Thursday, January 15, 2009

பொங்கல் .. ஊர் கோலம்... தெருக் கோலம்



ஊருல இருந்து வந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆச்சு.. நிறைய பதிவு எழுத மேட்டர் இருந்தும் ஏனோ எழுத உட்கார்ந்த விரல்கள் தட்டச்ச மறுக்கின்றன..:) Homesick... :) சரி பதிவு ஏதாவது போட வேண்டும் என்பதால் இந்த பதிவு.

சின்ன வயசுல நல்லாவே ஊரைச் சுற்றுவோம். சாப்பாட்டு நேரத்துக்குத் தான் வீட்டுக்கு வருவோம். மற்ற நேரமெல்லாம் தெரு சுற்றுவது தான் வேலையே... அதுவும் விசேச நாட்களில் நிறைய சுற்றுவோம். பொங்கல் நேரங்களில் தெருவில் போடும் கோலங்களைப் பார்ப்பதற்கே சுற்றுவோம். தீபாவளி நேரங்களில் தெருவில் சிதறிக் கிடக்கும் வெடிகளைப் பார்த்து யார் வீட்டில் நிறைய வெடித்துள்ளார்கள் என்பதையும் பார்த்துக் கொள்வோம்.

மாட்டுப் பொங்கல் அன்று, மாடு வைத்து இருப்பவர்கள் மாட்டைக் குளிப்பாட்டி, கொம்புகளுக்கு பெயிண்ட் அடித்து மஞ்சளெல்லாம் கட்டி வைத்திருப்பார்கள். அதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதிலும் ஒரு ஆனந்தம் இருக்கும்..:)

சரி பழைய கதையை விட்டு விட்டு புதுக் கதைக்கு வரலாம்.. இந்த ஆண்டு பொங்கல் அன்று ஊரில் இருந்தேன். பச்சரிசி வாங்கி சுவையான வெல்லத்தில் ருசியான பொங்கல் செய்து சாப்பிட்டோம். பொங்கல் கரும்பும் விரும்பி சுவைத்தோம். ரேஷன் கடையிலேயே தரமான வெல்லம், அரிசி, எல்லாம் கொடுத்து இருந்தார்கள் இலவசமாகவே... வாழ்க ஜனநாயகம்.

ரொம்ப நாள் கழித்து பொங்கல் அன்று ஊரில் இருந்ததால் மக்களின் கோலம் போடும் பழக்கதைப் பார்க்க கேமராவுடன் கிளம்பி விட்டோம்... மகனையும் அழைத்துக் கொண்டு..:)

சும்மா சொல்லக் கூடாது... ஊர் நகரமாகி, வீடுகளில் அடைக்கப்பட்டுக் கிடந்தாலும் மக்களிடம் இன்னும் கோலம் போடும் பழக்கம் இருக்கத் தான் செய்கின்றது... சில கோலங்கள் உங்கள் பார்வைக்கு... மகன் இருக்கும் முதல் கோலம் எதிர்வீட்டில் போடப்பட்டது. இரண்டாவது கோலத்தில் இருக்கும் தமிழ் உணர்வு நெஞ்சை நிறைத்தது.