Friday, August 28, 2009

விடைபெறுகின்றேன்.. நன்றி அறிவிப்புடன்.

விடை பெறுகிறேன் என்றதும் குதித்து கும்மாளம் போடுபவர்கள் அமைதியாக முழுவதும் படிக்கவும். இது ஒன்லி சிறு இடைவெளி தான். சீக்கிரமே திரும்ப வந்து விடுவேன். அதனால் நிறைய சந்தோசப்பட வேண்டாம்.. ஹே ஹே ஹே.. :))

சவுதியில் வேலையை விட்டு விட்டு விடைபெறும் நேரம் வந்து விட்டது. மூன்று ஆண்டுகள் இங்க குப்பை கொட்டியாச்சு.. கிட்டத்தட்ட ராஜபோக வாழ்க்கை.. சும்மா இருப்பதற்கு மாசமான சம்பளம் கொடுத்து, ஓசியில் சாப்பாடு போட்டு, சொகுசாக தங்க இடம் கொடுத்து, வருடா வருடம் 2 மாதம் லீவ் கொடுத்து… Thank You Saudi Oger Ltd.

(அதன் விளைவு கொஞ்சம் தொப்பையும், சோம்பேறித்தனமும்... இனி அடுத்தகட்ட பரபரப்பான ஒரு வேலையை நோக்கி தயாராகிக் கொண்டு இருக்கின்றேன். )

முதல் வருடம் செம போர். தமிழ் பேசுபவர்கள் விரல் விட்டு எண்ணி விடக் கூடியவர்களே.. அவர்களும் நம்முடன் பேசும் அளவுக்கு அலைவரிசையில் இல்லை. அடுத்த ஆண்டு தமிழ் இணையம் அறிமுகமானது. மிக மகிழ்ச்சியான வாழ்க்கை.

தமிழ் மணம் வழியாக தமிழ் பதிவுலகில் நுழைந்ததும் புதிய உலகம் ஒன்று தெரிந்தது. வாழ்வு முழுவதும் ஒரு தேடல் பாக்கி இருப்பதாகவே எனக்கு படும். அது என்னவென்று புரியாமல் இருந்ததற்கு விடை….. வாசிப்பு. வாசிப்பின் இன்பமே அலாதி. எதை வாசிக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டித் தந்த தமிழ் மணத்திற்கு மிக்க நன்றி!. ஆனால் இன்னும் அதிகப்படியாக வாசிக்க சந்தர்ப்பங்கள் தோதுவாக அமையவில்லை. இனி அமையும் என எதிர்பார்க்கலாம்.

எழுதுவது என்பது என்னை அவ்வளவாக கவரவில்லை. வாசிப்பின் வடிகாலாக எழுதுவதை வைத்திருக்கவே எண்ணினேன். என் எழுத்துக்கள் எதுவும் என்னைக் கவரவில்லையாதலால் வாசிப்புடன் நிறுத்திக் கொள்ளவே ஆசைப்படுகின்றேன்.

தமிழ் இணையத்தில் வழியாக கிடைத்த மிகப் பெரிய சொத்து நண்பர்கள். தனிமையுடன் வாழ்ந்தேன் என்று சொல்வதன் அர்த்தம் நல்ல நண்பர்கள் கிடைக்கவில்லை என்பதோ, அல்லது நண்பர்களை என்னால் தக்கவைக்க இயலவில்லை என்பதோ தான். ஆனால் இணைய வழி நண்பர்களின் உலகம் புதிதாக இருந்தது. முகம் தெரியாதவர்கள், பாலினம் எது என்று உறுதியாக சொல்ல முடியாதவர்கள், ஆனால் தமிழர்கள் என்ற ஒரு பிணைப்பால் மட்டும் கட்டுண்டோம்.

அண்ணனாகவும், தம்பியாகவும், அக்கா, தம்பி, அம்மா,அப்பா என முகம் தெரியாத உறவுகள். அனைவரிடமும் இருக்கும் உண்மையான அன்பு. சாட்டிங் தாண்டி, தொலைபேசி வழியான உரையாடல்களாகவும் மலர்ந்த நேசங்கள். சில பெண் பதிவர்களை நம்பால் போன் பேசி நம்பிய சில தருணங்கள்… ;-)). என் மீது நம்பிக்கை வைத்திருந்த பல பதிவர்கள் மற்றும் புதிய உலகத்தைக் காட்டிய நட்புகளுக்கு ஆனந்தக் கண்ணீருடனான நன்றிகள்.

முக்கியமாக ஒன்றைக் குறிப்பிட வேண்டி விரும்பினேன். பதிவுலக சகோதரி ஒருவருடைய வீட்டில் முக்கியமான விசேசம். போனில் பேசும் போது “ அண்ணா! அந்த நேரத்தில் நீங்களும் இங்க இருந்தா ரொம்ப சந்தோசப்படுவேன்” என்று சொன்ன போது சடாரென்று கண்களில் உகுத்த கண்ணீரை மறக்க இயலாது. என் இரத்த உறவுகளில் கூட யாரும் என்னிடம் இப்படி சொல்லிக் கேட்டதில்லை… ;-) நன்றிடா!!

ஓரிரு தினங்களில் இந்தியாவுக்கு கிளம்புகின்றேன். பதிவுகளுக்கு தான் வர முடியாது. வழக்கமான மெயில் மொக்கைகள், போன் மொக்கைகளைத் தொடரலாம். எங்கள் ஊரைச் சுற்றி இருப்பவர்கள் பொழுது போகவில்லையெனில் நேராகவே வந்து மொக்கை போடலாம். (தேனி, மதுரை (எங்க ஏரியா) மற்றும் நெல்லை, குமரி (தங்கமணி ஏரியா) மாவட்டத்துக்கு முன்னுரிமை..ஹிஹிஹி). )

இறைவன் நாடினால் சிறு இடைவெளிக்குப் பிறகு இப்போது இருந்ததை விட ஒரு சிறந்த வேலையில் சேரவிருக்கின்றேன். என்றும் போல் உங்களது வாழ்த்துக்களுடன்… :)

அதற்குப் பிறகு மீண்டும் பதிவுலகில் சந்திக்கலாம்.

அன்புடன்

தமிழ் பிரியன் @ Jinnah.

dginnah@gmail.com

Monday, August 24, 2009

"And, Now..."


எப்போது வேண்டுமானாலும் செயின் கழன்று விடும்
சைக்கிள் ஒன்று என்னிடம் இருந்தது.
பெண்கள் பள்ளிக்கு செல்லும் வழியில்
சைக்கிள் செயின் மாட்டும் தோரணையில்
சைக்கிள் கேப்பில் பிகர் வெட்டிக் கொண்டு இருப்பேன்.

வெகு சுவாரஸ்யமாக இருந்தது அந்த வாழ்க்கை!

எப்படியோ செயின் கழன்று விழுவது நின்று போனது ஒரு சுபமுகூர்த்தத்தில்
அன்றே அந்த பிகரும் வேறு ஒருவனை கூட்டிக் கொண்டு
போய் விட்டாள் இந்தியாவை விட்டு

Saturday, August 22, 2009

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது ஏன்?


இன்று முதல் உலகின் பல பிரதேசங்களில் ரமழான் மாதம் தொடங்கி விட்டது. இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவரும் ரமழான் மாதம் முழுவதும் பகல் முழுவதும் நோன்பு இருந்து, திருக்குர் ஆனை அதிகமான ஓதி, இரவு நேரங்களில் அல்லாஹ்வை வணங்கி இறை தியானத்தில் ஆழ்ந்திருப்பர்!.

நோன்பு என்பதை இஸ்லாமிய சமூகத்தில் இருக்கும் அனைத்து தரப்பு மக்களும் பின்பற்றுகின்றனர். பொருளாதாரம், சமூக அந்தஸ்து, வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் நோன்பு நோற்கின்றனர். வயதானோர், நோயுள்ளவர்கள், சிறுவர், சிறுமிகள், மாதவிடாய் நேர பெண்கள், சமீபத்தில் பிரசவித்தவர்கள் ஆகியோருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றது.

நோன்பு நோற்பதால் என்ன பயன்? பசியின் அருமையை நோன்பில் உணர்ந்து கொள்வார்கள் என்பதா? அப்படியானால் தினசரி ஒரு வேளை சாப்பாட்டுக்கே திண்டாடுபவன் ஏன் நோன்பு நோற்க வேண்டும்.... நோன்பு நோற்க வேண்டியதன் காரணத்தை அல்லாஹ் தெளிவாக எடுத்துரைக்கின்றான்.



يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمْ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ


ஈமான் கொண்டவர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது)விதிக்கப்பட்டுள்ளது. (அதன்மூலம்) நீங்கள் இறையச்சம் உடையோராக ஆகலாம். (அல்குர்ஆன் 2:183)


நோன்பு நோற்பதன் மூலம் நீங்கள் இறையச்சம் உடையோராக (முத்தக்கீன்களாக) மாறலாம் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான். நோன்பு என்பது என்னவென்று வரையறுத்தால் ரமழான் மாதம் முழுவதும் காலை முதல் மாலை வரை சுமார் 13 மணி நேரம் உண்பது, குடிப்பதை விட்டு விட வேண்டும். இச்சைகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும். கெட்ட செயல்களில் இருந்தும், கெட்ட பேச்சுகளில் இருந்தும் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இறையச்சம் வர இயலுமா? இயலும். மனிதனால் அடக்க இயலாதவைகளில் முக்கிய இடம் வகிப்பவை பசியும், தாகமும், இச்சையும். நோன்பு நேரங்களில் இவைகளை அடக்குவதன் மூலம் மனிதனின் மனம் செம்மைப்படுகின்றது. மனிதனுக்கு அரசோ, சமூக அமைப்புகளோ கட்டுப்பாடுகளை விதிக்கும் போது யாரும் பார்க்காத நிலையில் அவன் கட்டுப்பாடுகளை மீறத் துணிகின்றான். ஆனால் நோன்பு இருக்கும் போது நம்மை அல்லாஹ் எங்கு சென்றாலும் கண்காணித்துக் கொண்டு இருக்கிறான் என்ற நினைவிலேயே இருந்து பசி, தாகம், இச்சைகளை அடக்குவதன் மூலம் மனிதன் ஒரு சுய கட்டுப்பாடான நிலைக்கு வருகின்றான்.

இந்த இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் என்ற மாண்பு மனிதனை இறையச்சம் உடையவனாக மாற்றுகின்றது. அதே போல் கெட்ட நடத்தைகள், கெட்ட பேச்சுகளையும் விட்டு விலகி இருக்க வேண்டும் என்ர எண்ணத்தை உருவாக்குவதன் மூலம் மனிதனை செம்மையாக்கி சமூகத்திற்கு தரக் கூடியதாக நோன்பு மாறி விடுகின்றது. கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விடாதவர்கள் நோற்பது நோன்பாகாது. அது வெறும் பட்டினி என்பதிலேயே சாரும்.

இந்த இனிய ரமழான் மாதம், வருடத்திற்கு ஒரு முறை வரும் பயிற்சிக்களம் உன்பதை உணர்ந்து நல்லமுறையில் நோன்பு நோற்று இறைவனின் அருளைப் பெறுவோமாக!


1) யார் கெட்ட பேச்சுக்களையும், செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி

2) எத்தனையோ நோன்பாளிகள் அவர்கள் பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் அவர்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை, இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர் இரவில் கண்விழித்திருப்பதைத் தவிர வேறு எதையும் பெற்றிருப்பதில்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: நஸயீ, இப்னுமாஜா
3) உங்களில் ஒருவர் நோன்பு நோற்றிருந்தால் தன் மனைவியோடு உடல் உறவு கொள்ளக்கூடாது. இன்னும் கெட்டவார்த்தைகள் பேசவும் கூடாது. யாராவது அவரை ஏசினால் அல்லது அடித்தால் அவர் "நோன்பாளி" என்று கூறிக்கொள்ளட்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: புகாரி, முஸ்லிம்

அனைவருக்கும் இனிய ரமழான் நல்வாழ்த்துக்கள்!

மீள் பதிவு.


..

Tuesday, August 11, 2009

பாரி ஒரு நிஜமான வள்ளலா? பா.கே.ப

கேட்டது:

இரண்டு நண்பர்களின் விவாதத்தைக் கேட்க நேர்ந்தது. விவாதம் WI-FI எனப்படும் கம்பி இல்லாத இணைய தொடர்பு பற்றியது. இங்கு WI-FI தொழில்நுட்பம் பெருமளவு பயன்படுத்தப் படுகின்றது. இப்போது கடைகளில் கிடைக்கும் பெரும்பாலான DSL மோடம்களில் ஒயர்லெஸ் வசதியும் இணைந்தே இருக்கின்றது.

WI-FI மூலம் பெரிய ஹோட்டல்களில், ஷாப்பிங் மால்களில், விமான நிலையங்களில் இலவசமாக இணைய இணைப்பு வழங்குவது அதிகரித்து வருகின்றது. அதே நேரம் ஒயர்லெஸ் வசதியுள்ள மோடம்களை வாங்கி பயன்படுத்தும் சாமானியர்களில் இணைய வசதியும் வெளியே கசிகின்றது. இதன் அலைநீளம் அவர்களை சுற்றி சில மீட்டர்கள் தூரம் வரை செல்கின்றது. இதை தடை செய்வது பற்றி விவரம் குறைவானவர்களில் இணைய வசதியை அவரது வீட்டைச் சுற்றியுள்ள மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

விவாதம் பெரிய அளவில் WI-FI வசதியை அளிப்பதைப் பயன்படுத்துவதைப் பற்றி அல்ல. தனது சுய பயன்பாட்டுக்கு மற்றவர்கள் வைத்து இருக்கும் இணையத்தை அவருக்குத் தெரியாமல் பயன்படுத்துவது குறித்து தான். ஒருவர் “இலவசமாக நம்மைத் தேடி காற்றில் வருகின்றதைத் தான் பயன்படுத்துகின்றோம். ஊரில் கசியும் கேபிள் டீவி சிக்னலை பயன்படுத்திக் கொள்வது போல் தான். இதில் தவறேதுமில்லை” என்கின்றார்.

மற்றவர் “இது சரியாகாது. அவர்களது இணைய இணைப்பிற்கு அவர் பணம் செலுத்துகின்றார். அவரது இணைய பயன்பாட்டு அளவில் கணிசமானதை நீங்கள் பயன்படுத்திக் கொள்கின்றீர்கள். நீங்கள் பயன்படுத்துவதன் மூலம் அவரது இணைய இணைப்பின் வேகமும் பாதிக்கபடும்.” என்று விவாதம் செய்தார்.

இரண்டாமவர் சொல்லும் கருத்தோடு நான் ஒத்துப் போனேன். மற்றவர்களில் இணைய Bandwith ஐ அவருக்கு தெரியாமல் பயன்படுத்துவது, வீடு திறந்திருக்கின்றது என்பதற்காக அதனுள் நுழைந்து திருடுவது போன்றது.

படித்தது….

சீரியஸா அதை யோசிச்சுக்கிட்டே இருங்க… நான் உங்களை ஒரு இடத்திற்கு கூட்டிச் செல்கின்றேன். வினாடிக்கு ஒரு நூற்றாண்டு வீதம் என்னோடு கற்பனைக் குதிரையில் பிரயாணித்து பின்னோக்கி வாருங்கள். (நன்றி:கல்கி) நாம் இப்போது ஒரு மலையடிவாரத்தில் இருக்கின்றோம். மலை தெரிகின்றதா? கரடு முரடான மலை. அங்காங்கே தேனடைகள் தெரிகின்றதா? நாம் இருக்கும் இடம் பறம்பு மலை என்று சொல்லப்படும் பிரான்மலை. மேலே தெரிகின்றதே அந்த கோட்டையில் தான் பாரி என்று சொல்லப்படும் கடையேழு வள்ளல்களில் ஒருவர் இருக்கின்றார்.

மலையேறி அவரைப் பார்க்க முடியாது நம்மால.. எப்படியும் 7, 8 மி.மீ தூரம் நடக்கனும். அதெல்லாம் கவைக்கு உதவாது... இருங்க.. ஏதோ சத்தம் கேட்கிறதே.. என்னது? அட ஆமா.. குதிரைகளின் கனைத்தல்களும், யானைகளின் கேட்கின்றனவா? பாரியின் இந்த பறம்பு மலையை மூவேந்தர்களும் முற்றுகை இட்டு இருக்கின்றார்கள். அவர்களுக்குள் ஏதோ ஒரு பகை. பாரியை முற்றுகை இட்டு, எந்த உணவுப் பொருளும் மேலே செல்ல விடாமல் அக் குறிஞ்சி நில மக்களை பட்டினியால் அடக்க நினைக்கின்றனர்.

சரி.. மலையைப் பார்த்தது போதும். வாங்க நிகழ்காலத்திற்கு செல்லலாம். நம்ம கணிணியை திறந்து இணையத்திற்குள் தேடலாம். இது பற்றி.. நம்ம கூடல் குமரன் ஐயாவோட உடுக்கை இழந்தவன் கை என்ற பாரியின் கதையைப் படிக்கலாம். இது புறநானூற்றின் ஒளியில் எழுதப்பட்டுள்ளது. அதில் கபிலர் இதைப் பற்றி என்ன சொல்றாருன்னா…

அளிதோ தானே பாரியது பறம்பே
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே
இரண்டே தீஞ்சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே
மூன்றே கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீதழிந்து
திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே


இன்னா சொல்ல வருகிறார்ன்னா.. நீங்க மூவேந்தரும் என்ன செஞ்சாலும் இந்த மலையில் இருந்து அவர்களை கீழே வர வைக்க முடியாது. அதே போல் நீங்களும் இந்த மலை மேல ஏறிப் போய் போரிடவும் முடியாது. மலை முற்றுகை பட்டினிக்கும் வழி வகுக்காது. ஏன்னா இந்த மலையில் உழவர்களால் உழாமலேயே கிடைக்கக் கூடிய நான்கு உணவுப் பொருள் சுலபமா கிடைக்குது. 1. சிறிய இலையை உடைய மூங்கில் மரத்தில் வளர்க்கப்படும் நெல் 2. பலாப் பழங்கள் 3. வள்ளிக் கிழங்கு 4. தேன்.

இத்தோட முடிச்சிக்கலாம்… இப்ப என்ன பிரச்சினைன்னா வேற சில மேற்கோள்களில் முற்றுகையின் போது கபிலர் பழக்கப்படுத்த கிளிகளைப் பயன்படுத்தி விவசாய நிலங்களில் இருந்து தானியங்களை கொய்து வரச் செய்து, உணவு உண்டாதாக வருது. நிறைய இடங்களில் இது மாதிரி படித்து இருக்கேன். கபிலரே தெளிவாக சொல்லி இருக்கிறார். இந்த நான்கு வகை உணவுகளை வைத்து வாழ்கிறோம் என்று..

பாரி அள்ளி அள்ளித் தரும் வள்ளல். அவன் தனது கோட்டை மக்களுக்கு கிளிகள் திருடி வரும் உணவை எப்படி வழங்கி இருப்பான்? லாஜிக் உதைக்குதே… கபிலர் சொன்னது சரின்னா… இந்த கிளி மேட்டரு தப்பு. கிளி மேட்டரும் சரின்னா பாரி செய்தது ஏமாற்று வேலை அல்லது திருட்டுத்தனம். (கிளி மேட்டருக்கு தரவு இருந்தா கொடுங்க மக்களே)

கிளிகள் திருடி வருவது பாரியின் ஆளுகைக்கு உட்பட்ட நிலம்ன்னு யாரும் ஜால்ஜாப்பு சொல்ல முடியாது. ஏன்ன அது பற்றி கபிலர் இப்படிச் சொல்கிறார்.

கடந்தடு தானை மூவிரும் கூடி
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே
முந்நூறு ஊர்த்தே தண்பறம்பு நன்னாடு
முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர்
யாமும் பாரியும் உளமே
குன்றும் உண்டு நீர் பாடினர் செலினே"


அவனது ஆளுகையில் இருந்த 300 ஊர்களையும் ஏற்கனவே பரிசிலர்களுக்கு பாரி தானமாக வழங்கி விட்டான். மிச்சம் இருப்பது இந்த மலையும், நானும், பாரியும் தான் என்கிறார் கபிலர்.

கிளி மேட்டர் பலர் மேற்கோள் காட்ட படித்து இருக்கிறேன். இணையத்தில் தேடியதில் கிடைத்ததில் எடுத்துக்காட்டு இரண்டு.

http://www.nilacharal.com/tamil/research/tamil_literature_233.asp


http://www.dinamalar.com/siruvarmalar/smrjuly_0407/minithodar.asp


இது குறித்து தெரிந்தவர்கள் விளக்குங்கள்...

பார்த்தது:

லக்! (Luck)செம லக்குங்க.. உலகத்தில் சிலருக்கு தான் அதிர்ஷ்டக் காத்து எப்பவுமே அடிக்கும். அப்படிப்பட்ட சிலரை தேர்ந்தெடுத்து மோத விடுவது தான் படம். சும்மா ஜெட் வேகத்தில் போகுது. வழக்கம் போல நம்ம சஞ்சூ பாபா கலக்கி இருக்கார். சிக்ஸ் பேக், செவன் பேக் எல்லாம் காட்டல.. ஆனா கலக்குறார். சும்மா குர்தா, பைஜாமா, கோட் போட்டுக்கிட்டு நடந்து வருவதைக் காண கண் கோடி வேண்டும்.



இம்ரான் கானுக்கு பதிலா வேற யாருக்கு அந்த கதாபாத்திரத்தைக் கொடுத்து இருக்கலாம். சொதப்பிட்டார். ஸ்ருதி ஹாசன். நம்ம கமல் பொண்ணு. முக சாயலைத் தவிர வேற ஒன்னும் கமலிடம் இருந்து வரவில்லை. முக்கியமா நடிப்பு.

ஸ்ருதி நீச்சல் குளத்தில் இருந்து வரும் போதும், இன்னும் சில காட்சிகளிலும் பார்க்கும் போது ஏனோ பரிதாப உணர்ச்சி தான் வந்தது. வேற ஏதும் தோணலை.

லக்கியின் விமர்சனத்தையும் படிக்கலாம்.

Sunday, August 9, 2009

அரைக் கிறுக்கன் - உயிரோடைக்காக எழுத நினைத்தது.

இச்சிறுகதை உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுத வேண்டியது. ஏதோ ஒரு இங்கிதத் தடை(?) அல்லது கூச்ச அச்சம் இதை வெளியிட தடை செய்தது. போட்டிக்கான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில் சில வெட்டுக்களுக்குப் பிறகு இதை வெளியிட முடிவு செய்து விட்டேன். கவிதையோடு முழுதாக ஒத்துப் போகாததும் ஒரு காரணம்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ப்பொழுதெல்லாம் என்னைக் கண்டதும் அவன் தன் முகத்தைத் திருப்பிக் கொள்வது வழக்கமான ஒன்றாகி விட்டது. மார்க்கெட் போய் வரும் வழியில் தான் அவன் வேலை செய்யும் மளிகைக் கடை இருக்கின்றது. மூட்டைகளை அடுக்கி வைப்பது, அட்டைப் பெட்டிகளை கட்டி வைப்பது, கடைக்கு முன்னால் பெருக்குவது என்று ஏதாவது செய்து கொண்டு இருப்பான். நல்ல ஆடைகளும் உடுத்தி இருக்கின்றான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் சில நேரங்களில் பரிதாபமும், இன்னும் சில நேரங்களில் பெருமிதமும் ஏற்படுகின்றது.


தூரத்தில் வரும் போது என்னைப் பார்க்கும் அவன் அருகில் வந்ததும் எனக்கு முதுகைக் காட்டிக் கொண்டு, ஏதாவது வேலை செய்ய ஆரம்பித்து விடுகின்றான். இன்று வரை அவனுக்கு என்ன பெயர் என்பது தெரியவில்லை. எல்லோரும் அவனை அரைக் கிறுக்கு என்றே கூப்பிடுகின்றனர்.

அவனை முதன் முதலில் சந்தித்த அந்த நாள் இன்றும் நினைவில் உள்ளது. இப்பொழுது இருப்பது போல் இல்லை அன்று அவன். கிழிந்த சட்டையும், பின்பக்கம் கிழிந்திருந்த டவுசருமாக உடல் முழுவதும் அழுக்காக, பரட்டைத் தலையுடன் வீட்டு கேட்டருகே நின்று கொண்டிருந்தான். சில சிறுவர்கள் கல்லை எடுத்துக் கொண்டு அவனைத் துரத்தில் என் வீட்டுக் காம்பவுண்டிற்குள் நுழைந்து இருக்கின்றான். பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தான்.

கொஞ்சம் இருங்கள்…. தெருவைக் கடப்பதற்கு முன் இந்த பகுதியைப் பற்றி சொல்லி விட்டு அவனைப் பற்றி பார்க்கலாம். இந்த தெருவில் இருப்பவர்கள் எல்லாம் மனிதர்களாம். எதிர் வீட்டில் இருக்கும் ஒரு பத்தினி ஒருநாள் என் வீட்டு முன் நின்று கத்திக் கொண்டு இருந்த போது கூறியது இது. நான் தெருவில் செல்லும் போது ஜொள்ளு வடிப்பது ஆண்களுக்கும், பொறாமையில் முகத்தை தோள்ப்பட்டையில் இடித்துக் கொள்வது பெண்களுக்கும் வழக்கமான ஒன்றாகி விட்டது. எதைப் பற்றியும் கவலைப்படாமல் இருக்க வேண்டியது என் நிலைமையாகி விட்டது.

நான்… என்னைப் பற்றி என்ன சொல்ல?… பாலியல் தொழிலாளி என்று சொல்லவா? அல்லது தெருவில் பேசுவது போல் அசிங்கமான வார்த்தைகளில் சொல்லவா? ஒரு காஸ்ட்லியான விபச்சாரி என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள். இடமும், சுற்றுப்புறமும் மட்டும் தான் வேறு மற்றபடி எல்லாம் ஒன்றுதான்.

கோபம், தாபம், காமம், குரோதம், அகங்காரம், சோகம், விருப்பம், வெறுப்பு, தவிப்பு என பல மனநிலையில் வருபவர்களை இங்கு காணலாம். மனிதர்களில் பல வகை. சிலருக்கு அவசரத்திற்கு, சிலருக்கு கோபத்தைக் காட்ட, சிலருக்கு வெறுப்பை வெளிப்படுத்த, இன்னும் சிலருக்கு தங்களை பரீட்சார்த்த முயற்சிகளை சோதித்துப் பார்க்க… சரி போதும் அவனைப் பற்றிப் பார்க்கலாம்.

சிறுவர்களை விரட்டி விட்டு அவனைப் பார்த்தேன். ஓடி வந்ததால் மூச்சிரைத்துக் கொண்டு இருந்தான். சிறுவர்கள் அரைக் கிறுக்கன் என்று கத்திக் கொண்டு சென்றதில் தவறில்லையோ என்று தோன்றும் உருவம். தண்ணீர் என்று மெதுவாக முனங்குவது கேட்டது. வீட்டில் இருந்து சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தேன். இங்கு வருபவர்களை இவன் நல்லவனாகத் தான் இருக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.

தண்ணீரை நெஞ்சில் சிந்த சிந்தக் குடித்தான். கொஞ்ச நேரம் இருந்து விட்டு சென்று விட்டான். அடுத்த இரண்டு நாட்கள் அவனைக் காணவில்லை. மூன்றாம் நாள் வந்து விட்டான். அதே கோலத்தில்.. இப்போது பசிக்குது பசிக்குது என்றான். சாப்பாடு போட்டேன். அன்று முதல் என் வீட்டின் முன் அமர்ந்து விட்டான். என் வீட்டிற்கு இரவில் வந்து செல்பவர்களை மலங்க மலங்கப் பார்த்தபடி அமர்ந்து இருப்பான்.சில நேரங்களில் மீதமான உணவைப் போடுவேன். எவனோ வந்து விட்டுவிட்டுப் போன வேட்டி சட்டையையும் கொடுத்தேன். சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு வேட்டியை அவன் உட்காரும் இடத்தில் விரித்து வைத்துக் கொண்டான்.

என்னிடம் வந்து விட்டு செல்லும் சிலர் அவனுக்கு 10, 20 என்று கொடுப்பார்கள். இங்கு வந்து செல்பவர்கள் தர்ம பிரபுக்களாக மாறி விடுகின்றனர். அவனைப் பற்றி கூறும் போது அச்சுதனைப் பற்றி கூறியே ஆக வேண்டும். அச்சுதனுக்கு 50,55 வயது இருக்கும். ஆலந்தூர் பக்கம் இரும்புக் கடை வைத்திருக்கிறார். கேரளாவின் ஒரு மூலையில் குடும்பம் இருக்கின்றது. எப்போது சென்று வருவார் என்று தெரியாது. ஆனால் என் வீட்டிற்கு வாரத்திற்கு இரண்டு முறையாவது இரவுகளில் வருவார்.

வித்தியாசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் மனித ஜந்துக்களில் ஒருவர். அச்சுதன் வரும் போதெல்லாம் அவனுடம் ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே இருப்பார். அவன் ஏதும் பதில் சொல்லாமல் அவரைப் பார்த்துக் கொண்டே இருப்பான். மற்றவர்கள் கொடுக்கும் பணத்தை வாங்கும் அவன் அச்சுதன் கொடுப்பதை மட்டும் வாங்கவே மாட்டான்.

அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவர் பதற்றமடைவதைக் காண முடியும். சில நேரங்களில் வரும் போது பிரியாணி பொட்டலம் வாங்கி வந்து அவனுக்கு தருவார். அவர் திரும்பும் போது எதிரில் இருக்கும் குப்பைத் தொட்டியில் பிரிக்கப்படாத பிரியாணி பொட்டலம் கிடைக்கும். அச்சுதனை அவன் மிகவும் அழுத்தமாகப் பாதித்து இருந்தான். எப்படியாவது அவனுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்பது அச்சுதனுடைய ஆசை.

அன்று அச்சுதன் என்னிடம் உன்னுடன் அவனைப் பார்க்க விரும்புகிறேன் என்று சொன்னதைக் கேட்டதும் என்னால் அதிர்ச்சி தாங்க இயலவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் வந்து தினசரி அமைதியாக அமர்ந்து கொண்டு இதையே சொல்லிக் கொண்டு இருந்தார். முதலில் கோபமாக இருந்தாலும், சில நாட்களில் அவரைப் பார்க்க பாவமாக இருந்தது.

அன்று அச்சுதன் வரும் போதே அவனை வீட்டிற்குள் அழைத்து வந்திருந்தார். அச்சுதன் பேச்சைக் கேட்டு வீட்டுக்குள் வரை வந்தது ஆச்சர்யமாக இருந்தது. அடுத்த பல நிமிடங்கள் நிறைய காரியங்களை செய்ய வேண்டி இருந்தது. அவன் வீட்டிற்குள் வந்த 55 வது நிமிடம் என் மீது சீராக இயங்கிக் கொண்டு இருந்தான். அச்சுதன் சிறிது தூரத்தில் நாற்காலியில் அமர்ந்து இருந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக நான் உச்சத்தை அடைந்து இருந்தேன். அவனது இயக்கம் வேகமாகி இருந்தது. அச்சுதனை பார்த்த போது கைகால்கள் நடுங்க உட்கார்ந்து இருந்தார். முகம் முழுவதும் வெளிறிப் போய் இருந்தது. உடல் முழுவதும் வியர்த்துக் கொட்டி இருந்தது. சிறிது நேரத்தில் தேம்பி தேம்பி அழ ஆரம்பித்து இருந்தார். இதை எதையும் கவனிக்காமல் அவன் தனது எல்லையை அடைந்து இருந்தார்.

சில வினாடிகள் கண்களை மூடி இருந்த அவன் வேகமாக என்னை விட்டு எழுந்து வெளியேறினான். ஜன்னல் வழியே பார்த்த போது வேட்டியை இடுப்பில் கட்டிக் கொண்டு அவன் வெளியேறுவது தெரிந்தது. அச்சுதனும் வேகமாக வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். அன்றைக்குப் பிறகு அவர்கள் இருவருமே என் வீட்டிற்கு வருவதே இல்லை. எங்காவது என்னைக் காண நேர்ந்தாலும் முகத்தைத் திருப்பிக் கொள்கின்றனர்..... ஒரு வித நடுக்கத்துடன்.