Tuesday, September 2, 2008

அறிவியல் கதை - இந்திய தேச பிரிவினைக்கு யார் காரணம்?

அந்த கருத்தரங்கமே அதகளமாகிக் கொண்டு இருந்தது. அறிவியல் ஆய்வாளர் தமிழ் எழிலன் அப்போது தான் மேடைக்கு வந்து இருந்தார். உள்ளே பத்திரிக்கையாளார்களும், ஆய்வாளர்களும் மிகவும் பரபரப்பாக இருந்தனர். இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒளிபரப்ப வேண்டி பல தொலைக்காட்சி சேனல்களும் தங்களது குடை தாங்கிய வாகனங்களை வெளியே நிறுத்தி இருந்தன.

புகைப்படக்காரர்களின் தொடர்ச்சியான ஒளி உமிழ்தல்களால் குளிர் சாதன வசதியையும் மீறி அந்த கருத்தரங்கம் வெப்பமாக இருப்பதை உணர முடிந்தது. ஒலி வாங்கிக்கு முன் வந்த தமிழ் எழிலன் தனது தொண்டையை செருமினார். அந்த செருமலுக்கு கட்டுப்பட்டு சலசலப்பு உடனே அடங்கியது. தமிழ் எழிலன் பேசத் தொடங்கினார்.

என் இனிய உலக மக்களுக்கு, எனது அன்பான வணக்கங்கள்! நாங்கள் மேற் கொண்டுள்ள இந்த முயற்சி ஒரு வித்தியாசமானது. முயற்சிகள் என்பது பொதுவாக புதிய விடயங்களைக் கண்டுபிடிப்பதே. ஆனால் எங்களது இந்த முயற்சி பழையவைகளை கண்டுபிடிப்பதாகும்.


பழைய விடயங்களைக் கண்டுபிடிப்பதிலும் பல வகைகள் உள்ளன. எடுத்துக்காட்டாக இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னால் மண்ணில் புதைந்து போன ஹரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. போன நூற்றாண்டில் தமிழகத்தின் கீழ் பகுதியில் கடல் கோளினால் மூழ்கடிக்கப்பட்ட லெமூரியா கண்டம் கண்டுபிடிக்கப்பட்டு நம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


அதே போல் எங்களது கண்டுபிடிப்பது மாயமாகி விட்ட, வரவே இயலாத என்று பல நூற்றாண்டுகளாக கருதப்பட்ட விடயங்களை கண்டுபிடித்து உங்களுக்கு தருவது தான் எங்களது ஆராய்ச்சிகள்.


உங்களுக்கு சுருக்கமாக எங்களது ஆராய்ச்சியை விளக்குகிறேன். நாம் பேசக் கூடிய பேச்சு உங்களுக்கு வந்து சென்றடைவது அறிவியல் விடயம் தான். நான் பேசும் பேச்சுக்கள் ஒலி அலைகளாக மாறி உங்களை வந்து அடைகின்றது. இது இங்கு உள்ள அனைவருக்கும் ஒரே மாதிரியே வரும். இல்லையென்றால் ஒவ்வொருவருக்கும் நான் பேசுவது வெவ்வேறாக வந்தால் நான் பேசுவதை புரிந்து கொள்ள இயலாது.


இந்த ஒலி அலைகள் உங்களை வந்து அடைய ஒரு ஊடகம் தேவை. அந்த ஊடகமாக செயல்படுவது தான் காற்று. இங்கு பத்து பேர் இருந்தாலும், ஆயிரம் பேர் இருந்தாலும் நான் பேசும் ஒலியின் அளவைப் பொறுத்து அனைவரையும் சென்றடையும்.


இந்த ஒலி அலைகள் காற்றில் மிதந்து வந்து உங்களைச் சென்றடைகின்றன. இன்று நான் பேசிய பேச்சின் ஒலி அலைகள் பல ஆண்டுகளுக்கு இங்கு காற்றின் சுழற்சிக்கு தகுந்தாற் போல் இருக்கும். எதிரொலி என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதை வைத்து வவ்வால் போன்றவை சுவர்களில் மோதாமல் பறக்கின்றன. இனி விடயத்திற்கு வருகிறோம்.


பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் பேசிய பேச்சுக்கள் அனைத்தும் காற்றில் கலந்து கிடக்கின்றன. இவைகளை காற்றில் இருந்து பிரித்து எடுத்தால், பழைய காலத்தில் பேசிய பேச்சுக்களை நாம் அறிந்து கொள்ளலாம்.


சமீபத்தில் இது போல் பல பேச்சுக்களை நாம் பிரித்து எடுத்துள்ளோம். சென்ற இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த அரசியல் தலைவர்கள் செய்து கொண்ட பேரங்கள், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் நடந்த உடன்படிக்கைகளை எல்லாம் நாம் உங்களுக்கு அளித்து ஆச்சர்யமளித்துள்ளோம். பல அறிய வரலாற்று நிகழ்வுகள் அனைத்தையும் உங்களுக்கு காட்டியுள்ளோம்.


நாங்கள் பல மாதங்களாக கடும் முயற்சி செய்து இந்த விடயத்தைக் கண்டுபிடித்துள்ளோம். அதாவது 1947 க்கு முன் இந்தியா என்பது இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மற்றும் சீனாவிடம் இருந்து சமீபத்தில் கைப்பற்றப்பட்ட கஷ்மீரின் பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. பின்னர் சுதந்திர போராட்டங்களின் உச்சத்தில் அது இந்தியா, மற்றும் பாகிஸ்தான் என்ற இரண்டாக பிரிக்கப்பட்டது.


இதற்கு பலரும் பல தலைவர்களை காரணமாகச் சொல்கின்றனர். ஆனால் உண்மையான காரணங்களைக் கண்டறிய வேண்டும் என்பதற்காக காற்றில் பரவிக் கிடக்கும் கார்பன் துகள்களில் இருந்து, பிரிவினைக்கு காரணமானவர்கள் யார்? அவர்கள் பேசிய பேச்சுக்கள் என்ன? என்பதை எல்லாம் தெளிவாக எடுத்து விட்டோம்.


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒலிப்பேழையே நான் மட்டுமே கேட்டுள்ளேன். இதை உலகில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் கேட்க வேண்டும் என்பதற்காகவே இந்த சந்திப்புக்கும், நேரடி ஒளிபரப்புக்கும் ஏற்பாடு செய்துள்ளோம்.


இது வரை பேசி விட்டு அமைதியாக தனது இருக்கையில் அமர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டார். தனது முகத்தில் வழியும் முத்து முத்தான வியர்வைகளை துடைத்துக் கொண்டாள். தனது அருகில் இருந்த கணிணியில் இருந்து பழைய பேச்சுக்கள் அடங்கிய கோப்பை ஒலிபரப்ப ஆரம்பித்தார். கொஞ்சம் கரகரப்பாக ஆரம்பித்த ஒலிகள் சிறிது நேரத்தில் தெளிவாக வர ஆரம்பித்தன.


இதற்குள் வெளியே துப்பாக்கிகளின் ஓசைகள் கேட்க ஆரம்பித்து இருந்தன. திமுதிமுவென உள்ளே நுழைந்த 20 பேர் அடங்கிய அந்த குழுவினரின் கரங்களில் அதி நவீன துப்பாக்கிகள் இருந்தன. வந்தவர்கள் பத்திரிக்கையாளர்கள் அனைவரையும் வெளியே விரட்டினர்.


அவர்களின் தலைவர் போல் இருந்தவர் நேராக தமிழ் எழிலனுக்கு முன் வந்து கைகளில் விலங்குகளை இட்டார். பின்னர் மைக்கிற்கு முன் வந்த அவர் “ அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! நாங்கள் மத்திய புலனாய்வுத்துறைச் சார்ந்தவர்கள். இதுவரை அறிவியல் அறிஞர் தமிழ் எழிலன் பல அற்புத கண்டுபிடிப்புகளைத் தந்துள்ளார்கள். ஆனால் இப்போது அவரது மூளையில் ஏற்பட்ட கோளாறுகளால் இது போன்று பிதற்றி உங்களை ஏமாற்றி விட்டார். ஆகவே இவரை கைது செய்து பைத்தியக்கார மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றோம். தடங்கலுக்கு வருந்துகிறோம்”


தமிழ் எழிலன் “நான் சொல்வது அனைத்தும் உண்மை... அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்னை பைத்தியம் என்கின்றனர். விடுங்கள்! எனது அறிய கண்டுபிடிப்பை உலகுக்கு சொல்ல வேண்டும்” எனக் கதற ஆரம்பித்து இருந்தார்.


புலனாய்வுத் தலைவர் தன்னிடம் இருந்த இயந்திரத் துப்பாக்கியால் அந்த கணிணியை சரமாரியாக சுட, அதில் இருந்த வரலாற்று உண்மைகள் எரியத் தொடங்கி இருந்தன.

23 comments:

ஆயில்யன் said...

மீ த பர்ஸ்ட்டூ

ஆபிஸ்ல இருக்கேன்! அப்பாலிக்கா வர்ரேன்:))

வெண்பூ said...

ஒரு சில ரகசியங்கள் வெளியே வராமல் இருப்பதுதான் நல்லது... (நமக்கல்ல, ஆளும் வர்க்கத்திற்க்கு)

Thamira said...

மிகவும் தேர்ந்த எழுத்தாளரைப்போன்ற லாவகம். டென்ஷன் ஏற்படுத்திய அருமையான கதை. தலைப்பு அவ்வளவு கேச்சிங்கா இல்லை என்பது குறை.!

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல கதை.. முடிவு எதிர்பார்த்தமாதிரியே இருந்தது.. ஐடியா நல்லா இருக்கே.. :)
பின்நவீனத்துவ கவிதையில் அடிக்கடி இப்படி வருமில்ல...

விஜய் ஆனந்த் said...

கதை நல்லா இருக்கு தலைவா!!!

சூப்பர் கற்பனை...கலக்குங்க!!!

rapp said...

me the 6th

rapp said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............நீங்க கொஞ்சம் பெரிய எழுத்தாளரா?????????????

Thamiz Priyan said...

///ஆயில்யன் said...
மீ த பர்ஸ்ட்டூ
ஆபிஸ்ல இருக்கேன்! அப்பாலிக்கா வர்ரேன்:))///
நன்றி அண்ணே! பொறுமையா வாங்க!

Thamiz Priyan said...

///வெண்பூ said...
ஒரு சில ரகசியங்கள் வெளியே வராமல் இருப்பதுதான் நல்லது... (நமக்கல்ல, ஆளும் வர்க்கத்திற்க்கு)///

உண்மைகள் இது போல் மறைக்கப்படுகின்றன... :)

Thamiz Priyan said...

///தாமிரா said...

மிகவும் தேர்ந்த எழுத்தாளரைப்போன்ற லாவகம். டென்ஷன் ஏற்படுத்திய அருமையான கதை. தலைப்பு அவ்வளவு கேச்சிங்கா இல்லை என்பது குறை.!///

தலைப்பு தான் சரியா வர மாட்டுது... அதனால் தான் சூடான இடுகைக்கு வர மாட்டுது போல

நிஜமா நல்லவன் said...

அண்ணா நீங்க பெரிய ஆளுங்க அண்ணே....முடியல விட்டுடுங்க....:)

Thamiz Priyan said...

///முத்துலெட்சுமி-கயல்விழி said...
நல்ல கதை.. முடிவு எதிர்பார்த்தமாதிரியே இருந்தது.. ஐடியா நல்லா இருக்கே.. :)
பின்நவீனத்துவ கவிதையில் அடிக்கடி இப்படி வருமில்ல...///

எதிர்ப்பார்த்த மாதிரி இல்லையா.. :(
இன்னும் முயற்சி செய்கிறேன் அக்கா!

Thamiz Priyan said...

///விஜய் ஆனந்த் said...
கதை நல்லா இருக்கு தலைவா!!!
சூப்பர் கற்பனை...கலக்குங்க!!!///
நன்றி விஜய் ஆன்ந்த்!

Thamiz Priyan said...

///rapp said...

me the 6th///
நீங்களே தான்... :)))

Thamiz Priyan said...

///rapp said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............நீங்க கொஞ்சம் பெரிய எழுத்தாளரா?????????????//////
சங்கத்து ஆட்களே பயமுறுத்தாதீங்க... :)

Thamiz Priyan said...

///நிஜமா நல்லவன் said...

அண்ணா நீங்க பெரிய ஆளுங்க அண்ணே....முடியல விட்டுடுங்க....:)///
அப்படி எல்லாம் விட முடியாது... வந்து படிச்சே ஆகனும்

தமிழன்-கறுப்பி... said...

அண்ணே சூப்பர்...:)

தமிழன்-கறுப்பி... said...

எப்படிண்ணே இப்படில்லாம் யோசிக்கறிங்க..!

தமிழன்-கறுப்பி... said...

கதைல பல உள்குத்து இருக்கும்போல இருக்கே...:)

தமிழன்-கறுப்பி... said...

அரசியல் கதைன்னு வச்சிருக்கலாம் அண்ணே...:)

ராமலக்ஷ்மி said...

இத இத இதத்தானே நான் கேட்டது உங்க போன கவிதைப் பதிவில. உடனேயே எழுதி விட்டீர்களே தமிழ் பிரியன். நல்ல சயண்டிஃபிக் ஃபிக்ஷன். சி.வா.ஜி-யில் இருந்த மாதிரி முடிவில் ட்விஸ்டுடன், முத்துலெட்சுமி சொன்ன மாதிரி எதிர்பார்க்கக் கூடிய முடிவென்றாலும், அருமை. தொடர்ந்து இது போல எழுத வாழ்த்துக்கள்.

Thamiz Priyan said...

//தமிழன்... said...

அண்ணே சூப்பர்...:)///
நன்றி தமிழன்!

Thamiz Priyan said...

///ராமலக்ஷ்மி said...

இத இத இதத்தானே நான் கேட்டது உங்க போன கவிதைப் பதிவில. உடனேயே எழுதி விட்டீர்களே தமிழ் பிரியன். நல்ல சயண்டிஃபிக் ஃபிக்ஷன். சி.வா.ஜி-யில் இருந்த மாதிரி முடிவில் ட்விஸ்டுடன், முத்துலெட்சுமி சொன்ன மாதிரி எதிர்பார்க்கக் கூடிய முடிவென்றாலும், அருமை. தொடர்ந்து இது போல எழுத வாழ்த்துக்கள்///
அக்கா! எல்லாம் உங்களைப் போன்ற பெரியவர்கள் ஆசிர்வாதம் தான்.. நன்றி!