Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Friday, July 2, 2010

பாண்டிமா தேவி - ஒரு ஏமாந்த கதை

தமிழில் படித்த முதல் சரித்திர நாவல் நிலமங்கை என்ற சாண்டில்யனின் நாவல். பள்ளியில் படிக்கும் காலத்தில் ராணிமுத்துவில் படித்தது. அதற்குப் பிறகு சரித்திர நாவல்களில் ஒரு ஆர்வம் மேலிட ஆரம்பித்தது. இணைய வழியில் இன்னும் சில நாவல்களையும் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. அதில் முக்கியமானவை கல்கியின் படைப்புகள். சரித்திர நாவல்கள் என்றாலே அனைவரிடமும் ஒரு டெம்ப்ளேட் இருக்கின்றது. அதன் காரணகர்த்தா கல்கி என்றால் மிகையில்லை.

சரித்திர நாவல்களைப் படிக்கும் போது பழைய சமூகங்களின் வரலாறு, இலக்கியம், வாழ்க்கை முறை போன்றவற்றில் ஒரு பார்வை கிடைக்கும். அதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கின்றது என்று தெரியாவிட்டாலும், ஒரு அறிமுகமாக அவைகளை எடுத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட சரித்திர நாவல் வேட்கையில் இன்னொரு பரிணாமமும் இருக்கின்றது. அது நிலவியல் ரீதியான ஒரு ஆர்வம்\வெறி.

படித்து அனேக நாவல்களில் சோழ நாட்டின் மாண்பை உயர்த்திப் பிடிக்கும் வகையிலானவைகளே அதிகமாகக் கிடைக்கின்றன. எங்கள் பாண்டிய மண்ணின் மகிமையை போற்றும் விதமான நாவல்களைப் படிக்கும் பாக்கியம் இன்னும் சரிவர கிட்டவில்லை. அந்த தேடுதல் முயற்சியில் தான் தீபம்.நா.பார்த்தசாரதி அவர்கள் கல்கியில் எழுதிய பாண்டிமா தேவி கிடைத்தது. சென்னை நூலகம் தமது இணைய தளத்தில் வைத்து இருக்கின்றார்கள்.



கிட்டத்தட்ட கல்கியின் பொன்னியின் செல்வன் பாணியில் எழுதப்பட்ட நாவல் அது. அதே போன்ற கதைக்களமும் கூட

ஒரு அழகான இளவரசன்
வீரமான படைத்தளபதி
மதியூக அமைச்சர்
அவரது ஒற்றன்
ஈழத்திற்கான பயணம்
கடல்
நிறைய நாயகிகள் (விலாசினி, மதிவதனி, குழல்வாய்மொழி, பகவதி)

இப்படி எல்லா அமசங்களும் இருக்கின்றன. கதையின் ஆரம்பமும் ஓட்டமும் நன்றாகத் தான் இருந்தது. இராசசிம்மன் பாண்டிய மண்ணின் இளவரசன். அழகானவன். சிறந்த போர் வீரன். அவனது தந்தையாகிய பாண்டிய மன்னனின் மறைவுக்குப் பின் சோழ நாடு உள்ளிட்ட வட நாட்டவர்களின் படையெடுப்பால் மதுரையை இழந்து தென்பாண்டி நாடான நாஞ்சில் நாட்டில் தஞ்சம் புகுகின்றனர். தனது கணவை இழந்த மாண்டிமா தேவியும் மனசஞ்சலத்துடன் இருக்கின்றார்கள்.

பாண்டிய மன்னனின் கீழ் நாஞ்சில் நாட்டைக் கவனித்து வரும் மகாமண்டலேசுவரர் இடையாற்று மங்கலம் நம்பி இவர்களைப் பாதுகாத்து வருகின்றார். இவரது மகள் தான் குழல்வாய்மொழி. தென் பாண்டி நாட்டின் படைத்தலைவன் வல்லாளதேவன். தனது தாய்நாட்டை காக்கும் வெறியில் இருக்கின்றான். இவனது தங்கை வீரக்குணம் பொருந்திய பகவதி. நாஞ்சில் நாட்டில் கல்வியில் சிறந்த அதங்கொட்டாசிரியரின் மகள் விலாசினி.

தனக்கு சொந்தமான அரண்மனையில் மகாமண்டலேசுவரர் இளவரசனைப் பாதுகாத்து வைத்து இருக்கின்றார். அங்கு அவரது மகள் இளவரசனைக் கவனித்துக் கொள்கின்றாள். விலாசினியும், பகவதியும் மகாராணியுடன் இருக்கின்றனர். திடீரென்று ஒருநாள் பாண்டிய நாட்டுக்கு சொந்தமான அரியாசனம், மணிமுடி, வீரவாளுடன் இளவரசன் ஈழநாட்டுக்கு கிளம்பி விடுகின்றான். ஈழம் செல்லும் வழியில் மீனவப் பெண் மதிவதினியை சந்திக்கிறான். அவனுக்கு இலங்கையின் மன்னன் காசியபன் ஆதரவு அளிக்கின்றான். சோழ நாட்டின் ஒற்றர்கள் மகாராணியையும், இளவசரனையும் படுகொலை செய்ய அலைகின்றனர்.

இதற்கு இடையில் சோழ அரசன் தலைமையிலான ஐவர் கூட்டணி தென்பாண்டி நாட்டின் மீதும் படையெடுத்து வர தீர்மானிக்கின்றது. ஈழம் சென்ற இளவசரனை மீண்டும் அழைத்து வர குழல்வாய்மொழியும், பகவதியும் ஈழம் செல்கின்றனர்... பெண்கள் அனைவருக்கும் இளவசரன் மேல் ஒரு மையல்.
இதுவரையில் எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது.. கலகி நிர்வாகத்தில் உடனடியாக நாவலை முடிக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள் போலத் தெரிகின்றது.. இதற்குப் பின் எல்லாம் தலைகீழ்.

இன்றைய தொல்லைக்காட்சி தொடர்களில் தொடரை முடிக்க சொல்லிவிட்டால் உடனடியாக சிலரை சாக வைப்பார்கள். கெட்டவர்களை நல்லவர்களாக்கி விடுவார்கள். அது போல் இதிலும் திடீரென்று கதை ஜெட் வேகத்தில் பறக்கின்றது. பகவதி சாகடிக்கப்படுகிறாள். குழல்வாய்மொழி வேறு ஒருவனுடன் திருமணம் முடிக்கிறாள்.

படைத்தலைவன் நாட்டின் எதிரி ஆகின்றான். மதியூக மந்திரி மதி இழக்கிறார். போர்க்களத்தின் பாண்டிய படை தோல்விஅடைகின்றது. இளவசரன் நாட்டை வீட்டு ஓடி விடுகின்றான். பாண்டிமா தேவி சேர நாட்டில் தஞ்சம் புகுகின்றார்.

மிகவும் ஆவலாக படித்துக் கொண்டே வந்து பாண்டிய நாட்டை அதள பாதாளத்தில் கொண்டு சென்று விடுகின்றார் ஆசிரியர்.. ஏனடா படித்தோம் என்று ஆகி விடுகின்றது.. ஆனாலும் சோழ நாட்டினர் படித்து பூரிப்படையலாம்..

சரித்திர நாவல்களின் வேட்டை தொடரும்... பகிர்வும் தொடரும்..

டிஸ்கி 1 : இன்னும் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (கயல்விழி ) படிக்க கிடைக்கவில்லை.
டிஸ்கி 2 : பாண்டிய மன்னின் தொன்மையையும், வீரத்தையும் பறைசாற்றும் வகையில் நாமே ஏன் ஒரு சரித்திர நாவலை எழுதக் கூடாது என்று மனதின் ஓரத்தில் ஒரு ஆர்வம் இருந்து கொண்டே இருக்கின்றது. இந்தியா சென்று அடுத்த மூன்றாண்டுகளில் சுமார் 300 பக்கங்களில் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.. ஆனால் வாசிப்பவர்கள் பாவம் என்பதால் யோசிக்க வேண்டி இருக்கின்றது.

Monday, March 1, 2010

சுஜாதாவுடன் புதைந்த மர்மம்

சமீபத்தில் சென்னையில் ட்விட்டர்களும், ப்ளாக்கர்களும் இணைந்து சுஜாதாவின் நினைவலைகளில் மூழ்கியதைப் படித்த போது கொஞ்சம் பொறாமையாக இருந்தது. நமக்கு மிகவும் பிடித்தவர்களைப் பற்றி பேசி சிலாகிப்பதைக் கேட்பதில் இருக்கும் சுகமே அலாதி தான்...

90 களில் நாங்கள் முதன் முதலாக புத்தகங்களை வாசிக்கத் துவங்கியது சிறுவர் மலர், அம்புலிமாமாவில் இருந்து தான்... அதனைஅடுத்து எங்கள் வீடுகளில் வாங்கப்படும் ராணி வாராந்திரியையும் புரட்டும் வாய்ப்பு கிடைக்கும். அதில் வரும் தொடர்கதைகளை எனது அம்மா வாசிக்க அக்கம் பக்கம் இருப்பவர்கள் கேட்டுக் கொள்வார்கள்... டிவி பொட்டியின் அடிமைத் தனத்திற்குள் நுழைய அன்றைய எங்கள் தெருவின் சீரியல் அவ்வகை தொடர்கள் தான்.

இதற்கு அடுத்து கொஞ்சம் பெரிதாகியதும், ராஜேஸ்குமாரின் பாக்கெட் நாவல்கள் அந்த இடத்தைப் பிடிக்க ஆரம்பித்தன. பரபரப்பான துப்பறியும் நாவல்களின் மீதும், குற்றம் செய்யும் முறைகளின் மீதும், அதைக் கண்டுபிடிக்கும் முறையின் மீது ஏனோ ஒருவித உந்துதலை ஏற்ப்படுத்துவதாய் அமைந்தது அம்மாதிரியான நாவல்கள்... இந்த வரிசையில் பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா போன்றவர்களும் அடங்குவர். இந்த தொடரில் சில நேரங்களில் மாலைமதி, ராணிமுத்து போன்றவையும் கிடைக்கும்.. இதில் குடும்பநாவல்கள் படிக்கக் கிடைத்தது.

இந்தவரிசையில் மேலும் செல்லும் போது தான் சுஜாதா என்ற கம்பீரமான விருட்சம் தென்பட்டது. ஆனந்த விகடனில் அவர் எழுதிய தொடர்கள் வாயிலாகவே எனக்கு அவர் அறிமுகமானார். பின்னர் நூலகங்களில் இருந்தா அவரது புத்தகங்களை படிக்கக் கிடைத்தது. பொதுவாக ஆலமரம் என்று சிறந்த ஆளுமைகளைச் சொல்வார்கள். ஆனால் சுஜாதாவை ஆலமரம் என்று சொல்ல இயலாது. ஏனெனில் ஆலமரத்தின் கீழ் எதும் வளராது. ஆனால் சுஜாதா என்ற விருட்சத்தின் கீழ் இன்று எழுதக் கூடியவர்களில் 95 சதவீதம் பேர் அடங்குவர் என்பது எனது கருத்து.



சுஜாதா தொடாத துறை இல்லை எனலாம். இலக்கியம் தொட்டு, விண்வெளி ஆராய்ச்சி வரை.... எனக்கு தமிழகத்தில் இருக்கும் குறிப்பாக இந்து மதம் பற்றிய விளக்கங்களை தெளிவாக தெரிந்து கொள்ள உதவியவர். சுஜாதா அறிபுனைக் கதைக்களை மக்களிடையே பிரபலப்படுத்தியவர் சுஜாதா. பத்தி எழுத்துக்கள் நிறைய எழுதியவர். ஹைக்கூக்கள் அறிமுகபடுத்தினார், பாராக்களில், வார்த்தைகளில் கதைஎழுதச் சொல்லிக் கொடுத்தார்.

உண்மை அறிவியலை சுலபமாக சொல்லிக் கொடுத்தார். நாம் சாதாரணமாக எழுதும் ஒரு பாராவை ஒரு வரியில் எல்லாவற்றையும் அடக்கத் தெரிந்தவர். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்பாக படிக்க வைக்கும் ஆற்றல் பெற்றவர். சில கதைகளைப் படிக்கும் போது வர்ணனைகளை ஸ்கிப் செய்து விடுவேன்.. ஆனால் சுஜாதாவின் கதைகளில் இது முடியவே முடியாத விஷயம்.

பெரிய கதைகளை படிக்கும் போது கிட்டத்தட்ட கதைக்குள் நாமே நுழைந்து விடுவோம். அடுத்த வீட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்ப்பது போல.. அல்லது அந்த கதாநாயகனாக, வில்லனாக, நாமையே உருவகப்படுத்திக் கொள்வோம். இதன் தாக்கம் பல நாட்களுக்கு இருக்கும். ஆ நாவல் சிறந்த உதாரணம். படித்த பல நாட்களுக்கு காதுகளில் குரல் ஒலித்துக் கொண்டு இருந்தது. என் இனிய இயந்திரா படித்த போது தெருக்களில் எல்லாம் கேமரா வைத்து இருந்தது போல் ஒரு பிரமையை உணர முடிந்தது.

ஸ்ரீரங்கம் என்ற ஊரை எனக்கு அறிமுகப்படுத்தியவர். திருச்சி செல்லும் போதெல்லாம் ஸ்ரீரங்கத்து வீதிகளில் சென்று உலாவ வேண்டும் என்று வேட்கையை ஏற்படுத்தியவர்..ஆனால் சுஜாதா என் மனதில் கட்டியமைத்து இருக்கும் ஸ்ரீரங்கத்திற்கு மாற்றான ஒன்றைக் கண்டால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்று தெரியாததால்.. அதைச் செய்யவில்லை... (இதே நிலை தான் தஞ்சைக்கும், தாராசுரத்திற்கும், கங்கை கொண்ட சோழபுரத்திற்கும்.)

சுஜாதா விட்டு விட்டுப் போன ஒரு மர்மம்.. மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்... கணேஷ், வசந்த் நாம் அனைவருக்கும் தெரியும்.. சுஜாதாவின் துப்பறியும் நாவல்களின் கதை மாந்தர்கள். அவர்கள் வாயிலாக அவர் சொல்ல வந்தது அல்லது இல்லாத ஒன்று... அவர் இறக்கும் வரை அது தெரியாமலேயே போய் விட்டது.. இனி மேலும் தெரியாமலேயே தான் இருக்கும்..

சில இடங்களில் அது குறித்து இருக்கும் ஒரு ‘பலான’ ஜோக்.. அது சுஜாதா அவர்களின் எழுதியதில்லை.. யாரோ அடித்த விட்ட புருடா... அது மர்மமாகவே இருப்பது தான் அந்த ஜோக்கின் தனித்தன்மை.. இன்னும் அது குறித்து பல ஜோக்குகள் வரலாம்.. எது வந்தாலும் மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் என்ற ஒன்று சஸ்பென்ஸூடன் குறுகுறுப்பாக நினைவில் இருக்கும்.

சுஜாதா என்னுடைய ஆதர்ச எழுத்தாளன் என்று சொல்ல மனது வரவில்லை.. எழுத்து,படிப்பு,இலக்கியம்,அறிவியல் எல்லாவற்றையும் எனக்கு சொல்லிக் கொடுத்த எனது மதிப்பிற்குரிய ஆசான் என்றால் மிகையில்லை.

தமிழ் இருக்கும் வரை சுஜாதா என்ற முழுமையடைந்த ஆளுமை உயிரோடு இருக்கும்.
.
.

Saturday, July 25, 2009

பார்த்தது, கேட்டது,படித்தது.

சின்ன வயசில் வாரமலரில் வரும் பாகேப விரும்பி படிப்பேன். இப்ப அதை விட சுவாரஸ்யமாக பதிவுலகில் வருவதால் இதுவே இனிமையா இருக்கு..அந்த ஸ்டைலில் இன்னைக்கு ஒரு பார்த்தது, கேட்டது,படித்தது.

கேட்டது:



நண்பர் ஒருவர் ஒரு கதை சொன்னார்.. ஒரு இளைஞன் கண் தெரியாத ஒரு இளம்பெண்ணுடன் காதல் வயப்பட்டான். அவள் மீது அளவில்லாத அன்பு செலுத்தினான். கண் தெரியாதவள் என்றாலும் அழகானவள். காதலன் அவளிடம் திருமணம் பற்றிப் பேசிய போது அவள் தனக்கு கண் தெரிந்தால் தான் அவனை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று கூறி விடுகின்றாள்.

காதலன் யோசித்து, பல சிரமங்களுக்கு இடையில் அவளுக்கு கண் கிடைக்க ஏற்பாடு செய்கின்றான். கண் பார்வை கிடைத்தவுடன் முதன் முதலாக காதலனைக் காண அவள் விரும்புகின்றாள். அவனைப் பார்த்த அவளுக்கு அதிர்ச்சி. ஏனெனில் அவன் குருடாக இருக்கின்றான். அவனைக் திருமணம் செய்ய மறுத்து விடுகின்றாள். காதலன் சோகத்துடன் ஏதும் பேசாமல் திரும்பிச் செல்கின்றான். அப்போது அவன் நினைத்துக் கொண்டதைக் கடைசியில் சொல்கின்றேன்.

பார்த்தது:
ஒரு விளம்பரம்.. எங்க முன்னாள் பேவரைட் சோப்பான லைப்பாய்க்கு ஒரு விளம்பரம். இரண்டு பில்டிங்கில் இருக்கும் குழந்தைகளின் சோப்பை மாற்றியதால், சுகாதாரமானதாக இருந்ததாக வரும். ஒரு பில்டிங்கில் இருக்கும் குடும்பம் பழைய சோப்பை தொடர்ந்ததாகவும், அடுத்த பில்டிங் முழுவதும் லைப்பாய்க்கு மாறியதாகவும் சொல்லி விட்டு, இறுதி முடிவில் லைப்பாய் பயன்படுத்திய பில்டிங்கில் இருக்கும் குழந்தைகள் 40 சதவீதம் அதிகமாக பள்ளிக்கு சென்றதாக சொல்கிறார்கள்.

சுத்தமான லாஜிக் ஓட்டைகள், நடைமுறைக்கு முரணாக இருக்கின்றது என்றாலும், லைப்பாய் பயன்படுத்தியதை சொல்லும் போது தினமும் ஐந்து முறை லைப்பாய் பயன்படுத்தியதாக கீழே குறிப்பு வருகின்றது. அடப்பாவிகளா? லைப்பாய் சோப்பு போட்டு வாரத்துல இரண்டு தடவை குளிப்பதே கஷ்டம்.. இதுல டெய்லி 5 முறையாம்.. ஓவரா இல்லியா?


படித்தது:
திரு. நீலகண்ட சாஸ்திரிகள் எழுதிய தென் இந்திய வரலாறு என்று நூல் சமீபத்தில் படிக்கக் கிடைத்தது. கொஞ்சமா புரட்டியதில் சில சேதிகள். சங்ககாலத்தில் தொடங்கி, கிபி 17 ஆம் நூற்றாண்டு வரை உள்ள வரலாறுகளைத் தொகுக்க பல சிரமங்களை 1950 களில் முயன்று உள்ளார். தென் இந்தியாவிலும், வட இந்தியாவிலும் பொதுவான அகத்திய முனிவர் பற்றிய சில மரபுக் கதைகள் சுவாரஸ்யமா இருக்கு.

ஒரு சந்தர்ப்பத்தில் அகத்திய முனிவர் செல்வத்தின் தேவை காரணமாக மணிமதி என்ற நாட்டை ஆண்ட தைத்திரிய மன்னனாகிய இல்வலனிடன் சென்றார்.இல்வலன் பிராமணர்களிடம் விரோதம் கொண்டவன். அவனுக்கு ஒரு தம்பியும் இருந்தான். அவன் பெயர் வாதாபி. இல்வலன் வாதாபியை ஆட்டுக் கிடாயாக மாற்றி, அறுத்து சமையல் செய்து பிராமணர்களுக்கு உணவளிப்பான். பிராமணர்கள் உண்டதும் இல்வலன் தனது தம்பியை பெயர் கூறி அழைப்பான். உடனே வாதாபி பிராமணர்களின் வயிற்றைக் கிளித்து வெளியேறி அவனது பழைய உடலை அடைந்து விடுவான். இது மாதிரி பல பிராமணர்களை வில்வலன் கொன்றான்.

அகத்தியர் அவனிடம் வந்ததும் அவனும் அதே போல் தம்பியை சமைத்துக் கொடுத்தான். அகத்தியர் உணவருந்தியதும் தம்பியை அழைக்க தம்பி வரவில்லை. அகத்தியரின் வயிற்றில் செரிமானமாகி விட்டான். வேறு வழி இல்லாமல் பெரும் செல்வத்தைக் கொடுத்து, தனது தம்பியை அகத்தியரிடம் இருந்து மீட்டதாக கதை செல்கின்றது.. நல்லா இருக்குல்ல.. கதை!

அடுத்து இன்னொரு வித்தியாசமான விஷயம்.. தமிழர்களின் வரலாறு. சங்க காலத்துக்கு முன்னால் இருந்த தமிழக வரலாறு பற்றி ஏதும் தெரியவில்லை என நீலகண்ட சாஸ்திரிகள் கூறுகின்றார்கள். மேலும் சில நூற்றாண்டுகள் தமிழகத்தில் என்ன நடந்தது என்பதே தெரியவில்லை என்றும் கூறுகின்றார். (நான் பள்ளி படிக்கும் காலங்களில் ஆ.வி .. ஹாய் மதன் இது பற்றி சொல்லி ஏதோ சர்ச்சையில் சிக்கிக் கொண்டது நினைவுக்கு வருகின்றது)
கன்னியாகுமரி வரையிலான தமிழகம் உருவான பரசுராமன் கதையைச் சொன்னால் அடிக்க வருவீர்கள் என்பதால் அதை விட்டு விடுகின்றேன்.

எங்க பாண்டிய நாடு பற்றிய ஒரு சுவையான செய்தி. கிறிஸ்து பிறப்பதற்கு முன் ஹெர்குலிஸ் மன்னர்களின் காலத்தில் தென்னிந்தியப் பகுதிகள் ரோமர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாக மெகஸ்தனீஸ் கூறுகின்றார். கிமு 3 ஆம் நூற்றாண்டுக்காலம். ஹெர்குலிஸின் மகளான ‘பாண்டையா’ என்பவருக்கு தமிழகத்தின் பகுதிகளை ஆட்சி செய்யக் கொடுத்ததாகவும், அதனால் பாண்டியர்கள் என்ற மரபு வந்ததாகவும் குறிப்பாகச் சொல்கின்றார். ரோம்பப்பேரரசரின் கடற்படைகள் தென்னிந்தியக் கடல் பகுதியில் வந்து கைப்பற்றியதாகவும் சொல்கின்றார்.

நேரம் கிடைக்கும் போது அதில் இருக்கும் இன்னும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்கின்றேன்.

கேட்டதின் விடை:
உனக்கு கண் தெரிய வேண்டும் என்பதற்காக என் இரு கண்களையும் தானம் செய்தேன் என்பதை உனக்கு சொல்ல விரும்பவில்லை.