேடு மாதிரித் தோன்றும். இதை Perspective Dodge என்பர். எக்காரணம் கொண்டும் புவிஈர்ப்பை நம்மால் மீற முடியாது. அடுத்த முறை அங்குபோகும் போது ஒரு ஸ்பிரிட் லெவலை (கட்டடப் பணியில் பயன்படுத்தப்படும் ரசமட்டக் கோல்) எடுத்துப் போய் அந்த இடத்தில் வைத்துப் பாருங்கள்.