Showing posts with label வரலாறு மாதிரி. Show all posts
Showing posts with label வரலாறு மாதிரி. Show all posts

Friday, July 23, 2010

லெமூரியா கண்டம் - ஒரு ஆய்வுப்பயணம் - பிம்பமாக

இன்றிலிருந்து சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இது தொடங்குகின்றது. அதாவது கிமு 1000 வது முன்னால் இருந்து என்று வைத்துக் கொள்ளலாம். இந்தியா என்ற துணைக்கண்டம் பெரும் பகுதியாக இருந்தது. இந்தியா என்று இன்று சொல்லப்படும் நிலப்பரப்புக்குக் கீழே தான் லெமூரியா என்ற ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது. இன்றைய இந்திய துணைக்கண்டம் போலவே லெமுரியாவும் மூன்று பகுதிகளிலும் நீரால் சூழப்பட்டு இருந்தது. நிலத்தின் வளத்தைப் போலவே மக்களின் மாண்பும் வனப்பாக இருந்தது.

லெமூரியா அல்லது லெமுரியா .. சுற்றிலும் கடலால் சூழப்பட்டு இருந்தாலும் நடுவே இன்று நம்மிடையே இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை போல் ”மேரு” என்ற மலைத்தொடரைத் தன் நடுவே கொண்டு இருந்தது. அதில் தேன் போன்ற சுவையை உடைய ஆறுகள் உற்பத்தியாகி ஓடின. அவைகள் கிழக்கேயும், மேற்கேயும் பெருகி ஓடி கடல்களில் கலந்தன. மலைத் தொடரிலும், அந்த ஆறுகள் ஓடிய பகுதிகளிலும் பசுமைத் தாய் தனது கரங்களை நீட்டி அந்த லெமுரியா கண்டத்தையே பசுமையாக்கி வைத்து இருந்தாள்.



இக்கண்டத்தின் ஒரு கிழக்கு முனை ஆஸ்திரேலியா கண்டத்துடனும், மேற்கு முனை ஆப்ரிக்காக் கண்டத்தை ஒட்டிய மடகாஸ்கர் வரையும் பரந்து விரிந்து கிடந்தது. கடல் மட்டத்தில் இருந்து கீழே இருந்ததால் கடலினால் ஏற்படும் தீங்குகளைத் தவிர வேறு எதுவும் இக் கண்டத்தைத் தீண்டவில்லை. இங்கு வாழ்ந்த மக்களிடையே அப்போது தான் புதிய நாகரிகங்கள் தழைத்தோங்க தொடங்கி இருந்தன.



மக்கள் இரும்பின் பயன்பாட்டை உணராத நேரமது. வலிமையான விலங்குகளின் எலும்புகளையும், மரங்களையும் தீட்டி ஆயுதமாக கொண்டு இருந்த நேரம். பெரும்பகுதி காடுகளைக் கொண்ட அந்த பகுதிகளில் விலங்கினங்களுக்கும் பஞ்சம் இருக்கவில்லை. இவைகளுக்கு நடுவே வாழ்ந்த மக்களுக்கு பாதுகாப்பு என்பது முக்கியமானதாக இருந்தது.

மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். இறைச்சியே அவர்களின் முக்கிய உணவாக இருந்து வந்தது. மீன்பிடித் தொழிலும் மிக முக்கியமானதாக இருந்தது. இது தவிர கிழங்குகள், பழங்கள் போன்றவைகளையும் உண்டு வந்தனர். அரிசி உணவே அவர்களுக்கு சில நுற்றாண்டுகளுக்கு முன்னர் தான் அறிமுகமாகி இருந்தது. இக்கண்டம் முழுதும் பலவிதமாக ஒலிக்குறிகளையுடைய பேச்சுக்கள் இருந்தன. இவைகளில் பெரும்பாலனவை தமிழ் மொழியின் மறுவுகளாக இருந்தது. மக்களிடையே கேளிக்கைகள் நிறைந்து இருந்தது. களவி ஒழுக்கம் மிக மேலானதாக பேணப்பட்டு வந்தது. பண்பிலும், கலாச்சாரத்திலும் கண்ணியமானவர்களாக இவர்கள் இருந்தனர்.

மற்றவர்களுக்கு மரியாதை செய்தல், திருடாமை, பொய் சொல்லாமை, கடின உழைப்பு, வீரம் போன்றவை சிறந்த குணங்களாகப் பார்க்கப்பட்டன. இயற்கையை தெய்வமாக வழிபாடு செய்து வந்தனர். பெரும்பாலானவர்கள் ஆற்றின் கரையோரங்களிலேயும், மலையடிவாரங்களிலும் ஊர்களை நிர்மாணித்து இருந்தனர்.

பரந்த நிலப்பரப்பாக இருந்தாலும் மக்கள் பெருக்கம் மிகக் குறைவாக இருந்தது. ஒரு பகுதியில் பரவிய நாகரீகம் மற்ற பகுதிகளுக்கு பரவ பல காலம் தேவைப்பட்டுக் கொண்டு இருந்தது. பெரிய நிலப்பரப்பாகவும், இடையே கட்டுப்பாடு அற்று ஓடும் ஆறுகள், உயரமான மலைகள் இருந்ததாலும் இக்கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு இடையேயான தொடர்பு குறைவாகவே இருந்தது.

இதே கால கட்டத்தில் ரோமானிய நாகரிகம் ஐரோப்பாக் கண்டத்தின் நாகரிகமானதாகக் கருதப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ரோமபுரியில் மன்னராட்சி நடந்து கொண்டு இருந்தது. உலகுக்கே புதிய நாகரீகத்தைக் கற்றுத் தருபவர்களாக ரோமாப்புரிக்காரர்கள் இருந்தனர். மிக குறுகிய நிலப்பரப்பாக இருந்த ரோம் நாட்டில் இருந்து கடல் வழிப்பயணம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டு இருந்தனர். அவ்வாறு கடல் வழியே கிளம்பியவர்கள் லெமுரியா கண்டத்தை வந்தடைந்த போது பிரமிக்க நேரும். லெமுரியாவின் வனப்பு அவர்களின் மனதைக் கொள்ளை கொண்டதில் மிகையில்லை.

நகர அமைப்பு, நீதி, மன்னர், படை, கட்டுப்பாடு போன்றவைகளுடன் வாழ்ந்து வந்த ரோமாபுரி கடல் பிரயாணிகளுக்கு லெமுரியாவின் சமூக அமைப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ரோமாபுரியை ஆட்சி செய்த ரொமுலஸ் அரசபரம்பரையில் வந்த சிலர் மெமுரியா கண்டத்தின் வனப்பில் மயங்கி இங்கு வந்து சேர்ந்தனர். தங்களிடம் இருந்த ஆளுமைத் திறமையைப் பயன்படுத்தி லெமுரியா கண்டத்தின் பல பகுதிகளை ஒன்றிணைத்தனர். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரோம மன்னரின் மகள் ஒருவரின் பெயர் பாண்டயா (Pandaya) என்பதாக இருந்தது. அவளது கண்காணிப்பில் கீழ் லெமுரியா கண்டம் முழுவதும் கொண்டு வரப்பட்டது. இந்த நிலப்பரப்பு அவள் பெயராலேயே வழங்கப்பட்டும் வந்தது.

கடல் கடந்து வெகு தூரம் வந்தவர்களாக இருந்ததால் ரோமானியர்கள் சொற்பமானவர்களாகவே இருந்தனர். எனவே லெமுரியாவின் மண்ணின் மைந்தர்களில் வீரமானவர்களாக இருந்தவர்களே அந்ததந்த பகுதிகளுக்கு தலைவர்களாக இருந்தனர். வியாபாரத்தையும், நாகரிகத்தையும் எல்லாப் பகுதிகளிலும் இணைப்பவர்களாக இத்தலைவர்கள் இருந்தனர். மிக வலிமை பொருந்திய ஒரு கூட்டம் மெல்ல மெல்ல லெமுரியக் கண்டத்தின் பல பகுதிகளையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. நாளடைவில் இவர்கள் இருந்த நிலப்பரப்பின் பெயராலேயே அழைக்கப்பட்டனர். பின்னர் அது
“பாண்டியன்” என்று மறுகியது.

லெமுரியா முழுவதும் பாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் வந்தது. நகரங்கள் உண்டாகின. கிராமங்கள் செம்மைப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பகுதிகளுக்கும் நிர்வாகம் செய்ய தனித்தனிஅலுவலர்களும் குறுநில மன்னர்களும் இருந்தனர். பாண்டியர்களின் தலைநகரமான மதுரை ( இன்றைய மதுரை அல்ல) உருவாக்கப்பட்டது. நாகரீகத்தின் உச்சத்தை பாண்டிய நாடு எட்டியது. தமிழ் மொழி செழித்து ஓங்கியது. ரோம், கிரேக்கம் போன்ற நாடுகளுடன் வணிகம் செய்யத் துவங்கினர். பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன. வளமும், வனப்புமாக இருந்த லெமுரியா கண்டம் கடல்கோளினால் முற்றிலும் அழிக்கப்பட்டு இன்றைய கன்னியாகுமரிக்கு தெற்கே அமைதியாக உறங்கிக் கொண்டு இருக்கின்றது. கடல் கோளில் தப்பியவர்களும், இப்போதைய தமிழ்நாட்டில் தென் பகுதியில் வசித்தவர்களும் புதிதாக ஒரு மதுரை நகரை உருவாக்கி பாண்டிய ஆட்சியைத் தொடரச் செய்தார்கள்.

டிஸ்கி : இது மாய பிம்ப வகைப் பதிவு.. இப்பதிவுக்கு என்று எந்த தரவுகளும் கிடையாது. இப்படி எல்லாம் நடந்து இருந்திருக்கலாம் என்பதாக படித்தவைகளை வைத்து சித்திகரிக்கப்பட்டுள்ளது.
...
..
.