நீல நிறத்தில் இருப்பது ஆங்கிலத்திலும், கறுப்பு நிறத்தில் இருப்பது தமிழிலும் இருப்பதாக நினைத்துக் கொண்டு வாசிக்கத் துவங்குங்கள்.. இது ஒருவகையான Anti-Post modernism வகையிலான முயற்சி. புரியாதவர்கள் மட்டும் தமிழ் மணத்திலும், தமிழிஷிலும் வாக்களித்துச் செல்லவும்... ;-)) அன்புடன் தமிழ் பிரியன்.)
ஜானுக்கு என்றைக்கும் இல்லாத ஒரு பரபரப்பு இன்னைக்கு இருந்தது. மதிய வேளைஅலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு வேகமாக விரைந்து கொண்டு இருந்தார். வேகமாக நடந்ததால் கொஞ்சம் மூச்சிரைக்க ஆரம்பித்து இருந்தது. குளிரால் அனைவரும் நடுங்கிக் கொண்டே நடந்து கொண்டு இருந்தனர். வயசும் 55 ஐ தாண்டிக் கொண்டு இருக்கிறதே..... khyber pass road போக்குவரத்து வர வர அதிகமாகிக் கொண்டே செல்வதாகவே அவருக்குப் பட்டது. “ஆக்லாந்தின் வாகன எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது” என முணுமுணுத்துக் கொண்டார். New Market பகுதியில் இருந்த ஒரு கடையில் பேரன் பேத்திகளுக்காக சில விளையாட்டுப் பொருட்களையும், திண்பண்டங்களையும் வாங்கிக் கொண்டார்.
மாயக்காளைக்கு அந்த அதிகாலை வேலையிலும் வேர்த்து ஒழுக ஆரம்பித்து இருந்தது. அக்னி நட்சத்திர வெயில் நேரம் என்பதால் தனது மாட்டு வண்டியை வேகமாக ஓட்டிக் கொண்டு இருந்தார். காலை நேரம் சீக்கிரமே புலர்ந்து கொண்டு இருந்தது. வெயில் வருவதற்குள் உசிலம்பட்டியை அடைந்து விட்டால் கீரைக்கட்டுகளை வேகமாக விற்று விடலாம் என்பது அவரது எண்ணம். கீரை கட்டுகளும், காய்கறிகளும், இரண்டு ஆட்டுக் குட்டிகளும் அவரது மாட்டு வண்டியை நிறைத்திருந்தது. இந்த இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் விற்று விட்டு, மகளுக்கு சீர் செய்து சமாளிக்க வேண்டும் என்பது மாயக்காளையின் எண்ணம்.ஜானின் நடை Boston road Railway station ஐ நோக்கி விரைவாக இருந்தது... அவருக்கு Avondale அருகில் உள்ள வீட்டிற்கு ரெயிலில் செல்ல வேண்டிய அவசரம். கைகளில் இருந்த Shopping bag களின் கனம் வேறு அவரது நடைக்கு தடையாக இருந்தது. இருந்தாலும் அமெரிக்காவில் வசிக்கும் மகள் பேரன் பேத்திகளுடன் வருகிறாள் என்ற மகிழ்ச்சி அவரது நடையில் ஒரு மிடுக்கையே கூட்டி இருந்தது. சில நாட்களாக பராமரிப்பு வேலைகளால் பொழிவிழந்து இருந்த ரெயில் நிலையம் இப்போது கொஞ்சம் களையாக தெரிந்தது. அதே காரணத்திற்காக ரெயில் நிறுத்தப்பட்டிருந்த போது போது காரில் வந்து, பார்க்கிங்கிற்காக karangahape road க்கு ஓடிய நாட்களை நினைத்துக் கொண்டார்.
மாயக்காளையால் மோசமான ரோட்டால் மாடுகளை வேகமாக செலுத்த இயலவில்லை. வண்டி கன்னாபட்டி, செக்காபட்டியைக் கடந்து போய்க் கொண்டு இருந்தது. ரோடு போட்டால் ஒரே வருடத்தில் பிய்த்துக் கொண்டு போய் விடுகின்றது. எல்லாம் அரசியல்வாதிகளின் கமிஷன் செய்யும் வேலை என நினைத்துக் கொண்ட போது ஆத்திரமே வந்தது. தேர்தல் நேரத்தில் அவர்கள் செய்யும் கூத்தும் அவரின் கோபத்திற்குக் காரணம்.
ஜான் ரெயில் நிலையத்திற்கு அருகில் நெருங்கிக் கொண்டு இருந்த போதுதான் அது நிகழ்ந்ததது.. டமார் என்ற பலத்த சத்தம்.. எங்கிருந்தோ வேகமாக வந்த வண்டி அவரின் மீது மோதி அவரை வீழ்த்தியது.... Oh! My god என்ற அலறல் மட்டும் கேட்டது.செங்க மங்கலாக காலைப் பொழுது புலர்ந்து கொண்டு இருந்தது. உசிலம்பட்டி ரெயில்வே கேட்டை மாயக்காளையின் மாட்டு வண்டி நெருங்கி இருந்தது. பின்னே கேட்ட ஹார்ன் சத்தத்தால் மீது சென்று கொண்டு இருந்த மாயக்காளை திரும்பிப் பார்த்த போது மிக வேகமாக ஒரு லாரி அவரது வண்டியை நோக்கி வந்து கொண்டு இருந்தது... லாரியின் பிரேக் பெயிலியர் என்பதை புரிந்து கொள்ள சில வினாடிகளே தேவைப்பட்டது. வேகமாக மாடுகளை முடுக்கி விட்டார்.. ஆனாலும் லாரி அதி வேகத்தில் மாட்டு வண்டியின் மீது மோதி வண்டியை தூக்கி விசிறி அடித்தது.. ஐயோ.. அம்மா என்ற அலறலுடன் மாயக்காளை தூக்கி விசிறியடிக்கப்பட்டிருந்தார்.
அவர் அரை மயக்கத்தில் விழித்துப் பார்த்த போது ரெயில்வே கேட்டுக்கு அருகில் கிடந்தார். அவருக்கு அருகில் கீரைக்கட்டுகளும், காய்கறிகளும் சிதறிக் கிடக்க ஆடு ஒன்று காயத்துடன் கதறிக் கொண்டு இருந்தது. அவர் வாழ்க்கையில் கண்டிராத வெயில் அவரைத் தாக்கிக் கொண்டு இருந்தது. வாய் இம்சையில் முணுமுணுத்தது "where am i" “where is my shopping bags?"
குளிரால் அவரது உடல் நடுங்கிக் கொண்டு இருந்தது... அவர் இதுவரை கண்டிராத ஒரு இடத்தில் காயங்களுடன் கிடக்க, ஆம்புலன்ஸின் சத்தம் அசரீரியாக கேட்டுக் கொண்டு இருந்தது.. அவரைச் சுற்றி சில பொம்மைகளும், சாக்லெட்களுடம் கிடக்க ஈணஸ்வரத்தில் முனங்கினார்.. “என்னோட மாட்டு வண்டி, ஆடு, மாடு எல்லாம் எங்க போச்சு?.. இப்ப நான் எங்க இருக்கேன்?”.
படங்கள் நன்றி : ப்ளீக்கர் இணையம்.