சொல்லுங்க.. முதல் படத்தை அனுப்பலாம் என்று உள்ளேன்.. அதில் தான் பல்லைக் காட்டிக் கொண்டு சிரித்து, ஆனந்தமாய் உணர்வைக் காட்டுகின்றார் போல உள்ளது. இரண்டாவது படத்தில் முன்னால் நின்று எடுத்து இருந்தால் நன்றாக வந்து இருக்கும் போல் உள்ளது.
முதலிலேயே ஒரு விஷயத்தை சொல்லி விடுகிறேன். நான் சின்ன வயசில் இருந்தே ஒரு விவசாய விஞ்ஞானி. எங்கள் வீட்டு சந்தில் நிலக்கடலை செடியை நட்டு நாள் முழுவதும் தண்ணீர் ஊற்றி, நிலக்கடலை வந்து விட்டதா? என்று பார்த்துக் கொண்டிருந்தவன். இரவு தான் நிலக்கடலை வரும் என்ற என் நண்பனின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, மாலையில் தண்ணீர் தளும்ப, தளும்ப ஊற்றி விட்டு காலையில் வந்து பார்த்த போது. நிலக்கடலையையும் காணோம், செடியும் செத்து போய் இருந்தது.
அப்போதே முடிவு எடுத்தேன்... எப்படியாவது பெரிய விவசாயியாக மாற வேண்டும் என்று... அந்த ஆசையில் இரண்டு ஏக்கர் நிலமெல்லாம் வாங்கி கையை சுட்டுக் கொண்டது வேறு கதை...
இனி மேட்டருக்கு போகலாம்.. வாங்க
நாங்க இருக்கக் கூடிய நகரம் அரேபிய தீபகற்பத்தில் உள்ள மலைப் பிரதேசங்களில் ஒன்று. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 அடி உயரத்தில் உள்ளது. இயற்கையாகவே மலைப் பிரதேசமாக அமைந்து விட்டதால் வெயில் குறைவு. இதனால் காய்கறிகளின் விளைச்சலுக்கு ஏற்றதாக இருக்கும். நாம் வேலை செய்யும் இடத்தில் இருப்பவர்களும் அங்காங்கே தங்களுக்கு என சில இடங்களை ஒதுக்கி காய்கறிகளை நட்டு பரமாரிக்கின்றனர். விளைச்சலின் நல்ல காய்கறிகள் கிடைக்கும்... இனி ஓவர் டூ படங்கள்...
முதலில் இங்க இருக்கும் சில Landscaping படங்கள்..
ப்ளம்ஸ் செடிகள்.. கொஞ்சம் காயாக இருக்கும் போது புளிப்பாக இருக்கும். சிவந்து பழுத்து விட்டால் நன்றாக சுவையாக இருக்கும்.
அத்திப் பழ மரங்கள்.. இதில் ஆப்பிள் போல, ஆனால் கடித்து தின்ன கடினமான ஒரு காய் கிடைக்கிறது. பெயர் தெரியவில்லை. கடித்து சுவைத்து துப்பி விடலாம்.
திராட்சைத் தோட்டம்...
திராட்சை இங்க செமயா வரும். குளிர்காலத்தில் நான் இங்க வந்த போது மாதுளை, திராட்சை செடிகள் எல்லாம் இலைகளை உதிர்த்து விட்டு வெறும் குச்சியாக காட்சியளித்தன. பிப்ரவரிக்கு மேல் குளிர்காலம் முடிந்ததும் எடுத்தன விசுவரூபம்.... இந்த வருடம் செம விளைச்சலாம். (திராட்சை ஆப் சீசனில் எடுத்த படம்)
மாதுளை... விளைச்சல் அபரிமிதமாக இருந்தது. எடுத்தது, தின்றது போக மீதி பழுத்து கீழே விழத் தொடங்கி விட்டது. படத்தில் கீழே கிடப்பவை அனைத்தும் நன்றாக பெருத்து, கீழே விழுந்து வீணாகிப் போனவை. எதுவுமே அதிகமானால் இந்த நிலை தான் போல.. :(
தட்டாங்காய்... முற்றுவதற்கு முன் ஒடித்து, தேங்காய்ப்பூ, பருப்பு போட்டு சமைத்தால் செம டேஸ்ட்டா இருக்கும்ங்க
இது ஒருவகை கீரை. இங்க பாலக்ன்னு பொதுவாக சொல்றாங்க... தமிழ் நாட்டில் இந்த கீரையை சாப்பிட்டத்தில்லை. சுவையாக இருக்கும். அதோட நல்ல சத்துள்ளதாம்.
இது புரோக்கொலி என்ற ஒருவகைச் செடி. நல்ல சத்துள்ளதாம். இங்க கிலோ 15 ரியாலுக்கு விக்கிறாங்க... (சுமார் 4 டாலர்). எனக்கு இது பிடிக்கலை. பிலிப்பினோக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். துளசி டீச்சர் கூட ஒரு பதிவு போட்டாங்க. (செடி நம்ம ஊட்டு செடிதான்... ப்ரோக்கோலியின் ஒரு வகையாம். ஒரிஜினலான்னு தெரியலை. அதில் பூ இல்லாததால் உங்களுக்கு புரிய வேண்டி இணையத்தில் சுட்டு போட்ருக்கேன்)
கேப்பக் கா செடி.. மலையாளிகளின் பேவரைட் அயிட்டம்.. நமக்கு மரவள்ளிக் கிழங்கை விட அந்த சின்னதா இருக்குமே.. அதாங்க சீனிக்கிழங்கு அதான் பிடிக்கும். இதுவும் ஒரு வகைக் கீரை தான்., கீரைக்கு பின்னால் வெட்கத்தோட இருப்பது யாருன்னு தெரியுதா?... நம்ம வாழை தான். ஒளிஞ்சுக்கிட்டு இருந்த முட்டை கோஸை பிரிச்சு வச்சு இருக்கேன். ஊருல முட்டைக் கோஸை பார்த்தாலே வெறுப்பா இருக்கும். இப்ப ஹிஹிஹி.. கட்டு கட்டுன்னு கட்டுவேன்.
ஈத் விடுமுறையில் நண்பர் தமிழனையும், இன்னும் சில பதிவர்களையும் சந்திப்பதற்க்காக ஜித்தா சென்றிருந்தேன். ஜித்தாவை அடைந்து தமிழனக்கு போன் செய்த போது வந்து கொண்டிருப்பதாகக் கூறினார். ஜித்தா பஸ் நிலையத்திற்கு வெளியே ஒரு குட்டிச் சுவற்றில் அமர்ந்து காத்திருந்தேன். என் அருகில் என்னைப் போலவே ஒரு மலையாளியும் ஒருவருக்காக காத்திருந்தார். அவருடன் சம்சாரித்துக் கொண்டு இருக்கும் போது மணி ஒன்று ஆகி விட்டது எனக் கூறி அவரை சாப்பிட்டுவிட்டு வரும்படிக் கூறினேன். அவரும் 1/2 மணி நேரத்தில் சாப்பிட்டு விட்டு வந்தார். என்னையும் சாப்பிட்டுவிட்டு வரும்படி அவர் வற்புறுத்திய போது, நண்பருக்கு வாக்கு கொடுத்து விட்டேன். அவர் வரும்வரை காத்திருந்து அவருடன் தான் சாப்பிடுவேன் என்று கூறி விட்டேன். மணி இரண்டானது, இரண்டரையானது, மூன்றும் ஆகியது.
பசி சிறுகுடலைப் பெருங்குடல் தின்று கொண்டு இருந்தது. அப்போது எங்கு ஒரு சிறுவன் வந்தான். நான் அமர்ந்திருக்கும் நிலையில், என் உயரத்திற்கு கொஞ்சம் குறைவாக... “அண்ணே” “தம்பி அந்தாண்ட தள்ளிப் போ! என் நண்பனுக்காக காத்துக் கிட்டு இருக்கேன்” “அண்ணே அது வந்து....” ‘சொன்னா கேக்க மாட்டீயா? போ..போ” “அதிலைண்ணே! அது வந்து....” “தம்பி உன்னைப் பார்த்தா பாவமா இருக்கு! உன்னை மாதிரி சின்ன ப்சங்களெல்லாம் இப்படி தனியா சுத்தக் கூடாது. பிள்ளை பிடிப்பவன் தூக்கிட்டுப் போய்டுவான்... வீடு எங்க இருக்கு? உங்க அப்பா, அம்மா எங்க? ஒழுங்கா வீட்டுக்கு போ” “அண்ணே நான் சொல்வதை முழுசா கேளுங்க....” “நானே என் நண்பனுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்...உன் கதையை எல்லாம் கேக்க முடியாது.. தள்ளிப் போ..” “யோவ்! ரொம்பதான் ஓவராப் பேசிக்கிட்டு இருக்க...நானும் பொறுத்து பொறுத்து பார்த்துட்டேன்... நான் தாய்யா அந்த தமிழன்!” “அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்”
கலவை 2
தமிழ் மணத்தில் சில பதிவர்கள் சில புதுமையாக குறுக்கெழுத்துப் போட்டிகளை நடத்தத் துவங்கியுள்ளனர். அவைகளைப் பார்த்ததும் ஓடியே போய் விடுவேன். நண்பர் நிஜமா நல்லவன் சமீபத்தில் ஒரு புதிர் போட்டார். வழக்கம் போல் ஓடி வந்து விட்டேன். அப்போது சாட்டிங்கில் இருந்த சுமதி அக்கா, விடாப்பிடியாக அந்த புதிரைக் கண்டுபிடிக்கக் கூறினார்கள். இருவரும் இணைந்து விரைவிலேயே கண்டுபிடித்து விட்டோம்... சுலபமாக தெரிந்தது.
அதே போல் இலவச கொத்தனாரும், யோசிப்பவரும் புதிர் போட்டிருந்தனர். அதையும் கண்டு மிரண்டு ஓடி வந்து விட்டேன். அப்போது வடகரை வேலன் அவர்கள் அதை கண்டுபிடிக்குமாறு கூற, அதிலும் மூக்கை நுழைத்துப் பார்த்தேன். முதலில் கடினமாகத் தெரிந்தாலும், பின்னர் சுலபமாகவே இருந்தது. யோசிப்பவரின் புதிரில் ஒன்றைத் தவிர மற்றவைக்கு பதில் சொல்லி விட்டேன்.
அடுத்த தடவைகளில் நீங்களும் முயற்சி செய்யுங்கள்... கொஞ்சம் கஷ்டமாகத் தோன்றினாலும் மிகவும் சுலபமாக கண்டுபிடித்து விடலாம்...
தூங்கும் சிங்கத்தை தட்டி எழுப்பிட்டாங்க...இனி நாமலும் குறுக்கெழுத்துப் போட்டி நடத்தலாம் என்று நினைக்கிறேன்... வேண்டாமா? அப்ப இதுக்கு மட்டும் பதில் சொல்லிட்டுப் போங்க
புதிர் : 1
கரத்தைக் குறுக்கி, உழுவதின் முதல் ஓசையை மாற்றி, வேய்ந்தால் எழுதலாம் (3)
கலவை 3
ஏஷியா நெட்டில் சில நல்ல நிகழ்ச்சிகள் வரும்.. அதைப் பார்ப்பது வழக்கம்..இப்போது நமது தொலைக்காட்சியில் வருவதில்லை. அதில் மிகவும் விரும்பிப் பார்த்த நிகழ்ச்சி ஐடியா ஸ்டார் சிங்கர் நிகழ்ச்சி. இதைப் பற்றி ஒரு பதிவு கூட முன் காலத்தில் இட்டேன்.
இசையில்லாத அல்லது குரலுக்கு அதிகம் முக்கியத்துவம் உள்ள பாடல்களை மட்டுமே விரும்பி ரசிப்பேன்... அந்த வரிசையில் கானா அண்ணனின் ஒரு பதிவின் மூலம் கிடைத்த இந்த பாடல் எனது ஆல் டைம் பேவரைட் லிஸ்ட்டில் சமீபத்தில் இடம் பிடித்துள்ளது. ( மொத்தமே 20, 25 பாடல்கள் தான் பேவரைட் லிஸ்ட்டில்)... நீங்களும் துர்கா விஸ்வநாத்தின் இந்த பாடலை ரசியுங்கள்... கடைசியில் வரும் லாலால்லால்ல்ல்லால்லால்லா வை விட்டு விடாதீர்கள்.
விரைவில் டிஜிட்டல் கேமரா வாங்கலாம் என்று எண்ணியுள்ளேன். சமீபத்தில் நந்து சார் எடுத்த நிலாவின் படங்கள் மனத்தைக் கொள்ளை கொண்டு விட்டது. அவர் போல் புரொபஷனலாக எடுக்க இயலா விட்டாலும் கற்றுக் கொள்ளும் முயற்சியிலாவது இறங்கலாமே என்று தான். ஒரு பதிவுலக கேமரா நண்பரின் ஆலோசனைப் படி Panasonic Lumix DMC-FZ18 என்ற கேமரா பட்ஜெட்டுக்குள் வரும்போல் தெரிகின்றது.
விரைவில் பதிவர் உலகில் ஒரு புதிய கேமராமேன் உருவாகலாம்... எச்சரிக்கை.
எங்கள் ஊரில் சிறுவர்கள் விளையாடும் போது ஒன்னும் உதவாத உதவாக்கரைகளை ஆட்டத்தில் சேர்க்க மாட்டார்கள். அது போல தான் PIT போட்டிக்கு நம்ம புகைப்படங்கள். நி.நல்லவன் அண்ணன் மாதிரி காசு போட்டெல்லாம் கேமரா வாங்கலை. செல் போனை வைத்து எடுப்பது தான் எல்லாம்..... :)))) இருட்டை வைத்து PIT போட்டிக்கு போட்டோ எடுக்க இருட்டான இடங்களில் எல்லாம் பேய் மாதிரி சுத்தி போட்டோ எடுத்ததில் தேறியது இவை தான்.
1. இந்த பூனையை போட்டோவுக்கு போஸ் கொடுக்க செய்வதற்கு பொறிச்ச கோழியும், வறுத்த மீனும் கேக்குது.... என்ன கொடுமைங்க இது....
2. பணி செய்யும் இடத்தில் இயந்திர அறையில் நண்பர் ஒருவர் இருட்டில் வெளிச்சத்துடன் விளையாடிக் கொண்டு இருந்த போது கிளிக்க்கியது.
3. இவர் கொஞ்சம் சமத்தானவர். கோழி மீனெல்லாம் கேக்கலை. ஆனா போஸ் கொடுக்காம ஓடி ஓடி போனவர்.