நான் அப்ப துபாயில் வேலை செய்ய சென்றிருந்த நேரம். நான் தங்கி இருந்த கட்டிடத்தின் இரவுக் காவலாளி ஒரு பங்களாதேஷி. ஒருநாள் என்னிடம் வந்து நான் வைத்திருந்த டேப் ரிக்காடர்ரைக் கடனாகக் கேட்டார். ஏன் என்று கேட்டதற்கு அன்று இரவு லோக்கல் எஃப்.எம்மில் வரும் சில பாடல்களை பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டார்.
அப்போது துபாயில் ஒரே ஹிந்தி FM ரேடியோ தான். 106.2 HUM FM. ஷோபியா கான், சிக்கந்தர் போன்ற சிறந்த காம்பியர்களை உள்ளடக்கியது. வாகனத்தில் செல்லும் போது FM கேட்டுக் கொண்டே செல்வது எங்களது பொழுது போக்கு. மாலையில் 5:20 க்கு மட்டும் நம்ம ஆசிப் அண்ணாச்சி ஏஷியாநெட்டில் ரேடியோவில் வருவார்கள். ... பதிவை விட்டு ரொம்ப வெளியே போயாச்சு. திரும்ப விட்ட இடத்துக்கு வரலாம்.
அந்த பங்களாதேஷி பதிவு செய்தவை முகமது ரஃபியின் பாடல்கள். அன்று ரஃபியின் நினைவு நாள் என்பதால் சிறப்பு ஒளிபரப்பாக, இசையமைப்பாளர் நெளசாத், ரஃபி குறித்த நினைவுகளை பேசினார்கள். மறுநாள் அந்த கேசட்டைக் கேட்ட போது மெய்மறந்து விட்டேன்.
முகமது ரஃபி! இந்திய சினிமா பாடல்களை அறிந்தவர்களின் வார்த்தைகளில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர். 1950 களில் ஆரம்பித்து 70 கள் வரை இந்திய சினிமாவை தனது காந்தக் குரலில் கட்டிப் போட்டவர். இசையமைப்பாளர் நெளசாத் அவர்களால் ஹிந்தி திரைவுலகில் அறிமுகம் செய்யப்பட்ட ரஃபி சுமார் 25 வருடங்கள் வரை கொடி கட்டிப் பறந்தார் என்றால் அது மிகையாகாது.
அன்னாருடைய 29 வது நினைவு தினம் வருகிற ஜூலை 31ந் தேதி வருகிறது (மறைந்த ஆண்டு 1980). அவரின் நினைவுகளை அசை போடவே இந்த பதிவு.
ரஃபி பற்றி தனித் தகவல்களை சக பதிவர் ஒருவர் பதிவாக எழுதியுள்ளார். அன்று நெளசாத் அவர்கள் பேட்டி அளித்ததில் இருந்து என் நினைவில் இருப்பவைகளை எழுதுகின்றேன்.

நெளசாத் அவர்களிடம் ஒரு சிபாரிசு கடிதத்துடம் முதன் முதலில் வந்தார் ரஃபி. அதைக் குறித்து நெளசாத் கூறிய வரிகள் இன்றும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.
* एक दिन एक नौजवान गायक मुझे आया नज़र !
जिसने रौशन कर दिए संगीत के शामो सहर !
जिक्र किसका कर रहा हूँ रफ़ी था उसका नाम !
ஒருநாள் ஒரு இளைய பாடகன் என் பார்வைக்கு வந்தான்
இசை உலகை பிரகாசிக்க வைத்தான் அவன்
நான் குறிப்பிடும் அந்த நபரின் பெயர் ரஃபி.
* ரஃபி காலத்திற்கு வருவதில் மிகவும் கவனம் செலுத்தக் கூடியவர்.
* ஒரு முறை ஒரு பாடல் பதிவு நடைபெற்றது. பகலில் பாடல் பதிவு முடிந்த திருப்தியில் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். நெளசாத் அவர்களின் வீட்டிற்கு இரவு ரஃபி வந்துள்ளார்கள்.
ரஃபி : இன்று பாடிய பாடலை மீண்டும் பாடிப் பதிவு செய்ய வேண்டும்.
நெளசாத் : ஏன்? நன்றாகத் தானே இருந்தது. இதைச் சொல்லவா இரவில் கிளம்பி வந்தீர்கள்?
ரஃபி : ஆம்.. எனக்கு பாடியதில் திருப்தி வரவில்லை. உங்களுக்குத் தேவையான உணர்வை என்னால் அப்பாடலில் தர இயலவில்லை.(जस्बात ला न सका !)எனவே மீண்டும் ஒலிப்பதிவு செய்ய வேண்டும்.
பிறகு திரும்பவும் அப்பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டதாம்.
* ஒரு கர்நாட்டிக் இசையுடன் கூடிய கொஞ்சம் கடினமாக பாடல் ஒன்று இருந்தது. (Madhuban Me Radhika )அதை வேறு ஒரு பாடகரை வைத்துப் பாட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ரஃபி விடாப்பிடியாக அதை கேட்டு வாங்கிப் பாடினாராம்.
அவரது பாடல்கள் என்றும் இந்திய இசையில் நீங்கா இடத்தைப் பெற்று என்றும் வாழும்.
அவரது பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த சில பாடல்கள்.. உங்களுக்காக.
இதில் கிடைக்காமல் போனது.... பீதே தினோம் கி யாத் சதாதி ஹை ஆஜ் பீ .. ஓ தின் பிர் கபி வாபஸ் ந ஆயேகி.. தமாம் உம்ர யோகி ரோயே ஜாயெங்கே.. என்ற பாடல். கிடைத்தால் எனக்கு லிங்க் தாருங்கள்.
...
...