Friday, July 30, 2010

சமிக்ஞைகளும், குடும்ப ரகசிய மொழியும்

குடும்பத்தில் சமிக்ஞைகள்(Signals) ரொம்ப முக்கியமானவை. பல நேரங்களில் இதன் முக்கியத்துவம் தெரிய வரும். சமிக்ஞைன்னா என்னவா? அதைத் தானே சொல்லப் போறோம்.... பொதுவா பொதுவெளியில் பேசும் போது எல்லாருக்கும் புரியக் கூடிய மொழியில் பேசினால் அது செய்தி ஆகி விடும். பொதுவெளியில் பேச, தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் அது நம்மைத் தவிர மற்றவர்களுக்குப் புரியக் கூடாது. அதான் நாம் பேசுவது, தெரிவிப்பது என்கிரிப்ட் (Encrypt) முறையில் இருக்க வேண்டும். இதுதான் லாஜிக்.

இதன் அவசியம் என்னவென்று பார்த்தால்.... வெளியே நாம் செல்லும் போது, மற்றவர்களுக்கு மத்தியில் இருக்கும் போது அல்லது இணைய வழியாக மிக முக்கிய ரகசியங்கள் உள்ள மின்னஞ்சல் அனுப்பும் போது இதைப் பயன்படுத்தலாம். இது படிப்பவர்களைத் தவிர யாருக்கும் புரியாது.

எங்கள் வீட்டில் எந்த அறிவியலும் கற்றுக் கொடுக்காமலேயே இந்த முறையை பல காலமாக கையாண்டு வருகின்றோம். எங்கள் பாரம்பரியம் திருநெல்வேலி மாவட்டத்துடன் தொடர்புடையது. எங்கள் தாத்தா,பாட்டி திருமணம் முடிந்து எங்கள் பெரியப்பா பிறக்கும் வரை வாசுதேவநல்லூர் என்ற எங்கள் பரம்பரை ஊரில் இருந்து இருக்கின்றார்கள். பின்னர் பிழைப்புக்காக இப்போது இருக்கும் ஊருக்கு வந்து இருக்கின்றார்கள். வரும் போது எதையும் கொண்டு வரவில்லையென்றால் பல பழக்க வழக்கங்களை எங்கள் குடும்பத்துக்கு என்று மட்டும் விட்டுச் சென்றுள்ளனர்.

சமிக்ஞை இரண்டு வகை. ஒன்று உடல் மொழி இரண்டாவது சொற்கள் வழியிலான மொழி. உடல் மொழி நிறைய பேருக்கு தெரிந்தது தான். கண் பார்வை, கை அழுத்தம், கால் மிதி போன்றவை. ஏதாவது ஒரு விஷயம் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது, நாம் அவரைப் பார்த்தால் திடீரென்று அப்பா கண்ணை இறுக மூடித் திறப்பார். அதாவது அந்த குறிப்பிட்ட விஷயம் குறித்து இவருடன் பேசக் கூடாது என்றுஅர்த்தம். அப்பாவுடனும், மற்றவர்களுடனும் பேசிக் கொண்டு இருப்போம். திடீரென்று அப்பா நம் கையைப் பற்றி உள்ளங்கையில் ஒரு அழுத்து அழுத்துவார். இனி நாம் பேசக் கூடாது அல்லது நாம் தான் பேச வேண்டும்.. இது போல் இன்னும் சில குறியீடுகள் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் வரும். சமய சந்தர்ப்பத்திற்கு தகுந்தாற் போல் அர்த்தம் மாறும். சில சமயம் இதில் தவறு நடக்கும் போது வீட்டிற்கு வந்ததும் விளக்கம் கிடைக்கும்.

சில நேரங்களில் எதிராளி நம்மை விட கொஞ்சம் விவரமான ஆளாக இருந்தால் நமது சமிக்ஞைகள் புரிந்து விட வாய்ப்பு இருக்கின்றது. அல்லது தூரமாக இருந்தாலோ, அப்பாவை நேரடியாக பார்க்கும் விதத்தில் இல்லாமல் இருந்தாலோ அந்த சூழலில் இரண்டாவது மொழி பயன்படும். இது இந்தி போல் வேறு மொழியா என்றால் அதுதான் இல்லை. எங்கள் வீட்டில் தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. அப்புறம் அது என்ன மொழி? அதுதான் ரகசிய மொழி. சுமார் 25, 30 வார்த்தைகள் தான் இருக்கின்றன இம்மொழிக்கு. இது எந்த மொழியுடன் தொடர்பு இல்லாத வார்த்தைகள். இந்த வார்த்தைகளை வைத்து நேரத்திற்கு தகுந்தாற் போல் சங்கேத தகவல்களைத் தெரிவித்து விடலாம்.


ரொம்ப முக்கியமானது எங்கள் குடும்பத்தைத் தவிர வேறு ஆட்களுக்கு இம்மொழி தெரியாது. இதை நாமே உருவாக்கலாம். உங்கள் குடும்பத்திற்கான சங்கேத மொழியை நீங்களே உருவாக்கி உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தந்து பழக்கலாம். நல்லது, கெட்டது, கொடு, கொடுக்காதே, பணம், கெட்டவன், நல்லவன், கண்டுகொள்ளாமல் இரு, இவன், அவன் இன்னும் இது போன்ற பொதுவாக வெளியில் சொல்லக் கூடிய வார்த்தைகளுக்கு சங்கேத வார்த்தை இருக்க வேண்டும்.

எடுத்துக்காட்டுக்கு நல்லது , கெட்டது என்ற வார்த்தைகளை மட்டும் எடுத்துக் கொள்வோம். கயழி, பசிறு என்ற வார்த்தைகளை இவைகளுக்கு முறையே சங்கேத வார்த்தையாக பாவித்துக் கொள்வோம். கடையில் இருக்கிறோம். பொருள் நல்ல பொருள் என்று தெரிகின்றது. நாம் ‘கயழி போல இருக்கு’ என்று நமக்குள் பேசிக் கொண்டால் கடைக்காரருக்கு நாம் என்ன சொல்கிறோம் என்று தெரியாது. எனவே நாம் பேரம் பேசும் போது நம்முடைய உணர்வு அவருக்குப் புரியாது. அதாவது பிடித்து வாங்க வேண்டும் என்று நினைக்கிறோமா?, இல்லையா? என்று அவர் திணறுவார். அதைப் பயன்படுத்தி பேரத்தைக் குறைக்கலாம்.

அதே போல் வேறு ஒரு இடத்தில் இருக்கிறோம். நம் முன் இருக்கும் ஆள் சரியில்லை போல் தோன்றுகின்றது. நம்முடன் இருக்கும் மனைவிக்கோ, மகனுக்கோ உணர்த்த வேண்டும். ‘ ஆள் பசிறு’ என்று எங்கோ பார்த்து நாம் சொன்னால் உடனே அவர்கள் புரிந்து கொண்டு கவனமாக இருக்கலாம். எதிராளிக்கும் நாம் என்ன சொன்னோம் என்பது புரியாது.

இதில் மிக முக்கியமானது சங்கேத வார்த்தைகளை நாம் பேசும் போதும், கேட்கும் போது மற்றவர்களுக்கு புரியும் வண்ணம் தெளிவாகப் பேசக் கூடாது. கொஞ்சம் கம்மலாக பேச வேண்டும். அதோடு முக பாவம் ரொம்ப முக்கியம். நல்லதுக்காக முகம் மலர்ந்தும் சொல்லக் கூடாது, கெட்டதுக்காக முகத்தை சுறுக்கியும் சொல்லக் கூடாது. சங்கேத வார்த்தைகள் தயாரித்தலும், அதைப் பழக்குப்படுத்தலும், உடல் மொழியை உணர வைத்தலும், முக பாவத்தை ஒழுங்குபடுத்துதலும் ஏதோ படிக்க, கேட்க பெரிய விஷயமாக தெரியலாம். ஆனால் இது மிக மிக சுலபமானது. கிட்டத்தட்ட நம் இணையத்தில் சாட்டில், டிவிட்டரில், பஸ்ஸில் பேசிக் கொள்ளும் சங்கேத வார்த்தைகள் போல் தான். எங்கள் வீட்டில் பண விபரம் குறித்து பேசும் போது ஒவ்வொரு எண்ணுக்கும் ஒவ்வொரு குறிப்பிட்ட ஆங்கில எண் வைத்துத் தான் பேசுவோம்.

இதே போல் நமது குடும்பத்தினருக்கு மட்டும் புரியும் வண்ணம் ஒரு சிறு அகராதியை உண்டாக்கி வாரத்திற்கு இரு வார்த்தைகள் என்ற வீதத்தில் பேசிக் கொண்டே வந்தால் சில மாதங்களில் அதில் நிபுணத்துவம் அடைந்து விடலாம்.

எங்கள் வீட்டில் சில நேரங்களில் இது பிரச்சினையாகும். எப்படி? வீட்டிற்கு புதிதாக மருமகள் வந்தால் அவர்களுக்கு இந்த மொழிகள் எல்லாம் புரியாது. அவர்களுக்கும் கொஞ்ச நாட்களில் இந்த மொழியைக் கற்றுக் கொடுத்து விடுவோம். வேறு வழி இல்லாத கட்டாயத்தால் அவர்களும் கற்றுக் கொள்வார்கள். எனக்கும் கூட திருமணமான புதிதில் சில நேரங்களில் திண்டாட வேண்டி வந்தது. பின்னர் என் மனைவிக்கு இவைகளை விளக்கி கற்றுக் கொடுக்க வேண்டி வந்தது. இப்போது என் அம்மாவுடன், அக்காவுடன் வெளியே சென்றால் என் மனைவியும் இப்படிப் பேசக் கற்றுக் கொண்டு விட்டாள்.

நீங்களும் உங்கள் வீட்டில் இப்படியான ஒரு அகராதியை உருவாக்குங்கள். எந்த வார்த்தைக்கும் அதன் அர்த்தத்துடன் தொடர்பு இருக்கக் கூடாது. முதலில் சுவாரஸ்யமாக ஜாலியாக பழகுங்கள். பின்னர் பழக்கத்தில் வந்து அதுவே நல்ல பலன் தரும்.

டிஸ்கி : இதில் குறிப்பிட்டு இருக்கும் சில வார்த்தைகள் எங்கள் அகராதியில் இலலாதவை. எடுத்துக்காட்டுக்காக மட்டும் பயன்படுத்தி உள்ளேன்.

Friday, July 23, 2010

லெமூரியா கண்டம் - ஒரு ஆய்வுப்பயணம் - பிம்பமாக

இன்றிலிருந்து சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னால் இது தொடங்குகின்றது. அதாவது கிமு 1000 வது முன்னால் இருந்து என்று வைத்துக் கொள்ளலாம். இந்தியா என்ற துணைக்கண்டம் பெரும் பகுதியாக இருந்தது. இந்தியா என்று இன்று சொல்லப்படும் நிலப்பரப்புக்குக் கீழே தான் லெமூரியா என்ற ஒரு பெரும் நிலப்பரப்பு இருந்தது. இன்றைய இந்திய துணைக்கண்டம் போலவே லெமுரியாவும் மூன்று பகுதிகளிலும் நீரால் சூழப்பட்டு இருந்தது. நிலத்தின் வளத்தைப் போலவே மக்களின் மாண்பும் வனப்பாக இருந்தது.

லெமூரியா அல்லது லெமுரியா .. சுற்றிலும் கடலால் சூழப்பட்டு இருந்தாலும் நடுவே இன்று நம்மிடையே இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை போல் ”மேரு” என்ற மலைத்தொடரைத் தன் நடுவே கொண்டு இருந்தது. அதில் தேன் போன்ற சுவையை உடைய ஆறுகள் உற்பத்தியாகி ஓடின. அவைகள் கிழக்கேயும், மேற்கேயும் பெருகி ஓடி கடல்களில் கலந்தன. மலைத் தொடரிலும், அந்த ஆறுகள் ஓடிய பகுதிகளிலும் பசுமைத் தாய் தனது கரங்களை நீட்டி அந்த லெமுரியா கண்டத்தையே பசுமையாக்கி வைத்து இருந்தாள்.



இக்கண்டத்தின் ஒரு கிழக்கு முனை ஆஸ்திரேலியா கண்டத்துடனும், மேற்கு முனை ஆப்ரிக்காக் கண்டத்தை ஒட்டிய மடகாஸ்கர் வரையும் பரந்து விரிந்து கிடந்தது. கடல் மட்டத்தில் இருந்து கீழே இருந்ததால் கடலினால் ஏற்படும் தீங்குகளைத் தவிர வேறு எதுவும் இக் கண்டத்தைத் தீண்டவில்லை. இங்கு வாழ்ந்த மக்களிடையே அப்போது தான் புதிய நாகரிகங்கள் தழைத்தோங்க தொடங்கி இருந்தன.



மக்கள் இரும்பின் பயன்பாட்டை உணராத நேரமது. வலிமையான விலங்குகளின் எலும்புகளையும், மரங்களையும் தீட்டி ஆயுதமாக கொண்டு இருந்த நேரம். பெரும்பகுதி காடுகளைக் கொண்ட அந்த பகுதிகளில் விலங்கினங்களுக்கும் பஞ்சம் இருக்கவில்லை. இவைகளுக்கு நடுவே வாழ்ந்த மக்களுக்கு பாதுகாப்பு என்பது முக்கியமானதாக இருந்தது.

மக்கள் குழுக்களாக வாழ்ந்து வந்தனர். இறைச்சியே அவர்களின் முக்கிய உணவாக இருந்து வந்தது. மீன்பிடித் தொழிலும் மிக முக்கியமானதாக இருந்தது. இது தவிர கிழங்குகள், பழங்கள் போன்றவைகளையும் உண்டு வந்தனர். அரிசி உணவே அவர்களுக்கு சில நுற்றாண்டுகளுக்கு முன்னர் தான் அறிமுகமாகி இருந்தது. இக்கண்டம் முழுதும் பலவிதமாக ஒலிக்குறிகளையுடைய பேச்சுக்கள் இருந்தன. இவைகளில் பெரும்பாலனவை தமிழ் மொழியின் மறுவுகளாக இருந்தது. மக்களிடையே கேளிக்கைகள் நிறைந்து இருந்தது. களவி ஒழுக்கம் மிக மேலானதாக பேணப்பட்டு வந்தது. பண்பிலும், கலாச்சாரத்திலும் கண்ணியமானவர்களாக இவர்கள் இருந்தனர்.

மற்றவர்களுக்கு மரியாதை செய்தல், திருடாமை, பொய் சொல்லாமை, கடின உழைப்பு, வீரம் போன்றவை சிறந்த குணங்களாகப் பார்க்கப்பட்டன. இயற்கையை தெய்வமாக வழிபாடு செய்து வந்தனர். பெரும்பாலானவர்கள் ஆற்றின் கரையோரங்களிலேயும், மலையடிவாரங்களிலும் ஊர்களை நிர்மாணித்து இருந்தனர்.

பரந்த நிலப்பரப்பாக இருந்தாலும் மக்கள் பெருக்கம் மிகக் குறைவாக இருந்தது. ஒரு பகுதியில் பரவிய நாகரீகம் மற்ற பகுதிகளுக்கு பரவ பல காலம் தேவைப்பட்டுக் கொண்டு இருந்தது. பெரிய நிலப்பரப்பாகவும், இடையே கட்டுப்பாடு அற்று ஓடும் ஆறுகள், உயரமான மலைகள் இருந்ததாலும் இக்கண்டத்தில் வாழ்ந்த மக்களுக்கு இடையேயான தொடர்பு குறைவாகவே இருந்தது.

இதே கால கட்டத்தில் ரோமானிய நாகரிகம் ஐரோப்பாக் கண்டத்தின் நாகரிகமானதாகக் கருதப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ரோமபுரியில் மன்னராட்சி நடந்து கொண்டு இருந்தது. உலகுக்கே புதிய நாகரீகத்தைக் கற்றுத் தருபவர்களாக ரோமாப்புரிக்காரர்கள் இருந்தனர். மிக குறுகிய நிலப்பரப்பாக இருந்த ரோம் நாட்டில் இருந்து கடல் வழிப்பயணம் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டு இருந்தனர். அவ்வாறு கடல் வழியே கிளம்பியவர்கள் லெமுரியா கண்டத்தை வந்தடைந்த போது பிரமிக்க நேரும். லெமுரியாவின் வனப்பு அவர்களின் மனதைக் கொள்ளை கொண்டதில் மிகையில்லை.

நகர அமைப்பு, நீதி, மன்னர், படை, கட்டுப்பாடு போன்றவைகளுடன் வாழ்ந்து வந்த ரோமாபுரி கடல் பிரயாணிகளுக்கு லெமுரியாவின் சமூக அமைப்பு மிகவும் வித்தியாசமாக இருந்தது. ரோமாபுரியை ஆட்சி செய்த ரொமுலஸ் அரசபரம்பரையில் வந்த சிலர் மெமுரியா கண்டத்தின் வனப்பில் மயங்கி இங்கு வந்து சேர்ந்தனர். தங்களிடம் இருந்த ஆளுமைத் திறமையைப் பயன்படுத்தி லெமுரியா கண்டத்தின் பல பகுதிகளை ஒன்றிணைத்தனர். இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட ரோம மன்னரின் மகள் ஒருவரின் பெயர் பாண்டயா (Pandaya) என்பதாக இருந்தது. அவளது கண்காணிப்பில் கீழ் லெமுரியா கண்டம் முழுவதும் கொண்டு வரப்பட்டது. இந்த நிலப்பரப்பு அவள் பெயராலேயே வழங்கப்பட்டும் வந்தது.

கடல் கடந்து வெகு தூரம் வந்தவர்களாக இருந்ததால் ரோமானியர்கள் சொற்பமானவர்களாகவே இருந்தனர். எனவே லெமுரியாவின் மண்ணின் மைந்தர்களில் வீரமானவர்களாக இருந்தவர்களே அந்ததந்த பகுதிகளுக்கு தலைவர்களாக இருந்தனர். வியாபாரத்தையும், நாகரிகத்தையும் எல்லாப் பகுதிகளிலும் இணைப்பவர்களாக இத்தலைவர்கள் இருந்தனர். மிக வலிமை பொருந்திய ஒரு கூட்டம் மெல்ல மெல்ல லெமுரியக் கண்டத்தின் பல பகுதிகளையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. நாளடைவில் இவர்கள் இருந்த நிலப்பரப்பின் பெயராலேயே அழைக்கப்பட்டனர். பின்னர் அது
“பாண்டியன்” என்று மறுகியது.

லெமுரியா முழுவதும் பாண்டிய மன்னனின் ஆட்சியின் கீழ் வந்தது. நகரங்கள் உண்டாகின. கிராமங்கள் செம்மைப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பகுதிகளுக்கும் நிர்வாகம் செய்ய தனித்தனிஅலுவலர்களும் குறுநில மன்னர்களும் இருந்தனர். பாண்டியர்களின் தலைநகரமான மதுரை ( இன்றைய மதுரை அல்ல) உருவாக்கப்பட்டது. நாகரீகத்தின் உச்சத்தை பாண்டிய நாடு எட்டியது. தமிழ் மொழி செழித்து ஓங்கியது. ரோம், கிரேக்கம் போன்ற நாடுகளுடன் வணிகம் செய்யத் துவங்கினர். பல இலக்கியங்கள் படைக்கப்பட்டன. வளமும், வனப்புமாக இருந்த லெமுரியா கண்டம் கடல்கோளினால் முற்றிலும் அழிக்கப்பட்டு இன்றைய கன்னியாகுமரிக்கு தெற்கே அமைதியாக உறங்கிக் கொண்டு இருக்கின்றது. கடல் கோளில் தப்பியவர்களும், இப்போதைய தமிழ்நாட்டில் தென் பகுதியில் வசித்தவர்களும் புதிதாக ஒரு மதுரை நகரை உருவாக்கி பாண்டிய ஆட்சியைத் தொடரச் செய்தார்கள்.

டிஸ்கி : இது மாய பிம்ப வகைப் பதிவு.. இப்பதிவுக்கு என்று எந்த தரவுகளும் கிடையாது. இப்படி எல்லாம் நடந்து இருந்திருக்கலாம் என்பதாக படித்தவைகளை வைத்து சித்திகரிக்கப்பட்டுள்ளது.
...
..
.

Saturday, July 17, 2010

படைப்புக்கும் படைப்பாளிக்குமான தொடர்பு துண்டிக்கப்படுவது எப்போது ?
























முஸ்கி 1: இந்த பதிவுக்கும், எந்த நுண்ணரசியலுக்கும் சம்பந்தமில்லை. இதில் வரும் வசனங்களும், குறிப்புகளும் யாரையும் குறிப்பிடுவன அல்ல.

முஸ்கி 2 : இது ஒரு நல்ல சமையல் குறிப்பு. வாயுத் தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு மிக நல்லது. இதை உண்டவர்கள் தங்கள் சொந்த வீடாக இருந்தாலும் அதை இரண்டு நாள் அனுகாமல் இருப்பது மிக நல்லது. ஏனெனில் நீங்கள் விடும் காற்றால் வீட்டுச் சுவரோ, கான்க்ரீட்டோ உடையும் அபாயம் இருக்கலாம் அல்லது உங்கள் நாற்றம் தாங்காமல் உங்கள் மனைவி உங்களை விவாகரத்து செய்து உங்களை தப்பிக்க வைக்கலாம்.

இனி பதிவு..

பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, சைனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்பர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62.0 விழுக்காடும், புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு, நாச்சத்து 0.8 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லிகிராமும் சிறிதளவு வைட்டமின் பி குரூப்களும் உள்ளன.

பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்பரே. மற்றும் பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.

பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் அவை தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொலஸ்ட்ரால், கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். கேன்சரினால் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்கல் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.

நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.

நன்றி : வெப்உலகம்.காம்

இனி பூண்டு குழம்பு செய்வது எப்படி ?

  • 1. பூண்டு - 15 பல்
  • 2. வெங்காயம் - 1 (அ) சின்ன வெங்காயம் - 10
  • 3. தக்காளி - 2
  • 4. புளி தண்ணீர்
  • 5. தேங்காய் பால் - 1 கப்
  • 6. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு - தாளிக்க
  • 7. எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
  • 8. கறிவேப்பிலை, கொத்தமல்லி
  • 9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  • 10. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  • 11. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
  • 12. உப்பு

  • வெங்காயம், பூண்டு, தக்காளி அனைத்தையும் நறுக்கவும். எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளித்து, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
  • பூண்டு சிவக்க வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
  • இதில் தூள்கள், உப்பு சேர்த்து பிரட்டி தண்ணீர் விட்டு தூள் வாசம் போக கொதிக்க விடவும்.
  • பின் தேங்காய் பால் சேர்த்து கொதிக்க விடவும். இதில் புளி தண்ணீர் விட்டு கெட்டியாக கொதித்ததும் எடுக்கவும்.

Note:

தேங்காய் பாலுக்கு பதிலாக தேங்காய் அரைத்தும் சேர்க்கலாம்.



நன்றி : அறுசுவைடாட்காம்.

டிஸ்கி 1 : பூண்டு குழம்பு செய்து கொண்டு இருக்கும் போதோ, காற்றைப் பிரித்து விடும் போதோ யாராவது உங்களைத் திட்டினால் போடா நாயே என்று அவர்களை திட்டாதீர்கள்.
டிஸ்கி 2 : நாற்றம் தாங்காமல் யாராவது திட்டினால் த்தூ என்று இடப்புறம் ஒரு முறை துப்பி விட்டு சென்று விடுங்கள்.
டிஸ்கி 3 : இந்த பதிவில் நாய், த்தூ போன்ற வார்த்தைகள் இருப்பதால் இதை புனைவு என்றோ, நாய்ப்பதிவு என்றோ, சொற்சித்திரம் என்றோ சொன்னால் அவர்களது வாதம் ஏற்றுக் கொள்ளப்படாது.
டிஸ்கி 4 : மேலே உள்ளவைகளை எழுதி காப்பி\பேஸ்ட் செய்து எழுதி முடித்ததும் அதற்கும் எனக்குமான உறவு முடிந்து விடுகின்றது. இனி படைப்புகளுடன் மட்டும் பேசிக் கொள்ளவும்.
......
....
..
.

Friday, July 16, 2010

பகுத்தறிவும், தனி மனித ஒழுக்கமும்

வள்ளுவர் ஒழுக்கம் குறித்து கூறும் போது " ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும் "
என்று கூறினார். உயிரை விட மதிப்பு மிக்கதாக ஒழுக்கத்தை குறிப்பிடுகின்றார். ஒழுக்கத்திற்கான வரைமுறை என்ன ? இது காலம், இடம், கலாச்சாரத்தை பொறுத்து இடத்திற்கு இடம் மாறுபடுகின்றது. எடுத்துக்காட்டுக்காக சொல்வதானால் மிக குறைந்த ஆடையுடன் நடமாடும் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களுடன், நமது மதுரைப் பெண்களை ஒப்பிட முடியாது. இது போல இன்னும் சில உதாரணங்களைக் கூறலாம்... இதை விட்டு விடுவோம். எனவே ஒழுக்கத்திற்கான அடையாளங்களை புறக்காரணங்களைக் கொண்டு கணக்கிட இயலாது.

தற்போதைக்கு அகத்தூய்மையை மட்டும் எடுத்துக் கொள்வோம். எப்படி? ஒரு மனிதனுடைய செயலால் அவனை சுற்றியுள்ளவர்கள், அல்லது சுற்றியுள்ளவைகள் பாதிக்கப்படாமல் இருக்குமானால் அதுவே தனி மனித ஒழுக்கத்தின் முதல் படி. இப்படி எடுத்துக் கொள்ள இயலுமா ? தெரியவில்லை. ஏனெனில் ஒவ்வொருவருக்கும் ஒரு இலக்கணம் இருக்கின்றது. பேருந்தில், தியேட்டரில், பொது இடத்தில் மது அருந்தி விட்டு வருகின்றவர்களால் பலரும் பாதிக்கப்படுகின்றனர். சம்பந்தபட்டவரிடம் மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடானது என்று விளக்கி சம்பந்தப்பட்டவர்களிடம் அது குறித்து கேட்டால் அது தனது பர்சனல் விஷயம். இதற்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்வார். அவரது உடலை கெட்டுப் போக வைக்கும் விஷயம் குறித்து அவர் கவலைப்படுவதில்லை. அல்லது கவலைப்படுவதில்லை என்பதைப் போல நடிக்கின்றார்.

மது அருந்துவது, புகை பிடிப்பது.. அது பொது இடமாக இருந்தாலும் தனி இடமாக இருந்தாலும் உடலுக்கு தீமை என வரும் போது தவறானதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் உடலைப் பேணிப் பாதுகாப்பது மனிதனின் கடமைகளில் ஒன்று. இவை தீமை என்று அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லையெனில் ??? இனி தான் புதிதாக கேள்விகள் பிறக்கின்றன.

ஒழுக்கமின்மையை தீர்மானிக்கும் காரணிகள் அல்லது கட்டுப்படுத்த விழையும் காரணிகள் எவை? மனிதன் பல விடயங்களுக்கு கட்டுப்படுகின்றான். தனது சமூகத்திற்கு, மதத்திற்கு, நீதி நூல்களுக்கு, தனது பாரம்பரியத்திற்கு, சட்டத்திற்கு என்று பல வகைகளில் கூறலாம்.

சமூகம் எதை எல்லாம் தீமை என்று ஒதுக்கி வைத்திருக்கின்றதோ அதற்கு... தெருவில் போகும் போது ஆடையுடன் செல்ல வேண்டும் என்பது சமூகத்தின் நியதி. எனவே சமூகம் கூறும் அந்நியதிக்கு தன்னைத் தானே உட்படுத்திக் கொள்கின்றான். மதங்கள் கூறும் கட்டுப்பாடுகளையும் ஒரு சாரார் கடைபிடிக்கின்றனர். பல சமூக கோட்பாடுகளுக்கும் கட்டுப்படாதவர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டி நேர்கின்றது.

இவை எதற்கு கட்டுப்படாமல் இருப்பவர்கள் இருக்கின்றார்களா என்று கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் ஒன்றும் விடையாக இல்லை. ஆனாலும் கட்டுப்பாடுகளை தங்களுக்கு விதித்துக் கொள்ள அல்லது கட்டுப்பாட்டுக்குள் வராமல் தன் மனதிற்குபட்டதை சரி என செய்யும் சிலரும் இருக்கின்றனர். இவர்களுக்கான கட்டுப்பாடுகளை எது தீர்மானிக்கின்றது ?

குறிப்பாக பகுத்தறிவு பேசக் கூடியவர்கள். பகுத்தறிவு என்பது மிக சிறப்பான ஒன்று. ஆனால் இன்றைய தமிழ் கூறும் நல்லுலகில் பகுத்தறிவு என்பதை கடவுளை மறுப்பவர்களுக்கு மட்டுமே சொந்தமானது போன்ற ஒரு மாயையை நிலைநிறுத்த ஒரு பகுதியினர் போராடி வருகின்றனர். நன்மை, தீமை எது என்பதை முதலில் விளங்கினால் மட்டுமே இதை சரி செய்ய முடியும்.

நன்மை, தீமையை எது விளக்குவது? பகுத்தறிவு பேசுபவர்களுக்கான நன்மை தீமைக்கான அளவுகோல் எது? ஏன் நன்மை செய்ய வேண்டும் ? ஏன் தீமை செய்யக் கூடாது? ஒரு மதத்தைப் பின்பற்றுபவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களுக்கான நன்மை, தீமை சட்டங்கள் இருக்கின்றன. கடவுள் நம்மை கண்காணிக்கின்றார் என்ற பயம் இருக்கும். அதே போல் இறப்புக்குப் பின் இருக்கும் வாழ்க்கை குறித்து பயம் இருப்பவர்களும் தவறு செய்ய தயங்குவார்கள்.

இந்த இடத்தில் ஒரு விடயத்தையும் கவனிக்க வேண்டும். ஒரு மதம் தவறு, பாவம் என்று சொன்னதையே தைரியமாக செய்யக் கூடியவர்களும் இருக்கின்றார்கள். இவர்களுக்கு தங்கள் மதத்தின் மீது நம்பிகை இருந்தாலும் மனபலவீனத்தின் காரணமாக தவறு செய்கின்றனர். மனதளவில் தவறு என்பது அவர்களுக்கு தெரிந்து தான் இருக்கின்றது.

இவை எல்லாவற்றையும் விட பெரிய வியாதி இருக்கின்றது.. அது எவருக்கும் கட்டுப்பட மறுக்கும். கேள்வி கேட்பது என்பது ரொம்ப முக்கியமான விடயம்.. ஆனால் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது என்பது ஒரு வகை மனோ வியாதி. நம் பதிவுலகிலேயே சிலரைப் பார்க்கலாம்.. அவர்களுக்கு என்று எந்த கட்டுப்பாடும் இல்லை. பொது இடங்களில் மற்றவர்கள் முகம் சுழிக்கும் வண்ணம் நடக்கலாம். பிறரைப் பற்றி அவர் விரும்பாத வகையில் பொதுவெளியில் விமர்சனம் என்ற பெயரில் திட்டலாம். கடவுளைத் திட்டலாம். தனி மனிதனைத் திட்டலாம். கேட்டால் அவர்களை எதுவும் கட்டுப்படுத்தாது.

அவர்களுக்கான ஒழுக்கத்திற்கான அளவுகோல் அவர்களிடம் இருப்பதில்லை. எந்த நீதி நூலுக்கும் கட்டுப்படுவதில்லை. எந்த மதக் கோட்பாடுக்கும் கட்டுப்படுவதில்லை. அனைவரும் கட்டுப்படும் மனசாட்சி என்பதற்கும் கட்டுப்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் செய்யும் தவறுகள் அவர்களுக்கு சரியாகப் படுகின்றது. அவர்களது நண்பர்களும் இதே போல் தான் தோன்றித்தனமானவர்களாக இருப்பதால் இது அவர்களுக்கு ஊக்கமானதாக மாறி விடுகின்றது.

இவர்கள் எல்லாம் சமூகத்தில் ஒரு வியாதி போன்றவர்கள். கொலை செய்வது என்பதும் இவர்கள் பார்வையில் சில நேரங்களில் தவறாக மாறி விடுகின்றது. கொள்ளை அடிப்பதும், அடுத்தவரின் உரிமையில் தலையிடுவதும், அடுத்தவரின் மனதைப் புண் படுத்துவதும் இவர்களது அகராதியில் ஒன்றாகி விடுகின்றது.. பொதுவாக எதற்கும் கட்டுப்படாதவைகளை காட்டெருமைக்கு ஒப்பிடுவார்கள்.. இவர்களும் அது போன்ற கால்நடை பிராணிகள் போன்றவர்கள் தான். வேண்டாம் பாவம் அந்த காட்டெருமைகள்.. அவைகளுக்கு என்று அவைகளுக்குள் ஒரு ஒழுங்கு இருக்கும்... அது கூட இவர்களுக்கு இருக்காது.

இவர்களின் கிறுக்குத்தனம் எப்போது ஒழியும் என்று பார்த்தால் எப்போதும் ஒழியாது.. ஏனெனில் நல்லவர்களுக்கு எடுத்துக்காட்டு சொல்லும் அதே நேரத்தில் கெட்டவர்களுக்கான எடுத்துக்காட்டாக காட்ட இவர்களைப் பயன்படுத்தலாம். இவர்களிடம் அதை எடுத்துச் சொன்னால் கூட ஆமாம் நாங்கள் அப்படித்தான் என்பார்கள்.. எச்சரிக்கையாக இருக்க வேண்டியதும், விலகியே இருக்க வேண்டியதும் இது போன்ற மனித ஜென்மங்களுக்கு அப்பாற்பட்ட விலங்கினங்களை விட கேவலமான எண்ணங்களை உடையவர்களிடம் தான்.

Saturday, July 10, 2010

அ முதல் ஃ வரை - தமிழ்ப் பழமொழிகள்

தமிழ்நாட்டு பழமொழிகள்

  • அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
  • அச்சாணி இல்லாத தேர், முச்சானும் ஓடாது.
  • அறிவாளிகள் கூட்டம் உயிருள்ள நூல் நிலையம்.
  • அசையாத மணி அடிக்காது
  • அலங்காரம் இல்லாமல் அழகு இருப்பதில்லை.
  • அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
  • அறுகல் கட்டையும் ஆபத்திற்கு உதவும்.
  • அழகும், மணமுள்ள பூக்களும் சாலையோரத்தில் வாழாது.
  • அறிவின் அடையாளம் இடைவிடா முயற்சி.
  • அதிர்ஷ்டம் அயர்ந்த நித்திரையிலும் வரும்.
  • அழகுள்ள பெண்ணையும் கிழிந்த ஆடையையும் யாரேனும் பிடித்து இழுத்து விடுவார்கள்.
  • அமைதி தெய்வத்தை உருவாக்கும். செல்வம் பெயரை உண்டாக்கும்.
  • அழகு வல்லமை உடையது. பணம் சர்வ வல்லமை உடையது.
  • அலை அடித்தால் பிரார்த்தனை துவங்கும். கரை சேர்ந்தால் பிரார்த்தனை நீங்கும்.
  • அதிர்ஷ்டம் ஒருவனுக்குத் தாய். மற்றவனுக்கு மாற்றாந்தாய்.
  • அழகான பெண் தலைவலி, அழகற்றவள் வயிற்றுவலி.
  • அழகும் மடமையும் பழைய கூட்டாளிகள்.
  • அடுப்பங்கரையில் கற்றதையெல்லாம் பிள்ளை பேசும்.
  • அறிவார் ஐயம் கொள்வார்; அறியார் ஐயமே கொள்ளார்.
  • அரைத்துளி அன்புகூட இல்லாமல் ஆயிரம் சட்டங்கள் இயற்றலாம்.
  • அன்பே கடவுள்.
  • அன்பு மெலிந்து போனால், தவறு தடியாகத் தெரியும்.
  • அதிகப் பணப்புழக்கம் இளைஞனைக் கெடுக்கும்.
  • அசட்டுத் தனங்கள் எண்ணிலடங்காதவை; அறிவு ஒன்றே ஒன்றுதான்.
  • அடிப்பதும் அடிபடுவதும்தான் வாழ்க்கை.
  • அரை குறை வேலையை முட்டாளிடம் காட்டாதே!
  • அண்டை அயல் தயவு இன்றி எவரும் வாழ முடியாது.
  • அன்பும், மனைவியும் அமைவதே வாழ்க்கை.
  • அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
  • அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
  • அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
  • அதிகப் பணிவும் அகம்பாவம் ஆகலாம்.
  • அடுப்பூதுபவனின் கண்ணில் நெருப்புப் பொறி விழும்.
  • அறுப்பு காலத்தில் தூக்கம்; கோடை காலத்தில் ஏக்கம்.
  • அகந்தை அழிவு தரும்; ஒழுக்கம் உயர்வு தரும்.
  • அதிக ஓய்வு அதிக வேதனை.
  • அடுத்தவன் சுமை பற்றி அவனுக்கு என்ன தெரியும்?
  • அழகின் இதழ்கள் கவர்ச்சி; கனிகள் கசப்பு.
  • அநாதைக் குழந்தைக்கு அழக்கற்றுத்தர வேண்டாம்.
  • அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
  • அச்சம் அழிவிற்கு ஆரம்பம்; துணிவு செயலுக்கு ஆரம்பம்.
  • அண்டத்தில் உள்ளது பிண்டத்திலே.
  • அதிகமாக உண்பவனுக்கு அறிவு மட்டு.
  • அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
  • அறுக்கத் தெரியாதவன் கையில் ஐம்பது அரிவாள்.
  • அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
  • அறவால் உணரும்போது அனுமானம் எதற்கு?
  • அன்பாக் பேசுபவருக்கு அந்நியர் இல்லை.
  • அன்னை செத்தால் அப்பன் சித்தப்பன்.
  • அன்பு இருந்தால் புளிய மர இலையில்கூட இருவர் படுக்கலாம்.
  • அரசனும் அன்னைக்கு மகனே.
  • அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • அறிவுடை ஒருவனை, அரசனும் விரும்பும்.
  • அழுத்த நெஞ்சன் யாருக்கும் உதவான், இளகிய நெஞ்சன் எவருக்கும் உதவுவான்
  • அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டது போல!
  • அஞ்சிவனைப் பேய் அடிக்கும்.
  • அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் உருப்படாது.
  • அவனன்றி ஓர் அணுவும் அசையாது.
  • அன்பே, பிரதானம்; அதுவே வெகுமானம்.
  • ஆடிப்பட்டம் தேடி விதை.
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே!
  • ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்!
  • ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும்.
  • ஆயுள் நீடிக்க உணவைக் குறை.
  • ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல், ஆவணி முழுசாரல்.
  • ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு.
  • ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை.
  • ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல.
  • ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை.
  • ஆறுவது சினம்.
  • ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம்.
  • ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல.
  • ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும்.
  • ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல்.
  • ஆசை நோவுக்கு அமிழ்தம் எது?
  • ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
  • ஆலை விழுது தாங்கியது போல.
  • ஆடு பகை குட்டி உறவா?
  • ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல.
  • ஆடி ஓய்ந்த பம்பரம் போல.
  • ஆரம்பத்தில் சூரத்துவம்.
  • ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும்.
  • ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும்.
  • ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும்.
  • ஆற்றுநீர் பித்தம் போக்கும்
    குளத்து நீர் வாதம் போக்கும்
    சோற்றுநீர் எல்லாம் போக்கும்
  • ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை.

  • இரக்கமற்றவன் இதயம் இரும்பினும் கொடியது.
  • இளமையில் கல்.
  • இளங்கன்று பயமறியாது.
  • இளமையில் கல்வி சிலை மேல் எழுத்து.
  • இளமையில் கல். முதுமையில் காக்கும்.
  • இன்பத்திற்குத் தேன்; அன்புக்கு மனைவி.
  • இரவல் சேலையை நம்பி இடுப்புக் கந்தையை எறிந்தாளாம்.
  • இதயம் ஏற்கிறது; தலை மறுக்கிறது.
  • இன்று செய்யும் நன்மை நாளைய இன்பம்.
  • இரவில் குறைந்த உணவு நீண்ட வாழ்வு.
  • இருட்டுக்குடி வாழ்க்கை திருட்டுக்கு அடையாளம்.
  • இறங்கு பொழுதில் மருந்து குடி.
  • இந்த உலகில் மூன்று நண்பர்கள் துணிவு, புத்தி, நுண்ணறிவு.
  • இறந்த சிங்கத்தைவிட உயிருள்ள சுண்டெலி மேல்.
  • இன்று இலை அறுத்தவன் நாளை குலை அறுக்க மாட்டானா?
  • இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
  • இதயம் இருக்கும் இடம்தான் உன் வீடு.
  • இன்பம் சிறகடித்துப் பறக்கும் பறவை.
  • இலக்கியம் இல்லாத வாழ்வு சாவு.
  • இன்பம் - துன்பம் மாறி மாறி வரும்.
  • இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
  • இளமையில் தெரியாது; முதுமையில் நினைவிருக்காது.
  • இரவும் பகலும் யாருக்கும் காத்திராது.
  • இடுக்கன் வருங்கால் நகுக.
ஈ.

  • ஈகைக்கு எல்லை எதுவமே இல்லை.
  • ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
  • ஈயான் தோட்ட வாழ இரண்டு குலை தள்ளும்.
  • ஈட்டி எட்டிய வரையில் பாயும்.
  • ஈகைக்கும் வெகுளித்தனம் உண்டு.

  • உழுத நிலத்தில் பயிரிடு.
  • உடனடி சிகிச்சையே நோய்க்கு மருந்து.
  • உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டப் போகமாட்டான்.
  • உணவுக்கு நெருக்கம், நட்புக்குத் தூரம்.
  • உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.
  • உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.
  • உப்பு அறியாதவன் துப்புக்கெட்டவன்.
  • உனக்குத் தெரியாத தேவதையைவிட தெரிந்தபிசாசே மேல்.
  • உப்பைச் சாப்பிட்டவர் தண்ணீர் குடிப்பார்.
  • உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
  • உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது.
  • உழைப்பால் விலகும் தீமைகள் மூன்று - துன்பம், தீயொழுக்கம், வறுமை.
  • உழைத்து உண்பதே உணவு.
  • உப்பிட்டவரை உள்ளவும் நினை.
  • உனக்குக் கொஞ்சம், எனக்கு கொஞ்சம், இதுதான் நட்பு

  • ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.
  • ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
  • ஊதுகிற சங்கை ஊதினாலும் விடிகிறபோதுதான் விடியும்.
  • ஊத அறிந்தான் வாதி, உப்பு அறிந்தான் யோகி.
  • ஊமை ஊரைக் கெடுக்கும்; பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்.
  • ஊரில் கல்யாணம்; மார்பில் சந்தனம்.

  • எண்ணெய் குடித்த நாயை விட்டுவிட்டு, எதிர்க்க வந்த நாயை அடிச்சானாம்.
  • எண்ணி எண்ணிச் சுட்டவனுக்கு ஒன்றுமில்லை. எட்டி எட்டிப் பார்த்தவனுகு எட்டுப் பணியாரம்.
  • எல்லாப் புண்களுக்கும் காலம்தான் களிம்பு.
  • எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
  • எட்டுத் திப்பிலி, ஈரைந்து சீரகம், சுட்டுத் தேனில் கலந்து கொடுக்க விட்டுப் போகுமே விக்கல்.
  • எந்த விரலைக கடித்தாலும் வலி இருக்கும்.
  • எறும்புக்கு பனித் துளியே வெள்ளம்.
  • எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
  • எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
  • எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
  • எலி வேட்டைக்குத் தவில் வேண்டுமா?
  • எண்ணம்போல் வாழ்வு.
  • எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?

  • ஏணியைச் செங்குத்தாக வைப்பவன் எளிதில் பின்பக்கம் விழுவான்.
  • ஏழை சொல் அம்பலம் ஏறாது.
  • ஏழைக்கு ஒரு வியாதி; பணக்காரனுக்கு நூறு.
  • ஏகாந்தம் என்பது இறைவனுக்கே பொருந்தும்.
  • ஏழைக்கு ஒருபோதும் வாக்குக் கொடுக்காதே; பணக்காரனுக்கு ஒருபோதும் கடன் படாதே!
  • ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.

  • ஐவருக்கும் தேவி அழியாத பத்தினி.
  • ஐந்தில் வளையாத்து ஐம்பதில் வளையுமா?

  • ஒளியத் தெரியாதவன் தலையாரி வீட்டில் நுழைந்தானாம்.
  • ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
  • ஒரு கையால் இறைத்து இரு கைகளால் வார வேண்டும்.
  • ஒட்டகத்தின் மேல் உள்ளவனுக்கு முதுகு கூன் இல்லை.
  • ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
  • ஒரு கை தட்டினால் ஓசை எழாது.
  • ஒழுக்கம் விழுப்பம் தரும்.
  • ஒவ்வொரு நாளையும் உனது சிறந்த நாளாய் எண்ணு.
  • ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
  • ஒத்தடம் அரை வைத்தியம்.
  • ஒரு சொல் கோபத்தைக் கிளறுகிறது அல்லது அன்பைக் கிளறுகிறது.
  • ஒருவர் பொறுமை இருவர் நட்பு.

  • ஓநாயிடம் அன்பு செலுத்தாதே! அது ஆட்டிற்குச் செய்யும் கேடு.
  • ஓடைகளை நிரப்புவது மழைதான். பனித்துளிகள் அல்ல.
  • ஓடிப் பழகிய கால் நிற்காது.
  • ஓநாயுடன் நீ வசித்தால் ஊளையிடத்தான் வேண்டும்.

  • கண்ணுக்கு இமை பகையா?
  • கடுகு சிறுத்தாலும் காரம் போகாது.
  • கண்டதே காட்சி, கொண்டதே கோலம்.
  • கனமழை பெய்தாலும் கருங்கல் கரையுமா?
  • கவலைகள் குறைந்தால் கனவுகள் குறையும்.
    கனவுகள் குறைந்தால் பேச்சுக்கள் குறையும்.
    பேச்சுக்கள் குறைந்தால் குற்றங்கள் குறையும்.
  • கடவுளுக்கு பயந்து வாழ்க்கை நடத்து.
  • கடுக்காய் நூறு தாய்க்குச் சமம்.
  • கடுங்காற்று மழைக்கூட்டும்.
    கடுஞ்சிநேகம் பகை கூட்டும்.
  • கண்ணீரை விட விரைவில் காய்வது எதுவும் இல்லை.
  • கல்யாணம் பண்ணிப் பார். வீட்டைக் கட்டிப்பார்.
  • கசிந்து வந்தவன் கண்ணைத் துடை.
  • கஞ்சி கண்ட இடம் கைலாசம்; சோறு கண்ட இடம் சொர்க்கம்.
  • கஞ்சித் தண்ணிக்குக் காற்றாய்ப் பறக்கிறான்.
  • கஞ்சன் ஒற்றைக் கண்ணன்; பேராசைக்காரன் குருடன்.
  • கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்.
  • கஞ்சி வார்க்க ஆள் இல்லை என்றாலும் கச்சை கட்ட ஆள் இருக்கிறது.
  • கரி விற்ற பணம் கருப்பாய் இருக்குமா?
  • கல்வி விரும்பு.
  • கலைகளுக்கெல்லாம் அடிப்படை கலப்பை.
  • கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
  • கணக்கு எழுதாதன் நிலைமை.
    கழுதை புரண்ட இடம் மாதிரி.
  • கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
  • கடன் இல்லாச் சோறு கவளமாயினும் போதும்.
  • கடலில் கரைத்த பெருங்காயம் போல.
  • கடல் தாண்ட மனமுண்டு; கால்வாயைத் தாண்ட மனமில்லை.
  • கடல் திடலாகும்; திடல் கடலாகும்.
  • கடல் நீர் இருந்தென்ன? காஞ்சிரை பழுத்தென்ன?
  • கடல் மீனுக்கு நீந்தவா கற்றுத்தர வேண்டும்.
  • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணமாகியும் பிரம்மச்சாரி.
  • கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்.
கா

  • காலம் போகும் வார்த்தை நிற்கும்.
  • கால் அடிப்பட்ட நாயும், காது அறுந்த செருப்பும் கவைக்கு உதவாது.
  • கால் இல்லாதவன் கடலைத் தாண்டுவானா?
  • கார்த்திகை கன மழை.
  • கார்த்திகை நண்டுக்கு கரண்டி நெய்.
  • கார்த்திகை கண்டு களம் இடு.
  • கார்த்திகைப் பிறையைக் கண்டவுடன் கைப்பிடி நாற்றைப் போட்டுக் கரை ஏறு.
  • காணிச் சோம்பல் கோடி நட்டம்.
  • காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது போல.
  • காற்றுக்குச் சாய்கிற நாணல் தான் காலத்துக்கும் நிலைக்கும்.
  • காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு.
  • காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
  • காலிப் பெட்டிகளைப் பூட்ட வேண்டியதில்லை.
  • காலைச் சுற்றிய பாம்பு கடியாமல் விடாது.
  • காலடி வைக்கும்போதே நீரானால் கடலைத் தாண்டுவது எப்படி?
  • காரியம் ஆகுமட்டும் காலைப்பிடி.
  • கார்த்திகை கார் கடை விலை; தை சம்பா தலை விலை.
  • கார்த்திகைப் பனியைப் பாராதே. கட்டி ஓட்டடா ஏர் மாட்டை
  • கார்த்திகை அகத்தி காம்பெல்லாம் நெய் வழியும்.
  • கார்த்திகை கால் கோடை.
  • கார்த்திகை மாதம் கையிலே, மார்கழி மாதம் மடியிலே.
கி

  • கிணற்றைப் பனி நீரால் நிரப்ப முடியாது.
  • கிட்டப் போயின் முட்டப் பகை.
  • கிட்டாதாயின் வெட்டென மற.
  • கிணறு வெட்டப் பூதம் கிளம்பியது போல.
  • கிணற்றுக்கு அழகு தண்ணீர், பெண்ணுக்கு அழகு திலகம்.
கீ

  • கீரைத்தோட்டமே மருந்துப் பெட்டி
கு

  • குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியாகப் போகாது.
  • குருடனுக்கு ஒரே மதி.
  • குரங்கு கையில் அகப்பட்ட பூமாலை போல.
  • குருட்டுக் கழுதைக்கு இருட்டைப் பற்றி பயமில்லை.
  • குப்பை உயர்ந்தது, கோபுரம் தாழ்ந்தது.
  • குதிரையும் கழுதையும் ஒன்றா?
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்து.
  • குதிரை இருப்பறியும், கொண்ட பெண்டாட்டி குணம் அறிவாள்.
  • குடி குடியைக் கெடுக்கும்.
  • குத்தி வடிந்தாலும் சம்பா; குப்பையிலே போட்டாலும் தங்கம்.
  • குயிலும் குரலும் மயிலும் அழகும் போல.
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
கூ

  • கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
  • கூழானாலும் குளித்துக் குடி.
  • கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.
  • கூலிப் படை வெட்டுமா?
  • கூத்தாடி கிழக்கே பார்ப்பாள்; கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்.
கெ

  • கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை
  • கெட்ட பால் நல்ல பால் ஆகுமா?
  • கெடுவான் கேடு நினைப்பான்.
  • கெட்டிக்காரச் சேவல் முட்டைக்குள்ளிருந்தே கூவும்.
  • கெடுப்பதும் வாயால், படிப்பதும் வாயால்.
கை

  • கை காய்ந்தால் கமுகு காய்க்கும்.
  • கை பட்டால் கண்ணாடி.
  • கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
கொ

  • கொடிக்கு காய் பாரமா?
  • கொடாக் கண்டன் விடாக் கண்டன்.
கோ

  • கோழைக் கட்டுக்குக் கோவைக் கிழங்கு.
  • கோபத்தைத் தடுக்கத் தூதுவளைக் கீரை.
  • கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும பெண்ணையும் காண்பது அரிது.
  • கோமளவல்லிக்கு ஒரு மொழி
    கோளாறுகாரிக்குப் பல மொழி
  • கோபத்திற்குக் கண்ணில்லை.
கௌ

  • கௌரவம் கொடு; கௌரவம் கிடைக்கும்.

  • சகோதரனைப் போன்ற நண்பனுமில்லை
    சகோதரனைப் போன்ற எதிரியும் இல்லை.
  • சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி
  • சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
சா

  • சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல்.
சி

  • சிறுதுளி பெருவெள்ளம்.
  • சிறு புண்ணையும், ஏழை உறவின்னையும் அலட்சியம் செய்யாதே.
  • சிறு துரும்பும் பல்குத்த உதவும்.
  • சித்திரை எள்ளைச்சிதறி விதை.
  • சித்திரை என்றால் சிறுப்பதும் இல்லை
    பங்குனி என்றால் பருப்பதும் இல்லை
    வைகாசி என்றால் வளர்வதும் இல்லை
  • சித்திரைப் புழுதி பத்தரை மாற்றுத் தங்கம்.
  • சித்திரை, ஐப்பசி பகல்-இரவு சமம்.
  • சித்திரை மழை செல்ல மழை.
சீ

  • சீரைத் தேடின் ஏரைத்தேடு
சு

  • சுக்கு கண்ட இடமெல்லாம் பிள்ளை பெற முடியுமா?
  • சுட்ட எண்ணயைத் தொடாதே; வறுத்த பயிற்றை விடாதே!
  • சுக்கைப் போல மருந்தில்லை.
  • சுப்பிரமணியரைப் போல் தெய்வமில்லை.
  • சுத்தம் சோறு போடும்.
  • சுற்றம் சூழ வாழ்
  • சுற்றம் பாரக்கின் குற்றமில்லை.
  • சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.
சூ

  • சூடு கண்ட பூனை அடுப்பண்டை போகாது.
  • சூடத்தில் கொறடு போட்டால் கம்பிலே கழுதை மேயும்.
  • சூதும் வாதும் வேதனை செய்யும்
செ

  • செயல்தான் மிகச்சுருக்கமான பதில்
  • செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.
  • செருப்புக்குத் தக்கவாறு காலைத் தறிப்பதா?
சே

  • சேற்றுக்குள் கல் வீசினால் உன்முகம்தான் சேறாகும்.
  • சேற்றில் முளைத்த செந்தாமரை
சோ

  • சோம்பேறிக்குத் தானம் செய்யாதே.
  • சோம்பித் திரியேல.
  • சோற்றில் பூசணிக்காயை மறைப்பதா?

  • தண்ணீரில் கிடக்கும் தவளை, தண்ணியைக் குடிச்சதைக் கண்டது யாரு? குடியாததை க்டது யாரு?
  • தண்ணீரே உணவகளின் அரசன்.
  • தங்கத்திற்குச் சோதனை நெருப்பு!
  • பெண்ணிற்குச் சோதனை தங்கம்!
  • மனிதனுக்கச் சோதனை பெண்!
  • தரித்திரம் நெருப்பால் செய்த ஆடை
  • தண்ணீரில் அடி பிடிக்கிறது.
  • தலை பகை, வால் உறவா?
  • தண்ணீர் வெந்நீரானாலும் நெருமப்பை அணைக்கும்.
  • தலைக்குத் தலை பெரிய தனம்.
  • தன் தப்பு பிறருக்குச் சத்து
  • தன் உயிர்போல் மண் உயிர் நினை.
  • தனக்கென்றால் பிள்ளையும் களை வெட்டும்.
  • தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
  • தன்னைத்தானே வெல்பன், உலகின் தலை சிறத வீரனாவான்.
  • தன் கையே தனக்கு உதவி.
  • தர்மம் தலை காக்கும்.
  • தர்மம் கொடுத்ததும், புசித்ததும்தான் ஒருவனுகுச் சொந்தம்.
  • தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
தா

  • தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.
  • தாயைப்போல பிள்ளை, நூலைப்போல சேலை.
  • தாய்க்கு உதவாதவன் யாருக்க உதவுவான்.
  • தாய், தந்தை தவிர எதையும் வாங்கலாம்.
  • தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
  • தானே தவறி விழுபவன் அழுவதில்லை.
  • தாமரை இலைத் தண்ணீர்போல தவிக்கிறான்.
  • தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்.
  • தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.
  • தாய் கஞ்சிக்கு அழுதாளாம். மகள் இஞ்சிக்கு அழுதாளாம்.
தி

  • திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
  • திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.
தீ

  • தீய வாழ்க்கையே ஒரு வகையில் மரணம்தான்.
  • தீமையைக் காண்பதைவிடக் குருடாயிருப்பது மேல்.
து

  • துறவிக்கு வேந்தன் துரும்பு.
  • தும்பி பறந்தால் தூரத்தில் மழை.
  • துள்ளுகிற மாடுபொதி சுமக்கும்.
  • தும்மை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதா?
  • துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
  • துணிந்தவனுக்குத் துக்கமில்லை; அழுதவனுக்கு வெட்கமில்லை.
தூ

  • தூரத்துத் தண்ணீர் ஆபத்துக்கு உதவாது.
  • தூண்டில்காரனுக்கு மிதப்பு மேலே கண்.
  • தூங்குகிறவர் சாவதில்லை, வீங்கினவர் பிழைப்பதில்லை.
  • தூங்கின பிள்ளை பிழைத்தாலும் ஏங்கின பிள்ளை பிழைக்காது.
  • தூங்காதவனே நீங்காதவன்.
  • தூரமிருந்தால் சேர உறவு.
தெ
  • தென்னாலிராமன் பூனை வளர்த்தது போல.
  • தெவிட்டாத கனி பிள்ளை, தெவிட்டாத பானம் தண்ணீர்.
  • தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
  • தெண்டத்துக்கு அகப்படும், பிண்டத்துக்கு அகப்படாது.
  • தென்றல் அடிக்கிற காற்றே என் இறுக்கத்தைச் சற்றே ஆற்றே?
  • தெற்கு வெறித்தால் தேசம் வெறிக்கும்.
தை
  • தையல் சொல் கேளேல்.
  • தை பிறந்தால் வழி பிறக்கும்.
தொ
  • தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆட்டும் கை.
  • பட்ட காலிலே படும். கெட்ட குடியே கெடும்.
  • பணம் பத்தும் செய்யும்.
  • பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே.
  • பணம் உள்ளவனுக்கு அச்சம்;
  • பணம் இல்லாதவனுக்கு வருத்தம்.
  • பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்.
  • பசித்துப் புசி, வியர்த்துக் குளி.
  • பலர் முகர்ந்த மலரில் மணம் இருக்காது.
  • பல் போனால் சொல் போச்சு.
  • பல் இருந்தால் தவளையும் கடிக்கும்.
  • பணக்கார்ர்கள் பார்வை மங்கலாகத் தெரியும்.
  • பங்குனி மாதம் பதர் கொள்.
  • பங்குனி மாதம் பந்தலைத் தேடு.
  • பங்குனி பனி பால் வார்த்து மெழுகியது போல்.
  • படுக்க படுக்க பாயும் பகை.
  • பந்திக்கு முந்து, படைக்கு மருந்து.
  • பழமொழி பொய்த்தால் பால் பால் புளிக்கும்.
  • பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்.
  • பணிவற்ற மனைவி பகைவர்க்கு ஈடாவாள்.
  • பணம் பாதாளம் வரை பாயும்.
பா
  • பாலுக்கும் காவல்; பூனைக்கும் தோழன்.
  • பாம்பு உங்களை நேசிக்கிறதென்று அதைக்கழுத்தில் சுற்றிக் கொள்ளாதே!
பி
  • பிறரிடம் எந்தக் குணத்தை வெறுக்கிறாயோ அந்தக் குணம் உன்னை அடையவிடாதே!
  • பிறர் கவலை உன் தூக்கத்தைக் கெடுக்காது.
  • பிச்சை புகினும் கற்கை நன்றே!
  • பிணியற்ற வாழ்வே பேரின்பம்.
  • பிறருக்கு நீ கொடுப்பது பிச்சை; நீ பெறுவது பேரின்பம்.
பு
  • புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?
  • புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
  • புலியின் குகைக்குள் நுழையாமல் புலிக்குட்டிகளை எடுத்துக்கொள்ள முடியாது.
  • புலி இருந்த காட்டில் பூனை இருக்கவும்
    சிங்கம் இருந்த குகையில் நரி இருக்கவும்
    யானை ஏறியவன் ஆடு மேய்க்கவும் ஆச்சுதே!
  • புத்தகமும் நண்பர்களும் நிறைவாகவும் நல்லதாகவும் இருக்க வேண்டும்.
  • புத்திசாலிகள் பழமொழியை உண்டாக்குகிறார்கள்; முட்டாள்கள் அவற்றைத் திரும்பச் சொல்கிறார்கள்.
  • புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்;
    முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்.
பூ
  • பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
  • பூனைக்கு பிறந்தது எலி பிடிக்கும்.
  • பூக்கடைக்கு விளம்பரம் எதற்கு?
  • பூ விற்ற கடையில் புல் விற்கவும்;
பெ
  • பெண் கையில் கொடுத்த பணம் தங்காது
    ஆண் கையில் கொடுத்த குழந்தை வாழாது.
  • பெண் என்றால் பேயும் இரங்கும்.
  • பெருமைக்குச் சோறு கட்டி புறக்கடையில் அவிழ்த்தானாம்.
  • பெண்ணிற்குப் பொட்டிட்டுப் பார்.
    சுவருக்கு மண்ணிட்டுப் பார்
  • பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.
பொ
  • பொன், பெண், மண் ஆகியவை சண்டையின் மூலகாரணங்கள்,
  • பொன் வைக்கும் இடத்தில் பூவை வைத்தப்பார்.
  • பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை;
    அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை;
  • பொன்னாங்கண்ணிக்குப் புளியிட்டு ஆக்கினால் உண்ணாத பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.
  • பொறுமை கடலினும் பெரிது.
  • பொறுத்தார் பூமி ஆள்வார்.
  • பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடையாது.
  • பொல்லாத காலத்துக்குப் புடவையும் பாம்பாகும்.
போ
  • போகும்போது புளியமரத்தடியில் போ
  • வரும்போது வேப்பமரத்தடியல் வா.
  • நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்.
  • நரியோடு சேர்ந்த சேவல் நன்மை அடையாது.
  • நன்றி மறவேல்.
  • நன்றி கொன்றார்க்கு உய்வில்லை.
  • நம்பிக்கையே ஏழையின் எதிர்காலம்.
  • நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால் உன் கோழிகளைக் கவனி.
  • நன்மைக்கு நன்மை செய்
    தீமைக்கு நன்மையே செய்
  • நல்ல புத்தகங்களைச் சேர்த்து வைத்திருப்பவன்
  • நிறைய நண்பர்களைச் சேர்த்து வைத்துள்ளான்.
  • நம்பிக்கையும் துணிவும் வெற்றி மகுடத்தின் இரு வைரங்கள்.
நா
  • நாளும் கிழமையும் நலிந்தோர்க்கு இல்லை
  • நாளை என்பது நட்டாற்று ஓடம்.
  • நாளை என்று ஒருநாள் உண்டா?
  • நாதன் ஆட்டம் திருப்பதியில் தெரியும்.
  • நாடு முழுவதும் கூழானாலும் ஏழைக்குக் கரண்டி அளவுதான்.
  • நாளும் அதிகாலையில் நீராடு.
  • நாழிப் பணம் கொடுத்தாலும் மூளிப்பட்டம் போகுமா?
நி
  • நிலையாமை ஒன்றே நிலையானது.
நீ
  • நீலிக்கு கண்ணீர் இமையிலே.
  • நீ வாழ்வின் முற்பகுதியில் வெற்றி கண்டுவிடு.
  • நீ எதையும் விழுங்க முடியும்; உன்னை எது விழுங்க முடியும் என்பதை நீ எண்ணிப்பார்.
நெ
  • நெருப்பிலே தப்பி வந்தவன் வெயிலில் வாடமாட்டான்.
  • நெருப்பென்றால் வாய் வந்து விடாது.
நொ
  • நொறுங்கத் தின்றால் நூறு வயது.
  • நொண்டிக்குச் சறுக்கினதே சாக்கு.
நோ

  • நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

  • மனம் போல வாழ்வு
  • மனம் ஒரு குரங்கு
  • மற்றவர்களை மகிழ்விப்பதே உண்மையான மகிழ்ச்சி
  • மகிழ்ச்சி ஒரு மனிதனின் பலத்தில் பாதி.
  • மனைவி வீட்டின் ஆபரணம்.
  • மனைவி சொல்லே மந்திரம்.
  • மனிதனுக்கு மரியாதை; மலருக்கு நறுமணம்
  • மனித நேயம் வளர்ப்பதே மதம்.
  • மருந்தேயானாலும் விருந்தோடு உண்க.
  • மரம் வைத்தவன் தண்ணீர் விடுவான்.
  • மதியாதார் வாசல் மிதியாதே!
  • மனசாட்சியை ஏமாற்றாதே!
  • மனைவியைத் தேர்ந்தெடுக்கும்போது கிழவனின் பார்வை வேண்டும்; குதிரையைத் தேர்ந்தெடுக்கும்போது இளைஞனின் பார்வை வேண்டும்.
  • மந்திரம் கால்; மதி முக்கால்.
  • மலர்ந்த முகம் மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.
  • மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.
  • மனிதனின் அழகு அவன் நாக்கு.
மா
  • மாடு காணாமல் போனவனுக்கு மணியோசை கேட்டுக் கண்டே இருக்கும்.
  • மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே!
  • மாசி பங்குனியில் கரும்பு ஆறு!
  • மாதா, பிதா, குரு, தெய்வம்.
மி
  • மின்னுவதெல்லாம் பொன்னல்ல
மீ
  • மீன் குஞ்சுக்கு நீந்தப் பழக்க வேண்டுமா?
மு
  • முறையான நடத்தை மிகச் சிறந்த மருந்து.
  • முதலில் கேட்டுக்கொள்; பிறகு பேசு
  • முன் வைத்த காலை பின் வைக்காதே!
  • முயன்றால் முடியாதது இல்லை.
  • முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்.
  • முயற்சி திருவினையாக்கும்.
மூ
  • மூடநம்பிக்கைக்கு மருந்தில்லை.
  • மூன்றாவது பெண் பிறந்தால் முற்றமெல்லாம் பொன்.
  • மூடிய கைகளுடன் மனிதன் உலகிற்கு வருகிறான்; திறந்த கைகளுடன் அதைவிட்டுப் போகிறான்.
மை
  • மை விழியாள் மலர விழித்தால் மண்டபத்து ராஜாக்கள் பெண்டாள வருவார்களாம்!
  • வட்டியோடு முதலும் போச்சு.
  • வளைகிற முள் நுழையாது.
  • வயிற்றுப் பாம்புக்குக் கடுகும் வளைப் பாம்பிற்கும் வெந்நீடும் இடு.
  • வளமான பூமியில் வேளாண்மை செய்தால் நிலையாகத் திருமணம் நீ செய்த கொள்ளலாம்.
  • வருமானம் என்பது செருப்பு அளவு குறைந்தால் கடிக்கும் அதிகரித்தால் நடப்பது கஷ்டம்.
  • வலியுள்ள இடத்தில் மனிதன் கைவைத்துப் பார்க்கிறான்.
  • வண்டி வந்தால் வழி உண்டாகும்.
  • வளர்த்த கடா மார்பில் பாய்வது போல.
வா
  • வாய் உள்ளவன் உள்ளே.
  • வாழைப்பழம் கொண்டு வந்தவன் வெளியே!
  • வானம் சுருங்கில் தானம் சுருங்கும்.
  • வாக்குறுதி என்பதும் ஒருவகைக் கடனே.
  • வாயைக் கேட்டுத்தான் வயிறு சாப்பிட வேண்டும்.
  • வாழ்ந்த மகள் வந்தால் வர்ணத் தடுக்கு. கெட்ட மகள் வந்தால் கிழிந்த தடுக்கு.
  • வாழ்க்கையில் இரு பகுதிகள் உண்டு.
    கடந்த காலம் ஒரு கனவு
    வருங்காலம் ஒரு பெருமூச்சு
  • வாய் அரை வைத்தியன்.
  • வாழும் வீட்டிற்கு ஒரு கன்னிப் பெண்
    வைக்கோற் படப்பிற்கு ஒரு கன்றுக்குட்டி.
வி
  • வித்தாரக் கள்ளி விறகு கொண்டு போனாளாம் கற்றாழை முள் கொத்தோடு ஏறியதாம்
  • விரலுக்கேற்ற வீக்கம்.
  • விளையும் பயிர் முளையிலே தெரியும்
வீ
  • வீணை கோணினும் நாதம் கோணுமா?
வெ
  • வெட்கப்பட்டுக் கொண்டிருப்பவன் உலகை அனுபவிக்க முடியாது.
வே
வேலையில்லாதிருத்தல் ஆயிரம் நோய்களைக் கொண்டு வரும்

டிஸ்கி : பார்வ்ர்ட் மெயிலில் வந்தது.. திரும்ப தேடி எடுக்க இயலாது என்பதால் இங்கு பதிவேற்றம் செய்தாகி விட்டது.

Friday, July 9, 2010

நிஜமா நல்லவன் பதிவுக்கு வரிக்கு வரி காரமான எதிர்வினை

\\\\ துளித் துளியாய் சேகரித்து
மெழுகினில் புகுத்தி இனிமை சேர்க்கும்
அழகிய தேன் கூட்டை
சிதறித் தெளிக்கிறது ஒற்றைக் கல்!

உயிர்ப்பச்சை நீர்த்து வாடிய பயிர்களில்
எதிர்பாராமல் சூல் கொள்ளும் மேகங்கள்
இயற்கை இருப்பை நிலை நிறுத்தி
சொட்டு சொட்டாய் நிரம்பும் உயிர் நீர்!

மேகங்களின் நகர்வில் மிதந்திடும் நிலவை
விழியோர புருவங்களால் வளைத்தெடுக்க
குறும்பை கொப்பளிக்கும் இமைகள்
வரைந்திடும் எழிலோவியங்கள் விழித்திரையில்

நிறைவேறா கணங்களின்
நிறங்கள் குழைத்து
சிறகில் தெளித்து
சிறகடிக்கிறது
கனவுப் பறவை!

வண்ணங்கள் களவோடு
எண்ணங்கள் விரிய
நிறங்கள் உமிழ்ந்து
நிறமிழக்கின்றன விழிகள்
விழிநிலையில்!
\\\

பாஸ்.. நீங்க பெரிய கவிஞரா இருக்கலாம்..
ஆனால் இதை எல்லாம் வாசிச்சா
எங்களுக்கு ஒன்னும் புரியல..
கண்ணுல பச்சை மிளகாயை
வச்சு தேய்ச்சு,
மூக்குல மிளகாய்
பொடியை திணிச்சு,
காதுல மிளகாய்
பொடியை நுழைச்சு,
வாயில மல்லிப்
பொடியை அள்ளிக் கொட்டி,
உடம்பு பூரா
புளிய விளாரால் விளாசி
உப்பு வச்சு தேய்ச்சு
விஜயோட மசாலா படம் பார்த்த பீலிங் தான் வருது..
நாங்க இன்னும் இலக்கிய
உலகை கரைச்சுக் குடிக்கல.

டிஸ்கி: இப்ப எல்லாம் எதிர்பதிவு காரமா இருந்தா தான் மவுசாம்.. அதனால் தான் கொஞ்சம் மசாலா தூவி இருக்கோம்.

Saturday, July 3, 2010

நாளைக்கு - சென்னையில்

தீவுத்திடலை நோக்கி அணி அணியாய்..

இந்திய மண்ணை நேசித்து இந்தியாவுடன் தங்கிக் கொண்ட முஸ்லீம்கள் இந்திய அரசாங்கத்தால் கை விடப்பட்டக் காரணத்தால் பொருளாதாரத்தில் நலிவடைந்து வாழ்வதற்கு வழி தெரியாமல் அதிகமானோர் தங்களை கூலி வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு தங்களின் பிள்ளைகளையும் (வறுமையின் காரணத்தால் கல்வியைக் கொடுக்க முடியாமல்) பிஞ்சு வயதிலேயே கூலி வேலைகளில் ஈடுபடுத்தினர்.

வீடு வாசல்கள், நில புலன்கள், ஆபரணங்கள் போன்றவற்றில் சிறிதை வைத்திருந்தவர்கள் அவற்றை விற்று அரபு நாடுகளுக்கு தங்களுடைய பிள்ளைகளை பயணம் அனுப்பி வைத்தனர். அதற்கும் வசதி பெறாதவர்கள் இஸ்லாம் தடை செய்த வட்டிக்குப் பணம் வாங்கியேனும் பயணம் அனுப்பி வைத்தனர்.

அவ்வாறு சென்றவர்களில் ( வறுமையின் காரணத்தால் படிக்க முடியாதவர்கள் பிரபல கம்பெனிகளில் உயர் பொறுப்புகளில் அமர முடியாமல் ) அங்கும் குறைவான சம்பளத்தில் இதே கூலி வேலைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இன்னும் ஒப்பந்தப் படிவத்தில் குறிப்பிடப்பட்ட வேலையும், சம்பளமும் கொடுக்காமல் குறைவான சம்பளம் கொடுத்து, தங்குமிட வசதியும் முறையாக செய்து கொடுக்காமல் அலைக்கழிக்கப்பட்டனர்.

இதனால் பலர் ஒப்பந்த தாரரிடமிருந்து தலைமறைவாகி கூடுதல் சம்பளத்திற்கு கஸ்டமான வேலைகளை செய்து வந்தனர், உரிய அனுமதி இல்லாமல் மறைந்து வேலை செய்து கொண்டிருக்கும்பொழுது லேபர் செக்கிங்கில் மாட்டிக் கொள்பவர்களை அன்று உடுத்திய அழுக்கு உடையுடன் சிறையில் அடைக்கப்பட்டு அதேக் கோலத்தில் விமானத்தில் ஏற்றி ஊருக்கு அனுப்பும் பரிதாப நிலை.

இதுப் போன்ற குறைகைளை தீர்க்க திராணியற்ற நிலையில் பாஸ்போர்ட் ரினீவலுக்காக மட்டும் ( அந்நிய செலாவனிக்காக ) வளைகுடாவில் இயங்கும் இந்தியத் தூதரகம்.

பிறந்த நாட்டிலும் நிம்மதியாக வாழ முடியாமல், பிழைப்பு தேடிச் சென்ற நாட்டிலும் நிம்மதியாகப் பொருளீட்ட முடியாமல் அலைக்கழிக்கப்படும் அவல நிலையை கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும், அன்றைய தவ்ஹீத் அறிஞர்களால் வழிநடத்தப்பட்ட தமுமுகவிற்கு தகவல்கள் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது இன்னும் அவர்களின் அவல நிலையை வீடியோவில் பதிவு செய்தும் அனுப்பப்பட்டது.

அதனடிப்படையில் அன்றைய தவ்ஹீத் அறிஞர்களால் வழி நடத்தப்பட்ட தமுமுகவின் சமுதாய, மற்றும் மார்க்க விளக்கக் கூட்டங்கள், அதன் அமைப்பாளர் அறிஞர் பிஜே முதல் அனைத்து தவ்ஹீத் அறிஞர்கள் வரை, மாநில, மாவட்ட சிறப்புப் பேச்சாளர்கள் முதல் கிளைகளின் பயிற்சிப் பேச்சாளர்கள் வரை இடைவிடாது இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர்.

மக்கள் சந்திக்கும் அனைத்து வழிகளிலும்.

சமுதாயப் பிரச்சனைகளுக்கு பழநிபாபா போன்றவர்களையும், மார்க்க நிகழ்ச்சிகளுக்கு மௌலவிகள் என்றும் தரம் பிரித்து நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்த காலகட்டத்தில், இரண்டுக்கும் தகுதியானவர்கள் மார்க்க அறிஞர்களே என்ற நிலையை உருவாக்கி அரசியல், மற்றும் ஆன்மீக மேடைகளில் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர்.

ஜூம்ஆ பள்ளிவாசல்களின் குத்பா உரையில் குர்ஆன் - ஹதீஸ் வசனங்களை மட்டும் எழுதி வைத்து (உரையாக அல்லாமல்) வாசித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தவ்ஹீத் பள்ளிவாசல்களில் ஜூம்ஆ உரையில் வீரியத்துடன் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசங்கம் நடத்தினர்.

பாட்டு கச்சேரிகள், கரகாட்டங்கள், போன்ற பொழுது போக்கு அம்சங்களுக்காக மட்டும் மக்கள் சந்திக்கும் தெருமுணைகளை பயன்படுத்தி வந்த காலகட்டத்தில் அதை சமுதாய, மற்றும் மார்க்க உபதேசங்களுக்காக மாற்றியமைத்து அதிலும் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தினர்.

இவ்வாறாக

· அரசியல் மேடைகள்,

· ஆன்மீக மேடைகள்,

· தெருமுணைக் கூட்டங்கள்,

· ஜூம்ஆ உரைகள்,

என

நகர்புறம் முதல், கிராமப் புறம் வரை உள்ள மக்கள் மத்தியில் அரசிடமிருந்து இடஒதுக்கீடு பெறுவதன் அவசியம் குறித்தத் தகவல்கள் தெரிந்து கொள்ளும் அளவுக்கு பிரச்சாரம் சென்றடைந்தப் பின்னர் அவர்களைத் திரட்டி தமிழகம் அதுவரை கண்டிராத வீரியமிக்கப் போராட்டங்களை, பேரணிகளை நடத்தினர்.

தீவிரவாதிகள் என்ற முத்திரைக் குத்தப்பட்ட முஸ்லீம்கள் பல லட்சத்திற்கு மேல் ஓரிடத்தில் குழுமிய பொழுதும், வாழ்வுரிமை கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திக்கொண்டு சாரை, சாரையாக அணிவகுத்து சென்றுக் கொண்டிருந்த போதிலும் பாதுகாப்புக்காக நிருத்தப்பட்ட போலீஸார்கள் ஓரமாக அமர்ந்து சஞ்சிகைகள் வாசித்துக் கொண்டும், தலைமைக்கு கட்டுப்பட்ட மக்களின் அழகிய வரிசைகளுடன் கூடிய அமைதியான பேரணிகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டும் நின்றது இந்திய வரலாற்றில் இந்தக் கூட்டங்களில் தான் முதல் முறை.

சில சமுதாயத்தவர்கள் நடத்தும் பேரணிகளின் போது இன்னொரு சமுதாயத்தவர்கள் அவ்வழியே நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு பதஸ்டம் நிலவும் இக்கால கட்டத்தில் முஸ்லீம்கள் நடத்தும் இந்தக் கூட்டங்களில், பேரணிகளில் தான் ஹிந்து மக்கள் சாலை ஒரங்களில் தண்ணீர் குடங்களுடன் நின்று நீண்டப் பேரணியில் ஜீவாதார உரிமை கோஷங்களை எழுப்பிக் கொண்டுச் செல்லும் முஸ்லீம்களுக்கு கணிவுடன் நீர் புகட்டி தாகம் தீர்க்கச் செய்து சகோதரத்துவத்திற்கு முத்திரைப் பதித்த சம்பவமும் இந்திய வரலாற்றில் இந்தப் பேரணிகளில் தான் முதன் முறையாக நடந்தது,

இன்னும் இதுப் போன்ற அமைதியானப் பேரணிகளை, மாநாடுகளை ஜனநாயக ரீதியில் அதிகமதிகம் நடத்துவதால்,

நாங்கள்,

· மாவேயிஸ்டுகளைப் போல் மறைந்திருந்து அப்பாவிகளைத் தாக்குபவர்கள் அல்ல,

· மரங்களை வெட்டி சாய்த்து மக்களுக்கு இடையூறு கொடுப்பவர்கள் அல்ல,

· வாகணங்களை அடித்து நொறுக்கி பொதுச் சொத்துக்களுக்;கு சேதம் விளைவிப்பவர்கள் அல்ல,

எங்கள் வாழ்வுரிமைக்காக

அரசு அனுமதித்த வழியில் அமைதியாகப் போராடும் மக்கள் என்பதை ஆட்சியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் உணர்த்தும் வாய்ப்பு இது,

அரசின் மீது விரக்தி அடைந்து ஆயுதமேந்தும் ஒரு சிலரும் கூட இழந்த உரிமைகளை வென்றெடுக்க இது தான் சிறந்த வழி என்று நம்முடன் இணைந்துப் போராடும் நற்குணமுடையவர்களாக மாறுவதற்கும் இது போன்ற கூட்டங்கள், பேரணிகள் வாய்ப்பாக அமைந்து விடும்.

3 ½ சதவிகிம்.

· 1999ல் முதன் முதலாக மூன்று லட்சம் மக்களைத் திரட்டி வாழ்வுரிமைக் கோரி மெரீனா கடற்கரையில் குழுமச் செய்தனர்.

அதுவரை முஸ்லீம்களின் இதுப்போன்ற பிரம்மான்டமானக் கூட்டத்தை கண்டிராத முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மக்கள் திரளை நோக்கி கடந்த காலத்தில் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து முஸ்லீம்களின் கோரிக்கைகளை புறக்கணித்து துரோகம் இழைத்ததற்காக மன்னிப்புக் கேட்டார்.( அதற்குப் பிறகு வந்த அவரது ஆட்சியில் தான் முதன் முதலாக முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டிற்காக கமிஷன் அமைக்கப்பட்டது )

· அதற்கடுத்து 2004ல் கூட்டப்பட்ட பிரம்மான்டமானப் பேரணி தஞ்சையைத் திணறடித்து, திலகர் திடலை திக்கு முக்காடச் செய்தது.

இதன் பின்னர் தமுமுகவிலிருந்து தனிப்பொழிவுடன் வுNவுது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உருவானப் பின்னர் அதன் மாநிலத் தலைவராகிய அறிஞர் பி.ஜைனுல் ஆப்தீன் உலவி அவர்கள் அமீரகத்திற்கு வரவழைக்கப்பட்டு தமிழர்கள் தங்கி இருக்கக்கூடிய பல கேம்புகளுக்கு அழைத்துச் சென்று மக்கள் படும் அவஸ்தையை நேரடியாகக் கண்டறிந்து பிறந்த நாட்டில் அரசுப் பணிகளில், மற்றும் கல்வியில் இடஒதுக்கீடுப் பெறுவதன் அவசியம் குறித்து கடந்த காலங்களை விட கூடுதல் மக்களைத் திரட்டி இன்னும் வீரியமிக்கப் போராட்டங்களை நடத்த திட்டமிட்டு ததஜ வின் செயல் வீரர்கள் முடுக்கி விடப்பட்டனர்;.

''குடந்தை குலுங்கட்டும்''

இடஒதுக்கிடுப் பெறுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மீண்டும் முடுக்கி விடப்பட்டு 2006ல் குடந்தையில் குழுமியது வரலாறுப் படைத்த மக்கள் கூட்டம்.

இதன் பின்னரே அதிமுக ஆட்சியின் இறுதி கட்டத்தில் முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு குறித்து அறியும் கமிஷன் அமைக்கப்பட்டு, கமிஷனும் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது.

''தொடர் முழக்கப் போராட்டங்கள்''

அதிமுக அரசு அஸ்தமித்து திமுக அரசு உதயமானதும் அதிமுக ஆட்சியில் அமைக்கப்பட்ட கமிஷன் அறிக்கையையும் திமுகவினர் அஸ்தமிக்கச் செய்தனர். அதனால் மீண்டும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் இடஒதுக்கீடு கோரும் தொடர் முழக்கப் போராட்டங்களை நடத்த தலைமை அறிவித்தது.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் எத்திசைத் திரும்பினாலும்


ஓய மாட்டோம் உறங்க மாட்டோம்,

இடஒதுக்கீடுப் பெறும் வரை,

ஓய மாட்டோம் உறங்க மாட்டோம்,

எனும் கோஷங்களை பச்சிளம் குழந்தைகளை இடுப்பிலும், தோளிலும் சுமந்த பெண்டிர் முதல் வயோதிகர் வரை எழுப்பிய ஜீவாதாரக் கோஷம் விண்ணைப் பிளந்து சிறுபான்மைக் காவலர் கலைஞரின் செவிப்பறையைக் கிழித்தது. கலைஞரின் கல் நெஞ்சில் கசிவு ஏற்பட்டு மூன்றரை சதவிகிதம் ( குறைவு தான் என்றாலும் ஒன்றுமில்லாமல் இருந்ததற்கு ஓரளவு ஆறுதல் அளிக்கும் ) இடஒதுக்கீட்டை வழங்கினார் அல்லாஹ்விற்கேப் புகழ் அனைத்தும்.

ஜூலை 4

சமீபத்தில் ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இந்தியாவில் முஸ்லீம்கள் மிகவும் பின் தங்கி இருக்கும் அவல நிலையை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அளித்த அறிக்கையில் 10 சதவிகிதம் மத்திய, மாநில அரசுப் பணிகளில், கல்வியில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்திருப்பதை மத்திய அரசு அலச்சியப்படுத்திடாமலும், காலம் தாழ்த்திடாமலும் அமுல் படுத்துவதற்காகவும் குறைந்த பட்சம் 15 லட்சம் முஸ்லீம்கள் சென்னை தீவுத் திடலில் ஜூலை 4 அன்று குழுமுவதற்காக கடந்த காலங்களில் ஜனநாயக ரீதியில் வரலாறுப் படைத்த கூட்டங்களைல் கூட்டிப் போராடி மூன்றரை சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்த தமிழகத்தின் மாபெரும் மக்கள் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வுNவுது அழைப்பு விடுக்கிறது.

· தீவுத்திடலை திணறடிக்க,

· தீவுத்திடலில் அலை கடலென ஆர்ப்பரிக்க,

· ஜூலை 4 க்கான பயண எற்பாடுகளை இன்றே செய்யத் தயாராகுங்கள்.

கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் ரங்கநாத் மிஸ்ரா அவர்களின் பரிந்துரையை மத்திய அரசு அமுல் படுத்துவதற்கு பயண ஏற்பாடுகளுடன் கருணையாளன் அல்லாஹ்விடம் பிரார்த்தனையை முற்படுத்துங்கள் ...உங்கள் இறைவன் தனது அருளை உங்களுக்குத் தாராளமாக அளிப்பான். உங்கள் பணியை எளிதாக்குவான்....திருக்குர்ஆன் 18:16

கல்வி, மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில், இந்திய முஸ்லீம்கள் 10 சதவிகித இடஒதுக்கீட்டையும், அரசின் நலத் திட்டங்களையும் இன்ஷா அல்லாஹ் அடைந்தால் மட்டுமே வறுமைக் கோட்டைத் தாண்ட முடியும்.

இல்லை என்றால் வேறெந்த வழிகளிலும்,

· வெளி நாட்டில் கை ஏந்தும் வேதனையை,

· எழுதப் படிக்கத் தெரியாத அவல நிலையை,

· ஒரு வேளை உணவையும், இரண்டு ஆடைகளையும் பெற முடியாத தரித்திர நிலையை,

· குடி தண்ணீர் மற்றும் கழிப்பிட வசதிப் பெற முடியாத வறிய நிலையை,

மாற்ற முடியாது.

ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையை படிக்க கீழ்காணும் லிங்கை சொடுக்கவும். http://www.tntj.net/?p=12863

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவிஇ தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

நன்றி : TNTJ இணையதளங்களில் இருந்தும், பார்வர்ட் மெயில் இருந்தும்