சரித்திர நாவல்களைப் படிக்கும் போது பழைய சமூகங்களின் வரலாறு, இலக்கியம், வாழ்க்கை முறை போன்றவற்றில் ஒரு பார்வை கிடைக்கும். அதில் எத்தனை சதவீதம் உண்மை இருக்கின்றது என்று தெரியாவிட்டாலும், ஒரு அறிமுகமாக அவைகளை எடுத்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட சரித்திர நாவல் வேட்கையில் இன்னொரு பரிணாமமும் இருக்கின்றது. அது நிலவியல் ரீதியான ஒரு ஆர்வம்\வெறி.
படித்து அனேக நாவல்களில் சோழ நாட்டின் மாண்பை உயர்த்திப் பிடிக்கும் வகையிலானவைகளே அதிகமாகக் கிடைக்கின்றன. எங்கள் பாண்டிய மண்ணின் மகிமையை போற்றும் விதமான நாவல்களைப் படிக்கும் பாக்கியம் இன்னும் சரிவர கிட்டவில்லை. அந்த தேடுதல் முயற்சியில் தான் தீபம்.நா.பார்த்தசாரதி அவர்கள் கல்கியில் எழுதிய பாண்டிமா தேவி கிடைத்தது. சென்னை நூலகம் தமது இணைய தளத்தில் வைத்து இருக்கின்றார்கள்.

கிட்டத்தட்ட கல்கியின் பொன்னியின் செல்வன் பாணியில் எழுதப்பட்ட நாவல் அது. அதே போன்ற கதைக்களமும் கூட
ஒரு அழகான இளவரசன்
வீரமான படைத்தளபதி
மதியூக அமைச்சர்
அவரது ஒற்றன்
ஈழத்திற்கான பயணம்
கடல்
நிறைய நாயகிகள் (விலாசினி, மதிவதனி, குழல்வாய்மொழி, பகவதி)
இப்படி எல்லா அமசங்களும் இருக்கின்றன. கதையின் ஆரம்பமும் ஓட்டமும் நன்றாகத் தான் இருந்தது. இராசசிம்மன் பாண்டிய மண்ணின் இளவரசன். அழகானவன். சிறந்த போர் வீரன். அவனது தந்தையாகிய பாண்டிய மன்னனின் மறைவுக்குப் பின் சோழ நாடு உள்ளிட்ட வட நாட்டவர்களின் படையெடுப்பால் மதுரையை இழந்து தென்பாண்டி நாடான நாஞ்சில் நாட்டில் தஞ்சம் புகுகின்றனர். தனது கணவை இழந்த மாண்டிமா தேவியும் மனசஞ்சலத்துடன் இருக்கின்றார்கள்.
பாண்டிய மன்னனின் கீழ் நாஞ்சில் நாட்டைக் கவனித்து வரும் மகாமண்டலேசுவரர் இடையாற்று மங்கலம் நம்பி இவர்களைப் பாதுகாத்து வருகின்றார். இவரது மகள் தான் குழல்வாய்மொழி. தென் பாண்டி நாட்டின் படைத்தலைவன் வல்லாளதேவன். தனது தாய்நாட்டை காக்கும் வெறியில் இருக்கின்றான். இவனது தங்கை வீரக்குணம் பொருந்திய பகவதி. நாஞ்சில் நாட்டில் கல்வியில் சிறந்த அதங்கொட்டாசிரியரின் மகள் விலாசினி.
தனக்கு சொந்தமான அரண்மனையில் மகாமண்டலேசுவரர் இளவரசனைப் பாதுகாத்து வைத்து இருக்கின்றார். அங்கு அவரது மகள் இளவரசனைக் கவனித்துக் கொள்கின்றாள். விலாசினியும், பகவதியும் மகாராணியுடன் இருக்கின்றனர். திடீரென்று ஒருநாள் பாண்டிய நாட்டுக்கு சொந்தமான அரியாசனம், மணிமுடி, வீரவாளுடன் இளவரசன் ஈழநாட்டுக்கு கிளம்பி விடுகின்றான். ஈழம் செல்லும் வழியில் மீனவப் பெண் மதிவதினியை சந்திக்கிறான். அவனுக்கு இலங்கையின் மன்னன் காசியபன் ஆதரவு அளிக்கின்றான். சோழ நாட்டின் ஒற்றர்கள் மகாராணியையும், இளவசரனையும் படுகொலை செய்ய அலைகின்றனர்.
இதற்கு இடையில் சோழ அரசன் தலைமையிலான ஐவர் கூட்டணி தென்பாண்டி நாட்டின் மீதும் படையெடுத்து வர தீர்மானிக்கின்றது. ஈழம் சென்ற இளவசரனை மீண்டும் அழைத்து வர குழல்வாய்மொழியும், பகவதியும் ஈழம் செல்கின்றனர்... பெண்கள் அனைவருக்கும் இளவசரன் மேல் ஒரு மையல்.
இதுவரையில் எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டு இருந்தது.. கலகி நிர்வாகத்தில் உடனடியாக நாவலை முடிக்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள் போலத் தெரிகின்றது.. இதற்குப் பின் எல்லாம் தலைகீழ்.
இன்றைய தொல்லைக்காட்சி தொடர்களில் தொடரை முடிக்க சொல்லிவிட்டால் உடனடியாக சிலரை சாக வைப்பார்கள். கெட்டவர்களை நல்லவர்களாக்கி விடுவார்கள். அது போல் இதிலும் திடீரென்று கதை ஜெட் வேகத்தில் பறக்கின்றது. பகவதி சாகடிக்கப்படுகிறாள். குழல்வாய்மொழி வேறு ஒருவனுடன் திருமணம் முடிக்கிறாள்.
படைத்தலைவன் நாட்டின் எதிரி ஆகின்றான். மதியூக மந்திரி மதி இழக்கிறார். போர்க்களத்தின் பாண்டிய படை தோல்விஅடைகின்றது. இளவசரன் நாட்டை வீட்டு ஓடி விடுகின்றான். பாண்டிமா தேவி சேர நாட்டில் தஞ்சம் புகுகின்றார்.
மிகவும் ஆவலாக படித்துக் கொண்டே வந்து பாண்டிய நாட்டை அதள பாதாளத்தில் கொண்டு சென்று விடுகின்றார் ஆசிரியர்.. ஏனடா படித்தோம் என்று ஆகி விடுகின்றது.. ஆனாலும் சோழ நாட்டினர் படித்து பூரிப்படையலாம்..
சரித்திர நாவல்களின் வேட்டை தொடரும்... பகிர்வும் தொடரும்..
டிஸ்கி 1 : இன்னும் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் (கயல்விழி ) படிக்க கிடைக்கவில்லை.
டிஸ்கி 2 : பாண்டிய மன்னின் தொன்மையையும், வீரத்தையும் பறைசாற்றும் வகையில் நாமே ஏன் ஒரு சரித்திர நாவலை எழுதக் கூடாது என்று மனதின் ஓரத்தில் ஒரு ஆர்வம் இருந்து கொண்டே இருக்கின்றது. இந்தியா சென்று அடுத்த மூன்றாண்டுகளில் சுமார் 300 பக்கங்களில் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.. ஆனால் வாசிப்பவர்கள் பாவம் என்பதால் யோசிக்க வேண்டி இருக்கின்றது.

