Friday, November 28, 2008

ஈழம் : மாவீரர் தின உரையும், சில ஏமாற்றங்களும்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பரில் மாவீரர் தினம் கடைபிடிக்கப்படும். தமது இன்னுயிரை துச்சமாக மதித்து உயிரிழந்த வீரர்களுக்கு அவர்களின் தியாகத்தை போற்றி மரியாதை செய்யும் நாள். நவம்பர் 27 அன்று மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. வழக்கம் போல் அன்று தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவர் வே.பிரபாகரன் உரை நிகழ்த்தினார். எப்போதும் மாவீரர் தின உரை மிகவும் கூர்ந்து கவனிக்கப்படும்.

வன்னியில் கடும் போரும்,இந்தியாவில் ஏற்ப்பட்ட சூழலும் இந்த ஆண்டின் மாவீரர் தின உரையை பெரும் எதிர்பார்ப்புக்கானதாக ஆக்கியது. எனது பார்வையில் இந்த உரை மிகவும் ஏமாற்றமானதாகவே இருக்கின்றது.

உலக நாடுகளுக்கு தாங்கள் சமாதானத்தை விரும்பக்கூடியவர்கள் என்பதை சொல்லி இருப்பது நல்ல சமிக்ஞை. அதே போல் இந்தியாவிற்கும் சில தகவல்களைக் கொடுத்து இருப்பது பாராட்டத்தக்கது. பல கருத்து வேறுபாடுகள் இருந்திருந்தாலும், இந்தியாவுடன் நட்புறவு பேணுவதை விரும்புவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. (இந்தியா கிட்டத்தட்ட ஒரு ஏகாதிபத்திய மப்பிலேயே இன்னும் இருக்கின்றது)

தமிழர்களின் உணர்வுக்கும், தலைவர்களின் ஈழ மக்களுக்கான ஆதரவிற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது மீதான தடையை நீக்கக் கோரி கோரிக்கையும் அதில் வைக்கப்பட்டுள்ளது. தமது இன்னுயிரை தாய்மண்ணுக்காக ஈந்தவர்களை நினைவு கூறக் கூடியதானதாக அமைந்தது அந்த உரை.

இனி ஏமாற்றங்களை விவரிப்பதற்கு முன் சில அடிப்படை விடயங்களை தெளிவாக்கிக் கொள்ளலாம். இலங்கை மக்கள் தொகையில் 20 முதல் 25 சதவீதம் வரை தமிழ் பேசக் கூடிய மக்கள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. இலங்கைத் தமிழர்கள் பிரிந்து நிற்கும் அமைப்புகளை வைத்துப் பார்க்கும் போது தமிழர்கள் 13 சதவீதமும், முஸ்லிம்கள் 6 சதவீதமும், மலையக மக்கள் 3 சதவீதமும் இருக்கலாம்.




தமிழர்கள் வடக்கு பகுதியில் அதிகமாகவும், கிழக்கில் நிறையவும் வசிக்கின்றனர்,இதில் சமீப காலமாக தமிழர்களுக்கு சிங்கள பேரினவாத அரசு கொடுத்த நெருக்கடிகள் காரணமாக புலம் பெயர்ந்தவர்கள் நிறைய உள்ளனர். அந்த புலம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற இடங்களில் நிறைய உள்ளனர். அவர்களின் கலாச்சாரம் மெல்ல மெல்ல மாறுபாடு அடைந்து மீண்டும் ஈழத்திற்கு திரும்பக் கூடிய வாய்ப்பு மங்கி வருகின்றது. இன்னொரு தலைமுறை கடக்கும் போது புதிய சந்ததியினரிடம் தமிழ் பேசும் வழக்கமே வழக்கொழிந்து போய் இருக்கலாம்.

இது போல் புலம் பெயர்ந்து செல்ல பண, ஆள் வசதி இல்லாதவர்கள் தஞ்சம் புகுந்த இடம் தமிழ்நாடு. சில ஆயிரம் ரூபாய்களைக் கொடுத்து கடல் வழியே அகதிகளாக தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தமிழை மறக்க வில்லை. அதே நேரம் ஈழத்தில் அமைதி திரும்பினால் உடனடியாக திரும்ப ஆயத்தமாக உள்ளவர்கள். இப்படியான புலம் பெயர்தலாலும், சிங்கள அரசின் வெறி கொண்ட தாக்குதலாலும், அரசின் உணவு, மருந்து கட்டுப்பாட்டாலும் அல்லல் அடைந்து தமிழர்களின் மக்கள் தொகை இதைவிட சிறிது குறைந்தே இருக்கலாம்.

இரண்டாவது முஸ்லிம்கள்.. இவர்கள் கிழக்கில் அதிகமாகவும், வடக்கில் சொற்பமாகவும், வசிக்கின்றனர். தமிழர்கள், முஸ்லிம்களை நிலவியல் ரீதியாக பிரிக்க இயலாது. இவர்கள் அடுத்தடுத்து கலந்தே வசிக்கின்றனர். முஸ்லிம்களில் அகதிகளாக வெளியேறிச் சென்றவர்கள் மிகக் குறைவு. 90 களில் புலிகள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போது, அங்கிருந்து முஸ்லிம்கள் வலுக்காட்டாயமாக வெளியேற்றப்பட்ட போது கூட இந்தியாவோ, மற்ற உலக நாடுகளோ தஞ்சமளிக்கவில்லை. வடக்கில் இருந்து வெளியேறி கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் அதிகமாக வாழக் கூடிய பகுதிகளில் தஞ்சமடைந்தனர்.

கிழக்கில் வசிக்கக் கூடிய முஸ்லிம்கள் வியாபார நிமித்தம் கொழும்பில் நிறைய வசிக்கின்றனர். ஆனாலும் அவர்களுடைய நிரந்தர இருப்பிடமாக தங்களது சொந்த ஊரையே நினைக்கின்றனர்.

மூன்றாவதாக மலையக மக்கள். இந்தியாவில் இருந்து தேயிலைத் தோட்ட வேலைகளுக்காக கொண்டு வரப்பட்டவர்கள். இலங்கையின் மத்திய பகுதிகளில் இருக்கும் தேயிலை மலைப்பகுதிகளில் இவர்கள் இருக்கின்றனர், சுதந்திர தமிழீழத்திற்கான நில எல்லைக்குள் இவர்கள் இருக்கும் பகுதி சொற்பமே. தமிழீழம் அமையும் பட்சத்தில் இவர்கள் புலம் பெயர்ந்து தமிழீழத்திற்குள் வாழ ஏற்பாடு செய்யப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ளது.



மேலே உள்ள படத்தில் உள்ள பகுதிகள் தான் தமிழ் பேசக் கூடிய மக்கள் அதிகமாக வாழக் கூடிய பகுதிகள். அதில் கோடு கிழிக்கப்பட்டுள்ள பகுதிக்கு மேலே உள்ள பகுதிதான் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. (குத்து மதிப்பாகவே சொல்கின்றேன்) அதில் மேலே தீவைப் போல் உள்ள யாழ்ப்பாணப்பகுதி சிங்கள இராணுவத்தில் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஈழத்தில் நிரந்தர தீர்வு வேண்டுமென்றால் படத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களுக்கும் ஒரே மாதிரியான தீர்வு கிடைக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். தமிழ் பேசக் கூடிய மக்கள் அனைவரும் பிரிந்து கிடக்கின்றனர். தமிழர்களிலேயே பல பிரிவுகளில் இருக்கின்றனர். முஸ்லிம்கள் தமிழர் என்ற சொல்லவே விரும்புவதில்லை. நீங்க தமிழரா? என்று கேட்டால் அவசரமாக இல்லை முஸ்லிம என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.

தமிழீழத்திற்கு தங்களது ஆயுதங்களே தகுந்த தீர்வைத் தரும் என நம்பக் கூடிய புலிகள் முதலில் தமிழீழத்தில் உள்ள மக்களை இணைப்பதற்கான எந்த சொல்லையும் காண இயலவில்லை. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது நமது மொழி வழக்கு. தமிழ் பேசக் கூடியவர்களில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு காரணங்களுக்காக பிரிந்து கிடக்கின்ற சூழலில், அவர்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய கட்டாய சூழலில் அதற்கான ஆரம்பங்களைச் செய்ய வேண்டியதன் அவசியம் உள்ளது.

தமிழர்களை முற்றாக அழித்து விட்டு யாருக்கு தீர்வு சொல்லப் போகின்றார்கள் என்ற கேள்வியும் சிந்திக்க வைக்கக் கூடியதாக இருக்கின்றது. அதே போல் தமிழர்களின் பெரும் பகுதியை ஒதுக்கி வைத்து விட்டு யாருக்காக போராடுகின்றோம் என்ற கேள்வியும் எழுகின்றது.

வாழ்வாக இருந்தாலும், அழிவாக இருந்தாலும் அது எங்கள் கரங்களில் தான் இருக்க வேண்டும் என்று யாரும் நினைக்கக் கூடாது. அது மக்களால் கட்டமைக்கப்படும் சமூக அமைப்பிற்கு எதிரானதாக அமையும். மக்களுக்கு ஆதரவில்லாத அமைப்புகள் சமூக ஏமாற்றங்களையே தரும்.


மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.

மாவீரர் தின உரை பார்க்க

10 comments:

ராமலக்ஷ்மி said...

தமிழ் பிரியன்,
இங்கு நீங்கள் தந்திருக்கும் எல்லா தகவல்களும் எனக்குப் புதியவையே. எது எப்படியானாலும் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.

King... said...

தமிழ் பிரியன் நாளைக்கு வருகிறேன் நேரம் கிடைக்கவில்லை...

King... said...

அவர்களை கோடிட்டு காட்ட வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை...

கொழுவி said...

அண்ணே இது பிரபாகரனின் பத்தொன்பதாவது வருட உரை.. பத்தொன்பது வருடமா அவர் வருடந்தோறும் உரையாற்றுகிறார்.

இதில நீங்க ஏமாற்றமளிப்பதாகச் சொல்லியிருந்த விடயங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முதலே பிரபாகரனால் சொல்லப் பட்டு விட்டது.

அட போங்கண்ணே.. நாம் சிங்கள மக்களுக்கு எதிரிகள் அல்ல.. சிங்கள மக்களோடு நட்பு ரீதியில் வாழவே விரும்புகிறோம் என்றெல்லாம் அவர் நிறைய வருடங்களுக்கு முன்னர் சொல்லி விட்டார்.

:)-- இந்த முறைதான் முதற்தடவையாக அவரின் உரையை கேட்டால் ஏமாற்றங்கள்தான் வரும். அவரும் என்ன செய்ய முடியும்.. பாவம் :)

20 நிமிசத்தில் current issuse வைதானே அவரால பேச முடியும் :)

வேணுமென்றால் 89 இலிருந்து அவரின் உரைகளைத் தேடி எடுத்துப் பாருங்களேன்.. ஏமாற்றங்கள் தீரும் :)

ஒரே விசயத்த தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க.. பிரபாகரன் அரசியல் வாதியல்லவே.. :)

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...

தமிழ் பிரியன்,
இங்கு நீங்கள் தந்திருக்கும் எல்லா தகவல்களும் எனக்குப் புதியவையே. எது எப்படியானாலும் ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதை எவரும் மறுப்பதற்கில்லை.///
ஆமாம் அக்கா!

Thamiz Priyan said...

//King... said...

தமிழ் பிரியன் நாளைக்கு வருகிறேன் நேரம் கிடைக்கவில்லை...///
நன்றி கிங்!

Thamiz Priyan said...

///King... said...

அவர்களை கோடிட்டு காட்ட வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை...////
அவர்களும் தமிழர்களில் ஒரு பகுதி தானே?

Thamiz Priyan said...

///கொழுவி said...
அண்ணே இது பிரபாகரனின் பத்தொன்பதாவது வருட உரை.. பத்தொன்பது வருடமா அவர் வருடந்தோறும் உரையாற்றுகிறார்.
இதில நீங்க ஏமாற்றமளிப்பதாகச் சொல்லியிருந்த விடயங்கள் பத்து பதினைந்து வருடங்களுக்கு முதலே பிரபாகரனால் சொல்லப் பட்டு விட்டது.
அட போங்கண்ணே.. நாம் சிங்கள மக்களுக்கு எதிரிகள் அல்ல.. சிங்கள மக்களோடு நட்பு ரீதியில் வாழவே விரும்புகிறோம் என்றெல்லாம் அவர் நிறைய வருடங்களுக்கு முன்னர் சொல்லி விட்டார்.
:)-- இந்த முறைதான் முதற்தடவையாக அவரின் உரையை கேட்டால் ஏமாற்றங்கள்தான் வரும். அவரும் என்ன செய்ய முடியும்.. பாவம் :)
20 நிமிசத்தில் current issuse வைதானே அவரால பேச முடியும் :)
வேணுமென்றால் 89 இலிருந்து அவரின் உரைகளைத் தேடி எடுத்துப் பாருங்களேன்.. ஏமாற்றங்கள் தீரும் :)
ஒரே விசயத்த தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க.. பிரபாகரன் அரசியல் வாதியல்லவே.. :)///

நன்றி கொழுவி அண்ணே! நான் சொன்னது சிங்கள மக்களைப் பற்றியல்ல... நம் இனமான தமிழ் பேசும் மக்களைப் பற்றித்தான்... பிணக்கினால் நம்மிடமிருந்து பிரிந்து கிடக்கும் நம் உறவுகளை ஒன்று சேர்ப்பதைக் குறித்து தான் எனது கேள்வி எழுந்துள்ளது.

King... said...

தமிழ் பிரியன்...
கால் எலும்பு விலகினதுல இரண்டு நாட்கள் இணையம் வர முடியவில்லை...

ராஜ நடராஜன் said...

தமிழ் பிரியன்!நன்றாக அலசியிருக்கிறீர்கள்.இந்த அரவணைப்பும் தனித்து நின்று செயல்படுவோம் கொள்கை விடுத்து தமிழீழம் மட்டுமே குறிக்கோள் என நினைத்திருந்தால் அந்தக் கனவு எப்பொழுதோ நனவாகியிருக்கும்.பிரித்தாளும் சூழ்ச்சிக்கு எல்லோருமே பலிகடாவாகி விட்டார்கள்:(