Wednesday, February 17, 2010

இளமை தொட்டிலாட்டுது.. Some pages from my teenage diary

டீன் ஏஜ் டைரிக் குறிப்பு எழுதலாம்ன்னு உட்கார்ந்தாச்சு.... ஆரம்பமே இடக்காத் தான் போச்சு... டீன் ஏஜ் என்பது எந்த வயதில் இருந்து எந்த வயது வரை என்பது சந்தேகமா போச்சு.. வழக்கம் போல் ஸ்டேடஸில் கேள்வியைப் போட்டால் பல பதில்கள் வந்தன. அதில் முத்துலக்ஷ்மி அக்காவிடம் கேட்டால் Thirteen முதல் Nineteen வரையாம்... காரணம். .. இவைகளுக்கு இடையில் மட்டும் தான் Teen வருதாம்... லாஜிக்.. சினிமாவைத் தவிர எல்லாத்துக்கும் லாஜிக் பார்ப்பவர்கள் தானே நாம்... :)

கூகுளாண்டவரிடம் கேட்ட போதும் அப்படியே சொன்னதால் அப்படியே எடுத்துக்கலாம். எனவே 13 முதல் 19 வரை... அந்த காலம் (இன்றும் கூட.. ) எனக்கு ஏனோ ஒரு தாழ்வு மனப்பான்மையிலும், சோகத்திலுமே கழிந்த காலம் எனலாம். டீன் ஏஜ் டைரி என்றே தலைப்பை வைத்ததால் என் டீன் ஏஜ் டைரி ஒன்றைப் பற்றி சொல்லனும். வெளிநாட்டுக்கு வரும் போது எனது டீன் ஏஜ் நினைவுகளாக பல பொருட்கள் ஒரு டிரங்க் பெட்டியில் போட்டு வைத்து விட்டு வந்தேன். எங்கள் வீட்டைப் புதுப்பித்து கட்டும் போது எல்லாவற்றையும் எங்க ஊர் ஆற்றில் விட்டு விட்டார்களாம். அதில் இருந்த பிக்ஃபன் டைரியும், அதில் இருந்த என் வசந்த கால நினைவுகளும் தண்ணீரில் போய் விட்டது. இன்று வரை அது குறித்து ஃபீலிங் இருக்கின்றது... அதற்குப் பிறகு டைரி எழுதும் வழக்கம் இல்லை. இப்போது ப்ளாக் தான் டைரியாகிப் போனது.


1994 - 10 ஆம் வகுப்பு படிக்கும் போது
என் டீன் ஏஜ் ஆரம்பமே அலப்பறையா தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன். ஆரம்பம் மட்டும் தான்... டவுசரில் இருந்து அப்ப தான் மாமா, அண்ணன்களின்பேண்ட்டுக்கு மாறிய காலம். செருப்பு போடாமல் போய் என் நண்பன் ரிச்சர்ட் வசம் திட்டு வாங்கும் நாட்கள்.. (இருந்தா போட மாட்டமா?)

என் டீன் ஏஜ் டைரி ரெண்டு பாகமா இருக்கு.. ஒன்று உணர்வு பூர்வமானது.. இன்னொரு பொருளாதார ரீதியில்.. ரெண்டாவதை கடைசியில் சுருக்கமா சொல்லிக்கலாம். முதலாவது மட்டும் இப்ப... என்ஜாய் செய்தேன் என்று சொல்லலாம்.

வீட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தூரம் ஸ்கூல்... நடந்தே போக வேண்டும். சைக்கிள் பத்தாம் வகுப்பில் கடைசியில் தான் வாங்கிக் கிடைத்தது. அதுவரை நடராஜா தான்.. அதுவும் ஒரு இன்பம்.. சைக்கிள் வந்த பிறகு அழிச்சாட்டியங்கள் அதிகமாயின. இரு சைக்கிள் நினைவு பதிவுகள் 1, 2 . இன்னும் நினைவில் இருக்கும் சில விஷயங்கள். 9 ஆம் வகுப்பு படிக்கும் போது ஒரு மருத்துவரின் மகனான சக வகுப்பு தோழனுக்கு குழந்தை பிறப்பு பற்றி எடுத்த பாடங்கள் நினைவில் இருக்கு... ஹிஹிஹி... உடலுறவு, கருமுட்டை, கரு வளர்ச்சி, இதையெல்லாம் அப்பமே தெரிஞ்சு வச்சு இருந்து இருக்கோம்ல... ;-) ஆனா அந்த பழம் இதையெல்லாம் நம்பாதது பெரிய கூத்து.. அப்புறமா நம்பி இருக்கனும்.. ஏன்னா கல்யாணம் ஆகி அவனுக்கு குழந்தை இருக்கு.. முக்கியமா அவனை மாதிரியே பழமா... ;-))

சகட்டுமேனிக்கு பலரையும் சைட் அடித்துப் பழகவில்லை. பெண்கள் என்றாலே இன்று வரை ஒரு மரியாதை, ஒழுங்கு வைத்து இருக்கின்றேன். அதே போல் கலாய்க்கும் பழக்கமும் வரவில்லை. நிறைய நாட்கள் நூலகங்களில் கிடையாய் கிடப்பேன். தூண்டப்படாத தீபம்.

+1, +2 படிக்கும் போதே மாலையில் பொரிகடலை கடையில் சென்று வியாபாரம் செய்ய.. ப்ராக்டீஸாம்... சைட் அடித்து கடலை போட வேண்டிய வயதில் கடலைக் கடையில் வேலை... விருப்பம் இல்லாமல் செய்ய துவங்கியதால் என்னவோ இன்று வரை பணம் சம்பாதிக்கும் விஷயத்தின் மீது ஒரு வெறுப்பு வர ஆரம்பித்தது. ஆனால் காலத்தில் கட்டாயம் பணம் இல்லையேல் உலகம் இல்லை என்பது போல் மக்களின் தன்மை மாறி விட்டது.

* பள்ளியைக் கட் அடித்து விட்டு சினிமாக்களுக்கு சென்றது
* பள்ளியைக் கட் அடித்து விட்டு அருவி, ஆறுகளில் குளிக்க சென்றது.
* வடுகபட்டிக்கு சைக்கிளில் சினிமாவுக்கு போய் சைக்கிள் ரிம் உடைந்து சைக்கிளை மூன்று பேர் சேர்ந்து தூக்கி வந்தது.
* தேனியில் போய் முதல் ஹிந்தி படம் ஹம் ஆப்கே ஹைன் கெளன் பார்த்தது
* எதிர் வீட்டுப் பெண்ணின் காதலுக்கு தூது போனது


காதல்.. டீன் ஏஜியில் வரும் முக்கியமான வியாதி.. எனவே ஒன்பதாம் வகுப்பிலேயே காதல்(?) வந்து விட்டது. சொர்க்கத்தில் சேர இயலாத சொல்லாத காதல் அது. சகட்டுமேனிக்கு பலரையும் சைட் அடித்துப் பழகவில்லை. பெண்கள் என்றாலே இன்று வரை ஒரு மரியாதை, ஒழுங்கு வைத்து இருக்கின்றேன். காதல் என்றால் அவளிடம் மட்டும்... கடைசியாக +2 முடிவுகள் வந்த போது அவளைப் பார்த்தது. தான் கோவைக்கு அருகில் ஒரு பொறியியல் கல்லூரியில் சேரப் போவதாக சொன்னாள். என்னைப் பற்றிக் கேட்ட போது சஸ்பென்ஸ் என்று சொல்லி வைத்தேன். படிப்பை மூட்டை கட்டி விட்டு கடையில் வேலைக்கு போகப் போறேன் என்ற சொல்ல தன்மானம் தடுத்தது. அதுதான் அவளை இறுதியாக சந்தித்தது.

அந்த டீன் ஏஜ் நினைவில் தாக்கம் இன்று வரை விடவில்லை. சமீபத்தில் சென்ற வருட ஆரம்பத்தில் அவளின் கணவனுக்கும், அவளு(ர் விகுதி போட கை மறுக்கின்றது)க்கும் இடையே வந்த உளவியல் ரீதியான ஒரு சிறு மனமுறிவைப் பற்றி அறிந்த போது அன்றைய இரவு தூக்கம் குறைவாகி இருந்தது. ஆனாலும் அந்த பிரச்சினையின் உள்ளர்த்தம் அவள் மீதான அவளது கணவனின் அன்பின் மிகுதியே என (possessiveness) உணர்ந்த போது கொஞ்சம் திருப்தியாகவே இருந்தது.

+2 முடித்த பிறகு கடை... 17 வயது. ரெடிமேட் ஆடைகளுக்கான மூட்டையுடன் ஈரோட்டிலும், செருப்பு மூட்டைகளுடன் மதுரை நேதாஜி ரோட்டிலும் வலம் வந்த நாட்கள்... மகிழ்வைக் கொடுக்கவில்லையெனிலும் அதிகப்படியான அனுபவத்தையும், பொறுமையையும் கற்றுக் கொடுத்தது. அதற்கு அடுத்த வருடம்... சென்னை... TCS (Tata consultancy services)ல் வேலை... வெயிட்... வெயிட் பயப்பட வேண்டாம்.... தமிழ் ஹீரோவாக எல்லாம் மாறவில்லை. TCS அம்பத்தூரில் கட்டிட புதுப்பிப்பு பணியிலும், TCS சோழிங்கநல்லூரில் கட்டிட நிர்மாணப் பணியிலும் வேலை. வீட்டில் என் மீது இருக்கும் சோம்பேறி அல்லது உதவாக்கரை என்ற கருத்தாக்கம் உண்மையில்லை என்பதை நான் மட்டும் உணர்ந்து கொண்ட காலம்.

சென்னையில் தங்கி இருந்த காலங்களும் வசந்த காலங்கள் தான்... ஒரே அறையில் பத்து பேர் தங்கி இருந்தோம். ஒரே லூட்டி தான்.. வாரம் ஒரு சினிமா... அடிக்கடி மெரினா பீச்... ஹாஸ்டலில் யாருக்கும் தெரியாமல் நடந்த ஒரு நிகழ்ச்சி.. (எழுத இயலாதது).. அப்புறம் முக்கியமா ‘அந்த’ மாதிரி படம் பார்க்கனும்னு நண்பனின் வீட்டுக்கு போனால் அந்த பகுதியில் அன்று முழுவதும் கரண்ட் கட்... டென்சனின் போய் ஜெனரேட்டர் கொண்டாங்கடா என்று கத்தி கூப்பாடு போட்ட நண்பனை வலுக்காட்டயாமாக பஸ்ஸில் ஏற்றியது.

அத்தோடு என் டீன் ஏஜ் முடியவில்லை. அடுத்து 19 வது வயதில் ஸ்ஸ்ஸ்ஸ் பிளைட் பிடித்து துபாயில் இறங்கியாச்சு... துபாயில் வேலை எப்படி இருக்கும் என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். எனக்கு மேலதிகாரி ஒரு மலையாளி... ஆரம்ப நாட்களில் வேலை சக்கையைப் பிழிந்து வாங்கி விடுவார். வடிவேலு சொல்வது போல் அதுக்கு அப்புறம் வலிக்கவே இல்லை என்பது போல், எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் புலம்பிக் கொண்டே முடிக்கும் வழக்கம் வந்து விட்டது.

நண்பர்கள் சொல்லிக் கொள்ளும்படியாக அமையவில்லையென்றாலும் அதில் ரிச்சர்ட் (சென்னையில் IAS க்கு கடைசிகட்ட முயற்சியில் இருக்கிறான்), கோவிந்தராஜன் (கோவை கல்லூரியில் விரிவுரையாளர்), நாகூர் மீரான் (சென்னை - பூந்தமல்லி) முக்கியமானவர்கள். கொஞ்சமேனும் எனது உணர்வுகளை புரிந்து கொள்ளத்தக்கவர்கள்.

பொதுவான இடத்தில் பல சுவாரஸ்யமான சம்பங்களை சொல்ல இயல்வதில்லை. எல்லாவற்றையும் விரிவாக ஒவ்வொரு பதிவாக எழுதலாம்.. அம்பூட்டு மேட்டர் இருக்கு.

இதைத் தொடர சில நண்பர்களை அழைத்து இருக்கின்றேன். எழுதுங்க மக்களே.

.
.
.

22 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

மிகக்கடினமான விசயங்களை அந்த வயதில் செய்திருந்தாலும் அதையும் வடிவேலு கணக்கா எளிமையா எடுத்துக்கிட்டதுக்கு பாராட்டுக்கள்.. தீட்ட தீட்ட வைரம்.. ;)

Unknown said...

நல்ல பகிர்வு :))

வல்லிசிம்ஹன் said...

பெண்களை மதிக்கும் உணர்வு மிகவும் போற்றத் தகுந்தது தமிழ்.
உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை வளப்படுத்திவிட்டீர்கள்.
மிகவும் அருமையான நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.

ஆயில்யன் said...

//மிகக்கடினமான விசயங்களை அந்த வயதில் செய்திருந்தாலும் அதையும் வடிவேலு கணக்கா எளிமையா எடுத்துக்கிட்டதுக்கு பாராட்டுக்கள்.. தீட்ட தீட்ட வைரம்.. ;)///

இதைத்தான் சொல்லணும்ன்னு நினைச்சேன் எங்க ஊருக்காரங்க சொல்லிட்டாங்க :)


பை தி பை எப்படா வாய்ப்பு கிடைக்கும் போஸ்டலாம்ன்னு ஏங்கி கிடந்த போட்டோவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தமை - அருமை ! :)

ராமலக்ஷ்மி said...

அழகான பகிர்வு.

//தூண்டப்படாத தீபம்.//

இப்போது நிமிர்ந்து ஒளிரும் தீபம்தான். இன்னும் பிரகாசிக்க வாழ்த்துக்கள்!

ராமலக்ஷ்மி said...

@ஆயில்யன்,
//பை தி பை எப்படா வாய்ப்பு கிடைக்கும் போஸ்டலாம்ன்னு ஏங்கி கிடந்த போட்டோவுக்கு ஒரு வாய்ப்பு//

இல்லையே, நான் பதிவுலகம் நுழைந்த சமயத்தில் இதுதான் அவரது ப்ரொஃபைல் ஃபோட்டாவாக இருந்த நினைவு.

ஹுஸைனம்மா said...

//+1, +2 படிக்கும் போதே மாலையில் பொரிகடலை கடையில் சென்று வியாபாரம் செய்ய..//

ம்ம்.. வறுமை காரணமாக என் ஊரிலும் நிறைய பசங்க இப்படித்தான் துணிக்கடை/ மளிகைக்கடை என்று எதிலாவது சேர்ந்துவிடுவார்கள். வருத்தமான விஷயம்தான். இப்ப நிறைய மாறியிருக்கு.

//விருப்பம் இல்லாமல் செய்ய துவங்கியதால் என்னவோ இன்று வரை பணம் சம்பாதிக்கும் விஷயத்தின் மீது ஒரு வெறுப்பு வர ஆரம்பித்தது. ஆனால் காலத்தில் கட்டாயம் பணம் இல்லையேல் உலகம் இல்லை என்பது போல் மக்களின் தன்மை மாறி விட்டது.//

இதில் “மக்களின்” என்பதில் நீங்களும் அடங்குவீர்கள்தானே? :-)

பணம் என்பது தீக்குச்சி போல; பயன்படுத்துபவரைப் பொறுத்தது.

சந்தனமுல்லை said...

நல்லா இருந்தது...ஏற்கெனவே சில இடுகைகளில் உங்கள் சிறுவயது அலம்பல்களைச் சொல்லி இருந்தாலும்...இதில் ஹைலைட்டாக சொல்லியிருந்தது சுவாரசியம்! /* வடுகபட்டிக்கு சைக்கிளில் சினிமாவுக்கு போய் சைக்கிள் ரிம் உடைந்து சைக்கிளை மூன்று பேர் சேர்ந்து தூக்கி வந்தது.
* தேனியில் போய் முதல் ஹிந்தி படம் ஹம் ஆப்கே ஹைன் கெளன் பார்த்தது
* எதிர் வீட்டுப் பெண்ணின் காதலுக்கு தூது போனது/

:-)))))

SUFFIX said...

//மகிழ்வைக் கொடுக்கவில்லையெனிலும் அதிகப்படியான அனுபவத்தையும், பொறுமையையும் கற்றுக் கொடுத்தது//

தற்காலிக சிறு இன்பங்கள் கிடைக்கவில்லையெனிலும், இந்தப் பாடம் படித்தது என்றுமே பயனளிக்கும். பகிர்விற்கு நன்றி.

நிஜமா நல்லவன் said...

/ ஆயில்யன் said...

பை தி பை எப்படா வாய்ப்பு கிடைக்கும் போஸ்டலாம்ன்னு ஏங்கி கிடந்த போட்டோவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தமை - அருமை ! :)/



ரிப்பீட்டு....

சென்ஷி said...

நல்லா எழுதியிருக்கீங்க தல.

Unknown said...

வாசித்தோம் மகிழ்ச்சி

எம்.எம்.அப்துல்லா said...

வறுமையால் திறமையை மறைக்க முடியாது என்பதற்கு நீங்களே உதாரணம். வாழ்க!வாழ்க!

pudugaithendral said...

ஸ்டேட் மெசெஜ் நானும் பாத்தேன். கலாய்க்கறீங்களோன்னு பேசாம இருந்தேன்.

அருமையான நினைவுகள் கொண்ட பதிவு

நாஸியா said...

எவ்வளவோ கஷ்டமான விஷயங்களை ரொம்ப ஈசியா சொல்லிட்டீங்க.. ஒரு மாதிரி பாரமா இருக்கு படிக்க..

ஜஸகல்லாஹு க்ஹைர்..

நட்புடன் ஜமால் said...

நிறைய கலாய்க்கனுமுன்னு நினைச்சாலும் - ஏதோ ஒன்று நிறுத்தி வைக்கின்றது - 30 நிமிடமா கமெண்ட் பெட்டிய திறந்து வச்சிகிட்டு இருக்கேன் ஒன்றும் தட்டச்சாம

ஷாகுல் said...

நல்ல பதிவு! கொஞம் சோகம இருந்தாலும் சுவரஸ்யமா இருக்கு

அப்புறம் பாஸ் அந்த போட்டா 1984 தானே தப்பா 94 போட்டுறிகீங்க கரெக்ட் பன்னுங்க

gulf-tamilan said...

நல்லா எழுதியிருக்கீங்க!!!

Thamira said...

முதல் ஹிந்தி படம் ஹம் ஆப்கே ஹைன் கெளன் பார்த்தது//

ஸேம் பிளட்.!

சுவாரசியமாக பகிர்ந்திருக்கிறீர்கள் தமிழ்.

cheena (சீனா) said...

அன்பின் தமிழ் பிரியன் - வாழ்க்கையின் முதல் அத்தியாயம் - மனதில் ஆழப் பதிந்த ஒன்று - பிறகு வந்தவையும் இனி வரும் அத்தியாயங்களும் நன்றாக இருக்கும். இது தான் வாழ்க்கையின் நியதி

நல்வாழ்த்துகள்

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பகிர்வு... ரசித்துப் படித்தேன்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_18.html) சென்று பார்க்கவும்...

Asiya Omar said...

சுவாரசியமான எழுத்து நடை.அருமை.